
பட மூலாதாரம், ANI
விண்வெளி துறையில் உலக அளவில் வேகமாக முன்னேறிவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இப்போது சூரியனை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ‘ஆதித்யா-எல் 1’ என்ற திட்டம் மூலம் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் நட்சத்திர மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
சந்திரயான் திட்டத்தைப் போலவே, இந்த ஆதித்யா-எல்1 விண்கலமும் முதலில் பூமியை அதிக உயரத்தில் சுற்றி வரும். பின்னர் அது சூரியனை நோக்கி வேகமாகப் பாய்ந்து செல்லும். பின்னர் ‘ஆதித்யா-எல்1’ பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை எட்டும். பின்னர் பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை சமமாக இருக்கும் பகுதியான L1 எனப்படும் லக்ரேஞ்சியன் புள்ளி 1 (Lagrange Point 1)-ல் நின்று இந்த விண்கலம் தனது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும்.
இந்த தூரத்தை ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் நான்கு மாதங்களில் கடக்கும். இங்கிருந்து அது சூரியனின் பல்வேறு செயல்பாடுகள், சூரியனுக்கு உள்ளே மற்றும் வெளிப்புறம் நிலவும் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
அமெரிக்கா இதற்கு முன்பு இதேபோன்ற ஒரு விண்கலத்தை சூரியனுக்கு அருகில் உள்ள எல்-2 புள்ளிக்கு அனுப்பியுள்ளது.
பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் சுமார் 15 மில்லியன் கி.மீ. ஆகும். இச்சூழலில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளில் ‘ஆதித்யா எல்1’ ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றின்படி, விண்வெளித் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதற்கான சூழலை இந்தியா உருவாக்கியுள்ளது என்பது மட்டுமின்றி இந்த துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வழிவகைகளைக் கண்டறிவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. விண்வெளித்துறை சார்ந்த சந்தை உலக அளவில் வேகமாக முன்னேறிவரும் நிலையில், அடுத்த தசாப்தத்தில் உலகளாவிய வெளியீட்டு சந்தையில் தன் பங்கை ஐந்து மடங்கு அதிகரிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.

பட மூலாதாரம், ANI
சூரியன் மற்றும் பூமியை மையப்படுத்தி பார்க்கையில் 5 லக்ரேஞ்சியன் புள்ளிகள் உள்ளன. அதில் லக்ரேஞ்சியன் புள்ளி 1-ல் இருந்து ஆதித்யா எல்-1 ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
விண்வெளி துறையில் வேகமாக அதிகரிக்கும் இந்தியாவின் செல்வாக்கு
ஆகஸ்ட் 23 அன்று, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு சந்திரயான் – 3 மூலம் நிலவில் தரையிறங்கிய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்தது.
இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளது. அங்கு எந்த நாடும் இதுவரை விண்கலங்களை அனுப்பியதில்லை. எனவே இது இந்திய விஞ்ஞானிகளின் மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.
இது குறித்து ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஆகாஷ் சின்ஹா கூறுகையில், “சந்திரயான் 3 ரோவர் மிகவும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த சிறிய இயந்திரம் ஒரு கார் போன்றது. ரோவர் தானாகவே முடிவுகளை எடுத்து, தனது பாதையை தானே தேர்வு செய்வது மட்டுமின்றி கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்கிறது. சந்திரனின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலம் மற்றும் வெப்பநிலை போன்றவை குறித்த ஆய்வில் அது தன் வேலையைச் சிறப்பாகச் செய்கிறது,” என்றார்.
இந்தியாவில் வறுமையான சூழ்நிலை நிலவிய 1950 மற்றும் 1960 களிலேயே விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. 1963ல் தனது முதல் ராக்கெட்டை ஏவிய போதும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டி போடுவதாக யாரும் எண்ணவில்லை.

பட மூலாதாரம், ANI
1950 களிலேயே இந்தியா தனது விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியது.
‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படத்தின் பட்ஜெட்டுடன் ஓர் ஒப்பீடு
ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள இச்சூழலில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வளம் கொண்ட நாடாக உள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில், இப்போது உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு இணையாக நிச்சயமாக இந்தியா முன்னேறியுள்ளது.
சந்திரயான்-3 திட்டத்திற்காக இந்தியா சுமார் 70 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இது கிறிஸ்டோபர் நோலனின் 2014 ஆம் ஆண்டு வெளியான விண்வெளிப் பயணத் திரைப்படமான ‘இன்டர்ஸ்டெல்லருக்கு’ செலவிடப்பட்ட 131 மில்லியன் டாலர்களில் பாதி அளவே ஆகும்.
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பொதுவாக பணக்கார நாடுகளின் முயற்சியாக கருதப்படுகிறது.
ஆனால் இந்தியாவின் வெற்றி, வளர்ந்து வரும் உலக நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
சந்திரன் அல்லது சூரியன் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட அறிவுக்கு எந்த ஒரு நாட்டிற்கும் ஏகபோக உரிமை இல்லை. இது உலகெங்கிலும் உள்ள மனித வளர்ச்சி மற்றும் மனிதகுலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் மற்றும் சூரியன் பற்றிய ஆராய்ச்சியால் இந்திய விஞ்ஞானிகள் எதைப் பெற்றாலும், முழு உலகமும் அதன் மூலம் பயனடையும். உலகம் எத்தகைய முன்னேற்றம் அடைந்தாலும் அது அறிவியல் ஆராய்ச்சிகளாலும், புதிய கண்டுபிடிப்புகளாலும் மட்டுமே எட்டப்படும்.

பட மூலாதாரம், ANI
இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்திற்குச் செலவிடப்பட்ட தொகையில் பாதி தொகைதான் சந்திரயான்-3 திட்டத்திற்காக இந்தியா செலவிட்டது.
இந்திய விண்வெளித் திட்டங்கள் குறித்து சாமானியர்கள் என்ன சொல்கின்றனர்?
சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 திட்டங்களுக்குப் பின்னர் இந்தியாவில் புதிய பரபரப்பும், உற்சாகமும் ஏற்பட்டுள்ளது.
இத் திட்டங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயங்களாக உள்ளன. விண்வெளி அறிவியலில் இந்தியா வேகமாக முன்னேறிவருவதற்கான அறிகுறிகளாகவே இந்த திட்டங்கள் உள்ளன என மாணவி அடா ஷஹீன் கூறுகிறார்.
இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்திய ஷாருக் கான் என்ற இளைஞர், “விண்வெளியில் இந்தியா மிகப்பெரிய பாய்ச்சலை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சிறுவயது கனவு நனவாகியுள்ளது. சிறுவயதில் இருந்தே நிலவில் அமெரிக்கக் கொடிபறந்தது தொடர்பான படங்களைப் பார்த்து வருகிறேன். இந்தியக் கொடியும் அங்கு சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை. எனது சிறுவயது கனவு இப்போது நனவாகியது,” என்கிறார்.
இருப்பினும், இந்த மகிழ்ச்சியான எண்ணங்களைக் கடந்து, அவர் சில ஆலோசனைகளையும் முன்வைக்கிறார். விண்வெளி ஆய்வில் இவ்வளவு கவனம் செலுத்தப்படுவதற்கு முன் பூமியில் நிலவும் பிரச்சனைகளைச் சரிசெய்வதிலும் விஞ்ஞானிகள் அதே கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இதுபோன்ற விண்வெளிப் பயணங்களால் எதையும் சாதிக்க முடியாது என்பது மட்டுமல்ல, நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு மாயை தான் இது என்றும் கூறுகிறார்.
ஃபராஸ் ஃபக்ரி என்பவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். சந்திரயான் 3 இன் வெற்றி தனியார் விண்வெளித் துறைக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
“ரோவர் ஒரு சில நாட்களில் சந்திரனில் கந்தகம் மற்றும் பிற கனிம படிவுகளை கண்டறிந்துள்ளது. இது இரவு மற்றும் பகல் நேரங்களுக்கு இடையே அசாதாரண வெப்பநிலை மாற்றங்களையும் பதிவு செய்துள்ளது. இந்த விண்வெளி பயணம் ஒரு பெரிய வெற்றியாகும். மேலும் இந்தியா இப்போது விண்வெளிச் சந்தையில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

பட மூலாதாரம், ANI
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களில் தனியார் துறையின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது.
இஸ்ரோவுடன் கூட்டு சேரும் தனியார் விண்வெளி நிறுவனங்கள்
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மட்டும் செய்வதில்லை. அண்மைக் காலங்களில், பல தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. அவற்றில் பல நிறுவனங்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.
சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கிய பிறகு, இஸ்ரோ இயக்குனர் இந்த சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்தார் என்பதுடன் இந்தியாவின் பல தனியார் விண்வெளி நிறுவனங்களையும் பாராட்டினார்.
இந்த விண்வெளி திட்டங்களில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் முக்கிய பங்கு வகித்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை இஸ்ரோவும், அதனுடன் இணைந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மட்டுமே மேற்கொண்டுவந்தன. ஆனால் 2020 இல், பிரதமர் நரேந்திர மோதி அரசு விண்வெளி தொழில்நுட்பத் துறையில் தனியார் நிறுவனங்களும் பங்குபெறும் வழிகளைத் திறந்துவிட்டது.
வேகமாக வளரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 150 தனியார் விண்வெளி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்நிறுவனங்களில் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் முதலீடு செய்யப்படுகிறது.
இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டப் பணிகளில் உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
இதனூடாகவே இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் முன்னேறி வருகின்றன. 2022ல், ‘ஸ்கைரூட்’ என்ற தனியார் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் தனது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று தனது சொந்த ராக்கெட் மூலம் தனது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இதுவே முதல் முறை.
ஹைதராபாத்தை சேர்ந்த இந்த நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் பெரிய செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.
விண்வெளித் திட்டங்களில் பின்தங்கிய ரஷ்யாவும், சீனாவும்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இருந்து செயற்கைக்கோள்களை அனுப்புவது செலவு குறைவானது. இதன் காரணமாக இந்த தனியார் விண்வெளி நிறுவனங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துவருகிறது.
உலகளாவிய அரசியல் காரணங்களால், ரஷ்யாவும், சீனாவும் இப்போது விண்வெளித் திட்டங்கள் மற்றும் விண்வெளி சந்தையில் முன்னேற முடியாத நிலை காணப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) இணைந்து இந்த தனியார் இந்திய விண்வெளி நிறுவனங்களும் உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இத்துறை சார் நிபுணர்களின் கூற்றுப்படி, விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கான சந்தை தற்போது ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக இருக்கிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, எலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி சந்தையில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் தனது விண்வெளித் திட்டங்களில் ‘ஸ்பேஸ் ஷட்டில் ராக்கெட்’ – அதாவது மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்டை பயன்படுத்துகிறது.
இந்த ராக்கெட், அதிக எடை மற்றும் பெரிய அளவிலான கலங்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது. இதன் காரணமாக இந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்துவது இந்தியாவில் இருந்து விண்கலங்களைச் செலுத்தும் செலவைவிட குறைவானதாக இருக்கிறது.
இந்திய தனியார் நிறுவனங்கள் இப்போது பெரிய அளவில் விண்வெளி தொழில்நுட்பத்தின் சிறப்புத் துறைகளில் பணியாற்றத் தொடங்கியுள்ளன. அவை விண்வெளித் திட்டங்களில் பல்வேறு வகையில் இஸ்ரோவுடன் ஒத்துழைப்பது மட்டுமல்லாமல், இப்போது அவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கும் உதவுகின்றன.
இந்த தனியார் நிறுவனங்களின் உதவியுடன் புதிய பணிகளில் மேலும் மேலும் வேகமாக பங்கேற்கும் செய்யும் உரிமையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) இப்போது பெற்று வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்