
பட மூலாதாரம், Getty Images
முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை
ஐதராபாத்தில் இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஆலி போப் பேட்டிங்கில் வலு சேர்க்க டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் இந்திய அணியை சுருட்டியிருக்கிறார். என்ன நடந்தது?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஐதராபாத்தில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
அடுத்து களமிறங்கிய இந்தியா 436 ரன்களை சேர்த்தது. யசஷ்வி ஹெய்ஸ்வால் 80, கே.எல்.ராகுல் 86, ஜடேஜா 87 ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்சில் தனி ஆளாக சாதித்த ஆலி போப்
190 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஒருபக்கம் இந்தியாவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மறுபுறம் களத்தில் நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தார் ஆலி போப். அவரைத் தவிர்த்து இங்கிலாந்து தரப்பில் எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை.
நிதானமாக விளையாடி சதத்தை பதிவு செய்தார் ஆலி போப். இந்திய அணியின் பவுலர் ஆலி போப்பை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டாகத்தான் அவரை இந்திய வீரர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. அப்போது ஆலி போப் 196 ரன்களை விளாசியிருந்தார். பும்ராவின் பந்துவீச்சில் அவுட்டான அவர் வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை நழுவவிட்டார்.
ஆலி போப்பின் சிறந்த பங்களிப்பால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களை சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
பந்துவீச்சில் அசத்திய அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே
231 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா. பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தார் இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே. யஷஸ்வி ஹெய்ஷ்வால், சுப்மன் கில், ரோஹித் சர்மா, அக்சர் படேல் என அவர் வரிசையாக விக்கெட்டுகளை சாய்த்தார்.
42 ரன்னில் தொடக்க விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி அடுத்த 78 ரன்களில் 7 விக்கெட்டுகளை தாரை வார்த்துவிட்டது.
மிடில் ஆர்டரில் வந்த வீரர்களாலும் நிலைத்து ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பர் பரத்தும் ஆல் ரவுண்டர் அஷ்வினும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஆனால் அந்த கூட்டணியையும் உடைத்துவிட்டார் டாம் ஹாட்லே.
இந்தியாவின் இறுதி நம்பிக்கையாக அஷ்வின் மட்டுமே இருந்தார். அவரும் டாமின் பந்துவீச்சில் அடித்து ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். பும்ராவும் சிராஜும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் போராடினர். ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் டாம் ஹார்ட்லே மூலம் விக்கெட் எடுக்கச் செய்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

பட மூலாதாரம், Getty Images
ஆட்ட நாயகன் ஆலி போப்
இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல்முறை.
இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே அறிமுக ஆட்டத்திலேயே கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் டாம் ஹார்ட்லே 131 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை அளித்தார். வெறும் 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி 5 மெய்டன் ஓவர்களை வீசியதோடு 7 இக்கெட்களையும் சாய்த்து அமர்க்களப்படுத்தினார்.
இதேபோல, சரிவில் இருந்து அணியை மீட்டு பேட்டிங்கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலி போப் ஆட்டநாயகனாக தேர்வானார்.
இந்திய மண்ணில் 2வது இன்னிங்ஸ்களில் ஐந்துக்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே 230 ரன்களை சேசிங் செய்ய முடிந்திருக்கிறது.
கேப்டன் ரோகித் பேசியது என்ன?
முதல் டெஸ்டில் கிடைத்த தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, டாப் ஆர்டர் சரிந்ததே தோல்விக்கு காரணம் என்றார்.
“190 ரன்கள் முன்னிலையில் இருந்தவரை ஆட்டம் நம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் ஆலி போப் மிகச் சிறப்பாக விளையாடினர். நான் பார்த்ததிலேயே இந்திய ஆடுகளத்தில் அவர் ஆடியது சிறப்பான ஆட்டங்களில் ஒன்று. 230 ரன்களை எடுத்துவிடலாம் என நினைத்தோம். ஆனால் முடியவில்லை. எங்கள் பேட்டிங் நன்றாக இருக்கவில்லை. லோயர் ஆர்டரில் வந்தவர்கள் போராடினார். டாப் ஆர்டர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்த்தினர்” என்று ரோகித் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து கேப்டன் கருத்து
இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியில் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “நான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த வெற்றிகளிலேதே இந்த வெற்றிதான் மகத்தானது” என்று தெரிவித்தார்.
இந்தியா – இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்