
பட மூலாதாரம், Sivasubramaniam/Kolathur Mani/BBC
சந்தனமரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகளாகியும், அவர் மரணம் தொடர்பாகவும், அவர் செய்த கொலைகள் தொடர்பாகவும் இன்றளவும் மர்மங்கள் நீங்காமல் உள்ளன.
“இன்னும் இரண்டு தினங்கள் தான் இருக்கிறது, இவனை சுடுவதற்கு. ஸ்ரீநிவாசா டிஎஃப்ஓ வந்ததும் இவனை சுடுவது நிச்சயம், அதில் ஒன்றும் மாற்றம் இல்லை.”
1986 வீரப்பனை முதலும் கடைசியுமாக கர்நாடக வனத்துறையினர் கைது செய்தபோது அவர்களுக்குள் கன்னடத்தில் பேசிக்கொண்ட வார்த்தைகள் இவை . வனத்துறையினரின் பிடியில் இருந்து வீரப்பன் தப்பியதற்கு இந்த நிகழ்வுதான் காரணம் என்கிறார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.
சந்தனமரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகளாகியும், அவர் மரணம் தொடர்பாகவும், அவர் செய்த கொலைகள் தொடர்பாகவும் இன்றளவும் மர்மங்கள் நீங்காமல் உள்ளன.
வீரப்பன் உயிருடன் இருந்தபோது தன்னிடம் பகிர்ந்தவற்றை பிபிசி உடனான நேர்காணலில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பகிர்ந்துகொண்டார்.
மேலும், வீரப்பன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்து பேசிய முத்துலட்சுமி, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை பயன்படுத்தி வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே கொண்டு வந்து என்கவுண்டர் செய்திருக்கலாம் என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த கொளத்தூர் மணி, அதில் உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.
டிஎஃப்ஓ ஸ்ரீநிவாசாவை கொலை செய்யக் காரணம் என்ன?

வன அதிகாரியின் பேச்சைக் கேட்டு வீரப்பன் மனமாற்றத்தில் இருந்ததாகக் கூறிய முத்துலட்சுமி, அவை அனைத்தும் ஸ்ரீநிவாசா டிஎஃப்ஓ வந்ததும் நிராசையானதாகக் கூறினார்.
வீரப்பன் செய்த கொலைகளில் கொடூரமானதாகக் கருதப்படும் கர்நாடக மாவட்ட வன அதிகாரி (DFO) ஸ்ரீநிவாசாவின் கொலைக்கு காரணம், அவர் செய்த சித்ரவதைதான் என்றார் முத்துலட்சுமி.
கர்நாடக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சாம்ராஜ் நகரில் உள்ள பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, திருந்தி வாழ நினைத்த வீரப்பனை வன அதிகாரி ஸ்ரீநிவாசா சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டினார் முத்துலட்சுமி.
“நீ இனிமேல் தவறான பாதைக்கு போகக்கூடாது வீரப்பா. உன் மீது வழக்குப் பதிவு செய்து இரண்டு வருடம் உள்ளே இருக்கும்படி செய்து விடுகிறேன்.
நீ இரண்டு வருடம் கழித்து வெளியே வந்து, கல்யாணம் செய்துவிட்டு, விவசாயம் செய்து நல்லபடியாக இருந்துகொள். மீண்டும் இதுபோன்று தவறான பாதையில் போகக்கூடாது,” என வீரப்பனை முதலில் விசாரித்த அதிகாரி புஜாரா வீரப்பனிடம் கூறியதாக தெரிவித்தார் முத்துலட்சுமி.
வன அதிகாரியின் பேச்சைக் கேட்டு வீரப்பனும் மனமாற்றத்தில் இருந்ததாகக் கூறிய முத்துலட்சுமி, அவை அனைத்தும் ஸ்ரீநிவாசா டிஎஃப்ஓ வந்ததும் நிராசையானதாக தெரிவித்தார்.
“இந்தச் சூழலில்தான் பெங்களூருவில் நடந்த ஒரு மாநாட்டிற்காக புஜாரி என்ற அதிகாரியை அனுப்பி வைக்கின்றனர். அதற்குப் பிறகு வந்த ஸ்ரீநிவாசா டி.எஃப்.ஓ.வும் அவருடன் இருந்த அதிகாரிகளும் தன்னை இரவு பகலாக அடித்து, சித்திரவதை செய்து கொலை செய்யத் திட்டமிட்டதாக என் கணவர் என்னிடம் சொன்னார். ஒழுங்காக விட்டிருந்தால், நான் திருந்தி வெளியே வந்து வாழ்ந்திருப்பேன். வாழப் போறவனை இப்படிச் செய்கிறார்களே என என் கணவருக்கு டி.எஃப்.ஓ மீது பயங்கரமான கோபம் இருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் அவரைக் கொலை செய்தார்,” என்றார் முத்துலட்சுமி.
வீரப்பன் குடும்பத்தை குறிவைத்தாரா ஸ்ரீநிவாசா டி.எஃப்.ஓ?

பட மூலாதாரம், PTI
வனத்துறை அதிகாரியின் சித்ரவதை தாங்காமல் வீரப்பன் அவரை கொன்றதாக கூறுகிறார் முத்துலட்சுமி.
வீரப்பன் பெங்களூருவில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கும், வன அதிகாரி ஸ்ரீநிவாசா கொலைக்கும் சுமார் மூன்று ஆண்டுகள் இடைவெளி உள்ளதே என பிபிசி கேட்டபோது, அந்த சித்ரவதை மட்டுமல்லாமல், தன் தங்கையின் வாழ்க்கையையும் ஸ்ரீநிவாசா கெடுக்கிறார் என்ற கோபமும் வீரப்பனிடம் இருந்ததாக் கூறினார் முத்துலட்சுமி.
“என் கணவரின் தங்கைக்கு அப்போது திருமணமாகி வேறு ஊரில் இருந்தார். ஆனால், இந்த டி.எஃப்.ஓ என் கணவரை பிடிக்க வேண்டும் எனக் கூறி திட்டமிட்டே அவரை, எங்கள் ஊரில் தங்க வைத்தார். அது ஊரில் தவறாகப் பேசப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
என்னையும் வாழவிடவில்லை. இப்போது என் குடும்பத்தையும் தொந்தரவு செய்கிறாரே என்று என் கணவருக்கு இருந்த கோபத்தில்தான் அந்தக் கொலை நடந்தது,” என்றார் முத்துலட்சுமி.
டிஎப்ஓ ஸ்ரீநிவாசா வீரப்பனை சித்ரவதை செய்தாரா ?

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM
கர்நாடகாவில் வீரப்பனை சித்ரவதை செய்தது உண்மைதான். ஆனால், அது இறந்த டிஎப்ஓ ஸ்ரீநிவாசா செய்யவில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் சிவசுப்பிரமணியம்.
கர்நாடகாவில் வீரப்பனை ஸ்ரீநிவாசா டிஎப்ஒ சித்ரவதை செய்தது உண்மையா என தெரிந்துகொள்ள, வீரப்பனை முதலில் புகைப்படம் எடுத்தவரும், வீரப்பனை நேரில் சந்தித்தவர்களில் ஒருவருமான பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியத்திடம் பிபிசி பேசியது.
“கர்நாடகாவில் வீரப்பனை சித்ரவதை செய்தது உண்மைதான். ஆனால், அது இறந்த டிஎப்ஓ ஸ்ரீநிவாசா செய்யவில்லை.
புஜாரி என்ற அதிகாரி மாநாடு பணிக்கு சென்ற பிறகு, மூர்த்தி என்ற எஸ்பி.யும்(SP), ஸ்ரீநிவாசா டிஎப்ஓ.வும்(DFO) அடுத்ததாக இருந்த ஏசிஎப்(ACF) ஸ்ரீநிவாசன் என்ற அதிகாரியும் விசாரித்துள்ளனர்.
அப்போது, ஏசிஎப் ஸ்ரீநிவாசனும், மூர்த்தியும் தான் வீரப்பனை சித்ரவதை செய்துள்ளனர். ஆனால், டிஎப்ஓ ஸ்ரீநிவாசாவும் உடன் இருந்ததால், வீரப்பனின் அனைத்து கோபமும், அவர் மீது திரும்பியுள்ளது,”என்று சிவசுப்பிரமணியம் கூறினார்.
வீரப்பனை காட்டிக் கொடுத்தாரா கொளத்தூர் மணி?

பட மூலாதாரம், KOLATHUR MANI/TWITTER
வீரப்பன் கொளத்தூர் மணியை முழுமையாக நம்பியிருந்ததாகக் கூறினார் முத்துலட்சுமி
வீரப்பன் மரணம் குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறார். இது குறித்து அவர் பிபிசியிடம் பேசியபோது, ‘அவரை நிச்சயம் சுட்டுக் கொல்லவில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார்.
“என் கணவர் முழு நம்பிக்கை வைத்திருந்த நபர்கள் மூலமாக போலீசார் இலங்கையைச் சேர்ந்தவர்களைப் போல் நடித்து, அவரை காட்டில் இருந்து வெளியே வர வைத்து, சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொலை செய்திருக்கலாம்.
அது கொளத்தூர் மணி அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், என்னிடம் பேசியபோது, அவர் கொளத்தூர் மணி அண்ணன் மூலமாக இலங்கை சென்றுவிடலாம் எனக் கூறியிருந்தார்.
என் கணவர் மணி அண்ணாவைத்தான் முழுமையாக நம்பியிருந்தார். அதனால், ஒருவேளை மணி அண்ணாவை வைத்து போலீசார், இதை அரங்கேற்றி இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், இப்போது அதை உறுதிப்படுத்த முடியவில்லை,” என கூறினார் முத்துலட்சுமி.
கொளத்தூர் மணி மீது உள்ள சந்தேகத்திற்கான காரணத்தை விவரித்த முத்துலட்சுமி, “என் கணவர் அப்படி யாரையும் எளிதில் நம்பிவிடமாட்டார். அதேபோல, அவரை(கொளத்தூர் மணி) என் கணவர் அழைத்ததாகவும், அவர் சென்று பார்க்க முடியாமல், வேறு ஒருவரை அனுப்பியதாகவும் அந்த நேரத்தில் மணி அண்ணாவே என்னிடம் கூறியிருந்தார்,” என்றார் முத்துலட்சுமி.
என்ன சொல்கிறார் கொளத்தூர் மணி?
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், தன்னைப் பற்றி முத்துலட்சுமி கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.
“என்ன நடந்திருக்கும் என சிந்திப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் கற்பனைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதில் உண்மை இல்லை,” என்றார்.
மேலும், வீரப்பன் உயிரோடு இருக்கும்போதும், இறந்த பிறகும் தான் அவருக்கு ஆதரவு கொடுத்தாக தெரிவித்தார் கொளத்தூர் மணி.
“வீரப்பன் இறந்த அன்று இரவு காவல்துறையினர் என் வீட்டிற்கு வந்து தகவல் சொன்னபோதுதான் எனக்கு நடந்ததே தெரியும். அன்று வீரப்பன் இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலம் வரை அவரது உரிமைக்காக காவல்துறையிடம் சண்டையிட்டது நான்தான்,” என்கிறார் கொளத்தூர் மணி.
வீரப்பன் குறித்து தகவல் சொன்ன அந்த நான்கு பேர் யார்?

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM
நான்கு பேர் மூலமாக தகவல்கள் வெளியே வந்தது உண்மை என உறுதிப்படுத்தினார் முத்துலட்சுமி.
ஆபரேஷன் குக்கூனுக்கு முன்னதாக நடந்த ஒரு ஆபரேஷனில் நான்கு பேரை வீரப்பனின் கூட்டத்திற்குள் அனுப்பி அவர்கள் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் ஆபரேஷன் குக்கூன் சாத்தியமானதாக பிபிசியுடனான நேர்காணலில் ஆபரேஷன் குக்கூனில் முக்கியப் பங்காற்றிய செந்தாமரைக்கண்ணன் ஐபிஎஸ் கூறியிருந்தார்.
அதுகுறித்து வீரப்பன் ஏதேனும் தகவல்களை பகிர்ந்திருக்கிறாரா என முத்துலட்சுமியிடம் கேட்டபோது, “அதுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு. அப்போதே அந்த நான்கு பேரையும் கொன்று விடலாம் என சேத்துக்குளி கோவிந்தன் அண்ணன் கூறியுள்ளார்.
ஆனால், என் கணவர்தான் இருக்கும் பிரச்னையில் இது வேண்டாம் என விட்டுவிட்டார்,” என்றார் முத்துலட்சுமி.
அந்தச் சம்பவம் குறித்து விரிவாக விவரித்த அவர், “ஆட்கள் வேண்டும் என என் கணவர் அவரது அண்ணன் மகன் மூலமாக கோவை சிறையில் உள்ள அவரது அண்ணன் மாதையனிடம் தகவல் சொல்லியிருக்கிறார்.
அவர் கோவை சிறையில் இருந்த ஒருவர் மூலமாக ஆட்கள் அனுப்புவதாகக் கூறி அனுப்பியுள்ளனர். அப்படித்தான் நம்பி அந்த நான்கு பேரையும் கூட்டத்தில் சேர்த்துள்ளனர்.
ஆனால், ஒரு முறை துப்பாக்கிப் பயிற்சியின்போது தான், அதில் ஒருவர் துப்பாக்கியைப் பிடிக்கும் தோரணையை வைத்து அவர் போலீசாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவர்களை கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர்,” என்றார்.
அந்த நான்கு பேர் மூலமாக தகவல்கள் வெளியே வந்தது உண்மைதான் என்றும், அந்தத் தகவலின்படியே உணவில் விஷம் கொடுத்து வீரப்பனை கொன்றிருக்கலாம் என்றும் கூறினார் முத்துலட்சுமி.
தனித் தமிழ்நாடு அமைக்க ஆசைப்பட்டாரா வீரப்பன்?

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM
வீரப்பனுக்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை பிடிக்கும் என்கிறார் முத்துலட்சுமி
ஆபரேஷன் குக்கூனில் முக்கியப் பங்காற்றிய செந்தாமரைக்கண்ணன் பிபிசியுடனான நேர்காணலில் வீரப்பன் தனித் தமிழ்நாடு அமைக்கும் ஆசையில் இருந்ததாகக் கூறியிருந்தார்.
அது குறித்து முத்துலட்சுமியிடம் கேட்டபோது, “அவருக்கு தனித் தமிழ்நாடு அமைக்கும் ஆசையெல்லாம் இல்லை. அவருக்கு பிரபாகரனை பிடிக்கும். அதனால், அவர்களைப்போல ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார்.
அதே நேரத்தில், தமிழ் மற்றும் தமிழ் மக்கள் மீது அன்பு வைத்திருந்தார். கர்நாடகாவில் காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் காட்டுப் பகுதி வழியாகத்தான் கர்நாடகாவில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்குள் வந்தனர். நாங்கள் தான் வழியனுப்பி வைத்தோம்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்