இந்தியா – பாகிஸ்தான் எல்லை கடந்த காதல் – ஆன்லைனில் திருமணம் செய்த இருவரும் சேர்வது எப்போது?

இந்தியா - பாகிஸ்தான் எல்லை கடந்த காதல் - ஆன்லைனில் திருமணம் செய்த இருவரும் சேர்வது எப்போது?

இந்தியா, பாகிஸ்தான், காதல், விசா செயல்முறைகள், அரசியல்

பட மூலாதாரம், BHARGAV PARIKH

படக்குறிப்பு,

ஜுனைத் மற்றும் ஃபுராத்

“மூன்று வருடங்களாக எனது மனைவியை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சித்தும், பாகிஸ்தானுக்கு செல்ல எனக்கு விசா கிடைக்கவில்லை, பாகிஸ்தானில் வசிக்கும் எனது மனைவிக்கும் இந்தியா வர விசா கிடைக்கவில்லை. தினமும் பல மணிநேரம் ஆன்லைன் மூலமாக தான் பேசிக்கொள்கிறோம்.”

“எனது மனைவியை எப்போது இந்தியா அழைத்து வர முடியும் என தெரியவில்லை”, என ஜுனைத் சாவன்வாலா வேதனையுடன் கூறுகிறார்.

ஒரு பாகிஸ்தானிய பெண்ணை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டு, அந்த பெண்ணை இந்தியா அழைத்து வர போராடிக் கொண்டிருக்கிறார் ஜுனைத் சாவன்வாலா.

அகமதாபாத்தின் ஜமால்பூரில் வசிக்கும் ஜுனைத்தின் உறவினர்கள் பாகிஸ்தானில் வசிக்கின்றனர். அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு வரை அவ்வவ்போது இந்தியாவுக்கு வந்துள்ளார்கள்.

இருவரும் சந்தித்தது எப்படி?

இந்தியா, பாகிஸ்தான், காதல், விசா செயல்முறைகள், அரசியல்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் ஜுனைத்தின் அத்தை, தனது உறவினர் ஒருவரின் சிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து 2016ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். அப்போது அந்த உறவினரின் மகள் ஃபுராத் பூல் என்பவரும் இந்தியா வந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஜுனைத் மற்றும் ஃபுராத் இருவரும் சந்தித்துள்ளார்கள்.

நாங்கள் அனைவரும் ஃபுராத்தை ‘ஆனி’ என்ற புனைப்பெயரில் அழைப்போம் என்று ஜுனைத் கூறுகிறார். ஆனி அப்போது பாகிஸ்தானில் படித்து வந்தார்.

“அவர் இந்தியா வந்தபோது, ​​நாங்கள் ஒன்றாகப் பல இடங்களுக்குச் சென்றோம், ஆனால் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வரவில்லை. தன் தாயாரின் சிகிச்சை முடிந்து ஃபுராத் பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு, அவரது தாயின் உடல்நிலை குறித்த செய்திகளைக் தெரிந்துகொள்ள வீடியோ அழைப்புகளில் பேசிக் கொண்டோம்” என்கிறார் ஜுனைத்.

“நாட்கள் செல்ல செல்ல, நானும் ஃபுராத்தும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினோம். பிறகு எங்கள் உறவினர் ஒருவருக்கு பாகிஸ்தானில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதனால் என் அம்மா 2018-இல் பாகிஸ்தானுக்கு செல்லவிருந்தார்.

நானும் ஃபுராத்தும் அடிக்கடி வீடியோ கால்களில் பேசிக்கொள்வதைப் பார்த்து, நாங்கள் காதலிப்பதை அம்மா தெரிந்து கொண்டார். அவர் பாகிஸ்தானுக்குச் சென்ற போது ஃபுராத்திடம் பேசினார். ஃபுராத் என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்” என்று கூறுகிறார் ஜுனைத்.

ஜுனைத்- ஃபுராத் காதல் பற்றி பேசுகையில், அவரது தாயார் சஃபூரா சாவன்வாலா, “நான் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, ​​ஃபுராத் என் மகனைக் காதலிப்பதாக எனது சகோதரியும் என்னிடம் சொன்னாள்.”

“பின்னர் நான் ஃபுராத்திடம், உனக்கு என் மகனைப் பிடித்திருந்தால், வீட்டில் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்று கூறினேன். அவளும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டாள். “

“பாகிஸ்தானில் வைத்தே இருவருக்கும் நிச்சயம் செய்து விட்டு, ஃபுராத்துக்கு 18 வயது நிரம்பியவுடன் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என பேசிவிட்டு இந்தியா வந்தேன். இருவருக்கும் இதில் முழு சம்மதம் இருந்தது. வேறு எந்த சிக்கலும் அப்போது இல்லை” என்று கூறுகிறார்.

இந்தியா, பாகிஸ்தான், காதல், விசா செயல்முறைகள், அரசியல்

பட மூலாதாரம், BHARGAV PARIKH

இருவருக்கும் திருமணம் நடந்தது எப்படி?

“இந்தியா திரும்பிய எனது அம்மா, எனக்கும் ஆனிக்கும் நிச்சயம் முடித்து விட்டதாக கூறினார். பின்னர் வீடியோ கால்களில் பேசுவது அதிகமானது. 2020ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் வந்தது. அப்போது ஃபுராத்துக்கு 18 வயது முடிந்தது”

“இருவரும் சந்திக்க முடியாத நிலையில் நாங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி இருந்தது. நான் விசா ஆலோசகர் முதல் வெளிநாட்டுத் துறை அதிகாரிகள் வரை விசாரித்து பார்த்தேன். நீங்கள் ஆன்லைனில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்” என்கிறார் ஜுனைத்.

தொடர்ந்து பேசிய அவர், “மேலும் உங்கள் மனைவியாக அவர் மாறிவிட்டால், இந்தியா வர விசா கிடைக்கும். ஏனென்றால் இந்தியாவுக்கு உடனடியாக வர மூன்று வகையான விசாக்கள் உள்ளன என்றும், ஒருவர் வணிக நோக்கத்திற்குச் செல்ல விரும்பினால், வணிக விசாவைப் பெறலாம் அல்லது மருத்துவ சிகிச்சை, திருமணம் என்றால் உடனடி விசாவைப் பெற முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்” என்கிறார்.

நாங்கள் மௌலவி மற்றும் காஜிகளிடம் கலந்தாலோசித்தோம் என்று ஜுனைத் கூறுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் காஜிகள் கொரோனா காரணமாக ஆன்லைன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள்.

“அதன்பிறகு, கொரோனாவின் இரண்டாவது அலை வந்ததால், உடனடியாக இந்தியாவுக்கு வரமுடியவில்லை. கொரோனா தொற்றுக்குப் பிறகு, நாங்கள் ஜனவரி 2022இல் ஆன்லைனில் திருமணம் செய்துகொண்டோம்” என்று கூறிய ஜுனைத், தொடர்ந்து பேசினார்.

“ஃபுராத்து எனது பெயரை கணவர் என பதிவு செய்து, பாகிஸ்தானில் இருந்து திருமணச் சான்றிதழைப் பெற்றாள். அதன் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைந்தன, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையை கடுமையாக்கியது.”

“நான் என் மனைவியின் விசாவுக்காக அலைந்து வருகிறேன். அவள் என் மனைவியாக இருந்தாலும் அவளுக்கு விசா கிடைக்கவில்லை, ஏனென்றால் என் மனைவி பாகிஸ்தானி என்பதால் ஸ்பான்சர் செய்து, கையெழுத்திட யாரும் முன்வரவில்லை” என வருத்தத்துடன் கூறுகிறார் ஜுனைத்.

“திருமணம் முடிந்தும் இன்னும் என் மனைவியை நேரில் பார்க்க முடியாமல் தவித்து வருகிறேன். அங்கே அவளும் எனக்காக காத்திருக்கிறாள். எனக்கும் பாகிஸ்தான் செல்ல விசா கிடைக்கவில்லை. விசா கிடைத்ததும் என் மனைவியை பார்க்க ஆவலோடு இருக்கிறேன்” என்றார் ஜுனைத்.

ஆன்லைனில் திருமணம் செய்த இருவரும் சேர்வது எப்போது?

இந்தியா, பாகிஸ்தான், காதல், விசா செயல்முறைகள், அரசியல்

பட மூலாதாரம், BHARGAV PARIKH

ஜுனைத் உதவியுடன் வீடியோ அழைப்பு மூலம் பாகிஸ்தானில் உள்ள ஃபுராத்திடம் பிபிசி பேசியது.

“கொரோனாவுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு இந்தியா செல்வேன் என்று எண்ணியிருந்ததால் நான் படிப்பை விட்டுவிட்டேன். என் கணவர் ஏ.சி, ஃப்ரிட்ஜ் பழுது பார்க்கும் வேலையைச் செய்கிறார். நான் இங்கு ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறேன்.”

“மேலும் அழகுக்கலை சார்ந்த ஒரு கோர்ஸ் முடித்துள்ளேன். அதனால் நான் எனது கணவருக்கு பொருளாதார ரீதியாகவும் உதவ முடியும். இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென விரும்புகிறோம்” என்ற ஃபுராத் தொடர்ந்து பேசினார்.

“எனது கணவருக்கும் விசா கிடைப்பதில் தாமதமாகிறது. அவர் பாகிஸ்தான் வந்து இங்கு இருக்க விரும்பினாலும், என்னால் அவரைக் காப்பாற்ற முடியும். அதற்காக தான் பியூட்டி பார்லர் நடத்தி, கிடைக்கும் பணத்தை சேமித்து வருகிறேன். இருவரும் விரைவில் இணைவோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார் ஃபுராத்.

பாகிஸ்தானில் இருந்து ஃபுராத்தை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஸ்பான்சர்ஷிப் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அகமதாபாத்தில் இருக்கும் ஜுனைத் தனது மனைவிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்.

ஃபுராத்தும் தனது கணவனுக்காக பாகிஸ்தானில் காத்திருக்கிறார். தொழில்நுட்பத்தின் உதவியால் இருவரும் தினமும் இணையத்தில் சந்தித்துக்கொள்ள முடிகிறது என்பதே இப்போதைக்கு அவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *