
பட மூலாதாரம், Getty Images
இலங்கையை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணியை 83 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து எட்டாவது வெற்றியுடன் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 8 வெற்றிகளைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், இந்திய அணி தொடர்ந்து எட்டு வெற்றிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது.
இருப்பினும், அந்த எட்டு வெற்றிகளும் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றபின் கிடைத்தன. அந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் (நவம்பர் 5) இந்தியா முதலில் பேட் செய்து 326 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
பிறந்தநாளில் சாதனை படைத்த கோலி
விராட் கோலியும், ரவீந்திர ஜடேஜாவும் இந்தியா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். அதேசமயம் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி உட்பட அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்த உலகக் கோப்பையில் பல முறை 300 ரன்களுக்கு மேல் அடித்த தென் ஆப்பிரிக்கா அணியால் இதைச் சமாளிக்க முடியவில்லை.
இந்தப் போட்டியின் போது, தனது 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய விராட் கோலி சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 49வது சதம். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்துள்ளார் கோலி.
கோலி தனது சதத்தின் மூலம் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக 500 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
‘டெண்டுல்கரை ஒருபோதும் சமன் செய்ய முடியாது. என்ன நடந்தாலும் அவர் எப்போதும் என் ஹீரோவாக இருப்பார்,’ என்றார் கோலி
வாழ்த்து தெரிவித்த டெண்டுல்கர்
சதம் அடித்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில், இது போட்டியின் கடினமான அணி, என்றார். “நான் நன்றாக விளையாட விரும்பினேன், இது எனது பிறந்தநாள், அதனால் எனக்கு இது சிறப்பான தருணம். எனது வேலையைச் என்னால் செய்ய முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் சாதனைகளை மட்டும் தேடவில்லை. ரன் குவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக செய்து வந்ததை மீண்டும் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.
மேலும் பேசிய கோலி, “எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்கள் என்னை அவருடன் ஒப்பிடுகிறார்கள், ஆனால் என்னால் அவரை ஒருபோதும் சமன் செய்ய முடியாது. என்ன நடந்தாலும் அவர் எப்போதும் என் ஹீரோவாக இருப்பார்,” என்று கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டில், கோலியை வாழ்த்தியிருந்தார். “விராட், நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். 49லிருந்து 50 ஆக மாற எனக்கு ஒரு வருடம் பிடித்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் நீங்கள் 49 முதல் 50 வயதை எட்டுவீர்கள், எனது சாதனையை முறியடிப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.
விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் உட்பட 108.60 என்ற சராசரியுடன் 543 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 550 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரீக்க வீரரான குயின்டன் டி காக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி தனது 289வது ஒருநாள் போட்டியில் 49வது சதம் அடித்திருக்கிறார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் தனது 462வது ஒருநாள் போட்டியில் 49வது சதத்தை அடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி, நவீன கிரிக்கெட்டில் தான் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பதை நிரூபித்து விட்டார் என்று அக்ரம் கூறினார்
வாசிம் அக்ரம், சோயப் அக்தர் என்ன சொன்னார்கள்?
ஒரு விளையாட்டு சேனலின் நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், “சச்சின் டெண்டுல்கர் 451 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்தார், ஆனால் கோலி இந்த மைல்கல்லை 277 இன்னிங்ஸ்களில் மட்டுமே எட்டியுள்ளார். “இது நம்பமுடியாத அளவுக்குச் சிறப்பாக உள்ளது,” என்றார்.
விராட் கோலி, நவீன கிரிக்கெட்டில் தான் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பதை நிரூபித்து விட்டார் என்று அக்ரம் கூறினார்.
அதே நிகழ்ச்சியில், ஷோயப் அக்தர், “ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், விராட் 49 சதங்கள் அடித்து, அந்தச் சதங்களுடன் பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளார், இது மிகவும் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை, சதம் அடிப்பது பெரிய விஷயம்தான், ஆனால் அதோடு சேர்த்து போட்டிகளில் வெற்றி பெறுவது, மேலும் சிறப்பானது,” என்றார்.
மேலும் பேசிய அவர், “கோலி சூழ்நிலைகளை நன்றாக மதிப்பிடுகிறார். அவர் ஒரு முனையில் பொறுப்பேற்று அங்கிருந்து ஓடுகிறார். அவர் இப்படி பேட்டிங் செய்வதை நீண்ட காலமாகப் பார்த்து வருகிறோம். அவரது உடற்தகுதி மிகச் சிறப்பாக உள்ளது. இன்று அவர் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆனால் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது 25 வயது சிறுவன் ஓடுவது போல் உள்ளது. 50 ஓவர்கள் பேட்டிங் செய்து முடித்துவிட்டு ஃபீல்டிங் செய்ய வரும்போதும் அவரது ஃபிட்னெஸ் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது. ஃபீல்டிங்கிலும், அவர் ஹாட் ஸ்பாட்களில் மட்டுமே நிற்கிறார்,” என்றார்.

பட மூலாதாரம், @SHOAIBAKHTAR100MPH
கோலி சூழ்நிலைகளை நன்றாக மதிப்பிடுகிறார். அவர் ஒரு முனையில் பொறுப்பேற்று அங்கிருந்து ஓடுகிறார், என்று ஷோயப் அக்தர் கூறினார்
ரோஹித் பற்றி அக்தர் என்ன சொன்னார்?
இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும்போது இந்திய அணி ஓவருக்கு 10 ரன்கள் வீதம் அடித்துக் கொண்டிருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சோயப் அக்தர் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் ரோகித் சர்மாவைப் பாராட்டிப் பேசினர்.
ரோகித் சர்மாவின் பேட்டிங்கைப் பாராட்டிய சோயப் அக்தர், “ரோகித் 22 அல்லது 25 ஓவர்கள் தங்கியிருந்தால் இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருக்கும். ஆனால் அவர் ஏன் அவசரப்படுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தங்கியிருந்தால் அவருக்கு முன் ஒரு ஸ்பின்னர் என்ன செய்வார் என்பதைப் பார்த்திருப்போம்,” என்றார்.
மேலும், கோலிக்குக் களம் அமைத்துக் கொடுத்தது ரோகித் தான் என்று சோயப் கூறினார்.
“ரோஹித் ஸ்டெப் அவுட் செய்வார், ஸ்வீப் செய்வார், இன்சைட் அவுட் அடிப்பார், ஆனால் அதிக நேரம் ஆட மாட்டார். அவர் கேப்டன், வேகமாக விளையாடுவார். விராட் கோலிக்குக் களம் அமைத்துக் கொடுத்தார். ரோகித் ஆடுகளத்தில் இன்னும் சிறிது நேரம் தங்கினால், வரும் போட்டிகளில் அவர் சதம் அடிக்க முடியும்,” என்று வாசிம் அக்ரம் கூறினார்.
அதேசமயம், இந்த ஆடுகளம் எளிதானது அல்ல என்றும் அவர் கூறினார்.
பும்ராவைப் புகழ்ந்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’
‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று பிரபலமாக அறியப்படும் சோயிப் அக்தர், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் புகழ்ந்து, மற்ற பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான தளத்தை அவர் அமைத்துக் கொடுக்கிறார் என்று கூறினார்.
“பும்ரா மிகவும் அற்புதமாகப் பந்துவீசுகிறார். எந்த பேட்ஸ்மேனாலும் அவரது பந்துவீச்சைப் புரிந்து கொள்ள முடியாது. பந்து உள்ளே வந்து பவுன்ஸ் அளவுக்கு அவர் அதை மிக அழகாக வீசினார். அதே போல் நல்ல அவுட்ஸ்விங்கும் செய்கிறார். அவர் வேகமான பவுன்சர்களையும் வீசுவார், மெதுவாகவும் வீசுவார். அவர் மிக நல்ல ஃபாஸ்ட் யார்க்கர்களையும் வீசுவார். இதை விட முழுமையான வேகப்பந்து வீச்சாளரைப் பார்ப்பது கடினம்,” என்றார்.
பும்ரா, ஷமி மற்றும் சிராஜுக்கு அவர் களம் அமைத்துக்கொடுக்கிறார் என்று அக்தர் கூறினார்.
இதை ஷமியும், சிராஜும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதால் இருவரும் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை முறையே 16 மற்றும் 10 ஆக உயர்ந்துள்ளது.
போட்டிக்கு பிறகு முகமது ஷமி கூறுகையில், நாங்கள் பந்து வீசும் விதத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. யார் பந்து கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.
ஷமி மேலும் கூறுகையில், “இந்திய அணி எட்டு போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 15 வீரர்களில் யாரிடமும் எந்த ஒரு குறையும் இல்லை, என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ரோகித் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியதாகக் கூறினார்
கேப்டன் ரோகித் என்ன சொன்னார்?
இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், கடந்த 3 போட்டிகளில் இந்திய அணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பாக விளையாடியதாகக் கூறினார்.
“இங்கிலாந்து எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது. கடந்த போட்டியிலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் நன்றாக அடித்தோம். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக ஆடினர்,” என்றார்.
“இன்று ஆடுகளம் எளிதாக இல்லை, சூழ்நிலைக்கு ஏற்ப பேட் செய்யும் கோலி போன்ற ஒரு பேட்ஸ்மேன் தேவை. ஸ்ரேயாஸ் ரன்களை அடிக்கவில்லை, ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் தனது ‘கிளாஸை’க் காட்டினார். ஜடேஜா ஒரு பெரிய மேட்ச் வின்னர். அவர் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார், இன்றைய போட்டியில் அவர் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினார்,” என்றார்.
ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான ஆட்டம்
கடந்த மூன்று போட்டிகளில் ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் மற்றும் சிராஜ் ஆகிய ஐந்து பந்துவீச்சாளர்களை இந்தியா களமிறக்கியுள்ளது.
இந்தப் பந்துவீச்சாளர்கள், இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் மொத்தம் 67 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
ஷமி இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஜடேஜா ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதுக்கு தகுதியானவர் என்று சோயிப் அக்தர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கூறுகின்றனர்.
“ஜடேஜா ரன் குவித்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய விதத்திற்காக, ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று அக்தர் கூறினார்.
முதலில் பேட்டிங் செய்த ஜடேஜா அற்புதமாக ஆடினா. தனது கடைசி ஓவர்களில் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் பந்துவீச்சில் அசத்தினார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்த உலகக் கோப்பையில் அவரது விக்கெட்டுகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது மேலும் ஷமி (16), பும்ரா (15) ஆகியோருக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் ஜடேஜா தான்.

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்பிரிக்க அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை
ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தோல்வி
இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இது ரன் வித்தியாசத்தில், ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நான்காவது பெரிய வெற்றியாக அமைந்தது.
முன்னர், இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்தது. ரன் வித்தியாசத்தில் எந்த ஒரு அணியும் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
நான்கு நாட்களுக்கு முன்பு, உலகக் கோப்பையில் 302 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா படைத்தது. இந்த வெற்றியும் இலங்கைக்கு எதிரானது தான்.
மறுபுறம், ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்கா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஒருநாள் போட்டிகளில் அவர்களின் மிகப்பெரிய தோல்வியாகும்.
ஜிம்பாப்வேயை 272 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 258 ரன்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீஸை 257 ரன்கள் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்துள்ளது.
ஆனால் தென் ஆப்பிரிக்க அணியே 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை. முன்னதாக, 2002-இல் தென் ஆப்பிரிக்கா அணி 182 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்றதே ஒருநாள் போட்டியில் அவர்களது மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது குறைந்த ஸ்கோர்
இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் இரண்டாவது குறைந்த ஸ்கோர் ஆகும்.
தென் ஆப்பிரிக்கா 1993-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது குறைந்த ஸ்கோரை எடுத்தது. பென்சன் & ஹெட்ஜஸ் உலக கோப்பை தொடரின் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கெப்லர் வெசல்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 28 ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே எடுத்து ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அணியும் ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஹான்சி குரோனியே 20 ரன்கள் எடுத்தார், நான்கு பேட்ஸ்மேன்கள் தங்கள் கணக்கைக் கூட திறக்க முடியவில்லை.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்