AFG vs PAK – அஜய் ஜடேஜா: பாகிஸ்தானை வீழ்த்த ஆப்கானிஸ்தானை தயார்படுத்தியது எப்படி?

AFG vs PAK - அஜய் ஜடேஜா: பாகிஸ்தானை வீழ்த்த ஆப்கானிஸ்தானை தயார்படுத்தியது எப்படி?

அஜய் ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

கடந்த திங்களன்று (அக்டோபர் 23) நடந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

அதில், ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, “நீங்கள் இன்னும் ஆப்கானிஸ்தானை சிறிய அணி என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் பெரிய அணிகளை வீழ்த்தும் நாளில் அவர்களும் பெரிய அணியாக ஆவார்கள்,” என்று கூறுகிறார்.

அஜய் ஜடேஜாவிடம் ‘ஏன் ஆப்கானிஸ்தான் அணி பெரிய அணிகளை தோற்கடிக்க முடியவில்லை?’ என்று கேட்கப்பட்டதற்கே இவ்வாறு பதிலளித்தார்.

ஆப்கானிஸ்தான் தற்போது இரண்டு பெரிய அணிகளை வீழ்த்தியுள்ளது. கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தற்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கிறது.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம், AFGHANISTAN CRICKET BOARD

கடந்த 1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி, சமீப காலம் வரை ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் அணியில் முதல் இடத்திலிருந்து 11-ஆவது இடம் வரை நட்சத்திர ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் காலடி வைத்திருக்கும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் மட்டுமின்றி, அவர்களுக்கான வரவேற்பு மற்றும் மதிய-இரவு விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைககள் கூட விவாதப் பொருளாகின்றன.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம், AFGHANISTAN CRICKET BOARD

படக்குறிப்பு,

பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என மூன்றிலும் ஆப்கானிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை விட பல மடங்கு முன்னேறியிருந்தது

ஆப்கானிஸ்தான் அணியின் ‘அற்புதமான ஆட்டம்’

மறுபுறம், அக்டோபர் 14-ஆம் தேதிவரை, உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் என்று உறுதியாகக் கருதப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் சாதனையை ‘எதிர்பாராத திருப்பம்’ என்று கூறிய அனைத்து நிபுணர்களும், இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப்பின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி அணியின் ‘திறமை’ குறித்து பேசி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றியை ‘திருப்பம்’ என்று மட்டுமல்ல, போட்டியில் பாகிஸ்தானைச் சமன் செய்ய அனுமதிக்காத ஒரு அணியின் அதிசயம் என்றும் வர்ணிக்கப்படுகிறது.

பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என மூன்றிலும் ஆப்கானிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை விட பல மடங்கு முன்னேறியிருந்தது.

இந்த வெற்றியின் எதிரொலி சென்னையில் இருந்து டெல்லி, இஸ்லாமாபாத், காபூல் வரை கேட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் நடனம் ஆடியபோது, காபூலிலும் மக்கள் நடனமாடினர்.

இதற்கிடையில், ‘ஆப்கானிஸ்தானும் ஒரு பெரிய அணி’ என்று நீண்ட காலத்திற்கு முன்பு அறிவித்த அதே அஜய் ஜடேஜாவின் பெயர் மீண்டும் விவாதங்களில் அடிபட்டது.

அஜய் ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை சூதாட்ட சர்ச்சையினால் வெகு விரைவாகவே முடிந்தது. ஆனால் இப்போது அவர் ஆப்கானிஸ்தான் அணிக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்த பெருமைக்குரியவர்.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம், X/Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு

இந்திய கிரிக்கெட்டில் அஜய் ஜடேஜாவின் பெயர் பிரபலமானதுதான்.

1992-ஆம் ஆண்டு இந்திய அணிக்காகத் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ஜடேஜா, 2000-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பழக்கமான முகமாக இருந்தார். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

கடந்த மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் இரண்டாவது வெற்றிக்குப் பிறகு, சச்சின் டெண்டுல்கர் ஜடேஜாவை X சமூக தளத்தில் பாராட்டியிருக்கிறார்.

டெண்டுல்கர், “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் அவர்களது ஒழுக்கம், அணுகுமுறை, விக்கெட்டுகளுக்கு இடையே ரன் குவிக்க வேகமாக ஓடும் விதம் ஆகியவை அவர்களது கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது. ஒருவேளை இவை அனைத்திற்கும் காரணம் திரு. அஜய் ஜடேஜாவின் தாக்கமாகக் கூட இருக்கலாம்,” என்று பதிவிட்டிருகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்தக் கூற்று முக்கியமானதாகப் பார்க்கப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் தற்போதைய வழிகாட்டியான அஜய் ஜடேஜாவுடன் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டவர் டெண்டுல்கர்.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம், AFGHANISTAN CRICKET BOARD

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக, ஜடேஜா அந்த அணியின் சிந்தனையை மாற்றியுள்ளார்

‘சேஸ் மாஸ்டர்’ அஜய் ஜடேஜா

ஜடேஜா கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியில் இருந்தார். 1992 மற்றும் 2000-க்கு இடையில், ஜடேஜா 15 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார், ஆனால் இந்த காலகட்டத்தில், அவர் 196 ODI போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் 11 பேரில் ஒருவராக இருந்தார்.

மைதானத்தில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் அஜய் ஜடேஜா, தனது சுறுசுறுப்பு மற்றும் ஆட்டத்தால் இந்திய அணியின் பிரபலமான வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ரசிகர்கள் அவரை ‘மிஸ்டர் சார்மிங்’ என்று அழைத்தனர்.

அப்போது, ‘பல ரசிகர்கள் விளையாட்டைப் பார்க்க அல்ல ஜடேஜாவைப் பார்க்கவே மைதானத்திற்கு வருகிறார்கள்,’ என்று கூற்ப்பட்டது.

அவரது ஒப்பிடமுடியாத பேட்டிங்கினால், அவர் பல போட்டிகளின் போக்கை மாற்றினார்.

ஜடேஜா 41 போட்டிகளில் இன்னிங்ஸைத் தொடங்கினாலும் பெரும்பாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே பார்க்கப்பட்டார்.

யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியின் சகாப்தம் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அஜய் ஜடேஜா இந்திய அணியின் ‘சேஸ் மாஸ்டர்’ மற்றும் ‘சிறந்த பினிஷர்’ என்று அழைக்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப் பிறகு, 1996 உலகக் கோப்பையின் இரண்டாவது காலிறுதிப் போட்டியின் வீடியோ காட்சியும் வைரலானது. இதில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் பந்தில் அஜய் ஜடேஜா சிக்ஸர் அடிப்பதைக் காணலாம்.

அந்தப் போட்டியில் ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டுவென்டி-20 வடிவத்தின் வருகைக்கு முன்னர் விளையாடப்பட்ட இந்த இன்னிங்ஸ் ஒரு ‘கேம் சேஞ்சர்’ என்று கருதப்பட்டது. இன்றும் பார்வையாளர்கள் அதைக் குறிப்பிட்டுச் சிலாகிக்கின்றனர்.

அஜய் ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 30 அரை சதங்கள் அடித்துள்ளார்.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவாக உச்சத்தை நோக்கி நகர்ந்தபோது, மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளால் அது பெரும் சரிவைச் சந்தித்தது

அபாரமான அணித்தலைமை

அஜய் ஜடேஜா ஒரு பயனுள்ள நடுத்தர வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஒருநாள் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பீல்டிங்கின் அடிப்படையில், அவர் பல போட்டிகளை இந்தியாவுக்குச் சாதகமாகத் திருப்பினார்.

ஜடேஜா ஒரு நல்ல கேப்டனாகவும் பார்க்கப்பட்டார். அவர் இந்திய ஒருநாள் அணிக்குக் கேப்டனாக 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றார்.

மேட்ச் ஃபிக்சிங் சர்ச்சை

ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவாக உச்சத்தை நோக்கி நகர்ந்தபோது, மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளால் அது பெரும் சரிவைச் சந்தித்தது. 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், போட்டிகளில் விளையாட அவருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு திரும்பும் அவரது கனவு சிதைந்தது. அப்போது விசாரணையின் போது அவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

இருப்பினும், ஒரு டிவிஷன் பெஞ்ச் அவரை உள்நாட்டுக் கிரிக்கெட்டில் விளையாட அனுமதித்தது. டெல்லி அணிக்குத் திரும்பி கேப்டனானார். 2005-ஆம் ஆண்டில், அவர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என இரட்டை பொறுப்பு வகித்தார்.

ஆட்டத்திலிருந்து விலகிய பிறகும், பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் கிரிக்கெட்டுடன் அவர் தொடர்ந்து பயணித்தார்.

கிரிக்கெட், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, அஜய் ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் அணி எந்த எதிரணிக்கும் பயப்படவில்லை என்று ஜடேஜா கூறுகிறார்

புதிய பரிமாணத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக, ஜடேஜா அந்த அணியின் சிந்தனையை மாற்றியுள்ளார். இந்த அணிக்கு வெற்றி மந்திரத்தை ஜடேஜா கற்றுக் கொடுத்திருப்பதாக அந்த அணியை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் கூறுகின்றனர்.

இப்போது ஆப்கானிஸ்தான் அணி எந்த எதிரணிக்கும் பயப்படவில்லை என்று ஜடேஜா கூறுகிறார்.

“ஆப்கான் வீரர்களின் மிகப்பெரிய சிறப்பு பயமின்மை. அவர்கள் எந்த அணிக்கும் கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும்,” என்கிறார் ஜடேஜா.

ஜடேஜாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் பார்த்துள்ளார். அவருடன் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கான பெருமையின் பெரும் பகுதி ஜடேஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என சோயிப் மாலிக் கருதுகிறார்.

ஊடக அறிக்கைகளின்படி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றிக்குப் பிறகு, சோயப் மாலிக், “அஜய் ஜடேஜாவுடனே இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஒரு சேனலுக்காக ஜடேஜாவுடன் பணியாற்றியுள்ளேன். கிரிக்கெட் பற்றிய அவரது புரிதல் சிறப்பானது. உங்களைச் சுற்றி சரியான நபர்கள் இருந்தால் அது நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். இந்த வித்தியாசம் எவ்வளவு பெரியது என்பதை பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட முழு உலகமும் இப்போது புரிந்து கொண்டிருக்கிறது,” என்றார் மாலிக்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *