
பட மூலாதாரம், Getty Images
அரிசியில் புழு ஏற்படுவது எப்படி?
சமயலறை அலமாரியில் சேமித்து வைக்கும் அரிசியில் ஏன் புழுக்கள் வருகின்றன?
அவ்வாறு புழுக்கள் விழுந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் என்னவாகும்?
அரிசியில் பூச்சி புழுக்கள் வராமல் தடுக்க வல்லுநர்கள் கூறும் குறிப்புகள் என்ன?
வீடுகளில், சமைப்பதற்கு முன்பாக அரிசியை சுத்தம் செய்வது வழக்கம். அரிசியில் பூச்சிகள் இருந்தாலோ அல்லது மண், கல், உமி போன்ற சிறிய கழிவுகள் இருந்தாலோ அவற்றை அகற்ற முறத்தைப் பயன்படுத்தி அரிசியைப் புடைப்போம்.
பொதுவாக, நம் வீடுகளில் அரிசி ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை சேமித்து வைக்கப்படும். அவ்வாறு சேமிக்கப்படும் அரிசியில் சில சமயம் பூச்சிகள் வந்துவிடும்.

பட மூலாதாரம், Getty Images
வண்டுகள் தானிய பருக்கைகளை தாக்கி, தானியத்தில் துளைகளை உருவாக்கிவிடும்.
அரிசியில் ஏன் பூச்சி, புழுக்கள் உருவாகின்றன?
ஆந்திரப் பிரதேச விவசாயத் துறையால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ சஞ்சிகையில், பொதுவாக சேமித்து வைக்கப்படும் தானியங்கள் வண்டுகள் மற்றும் புழுக்களால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வண்டுகள் தானிய பருக்கைகளைத் தாக்கி, தானியத்தில் துளைகளை உருவாக்கிவிடும். மேலும் தானியங்களின் நீர்ச்சத்தை உறிஞ்சி, உலர்த்தி விடும். இவ்வாறு பூச்சிப்பிடித்த அரிசியை சுத்தம் செய்வது கொஞ்சம் கடினம். வண்டு அல்லது புழுக்களின் பாதிப்பு அதிகம் உள்ள அரிசியை சுத்தம் செய்து சாப்பிட்டால், செரிமான நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது, அரிசி மற்றும் கோதுமையில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே அரிசி மற்றும் கோதுமையை சேமித்து வைக்கும் போது மட்டும் அதிகபடியான பூச்சிகள் தாக்குகிறது என பத்மஸ்ரீ படம்பெற்ற மருத்துவர் காதர் வாலி பிபிசியிடம் தெரிவித்தார்.
“பட்டைத் தீட்டப் படாத நெல்லில் உமியில் உள்ள நார்ச்சத்து, கவசமாகச் செயல்படுவதால், 30 ஆண்டுகளுக்குப் பிறகும் பூச்சிகள் வராது. ஆனால் அரிசி மற்றும் கோதுமைக்கு, இந்த நார்ச்சத்து உறை மிகவும் மெல்லியதாக இருப்பதால், அவை பூச்சிகளால் எளிதில் தாக்கப்படுகின்றன,” என்று டாக்டர் காதர் வாலி விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
பிரவுன் அரிசி மற்றும் கருப்பு அரிசி ஆகியவை தீட்டப்படாத (பாலிஷ் செய்யப்படாத) அரிசி ரகங்கள் ஆகும்.
பிரவுன் அரிசி மற்றும் கருப்பு அரிசியில் புழுக்கள் வருமா?
காதர் வாலி மேலும் கூறுகையில், “எந்த வகையான அரிசியாக இருந்தாலும், நார்ச்சத்து மிகக் குறைவுதான். நார்ச்சத்து குறைவாக இருக்கும்போது அந்த தானியம் இயற்கையாகவே பலவீனமாக இருக்கும்,” என்றார்.
“பிரவுன் அரிசி மற்றும் கருப்பு அரிசி ஆகியவை தீட்டப்படாத (பாலிஷ் செய்யப்படாத) அரிசி ரகங்கள் ஆகும். எனவே இவை பட்டை தீட்டப்பட்ட அரிசியை விட பத்து மடங்கு சிறந்தது. அவ்வளவுதான், மற்றபடி எந்த அரிசி வகைகளாக இருந்தாலும், பூச்சிப் பிடிப்பதை தடுக்கும் ஆற்றல் அவற்றிற்கு இல்லை,” என்கிறார் டாக்டர் காதர் வாலி.

பட மூலாதாரம், Getty Images
அரிசி சேமிப்பு கலன்களில் கொஞ்சம் வாசனை அதிகமாக உள்ள சமையல் பொருட்களை வைப்பது பூச்சிகள் அண்டாமல் தடுக்கும்.
அரிசியில் பூச்சி புழுக்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அரிசியில் பூச்சி விழும் பிரச்னையைத் தடுக்க வல்லுநர்கள் சில நடைமுறைகளை பரிந்துரைக்கின்றனர். “முதலில், அரிசி சேமிக்கப்படும் கலனிலும் அதனை சுற்றியும் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று ஹோமியோபதி மருத்துவர் டி. இந்திரா கூறுகிறார்.
மேலும் சில நிபுணர்கள் கூறுகையில், அரிசி சேமிப்பு கலன்களில் கொஞ்சம் வாசனை அதிகமாக உள்ள சமையல் பொருட்களை வைப்பது பூச்சிகள் அண்டாமல் தடுக்கும். அத்தகைய பொருட்களில் வேப்பிலை, பிரியாணி இலைகள், கிராம்பு, பெருங்காயம், கற்பூரம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கல் உப்பு ஆகியவை அடங்கும். நம் சமையலறையில் கிடைக்கும் இந்த பொருட்களின் உதவியுடன் அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
“வேப்பிலை, கிராம்பு, கற்பூரவள்ளி ஆகியவற்றை உலர்த்தி ஒரு மெல்லியத் துணியில் கட்டி அரிசி சேமிக்கும் கலனில் போட்டாலும் அதன் வாசனை பூச்சிகள் வராமல் தடுக்கும்,” என்கிறார் மருத்துவர் இந்திரா.
வேம்பு மற்றும் கிராம்பு பூச்சிகளைத் தடுக்கும் அதீத ஆற்றல் கொண்டவை. அவற்றின் கடுமையான வாசனைக்கு பூச்சி புழுக்கள் அண்டாது. சிலர் போரிக் பவுடரை துணியில் கட்டி அரிசி சேமிப்பு கலன்களில் போட்டு வைப்பார்கள். மேலும், அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்க சில ரசாயனங்களும் சந்தையில் கிடைக்கின்றன, என்று விவரிக்கிறார் மருத்துவர் இந்திரா.

பட மூலாதாரம், Getty Images
“சமைக்கும் போது, அதீத வெப்பத்தால் அரிசியில் உள்ள பூச்சிகள், பாக்டீரியாக்கள் எதுவும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பில்லை.”
புழுப் பிடித்த அரிசியை சமைத்துச் சாப்பிடலாமா?
“அரிசியில் பூச்சி புழுக்கள் பிடிப்பது மிகவும் அபாயகரமான விஷயமல்ல. பொதுவாக, அனைவரும் அரிசியைக் கழுவியப் பின்னர், தண்ணீர் ஊற்றி, நன்றாக சமைத்த பின்னரே சாப்பிடுவார்கள். சமைக்கும் போது, அதீத வெப்பத்தால் அரிசியில் உள்ள பூச்சிகள், பாக்டீரியாக்கள் எதுவும் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஆரோக்கியத்துக்கு அதிக கேடு விளைவிக்காது. அஜீரண பிரச்சனைகளின் தீவிரமும் குறைவு தான்” என்று விளக்கினார் டி.இந்திரா.
மும்பையைச் சேர்ந்த இயற்கை மருத்துவ நிபுணரான ஆஷாவாரி பட்வர்தன் கூறுகையில், “இந்தியாவில் அரிசியில் உருவாகும் பூச்சிகள் மற்றும் புழுக்களால் நோய் ஏற்படுவது அரிது. முன்பு கிராமப்புறங்களில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கையே அதிகம். எனவே அதிக அளவிலான அரிசியை நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்திருந்தனர். ஆனால் தற்போதோ சிறிய குடும்பங்களின் எண்ணிக்கையே அதிகம். எனவே குறைந்தளவில் தான் அரிசியை சேமித்து வைக்கின்றனர்,” என்றார்.
ஆசாவாரி பட்வர்தன் மேலும் கூறுகையில், “பூச்சி புழுக்கள் உள்ள அரிசியை சமைத்து சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க போரிக் பவுடர், ஆமணக்கு எண்ணெய் போன்ற பொருட்களை அரிசி சேமிக்கும் கலன்களில் வைக்கலாம்’’ என்று குறிப்பிட்டார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்