ஐ.நா.வில் காஸா போர் நிறுத்தம் கோரி தீர்மானம் – வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?

ஐ.நா.வில் காஸா போர் நிறுத்தம் கோரி தீர்மானம் - வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்?

ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம், united nation@twitter

காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியாவுடன் சேர்த்து 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏஐஎம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதல் 3 வாரங்களை கடந்தும் நீடிக்கும் நிலையில், காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் ஜோர்டான் அmரசு தீர்மானம் ஒன்றை வெள்ளிக்கிழமை கொண்டுவந்தது.

பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்த தீர்மானம் கண்டித்ததோடு பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஆதரவாக அமைந்திருந்தது.

ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம், united nation@twitter

இதில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கத்தார், எகிப்து, இந்தோனீசியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், செளதி அரேபியா, குவைத், மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட 120 நாடுகள் வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரியா, ஹங்கேரி உள்ளிட்ட 14 நாடுகள் எதிராக வாக்களித்தன.

இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இராக், யுக்ரேன் உள்ளிட்ட 45 நாடுகள் இந்த வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.

கனடா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா

ஆனால் மறுபுறம், ‘ஹமாஸின் தீவிரவாத தாக்குதலைக்’ கண்டிப்பதாக கூறி கனடாகொண்டு வந்த திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

எனினும், இந்த வரைவுத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் ஐ.நா பொதுச் சபையில் தோல்வியடைந்தது.

இந்தியா புறக்கணித்தது ஏன்?

காஸாவுக்கு ஆதரவான வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறித்து ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் விளக்கம் அளித்தார். அதில், “கடந்த அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம்.

பயங்கரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இன வேறுபாடுகளும் இல்லை. ஆகையால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை விலக்கி வைப்போம். ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான முறைகளைக் கையாள்வோம்” என யோஜனா படேல் தெரிவித்துள்ளார். அவரது விளக்கத்தில் எந்த இடத்திலும் ஹமாஸின் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஐ.நா. வாக்கெடுப்பு

பட மூலாதாரம், Priyanka Gandhi Vadra@Facebook

படக்குறிப்பு,

பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதனிடையே காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு ஒதுங்யிருப்பது அதிர்ச்சியும் அவமானத்தையும் அளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நமது நிலைப்பாடு என்றும் அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. மனித குலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், பல இலட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவை துண்டிக்கப்படுவதையும், பாலத்தீனத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது, ஒரு தேசமாக நம் நாடு தனது வாழ்நாள் முழுவதும் நின்ற கொள்கைகளுக்கு எதிரானது” என பிரியங்கா காந்தி எழுதியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களித்தக் தவறியது அதிர்ச்சியளிக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணை நட்பு நாடாக இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கை எந்த அளவிற்கு வடிவமைக்கப்படுகிறது என்பதையும், அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா உறவை ஒருங்கிணைப்பதற்கான மோதி அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் காட்டுகிறது. பாலத்தீன பிரச்னைக்கான இந்தியாவின் நீண்டகால ஆதரவை இந்த முடிவு நிராகரிக்கிறது” என கூறியுள்ளது.

ஐ.நாவில் நரேந்திர மோதி அரசு போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இது மனிதாபிமான பிரச்னை, அரசியல் பிரச்னை அல்ல என கூறியுள்ளார்.

“காஸாவுக்கு உதவிகளை அனுப்பிவிட்ட பிறகு, தீர்மானத்தின் மீது வாக்களிக்காதது ஏன்? ஒரு உலகம் ஒரு குடும்பம் என்கிற தத்துவம் என்ன ஆனது” எனக் எக்ஸ் தளத்தில் ஓவைசி பதிவிட்டுள்ளார். “கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜோர்டா மன்னருடன் பிரதமர் நரேந்திர மோதி பேசினார். இப்போது ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா பங்கெடுக்கவில்லை. இது முரண்பாடான வெளியுறவுக் கொளையை காட்டுகிறது” என ஓவைசி கூறியுள்ளார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *