
பட மூலாதாரம், Sharanya Coimbatore
கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா மீது பரபரப்பான குற்றாச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்.
‘கோவை மேயரின் குடும்பம் எங்களிடம் பணத்த வாங்கிவிட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள், பணத்தை திரும்ப கேட்டதுக்கு எங்கள் வீட்டுன் பக்கம் சிறுநீர் ஊற்றுகிறார்கள், குப்பையை கொட்டுகிறார்கள்,’ என்று கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா மீது பரபரப்பான குற்றாச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக, மேயர் மீது முதல்வர் ஸ்டாலினிடமும் அவர் புகாரளித்துள்ளார். சரண்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு, கோவை மேயரின் விளக்கம் என்ன?
கோவை மணியக்காரம்பாளையம் நட்சத்திரா கார்டனில் நான்கு வீடுகள் கொண்ட குடியிருப்பில், சரண்யா (33) – கோபிநாத் (37) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த சரண்யா குடும்பத்தினர், இரண்டரை ஆண்டுகளாக இந்தக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா மீது அதிர்ச்சிகரமான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் சரண்யா.
அத்துடன் முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மேயர் மீது சரண்யா புகாரளித்துள்ளார். திமுக மேயர் மீது அக்கட்சியை சேர்ந்த பெண் ஒருவரே புகார் அளித்திருப்பது, அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பட மூலாதாரம், Sharanya Coimbatore
கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா மீது முதல்வரின் தனிப்பிரிவில் புகாரளித்துள்ள சரண்யா.
‘குப்பை கொட்டுறாங்க…சிறுநீர் ஊத்துறாங்க’
மேயர் மீது புகார் கொடுத்தது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சரண்யா, ‘‘எங்கள் குடியிருப்பில் நான்கு வீடுகள் உள்ளன. எனது வீட்டுக்கு அருகே, கோவை மேயர் கல்பனா தனது தாய் காளியம்மாள், தம்பி குமாருடன் வசித்து வருகிறார். மற்ற இரு வீடுகளில் மேயரின் உறவினரும், நண்பரும் வசிக்கின்றனர்.
கல்பனா மேயர் ஆவதற்கு முன்பு, காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரது சிகிச்சைக்காக குமார், என் கணவரிடம் 15 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார்.
இதில், ஐந்தாயிரம் ரூபாயை திரும்ப செலுத்திய அவர்கள், மீதத் தொகையை இன்னமும் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
கொடுத்த பணத்தை கேட்டால் எங்களை அவர்கள் அச்சுறுத்துவதுடன், பல வகைகளில் தொல்லைகள் கொடுத்து மனஉளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர்,’’ என்றார்.

பட மூலாதாரம், Sharanya Coimbatore
மேயர் கல்பனாவின் தம்பி குமார் வீட்டு மாடிக்கு வந்து, வேண்டுமென்றே தங்கள் சமையல் அறை உள்ள பகுதியில் காண்பவுண்ட் சுவருக்கு வெளியே உணவுக்கழிவுகளை கொட்டுவதாக குற்றம்சாட்டுகிறார் சரண்யா.
மேயர் குடும்பத்தினர் தொல்லைகள் கொடுப்பதாக தொடர்ந்த சரண்யா, ‘‘மேயர் கல்பனாவின் தம்பி குமார் வீட்டு மாடிக்கு வந்து, வேண்டுமென்றே எங்கள் சமையல் அறை உள்ள பகுதியில் காண்பவுண்ட் சுவருக்கு வெளியே உணவுக்கழிவுகளை கொட்டுகிறார்.
காம்பவுண்டுக்கும் சமையல் அறை ஜன்னலுக்கும் ஒரு அடி மட்டுமே இடைவெளி உள்ளதால், குப்பை காற்றில் பறந்து எங்கள் சமையல் அறைக்குள் வருவதுடன், காம்பவுண்ட் சுவரில் விழுந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அதே இடத்தில் அவர் சிறுநீரை ஊற்றியபோது அது எங்கள் ஜன்னலில் தெளித்தது.
இதுபோல், பல மாதங்களாக இவர்கள் தொல்லை கொடுத்து வருவதையடுத்து, நாங்கள் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளோம்.
சிறுநீர் ஊற்றுவதும், குப்பைகளை கொட்டுவதும் கேமராவில் பதிவாகியுள்ளன.’’ என்று தெரிவித்தார் சரண்யா.

பட மூலாதாரம், Sharanya Coimbatore
சரண்யா குடியிருக்கும் வீட்டின் முகப்பு பகுதி
‘இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை’
திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு, முதல்வரின் தனிப்பிரிவு, கோவை காவல் ஆணையர், மனித உரிமைகள் ஆணையம் என, பல இடங்களில் புகார் கொடுத்தும் இதுவரை மேயர் கல்பனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார் சரண்யா.
‘‘எங்கள் சொந்த ஊர் மன்னார்குடி. என் அப்பா 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ளார். என் அப்பாவுக்கு எம்.பி டி.ஆர்.பாலு பழக்கம்.
இதனால், 2022 டிசம்பரில் கோவையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், டி.ஆர்.பாலுவை நேரில் சந்தித்து இந்தப் பிரச்னை தொடர்பாக மனு கொடுத்தேன்.

பட மூலாதாரம், Sharanya Coimbatore
தங்களுக்கான கார் பார்க்கிங்கைக்கூட பயன்படுத்த முடியாதப்படி கேட்டில் இரண்டு பூட்டுகள் போடப்பட்டுள்ளதாக கூறுகிறார் சரண்யா.
அதன் பின்னும், மேயரின் தொல்லைகள் தொடர்ந்ததால் தற்போது, முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் கோவை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
நான் புகார் கொடுத்த பின் மேயர் கல்பனா தரப்பிலிருந்து தொலைபேசி வாயிலாக எனக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்து கொண்டிருக்கின்றன,’’ என்கிறார் சரண்யா.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘வீட்டின் பராமரிப்பாளர் மேயருடன் இணைந்து எங்கள் வீட்டை காலி செய்யச் சொல்கிறார்,‘’ என்றும், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Sharanya Coimbatore
சரண்யா சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியில் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார் மேயர் கல்பனா.
‘சட்டரீதியாக பார்த்துக் கொள்கிறோம்’
சரண்யா கூறும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து, கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
அப்போது ‘‘சரண்யா சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியில் பார்த்துக் கொள்கிறோம். சரண்யா மீது போலீஸில் புகாரும் கொடுத்துள்ளேன்,’’ என்று தெரிவித்தார்.
வீட்டு வளாகத்தில் சிறுநீர் ஊற்றியது, குப்பை கொட்டியதாக சரண்யா கூறும் குற்றச்சாட்டு குறித்து, மேயர் கல்பனாவின் சகோதரர் குமாரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
அதற்கு, ‘‘நாங்கள் இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக பார்த்துக்கொள்கிறோம்,’’ என்று கூறிய குமார், மேற்கொண்டு பேசாமல் செல்ஃபோன் இணைப்பை துண்டித்தார் .
வீட்டை காலி செய்யச் சொன்னீர்களா? என்ற கேள்வியை, சரண்யா குடியிருக்கும் வீட்டின் பராமரிப்பாளர் கல்யாணராமனிடம் முன்வைத்த போது, அவர் அதை மறுத்துள்ளார்.
’‘மேயருக்கு ஆதரவாக நாங்கள் செயல்படவில்லை. நாங்கள் சரண்யாவை மட்டுமல்ல, மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் என, அனைவரையும் வீட்டை காலி செய்யச் சொல்லியுள்ளோம்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மேயர் குடும்பத்துடன் நட்பாக இருந்த சரண்யா, தற்போது அவர் மீது புகார் தெரிவிக்கிறார். அவர்களுக்குள் என்ன பிரச்னை என எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வீட்டை வாடகைக்கு விடுகிறோம் அவ்வளவு தான்,’’ என, பிபிசி தமிழிடம் கல்யாணராமன் தெரிவித்தார்.
‘முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்’
இந்த விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘‘கோவை திமுக மேயர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அரசின் முதன்மை பதவியில் இருப்பவரின் மீது இதுபோன்ற புகார்கள் வரும்போது, மாநில அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
கோவை மேயர் மீதான புகார் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்