
டாக்டர் அம்பேத்கர், பட்டியல் சமூகத்தினரை அவதூறாகப் பேசியதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியல் சமூகத்தினர் குறித்து அவமதிக்கும் வகையிலும் அவதூறாகவும் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை நகர காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி என்ற அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், கடந்த திங்கள் கிழமை ‘பாரதியும் விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய வித்யா பவனில் பேசினார்.
சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்துப் பேசினார். திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார். திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் அவர் பேசினார்.
“திருவள்ளுவர் என்பவர் கற்பனையே”
“திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை,” என்று அவர் நிகழ்வில் பேசினார்.
‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ என்ற நூலை எழுதியுள்ள மணியன், ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா என்றார்.
விவேகானந்தரின் கருத்துகளைப் பரப்புவதில் தீவிர பங்காற்றியுள்ள மணியன், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்ததாகப் பேசினார்.
“கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே எனக் கூறியுள்ளேன். விவேகானந்தரும் சொன்னார். பாரதியாரும் சொன்னார்,” நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என அவர் பேசினார்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக சாடியுள்ளார்.
“ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். அந்த முஸ்லிமும் அருகதை இல்லாதவன்,” என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார்.
இதே அளவுகோலை வைத்து அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சாடினார். ராகுல் காந்தி கிறிஸ்தவர் ஐரோப்பியர் என்றும், அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பேசினார்.

திருவள்ளுவர் என்பவர் கற்பனை, உண்மையில் அப்படி ஒருவர் இல்லை என மணியன் பேசியிருந்தார்.
“அம்பேதகர் அரசியல் சாசன சட்டத்தை எழுதவில்லை”
தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரையும் தாக்கிப் பேசினார். அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை என்று பேசினார்.
அம்பேதகர் எழுதினார் என்று கூறுபவர்களுக்கு அறிவு இல்லை என்றார். அரசியல் சாசன சட்டம் தயாரிப்பதற்கான குழுவின் தலைவர் ராஜேந்திர பிரசாத் என்றும், அம்பேத்கர் அந்தக் குழுவில் வரைவுகளை சரி பார்க்கும் கிளார்க் பணியை மட்டுமே செய்தார் என்றும் பேசினார்.
“அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுத்ோவே கிடையாது. எல்லாம் பேசிடுவாங்க.. அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரிபார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றார்.
அவரது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா, பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
மணியன் தன்னுடைய பேச்சு முழுவதிலும், திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடினார்.
அவதூறாகப் பேசியதாக மணியன் கைது

பட மூலாதாரம், Facebook
மணியன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
அவரது இந்தப் பேச்சு அடுத்த நாளில் இருந்து சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவியது. பலர் அவரைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கவும் ஆரம்பித்தனர்.
மணியனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “இவர்கள் தூக்கிப் பிடிக்கும் சாவர்க்கர், கோட்ஸே, கோல்வால்கர் போன்றவர்களுக்கும் இந்த மணியனுக்கும் என்ன தொடர்பு?
இவர் தமிழ்நாட்டில் ஒரு சாதியில் பிறந்திருக்கிறார். அந்த சாதிக்கும் மராட்டியத்தில் உள்ள சித்பவன பிராமணருக்கும் என்ன தொடர்பு?” என்று கேள்வி எழுப்பினார்.
மணியனின் இந்தப் பேச்சு பட்டியல் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் ரா. செல்வம் என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை மாம்பலம் காவல்துறையினர், மாம்பலம் ராஜாம்பால் தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அவர் மீது 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மணியன் வியாழக்கிழமையன்று காலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது, தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதாகவும் தனக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், தன்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டுமெனறும் கோரினார். அதுகுறித்து பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதி, அவரை செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
யார் இந்த ஆர்.பி.வி.எஸ் மணியன்?
ஆர்.பி.வி.எஸ். மணியனின் முழுப் பெயர் ஆர். பாலவேங்கட சுப்பிரமணியன். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த சுப்பிரமணியன், படிப்பை முடித்த பிறகு, தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறையில் வேலை பார்த்து வந்தார்.
படிக்கும் காலத்திலிருந்தே அவருக்கு விவேகானந்தர் மீது ஈடுபாடு இருந்ததால், அவரது கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபடுவதற்காக வேலையை விட்டார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்றபோது, அதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் நன்கொடை திரட்டப்பட்டது.
மணியன் அதில் தீவிரமாக ஈடுபட்டார். 1970களில் விவேகானந்தா கேந்திராவின் சார்பில் மாணவர்கள் மத்தியில் தீவிரமாகப் பேசி வந்த மணியன், 1980ஆம் ஆண்டுவாக்கில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்