உலகக்கோப்பை: கபில்தேவ், தோனி வரிசையில் இடம் பிடிப்பாரா ரோஹித்? காத்திருக்கும் சவால்கள்

உலகக்கோப்பை: கபில்தேவ், தோனி வரிசையில் இடம் பிடிப்பாரா ரோஹித்? காத்திருக்கும் சவால்கள்

உலகக்கோப்பை - இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது.

ஐசிசி நடத்தும் ஆடவருக்கான ஒருநாள் போட்டிக்கான 13-வது உலகக் கோப்பைத் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி மீது பலதரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் முதல்முறையாக உலகக் கோப்பைப் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவே நடத்துகிறது என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாக இருக்கிறது.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம், டி20 தரவரிசையில் முதலிடம் வகித்து இந்திய அணி உலகக் கோப்பையை எதிர்கொள்வதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் பயணம் சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று தங்களைத் தயார் செய்துள்ளது.

இந்திய அணியில் நடு வரிசையில் களமிறங்கும் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளது பெரிய பலமாகும்.

சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பு, அனுபவ வீரர் அஸ்வின் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது என அனைத்து வகையிலும் இந்திய அணி முழுமையாக இருப்பதால், உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்தியா 3வது முறை வெல்லுமா?

இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களம் கண்டுள்ள இந்திய அணியில் விராட் கோலி, அஸ்வின் இருவரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அனுபவம் குறைவானவர்கள்.

ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி இதுவரை 2 முறை வென்றுள்ளது. கபில்தேவ் தலைமையில் கடந்த 1983ம் ஆண்டிலும், மகேந்திர சிங் தோனி தலைமையில் கடந்த 2011ம் ஆண்டிலும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது.

இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களம் கண்டுள்ள இந்திய அணியில் விராட் கோலி, அஸ்வின் இருவரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அனுபவம் குறைவானவர்கள்.

குறைந்தபட்சம் ஒரு உலகக் கோப்பையில் அல்லது முதல்முறையாக உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் கலந்த கலவையாக இந்திய அணி இருப்பதால் கணிக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

ரோகித், கோலிக்கு கடைசி உலகக்கோப்பை?

ரோஹித் சர்மா, அஸ்வின்,விராட் கோலி ஆகியோருக்கு இந்த உலகக் கோப்பைத் தொடர் கடைசியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அடுத்த உலகக் கோப்பைத் தொடர் நடக்கும்போது மூவரும் 40 வயதை நெருங்கிவிடுவார்கள் என்பதால், இந்த உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் மூவரும் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன

ஆதலால், இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத்தரும் முனைப்புடன் விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா ஆகியோர் பங்களிப்பு செய்யலாம். மற்ற வீரர்களிடம் இருந்து தனித்து இவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரோஹித்துக்கு பொறுப்பு அதிகம்

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை ரோஹித் சர்மா அளிக்க வேண்டிய கட்டாயத்திலும், எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்துவது என்ற கேப்டன்ஷி பொறுப்பிலும் இருக்கிறார்.

ரோஹித் சர்மா அணியில் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவும், கேப்டன் என்ற முறையிலும் அணிக்காக தனித்து பங்களிப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கிற்கு மாறி, பழைய ஃபார்முக்கு திரும்பியது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஆதலால், பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை ரோஹித் சர்மா அளிக்க வேண்டிய கட்டாயத்திலும், எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்துவது என்ற கேப்டன்ஷி பொறுப்பிலும் இருக்கிறார்.

கடந்த உலகக் கோப்பையை விராட் கோலி தலைமையில் சந்தித்த இந்திய அணி அரையிறுதிவரை சென்று தோற்றது. அப்போது கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியும் அணியில் இருப்பதால் அவரின் அனுபவம் அணிக்கு கூடுதலான பலமாகும்.

கபில்தேவ்- தோனி தலைமை எப்படி?

கடந்த 1983ம் ஆண்டு உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கபில் தேவ் தலைமைக்கும், 2011ம் ஆண்டில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்த மகேந்திர சிங் தோனி தலைமைக்கும் வேறுபட்ட பொறுப்புகள் இருந்தன.

இரு கேப்டன்கள் தலைமை ஏற்ற இந்திய அணியில் இருந்த வீரர்கள் ஜாம்பவான்களாக இருந்தார்கள், பெருத்த அனுபவம் கொண்டவர்களாக, ரசிகர்களின் நாயகர்களாக இருந்தார்கள்.

ஆனால், இந்த உலகக் கோப்பையை எதிர்கொள்ளும் ரோஹித் சர்மா தலைமைக்கு இருக்கும் சவால்கள் வித்தியாசமானவை, வாய்ப்புகள் பரவலாகக் கிடக்கின்றன. எதை எடுத்து சரியாகக் கோர்க்கப் போகிறார் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியுள்ளது.

ஜீரோவிலிருந்து தொடங்கியவர் கபில்தேவ்

கபில்தேவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கபில்தேவ் கேப்டன் பொறுப்புக்கு வந்தபின்புதான், இந்திய அணியின் முகம் மாறியது.

இந்திய அணிக்கு இதுவரை வந்த கேப்டன்களிலேயே தனித்துவமானவர், வேறுபட்டவர், அசாத்தியமான நம்பிக்கை கொண்டவர், துணிச்சலாக முடிவெடுத்து செயல்படக்கூடியவர், வீரர்களுக்கு தேவையான சுதந்திரங்களை அளித்தவர் கபில்தேவ் மட்டும்தான். அதனால், “ஆல்டைம் கிரேட் கேப்டன்” என்ற அடைமொழியில் இன்றும் ரசிகர்களாலும், சககிரிக்கெட் வீரர்களாலும் கபில்தேவ் புகழப்படுகிறார்.

கடந்த 1983ம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி முகவரி இல்லாத அணியாகவே இருந்தது. கபில்தேவ் கேப்டன் பொறுப்புக்கு வந்தபின்புதான், இந்திய அணியின் முகம் மாறியது.

எப்போது தயாரானது இந்திய அணி?

1983 இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1982-83 மேற்கிந்தியத்தீவுகள் பயணத்தின்போதுதான் இந்திய அணி ஒருநாள் போட்டியை வித்தியாசமாக அணுகி தங்களைத் தயார் செய்தது.

1983ம் ஆண்டில்தான் இந்திய அணி உலகக்கோப்பைப் பயணம் தொடங்கியதாக பலரும் தெரிவிக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. 1982-83 மேற்கிந்தியத்தீவுகள் பயணத்தின்போதுதான் இந்திய அணி ஒருநாள் போட்டியை வித்தியாசமாக அணுகி தங்களைத் தயார் செய்தது.

இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது, அல்பியா நகரில் 1983ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மேற்கிந்தியத்தீவுகளுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.

47 ஓவர்கள் மட்டுமே நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது. ஏறக்குறைய 6 ரன்ரேட்டில் இந்திய அணி விளையாடியது மேற்கிந்தியத்தீவுகள் அணியை சொந்த மண்ணில் தலைகுணியச் செய்தது. சுனில் கவாஸ்கர் 90(8பவுண்டரி), கேப்டன் கபில்தேவ் 72 ரன்கள் (3சிக்ஸர், 7பவுண்டரி) சேர்த்து அணிக்கு வலுவான ஸ்கோரைப் பெற்றுக்கொடுத்தனர்.

பேட்டிங், பந்துவீச்சு ராட்சதர்கள்

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிரிக்கெட்டில் சிம்மாசனமிட்டு அமர்ந்து அனைத்து அணிகளுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.

1983ம் ஆண்டு காலகட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் பற்றி சொல்லத்தேவையில்லை, கிரிக்கெட்டில் சிம்மாசனமிட்டு அமர்ந்து அனைத்து அணிகளுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தது. இருமுறை உலகக் கோப்பையை வென்று எந்த அணியையும் சட்டைசெய்யாமல் இருந்தது.

