
பட மூலாதாரம், Getty Images
சித்தரிப்பு படம்
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இருப்பவை சிலருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.)
தெலங்கானாவின் வனபர்த்தி மாவட்டம், பொல்லாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கோவுலா வெங்கடேஷ். இவர் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
நவம்பர் 21-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கடேஷ் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
5 நாட்களாக தனது கணவர் வெங்கடேஷைக் காணவில்லை என அவரது மனைவி நாகர் கர்னூலில் உள்ள லட்சுமி நகர் காவல் நிலையத்தில் நவம்பர் 26-ஆம் தேதி புகார் அளித்தார்.
அப்போது போலீசாருக்கு தெரியாது, கடந்த மூன்றரை வருடங்களாக நரபலி கொடுக்கப்பட்ட 11 பேரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெங்கடேஷும் ஒருவர் என்று.
தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்றரை ஆண்டுகளாக தொடர்கொலைகளில் ஈடுபட்டு வந்த ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் காணாமல் போன விவகாரத்தில் எழுந்த சந்தேகம்

பட மூலாதாரம், NAGARKURNOOL POLICE
குற்றம் சாட்டப்பட்ட சத்யம் யாதவை நாகர் கர்னூல் போலீசார் கைது செய்தனர்
“என் கணவர், நாகர் கர்னூல் நகரில் உள்ள சத்யம் யாதவ் என்பவரை பார்க்கச் செல்வதாகக் கூறினார். ஆனால், அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
“ஐந்து நாட்களாகியும் அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. சந்தேகம் அடைந்து நாகர் கர்னூலுக்கு சென்று விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடந்த 26ஆம் தேதி போலீசில் புகார் செய்தோம்,” எனக் கூறினார் வெங்கடேஷின் மனைவி லட்சுமி.
வெங்கடேஷ் காணாமல் போன வழக்கின் விசாரணையில், சந்தேகத்தின் பேரில் சத்யம் யாதவை கைது செய்தபோது அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக தெலங்கானாவின் நாகர் கர்னூல் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
சத்யம் யாதவ் என்ற ரமதி சத்யநாராயணா (47) என்பவர் சிறப்பு பூஜை செய்வதன் மூலம் பூமியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையல்களை கண்டுபிடிக்க முடியும் என 11 பேரை நம்பவைத்து கொன்றதாக அவர்கள் கூறினர்.
அவர் நாகர் கர்னூல் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள இந்திராநகரில் கைது செய்யப்பட்டார்.
தீர்த்தத்தில் விஷம்

பட மூலாதாரம், Getty Images
பூஜையின் போது சில மரங்களில் இருந்து எடுக்கப்படும் விஷம் சேர்த்து, அதை தீர்த்தமாக கொடுத்து கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை அறிக்கையின் படி, இருவரும் நாகர் கர்னூல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்கள் மூலமாக சத்யம் யாதவுடன் வெங்கடேஷுக்கு தொடர்பு ஏற்பட்டது.
பூமியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையல்களை தன்னால் கண்டுபிடிக்க முடியும் என வெங்கடேஷிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார் சத்யம் யாதவ்.
தன் குடும்பம் பல தலைமுறைகளாக இந்த பூஜைகளை செய்து வருவதாகவும், தானும் அதை கற்றுள்ளதாகவும் அவரை நம்ப வைத்துள்ளார் சத்யம்.
இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழில் மூலமாகவே இருவருக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு சத்யம் யாதவிடம், தனது நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களைக் கண்டுபிடிப்பதற்கான பூஜையை செய்யும்படி கூறியுள்ளார்.
அப்போது சத்யம் யாதவ், வெங்கடேஷை மட்டும் தனியாக அழைத்ததாகவும், தனியாக வந்தால் தான் பூஜை செய்து புதையல் ரகசியங்களை அறிந்துகொள்ள முடியும் என்று கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
“புதையல் கிடைக்க நரபலி கொடுக்க வேண்டும் என்று வெங்கடேஷிடம் கூறியுள்ளார் சத்யம். நரபலிக்கு மூன்று கர்ப்பிணிப் பெண்கள் தேவை என்றும் கூறியுள்ளார். பூஜைக்காக ஏற்கனவே ரூபாய் 9 லட்சம் பணத்தையும் வெங்கடேஷிடமிருந்து பெற்றுள்ளார் சத்யம்.
“மூன்று கர்ப்பிணிப் பெண்கள் நரபலி என்றதும் பயந்த வெங்கடேஷ், தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். சுதாரித்த சத்யம் நரபலி தேவையில்லை எனவும், தன்னுடன் தனியாக வந்து ஒரு பூஜை செய்தால் போதும் என கூறியுள்ளார்.
“நகருக்கு அருகில் உள்ள ஒரு மலைக்கு வெங்கடேஷை அழைத்துச் சென்றுள்ளார்.
“பின்னர் அங்கு பூஜை செய்து கொண்டிருந்த போது தீர்த்தத்தில் விஷம் கலந்து வெங்கடேஷை கொன்றுள்ளார். பின்னர் அவர் முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளார்,” என்று ஜோகுலாம்பா கட்வாலா மண்டல டிஐஜி எல்.எஸ்.சௌஹான் கூறினார்.
நரபலிக்கு பிறகு சத்யம் செய்வது என்ன?

பட மூலாதாரம், SP NAGARKURNOOL/TWITTER
சத்யம் யாதவ் எப்படி கொலைகளை செய்தார் என்பதை எஸ்பி வைபவ் கெய்க்வாட் பிபிசியிடம் விளக்கினார்.
புதையல் எடுப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை ஆளரவமற்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது சத்யமின் வழக்கம். சில மந்திரங்களைக் கூறி எலுமிச்சம்பழம் வைத்து பூஜை செய்வது போல் நடித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களை தான் சொல்வதை கேட்குமாறு செய்வார். அவர்களும் சத்யமின் நடிப்பை நம்பி ஏமாந்திருக்கிறார்கள்.
பூஜை செய்துவிட்டு, ஜிலேடு, கன்னேறு மரங்களில் இருந்து எடுக்கப்படும் விஷம், அமிலம் ஆகியவற்றை பாலில் கலந்து தீர்த்தம் என கூறிக் கொடுப்பார்.
அவர்கள் குடித்துவிட்டு இறந்து விட்டால், அவர்களின் உடைமைகள் மற்றும் நகைகளுடன் ஓடிவிடுவார். அவர்கள் இறக்காமல், சுயநினைவின்றி இருந்தால் கல்லை தலையில் போட்டு கொல்வார்,” என்றார் எஸ்பி.
சைக்கோ மனநிலை உடையவர்

பட மூலாதாரம், Getty Images
சத்யம் யாதவ் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர். பின்னர், அவர் புதையல்களுக்காக பூஜை செய்பவர் என உள்ளூர் மக்களால் நம்பப்பட்டார்.
பின்னர் தனக்கான புகழ் அதிகரித்ததால், குப்தர்கள் மீது சிலர் வைத்திருந்த நம்பிக்கையை பயன்படுத்தி மூன்றரை ஆண்டுகளாக பூஜை என்ற பெயரில் கொலைகள் செய்துள்ளார்.
“அவன் ஒரு தீவிர சைக்கோ. கொலை செய்வது ஏதோ காய்கறிகளை வெட்டுவது போல் எளிதானது என்று அவன் நினைக்கிறான். இதுபோன்ற மனநிலையில் தான் 11 பேரை கொன்றுள்ளான்,” என்று டிஐஜி எல்எஸ் சவுகான் கூறினார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் முன்னாள் தலைவர் சி.பினா, இது போன்ற தொடர் கொலைகளை ‘சைக்கோ மனநிலை’ என்று விவரிக்கிறார்.
“இது போன்றவர்கள் பார்ப்பதற்கு சாதாரணமானவர்களாகத் தெரிவார்கள். அவர்கள் மக்களுடன் கலந்து இருப்பார்கள். ஆனால், அவர்களின் மனநிலை சைக்கோ போன்றது. எங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற துணிச்சலுடன் வன்முறைச் செயல்களைச் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காண்பதும் கடினமாக இருக்கும்,” என்று பினா பிபிசியிடம் கூறினார்.
ஒரு மனிதன் பேராசை இல்லாமல் வரம்புகளுக்கு உட்பட்டு இருப்பது வாழ்க்கைக்கு நல்லது என்று பினா கூறுகிறார்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொலை

பட மூலாதாரம், NAGARKURNOOL DISTRICT POLICE/FB
11 பேரைக் கொன்றதற்காக சத்யம் யாதவ் ஏழு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என டிஐஜி எல்எஸ் சவுகான் கூறினார். இதில் ஒரு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 14, 2020 அன்று வனபர்த்தி மாவட்டம் நாகப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஹாசிராபி (60), ஆஷ்மா பேகம் (32), காஜா (35), அஷ்ரீன் (10) ஆகியோர் அடங்குவர்.
புதைத்து வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களுக்கான பூஜை செய்யும் போது கொல்லப்பட்டுள்ளனர்.
அப்போது இந்த கொலைகளை செய்தது யார் என்பது தெரியவில்லை. இந்தக் கொலைக்குப் பின்னணியில் சத்யம் இருப்பது எங்கள் விசாரணையில் தெரியவந்தது.
முதலில் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சத்யம் யாதவ் கொடுத்த ரசாயனத்தால் தான் மொத்த குடும்பமும் இறந்துவிட்டது.
நவம்பர் 2021இல், நாகர் கர்னூல் மாவட்டத்தின் எண்டபெட்ஸைச் சேர்ந்த சலீம் பாஷா இதேபோல் கொல்லப்பட்டார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் குற்றவாளி என போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், கொல்லப்பூர் மண்டலம் முக்கிடிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த அரேபள்ளி ஸ்ரீனிவாஸ், நாகர் கர்னூல் மண்டலம் கன்யாகுவைச் சேர்ந்த வசர்ல லிங்கசாமி, நிருது கல்வகுருதி அருகே திம்மராசிபள்ளியைச் சேர்ந்த சம்பாதி ஸ்ரீதர் ரெட்டி,
அனந்தபூர் மாவட்டம் கோடேரு மண்டலம் திகலப்பள்ளியைச் சேர்ந்த ராம் ரெட்டி, கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் ரேஞ்சில் திருப்பதம்மா ஆகியோரின் கொலை வழக்குகளிலும் சத்யமுக்கு தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்றார்.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கூடுதல் விவரங்கள் பெறப்படும் என்றார்.
பணம் மற்றும் நிலங்கள்
சத்யம் யாதவ் செய்த கொலைக்கான காரணங்களை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை நடந்த கொலைகளில், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணம் பெற்று, நிலத்தை பதிவு செய்ததே நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர் வனபர்த்தியில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நிலத்தை ஏமாற்றி தனது பெயரில் பதிவு செய்துள்ளார். நாகர் கர்னூல் வழக்கிலும் நிலத்தை தனது பெயரில் பதிவு செய்தார்.
ரெய்ச்சூர் வழக்கில் கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகளிடம் இருந்து மூன்றரை ஏக்கர் நிலத்தை ஏமாற்றி தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
புதையல்கள் மீது மக்களுக்கு இருந்த பேராசையைப் பயன்படுத்தி சத்யம் இதைச் செய்துள்ளார்.
கடந்த காலங்களில் நாகர் கர்னூல் நகரில் நிலத்தை இரட்டை பதிவு செய்தது தொடர்பாக அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெட்டனேட்டர்கள் எதற்காக?

பட மூலாதாரம், Getty Images
சத்யம் யாதவிடமிருந்து டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். எதற்காக டெட்டனேட்டர்களை வைத்திருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் பொதுவாக ஆசிட் மற்றும் பல்வேறு வகையான விஷங்களை மனிதர்களைக் கொல்ல பயன்படுத்துகிறார்.
எனினும், அவரிடம் இருந்த டெட்டனேட்டர்களை போலீசார் ஆய்வு செய்தபோது, சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின.
பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைக்க டெட்டனேட்டர்களை அவர் அருகில் வைப்பது வழக்கம்.
பூமிக்கு அடியில் இருக்கும் புதையல்களை எடுக்க பாறைகளை வெடிக்க வைக்க டெட்டனேட்டர்களை ஏற்பாடு செய்தார். அவையும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று நாகர் கர்னூல் மாவட்ட எஸ்பி வைபவ் கெய்க்வாட் தெரிவித்தார்.
மேலும், ஐந்து செல்போன்கள், பத்து சிம்கார்டுகள், ஒரு கார் மற்றும் ரசாயனங்கள் அடங்கிய பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறை மீது எழுந்த விமர்சனங்கள்

பட மூலாதாரம், SP NAGARKURNOOL/TWITTER
குற்றவாளிகளுடன் போலீசாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி தெரிவித்தார்
சத்யம் யாதவ் கைது செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத் பெண் ஒருவர் சத்யம் யாதவ் மீது நாகர் கர்னூல் போலீசில் புகார் அளித்தார். தனது நிலம் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், அந்த விஷயத்தில் போலீசார் அதிக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. அதன் பிறகும் சத்யம் யாதவ் தொடர்ந்து கொலைகளை செய்து வந்ததாக போலீசார் கூறிய விவரத்தின்படி தெரிகிறது.
“காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால், நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்,” என்று எஸ்பி வைபவ் கெய்க்வாட் பிபிசியிடம் கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்