அந்த அணியில் கிளைவ் லாயுடு, ரிச்சார்ட்ஸ், கிரீனிட்ஜ், ஹெயின்ஸ், துஜான், கோம்ஸ் என பேட்டிங்கில் ஜாம்பவான்களும், பந்துவீச்சில் மார்ஷல், ஆன்டி ரோபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், டேவிஸ் என எதிரணியின் பேட்டிங்கின் ஆணிவேரே பிய்த்து எரியும் திறன்படைத்தவர்களாக இருந்தனர்.

ஆனால், எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 47 ஓவர்களில் 285 ரன்களை இந்திய அணி சேர்த்தது அந்நாட்டு அணியின் கேப்டன் கிளைவ் லாயுடுவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

286 ரன்களை விரட்டிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி கிளைவ் லாயுடுவை உலுக்கி எடுத்தது. இந்திய அணியின் அசாத்திய பேட்டிங் பந்துவீச்சு குறித்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஓய்வறையில் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறுபட்ட கோணம்

கபில்தேவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எந்த ஆட்டத்தையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளச் செய்து, வீரர்களை உற்சாகப்படுத்தி, தேவையான சுதந்திரத்தை அளித்து, தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் கபில் தேவுக்கு நிகர் கபில்தேவ்தான்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தது அப்போது இருந்த கபில்தேவ் தலைமைதான். இந்த ஆட்டம்தான் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள மூலாதாரமாக இருந்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் உலகக் கோப்பைத் தொடரை எதிர்கொண்ட இந்திய அணி, தனது முதல் ஆட்டத்திலேயே மேற்கிந்தியத்தீவுகள் அணி 34 ரன்களில் வென்றது. இந்தத் தோல்வி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடிபோல் இறங்கியது.

இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்திருந்தது. 269 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 228 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

எந்த ஆட்டத்தையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளச் செய்து, வீரர்களை உற்சாகப்படுத்தி, தேவையான சுதந்திரத்தை அளித்து, தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் கபில் தேவுக்கு நிகர் கபில்தேவ்தான்.

மறக்க முடியாத கபில்தேவ் 175

கபில் தேவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1983ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கேப்டன் கபில்தேவ் ஆடிய ஆட்டம் இன்றளவும் பேசப்படுகிறது.

இதற்கு உதாரணமாக 1983ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கேப்டன் கபில்தேவ் ஆடிய ஆட்டம் இன்றளவும் பேசப்படுகிறது. ஜிம்பாப்பே அணிக்கு எதிராக 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், ரோஜர் பின்னி, கேப்டன் கபில் தேவ் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டு கவுரமான ஸ்கோரைப் பெற உதவியது. குறிப்பாக கேப்டன் கபில்தேவ் ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தைள் இல்லை என்று ஆட்டத்தை நேரில் கண்ட பல வீரர்கள் பல பேட்டிகளில் தெரிவித்தனர். கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய கபில்தேவ் 175 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒரு கேப்டன் எவ்வாறு அணியை வழிநடத்த வேண்டும், எவ்வாறு விளையாட வேண்டும், பொறுப்போடு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு கபில்தேவ் ஆட்டம் மாஸ்டர்பீஸாகும். 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை இந்திய அணி சேர்க்க கபில்தேவ் முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 235 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது,

இந்திய அணியை ஜீரோவில் இருந்து உருவாக்கி, வழிநடத்தி உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டன்களின் முன்னோடி கபில்தேவ்தான்.

பேரழிவில் இருந்து மீட்ட தோனி தலைமை

தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், மதன்லால், வெங்சர்கார் போன்ற மூத்த வீரர்கள் சென்ற பின் அசாரூதீன் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடர்களை எதிர்கொண்டது.

1983 உலகக் கோப்பைக்குப்பின் இந்திய அணி பலமுறை அரையிறுதி, காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி வரை வந்தாலும் 2வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்தது தோனி தலைமையில்தான்.

கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், மதன்லால், வெங்சர்கார் போன்ற மூத்த வீரர்கள் சென்ற பின் அசாரூதீன் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடர்களை எதிர்கொண்டது. ஆனால், பெரிதாக எந்த ஆட்டத்திலும் சாதிக்கவில்லை, அதன்பின் நடந்த சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இந்திய அணியின் நம்பகத்தன்மை குலைந்தது.

அடித்தளமிட்ட கங்குலி

ஆனால், சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணியின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டது. சச்சின், திராவிட், யுவராஜ் சிங், ஜாகீர்கான், கைஃப், கம்பீர், ஹர்பஜன் சிங், நெஹ்ரா என பந்துவீச்சாளர்களும், பேட்டர்களும் வலுவாகக் கொண்ட அணியாக உருமாறியது. 2003ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் அணியாக மாறி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

அதன்பின் கிரேக் சேப்பல் பயிற்சியாளராக வந்தபின் இந்திய அணியின் ஓய்வறை ஒற்றுமை, அமைதி, நட்பு அனைத்தும் உருக்குலைந்தது. சேப்பல் பயிற்சிக் காலம் இந்திய அணிக்கு மறக்கமுடியாத கசப்பான சம்பவங்களை அளித்தது. கங்குலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, திராவிட் கொண்டுவரப்பட்டு அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

அதன்பின் தோனி கேப்டன் பொறுப்புக்கு வந்தபின்புதான் கிரேக் சேப்பல் பயிற்சிக்காலத்தில் உருக்குலைந்த இந்திய அணி உருப்பெற்றது. ஆனால், இந்தியஅணிக்கு சரியான பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களை அடையாளம் காட்டியதும், அவர்களை உருவாக்கியும் கங்குலி தலைமைதான் என்பதை மறுக்க முடியாது. கங்குலி அமைத்துக்கொடுத்த தளத்தில் தோனி பயணித்தார் என்றுதான் கூற முடியும்.

முன்தயாரிப்புடன் வந்த தோனி

தோனி தலைமையிலான இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், முகமது கைஃப், அஸ்வின், ஜாகீர்கான், முனாப்படேல், நெஹ்ரா, ஹர்பஜன் சிங்,விராட் கோலி, ரோஹித் சர்மா என வலுவான அணியாக கட்டமைத்தார் தோவி.

தோனி கேப்டன் பொறுப்புக்கு வந்தபின்பு, உலகக் கோப்பைப் போட்டிக்குத் தயாராகும்போது, முன்னேற்பாடுகளுடன் வந்தார். அதாவது அணியில் உள்ள எந்த ஒரு வீரரும் குறைந்தபட்சம் 50 போட்டிகளுக்கு குறைவில்லாமல் பங்கேற்க வேண்டும் என்ற பரிசோதனை அடிப்படையில் வீரர்களைத் தேர்ந்தெடுத்தார்.

இதனால், சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், முகமது கைஃப், அஸ்வின், ஜாகீர்கான், முனாப்படேல், நெஹ்ரா, ஹர்பஜன் சிங்,விராட் கோலி, ரோஹித் சர்மா என வலுவான அணியாக கட்டமைத்தார். உலகக் கோப்பையில் சச்சின், சேவாக், கம்பீர் போன்ற ஜாம்பவான்கள் எதிரணிக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தனர்.

வீரர்களிடையே நம்பிக்கையின்றி, பேரழிவில் சரிந்து கிடந்த இந்திய அணியைக் மீட்டு, கட்டமைத்து, வடிவமைத்து, உலகக் கோப்பை வென்று கொடுத்தவர் தோனியின் தலைமைதான்.

கபில் தேவ் கூட சில நேரங்களில் அவசரப்பட்டு சகவீரர்களைத் திட்டியிருக்கிறார், கோபப்பட்டிருக்கிறார். ஆனால், கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, களத்தில் ஒருபோதும் சகவீரர்களிடம் கோபப்பட்டதில்லை, எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் களத்தில், முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் இருப்பவர் தோனிதான்.

கணிக்க முடியாத ரோஹித் தலைமை

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தோனி, கபில்தேவ் ஆகியோரிடம் இருந்த தன்னம்பிக்கை, அசாத்திய துணிச்சல், பொறுப்புணர்ச்சி ஆகியவை ரோஹித் சர்மாவுக்கு அவசியமாகும்.

ரோஹித் சர்மா தலைமையில் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியுள்ள இந்திய அணி கணிக்க முடியாத அணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எந்த போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பார்கள், எந்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பார்கள் என்று தெரியாத அணியாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரு ஒருநாள் போட்டிகளிலும் 350 ரன்களுக்கு மேல் குவித்து, அசாதாரணமாக இந்திய பேட்டர்கள் ஆடினர். ஆனால், 3வது போட்டியில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. இதுபோன்று கணிக்க முடியாத அணியாகவே இந்திய அணி இருந்து வருகிறது.

சுப்மான் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. பந்துவீச்சிலும் பும்ரா, சிராஜ், ஷமி, ஷர்துல் தாக்கூர் என வேகப்பந்துவீச்சிலும், அஸ்வின், குல்தீப் யாதவ் என சுழற்பந்துவீச்சிலும் ஆழ்ந்த அனுபவம் கொண்ட வீரர்களைக் கொண்டுள்ளது.

ஆனால், ஒவ்வொரு போட்டியையும் எவ்வாறு அணுகுவார்கள், வீரர்களின் தன்னம்பிக்கை, எந்தச்சூழலில் இருந்தும் மீண்டுவரக்கூடிய திறமை ஆகியவைதான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும்.

தோனி, கபில்தேவ் ஆகியோரிடம் இருந்த தன்னம்பிக்கை, அசாத்திய துணிச்சல், பொறுப்புணர்ச்சி ஆகியவை ரோஹித் சர்மாவுக்கு அவசியமாகும். பேட்டராகாவும், கேப்டனாகவும் இரு ரோல்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார்.

ரோஹித் சர்மாவுக்கு காத்திருக்கும் சவால்கள்

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்குப் பின், நடுவரிசையில் வலுவான பேட்டர்கள் யாரும் இல்லை எனக் கூறியிருந்தார் ரோகித் ஷர்மா.

இந்திய அணியில் இப்போது இருக்கும் தலையாய பிரச்சினை என்பது நடுவரிசை பேட்டர்கள் அதாவது 4வது,5வது பேட்டர்கள்தான். இந்த இடங்களுக்கு எந்தவீரர்களை களமிறக்குவது, பொருத்தமாக இருப்பார்கள் என்பது இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

கேப்டன் ரோஹித் சர்மா கூட, சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில் “ இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்குப் பின், நடுவரிசையில் வலுவான பேட்டர்கள் யாரும் இல்லை. ஸ்ரேயாஸ் அய்யர் நீண்டகாலத்துக்குப்பின் கிடைத்துள்ளார், நல்ல ஸ்கோர் செய்கிறார்” என ஒப்புக்கொண்டார்.

ஆதாலால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கும், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் பெரிய சவாலாக இருப்பது 4வது வரிசை, 5வது வரிசை பேட்ஸ்மேன்களை அடையாளம் கண்டு களமிறக்குவதுதான்.

ஒரு அணிக்கு நடுவரிசை பேட்டர்கள்தான் முதுகெலும்புகள், அவர்கள் சரியில்லை என்றால், சிலநேரங்களில் அணி அதலபாதாளத்துக்குச் செல்லும். ஆதலால், நடுவரிசையைத் தயார் செய்வது ரோஹித் சர்மாவுக்கு பெரிய சிக்கலாக மாறும்.

இடது கை வேகப்பந்துவீச்சு

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்த உலகக் கோப்பையில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத ஒரு அணி என்றால் அது நெதர்லாந்துக்கு அடுத்தார்போல் இந்திய அணிதான்

இந்திய அணி இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் இந்த உலகக் கோப்பையை எதிர்கொள்கிறது. இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து அணித் தேர்வு செய்யப்பட்டநிலையில் கடைசி நேரத்தில் வலதுகை ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

ஆனால், இந்த உலகக் கோப்பையில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத ஒரு அணி என்றால் அது நெதர்லாந்துக்கு அடுத்தார்போல் இந்திய அணிதான். இது இடதுகை வேகப்பந்துவீச்சு எனும் ஆயுதத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு களமிறங்குதுபோல் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இடதுகை வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடுவதும் இந்திய பேட்டர்களுக்கு இந்த உலகக் கோப்பையில் சவாலாக இருக்கும். குறிப்பாக பாகிஸ்தானின் ஷாகின் அப்பிரிடி, மிட்ஷெல் ஸ்டார்க், டிரன்ட் போல்ட் ஆகியோரின் வேகப்பந்துவீச்சுக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோல், கில் ஆகியோர் எளிதாக இலக்காகிவிடுவார்கள். இவர்கள் மூவரும் எவ்வாறு இடதுகை வேகப்பந்துவீச்சை சமாளித்து ஆடுவார்கள் என்பது இந்திய அணி முன்னிறுக்கும் பெரிய சவாலாகும்.

வங்கதேச்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், ஆப்கானிஸ்தானி்ல் பசால்ஹக் பரூக்கி, இங்கிலாந்து அணியில் சாம் கரன், டேவிட் வில்லி, ரீஸ் டாப்ளே ஆகியோர், தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன், இலங்கையின் மது சங்கா ஆகியோர் நிச்சயமாக இந்திய பேட்டர்களுக்கு தலைவலியாக மாறுவார்கள்.

இடதுகை வேகப்பந்துவீச்சை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பேட்டர்கள் எவ்வாறு கையாள்வார்கள், எதிர்கொண்டு விளையாடுவார்கள், விக்கெட்டை விரைவாக இழப்பார்களா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷன் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் டிஏ சேகர் கூறுகையில் “ உலகக் கோப்பையில் இந்திய அணி இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்குவது ஒருபுறம் இருக்க, இடதுகை வேகப்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய பேட்டர்கள் பயிற்சி எடுக்காமல் சென்றால் அது சிக்கலில் முடியும். இடதுகைவேகப்பந்துவீச்சாளர்கின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும் பந்து நேராக வரும் எனநினைத்து வலதுகை பேட்டர்கள் விளையாடும்போது “அவுட்சைட் எட்ஜ்” எடுத்து, விக்கெட்டை இழக்க நேரிடும். அதிலும் முதல் 8 முதல் 10ஓவர்கள் புதிய பந்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சுக்கு இந்திய பேட்டர்கள் திணறக்கூடும்” எனத் தெரிவித்தார்

கவலை தரும் கடைசி வரிசை

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நிலைமை தோனி ஆட்டமிழந்தபின் என்ன ஆனது என ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடைசி வரிசையில் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய சிக்கலாக மாறும். 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நிலைமை தோனி ஆட்டமிழந்தபின் என்ன ஆனது என ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும்.

பேட்டிங் திறமை இல்லாத கடைசி வரிசை பேட்டர்கள் இந்திய அணிக்கு சவாலாக மாறுவார்கள். இந்த முறையும் குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் போன்றோர் பந்துவீச்சு ஸ்பெலிஸ்ட் மட்டும்தானே தவிர ஓரளவுக்கு விளையாடக்கூடிய பேட்டர்கள் அல்ல. கடைசி வரிசையில் பேட்டர்களை கண்டறிவது இந்திய அணிக்கு சவாலாக மாறும்.

இந்தியாவில் மைதானங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கின்றன. இந்த சூழலில் இந்திய அணியில் 3வது வேகப்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்யப் போகிறாரா அல்லது, கூடுதலாக சுழற்பந்துவீச்சாளருடன் ரோஹித் சர்மா களமிறங்குவாரா என்பது சவாலான விஷயமாகும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *