
பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் உதவி இல்லாமல் வீட்டிலேயே பார்க்கப்படும் பிரசவங்களின் போது தாயும் சேயும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மீண்டும் ஒரு பெண் பலியாகியிருக்கிறார். தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது ஏன்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யூ டியூப் பார்த்து, குழந்தையைப் பிரசவிக்க முயன்ற நிகழ்வில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற பிரசவ மரணங்கள் அரசின் கண்காணிப்பை மீறியும் தொடர்ந்து நடந்துவருகின்றன.
சமீபத்தில் நடந்த இந்த மரணத்தில், சம்பந்தப்பட்ட தம்பதிகள் பிரசவத்தை மருத்துவமனையில் பார்க்காமல் வீட்டிலேயே செய்துகொண்டது காரணமாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாயகிக்கும் தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.
லோகநாயகி கர்ப்பமடைந்த நிலையில், குழந்தையை வீட்டிலேயே பிரசவிக்க தம்பதியினர் முடிவுசெய்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டிலேயே அவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
ஆனால், தொப்புள்கொடி வெளியேறாத நிலையில் ரத்தப்போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.
தமிழ்நாட்டில் தொடரும் வீட்டு பிரசவ மரணங்கள்
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இதுபோல வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயற்சித்து தாய் இறப்பது அல்லது பிறந்த குழந்தை இறந்துவிடுவது அல்லது இருவருமே இறந்துவிடுவது போன்ற சம்பவங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் இதேபோல, யு டியூப் வீடியோக்களைப் பார்த்து கிருத்திகா என்ற பெண்ணுக்கு அவரது கணவர் கார்த்திகேயனும் கார்த்திகேயனின் நண்பர் பிரவீண் என்பவரும் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். குழந்தை பிறந்த பிறகு வலியால் துடித்த கிருத்திகா சிறிது நேரத்திலேயே மரணமடைந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கார்த்திகேயன் கைதுசெய்யப்பட்டார். பிரவீண் மீதும் அவரது மனைவி மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த கண்ணன் – மகாலட்சுமி தம்பதியினர் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றுக்கொண்டனர்.
ஆனால், குழந்தை பிறந்த பிறகு, தொப்புள்கொடியை அகற்றவில்லை. அரசு மருத்துவர்கள் அங்கு வந்து, தொப்புள்கொடியை அகற்ற முயன்றபோது, வீட்டிலிருந்தவர்களும் சேர்ந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்குப் பிறகு கணவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த மோனிஷா என்பவர் கர்ப்பமடைந்து தனது தாய் வீட்டில் இருந்துவந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், அவரது சகோதரர் சிபி என்பவர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அதில் குழந்தை இறந்தது. அந்தப் பெண் அதிக ரத்தப்போக்கின் காரணமாக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
2021ஆம் ஆண்டு டிசம்பரில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பெண் ஒருவருக்கு அவரது கணவரும் கணவரின் சகோதரியும் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தே பிறந்தது. இதையடுத்து கணவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் நிமினிவயல் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் திருமணமாகமலேயே கர்ப்பமான நிலையில், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வீட்டிலேயே குழந்தை பிறந்தது. அவருக்கு உறவினர்களே பிரசவம் பார்த்துள்ளனர். பிறகு குழந்தை இறந்துவிட்டது. ப்ரியாவின் உடல்நலமும் மோசமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கொண்டு செல்லப்படும்போது உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணையும் அவர்களின் பிரசவத்தையும் கண்காணிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
2021ஆம் ஆண்டு டிசம்பரில் கோயம்புத்தூரைச் சேர்ந்த புண்ணியவதி என்பவர் கர்ப்பமான நிலையில், பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே குழந்தைபெற்றுக் கொண்டார். ஆனால், அந்தக் குழந்தை சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. இதையடுத்து, அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது.
இதில் கிழக்கு தாம்பரம், கூடலூர் சம்பவங்களைத் தவிர பிற சம்பவங்களில் “இயற்கை வழியில் குழந்தையைப் பெற்றுக்கொள்வது” என்பதை முன்வைத்தே சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் வீட்டிலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முயன்றுள்ளனர்.
இந்தப் போக்கு 2015- 16ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இதற்கான பிரச்சாரங்களையும் சில அமைப்புகள் முன்னெடுத்தன.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் ‘இனிய சுகப்பிரசவம்’ என்ற பெயரில், இலவசப் பயிற்சி அளிக்கப்படுவதாக விளம்பரம் வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் அதனைத் தடுத்து நிறுத்தியது. சுகாதாரத் துறை அமைச்சர் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கைகளை விடுத்தனர்.
இருந்தபோதும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோல வீட்டிலேயே பிரசவங்கள் நடப்பது தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
வீட்டில் பார்க்கப்படுவதே இயற்கை பிரசவம் என நம்பப்படுவது தவறு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தாய் – சேய் நல நிலவரம் என்ன?
ஒரு மாநிலத்தின் சுகாதாரத் துறைச் செயல்பாட்டைக் குறிக்கும் முக்கியக் காரணியாக தாய் – சேய் இறப்பு விகிதம் இருந்து வருகிறது. இந்த புள்ளிவிவரங்களில், தமிழ்நாடு தொடர்ந்து ஆரோக்கியமான நிலையில் இருந்துவருகிறது. 2005ஆம் ஆண்டில் 1000 குழந்தைகள் பிறந்தால், அதில் 37 குழந்தைகள் உயிரிழந்தன. 2020ல் அது 13ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தாய்மார்களின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, 2030க்குள் ஒரு லட்சம் பிரசவங்களில் 70க்கு குறைவாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், 2018-20லேயே இறப்பு விகிதம் 54ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு பெண் கர்ப்பமடைந்தால், மூன்று மாதங்களில் இருந்து குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை கண்காணிக்கப்படுகிறது. இதற்கென Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பமும் பதிவுசெய்யப்பட்டு, அந்த கர்ப்பத்திற்கு RCH ஐடி என்ற அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண் சுகாதாரப் பணியாளர்களால் பிரசவம் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்.
இது தவிர, பிறக்கும் குழந்தை இறந்தாலோ, தாய் இறந்தாலோ அதற்கான காரணங்கள் பதிவுசெய்யப்பட்டு மாவட்ட சுகாதார அதிகாரியால் விசாரணை நடத்தப்படுகிறது. இந்தக் காரணங்களில் மருத்துவம் சார்ந்த முதல் ஐந்து காரணிகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 99.8 சதவீத பிரசவம் மருத்துவமனையில் நிகழ்கிறது. இவற்றில் தற்செயலாக நடக்கும் பிரசவம் கூட உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது.
இத்தனையையும் மீறித்தான், இதுபோல வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் தாய் – சேய் மரணங்கள் நேரிட்டு வருகின்றன.
மருத்துவமனையில் நடப்பவை இயற்கை பிரசவம் இல்லையா?
வீட்டிலேயே பெண் பிரசவிப்பதையும் அதனால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதற்கும் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் இது தொடர்வது துரதிர்ஷ்டவசமானது என்கிறார் திட்டக் குழுவின் உறுப்பினரும் மருத்துவருமான அமலோற்பவநாதன் ஜோசப்.
“ஒரு நல்ல அரசு ஒரு பெண்ணுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஒரு பெண் குழந்தை பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே அந்தப் பெண்ணுக்கு அயோடின் குறைபாடு, ரத்தசோகை போன்றவை இருக்கிறதா என்பது சோதிக்கப்பட்டு, அதற்கான தீர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
திருமணம் ஆன பிறகு, கர்ப்பமடைந்ததில் இருந்து, அரசு அந்தப் பெண்ணைக் கண்காணிக்கிறது. உடனடியாக அந்தப் பெண்ணின் கர்ப்பம் பதிவுசெய்யப்பட்டு, பதிவெண் தரப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்தப் பெண்ணுக்கு ஸ்கேன் செய்யப்படுகிறது. முதல் ஸ்கேன் முடிந்த பிறகு 8,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அந்தப் பெண் சுகாதாரப் பணியாளர்களிடம் சொல்லாமல்கூட பிரசவத்திற்காக தன் தாய் வீட்டிற்குச் சென்றாலும் அங்குள்ள சுகாதாரப் பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர் கண்காணிக்கப்படுவார். குழந்தை பிறந்து முதல் தடுப்பூசி போட்ட பிறகு, மீதமுள்ள நிதியுதவி தரப்படுகிறது.
அதற்குப் பிறகும் முதல் ஆயிரம் நாட்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் குழந்தையை தொடர்ந்து கண்காணிப்பார்கள். தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதை உறுதிசெய்வார்கள். இதற்கிடையில் ஒரு 20 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றாலும் அந்த கர்ப்பம் அரசிடம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்பதை அவர்கள் உறுதிசெய்வார்கள். அங்கு பிரசவம் நடந்த பிறகும், சுகாதாரப் பணியாளர்கள் சென்று ஆய்வு செய்து, புள்ளிவிவரத் தொகுப்பில் ஏற்றுவார்கள்.
அரசு இவ்வளவு கண்காணிப்பை வைத்திருக்கும்போதும், அதையும் மீறி சில யு டியூபர்களின் பேச்சைக் கேட்டு வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறார்கள் என்றால் என்ன செய்வது? ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட, அரசு பின்பற்றும் முறைகளுக்கு மாறாக, உயிர் அபாயம் ஏற்படும்வகையில் யார் பிரச்சாரம் செய்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுகாதாரச் சட்டத்தில் அதற்கு வழி இருக்கிறது.
இதெல்லாம் ஒரு கொலையைப் போன்றது. கடுமையான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இதை நிறுத்த முடியாது. இந்த முடிவை மனைவி மட்டும் தனியாக எடுத்திருக்க மாட்டார். இந்த முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் அமலோற்பவநாதன் ஜோசப்.

உயிர் அபாயம் ஏற்படும்வகையில் யார் பிரச்சாரம் செய்தாலும் நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரச் சட்டத்தில் வழி இருக்கிறது என்கிறார் திட்டக் குழுவின் உறுப்பினரும் மருத்துவருமான அமலோற்பவநாதன் ஜோசப்.
ஒரு சமூகம் முன்னேறிச் செல்லும்போது, அந்த முன்னேற்றத்தோடு சிலரால் ஒன்ற முடியாது. அவர்கள் பழைய முறைகளை நோக்கி, பழைய பழக்கங்களை நோக்கித் திரும்பிச் செல்வார்கள். இது ஒரு வழிபாட்டுக் குழுவைப் போல மாறிவிடும். இதற்கு பொது சமூகத்தில் எந்த இடமும் அளிக்கக்கூடாது என்கிறார் அமலோற்பவநாதன்.
வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ள வலியுறுத்துபவர்கள் முன்வைக்கும் ஒரு முக்கியமான வாதம், பல வருடங்களுக்கு முன்பு வீட்டில்தான் பிரசவம் செய்தார்கள் என்பது. இந்த வாதத்திற்கு பதிலளிக்கிறார் அமலோற்பவநாதன்.
“வீட்டில் செய்தபோது தாயும் சேயுமாக எவ்வளவு பேர் இறந்து போனார்கள்? 100ல் 10 – 20 பேர் இறந்துவிடுவார்கள். இப்போது அந்த எண்ணிக்கை லட்சத்திற்கு 50 என்ற ரீதியில் குறைந்திருக்கிறது. நாம் இதைச் சாதிக்க முக்கியக் காரணம், பிரசவங்கள் மருத்துவமனையில் நடப்பதால்தான். பிரசவங்கள் மருத்துவமனையில் நடப்பதாலேயே அது இயற்கை பிரசவம் இல்லை என்று ஆகிவிடாது. அங்கேயும் பிரசவம் இயற்கையாகத்தான் நடக்கும். ஆனால், மருத்துவரின் மேற்பார்வை இருக்கும். திடீரென சிக்கல் ஏற்பட்டால் மருத்துவர் குறுக்கிடுவார். அதற்காகத்தான் மருத்துவமனையில் சேர்க்கிறோம். பிரசவம் என்பது ஒரு நோய் அல்ல. ஆனால், சிக்கல்கள் வரலாம். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருப்பது அவசியம்” என்கிறார் அமலோற்பவநாதன்.
யு டியூபைப் பார்த்து சமைக்கலாம், பிரசவம் செய்யலாமா?
எல்லா பிரசவங்களும் ஒரே மாதிரியானவையல்ல; ஒவ்வொரு பிரசவமும் தனித்துவமானது. ஆகவே யு டியூபில் பார்த்து சமைப்பதைப் போலவோ, தோட்டம் போவதைப் போலவோ இதை முயற்சித்துப் பார்க்கக்கூடாது என்கிறார் மகப்பேறு மருத்துவரான டாக்டர் சாரதா சக்திராஜன்.
“ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் தனித்துவமானவர்கள். அனைவருக்கும் ஒரே விதி பொருந்தாது. முறையான பயிற்சிகளோ அனுபவமோ அதற்கான சூழலோ இல்லாமல் அதை பரிட்சார்த்தமாக செய்துபார்ப்பதில்தான் சிக்கல் உள்ளது. பிரசவத்தின் போது எந்த மாதிரியான கண்காணிப்பு தேவை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பிரசவத்தின் போது தாயின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், நீர்ச்சத்து நிலவரம், குழந்தையின் நாடித்துடிப்பு, இன்னும் எவ்வளவு நேரத்திற்குள் பிரசவம் ஆவது தாய்க்கும் சேய்க்கும் நலம் போன்றவை துல்லியமாக கணக்கிடப்பட வேண்டும். சுகப்பிரசவமே ஆனாலும் அப்போது ஏற்படக்கூடிய அதிகமான ரத்தப்போக்கு, பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு அதில் அதிகமான ரத்தப்போக்கு, குழந்தைக்கு மூச்சு திணறல், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் இவை எல்லாவற்றுக்கும் உடனடியாக தீர்வு கண்டால் மட்டுமே தாயையும் சேயையும் நலமாக மீட்டெடுக்க முடியும்.
தவிர, பிரசவத்தின்போது மகப்பேறு மருத்துவர்கள் மட்டும் இருந்தால் போதாது. இது ஒரு கூட்டு முயற்சி. குழந்தை நல மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், தேர்ந்த செவிலியர்கள், ரத்த வங்கி ஆகிய எல்லாமே அவசியம். அது மருத்துவமனையில் தான் சாத்தியமாகும். சில நேரம் சுலபமாக குழந்தை பிறந்துவிடும். இதற்குத்தானா மருத்துவமனைக்கு போக வேண்டும்? அந்த காலத்தில் எல்லாம் ஐந்தாறு குழந்தைகளை நாம் பாட்டி வீட்டிலேயே பெறவில்லையா என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால் சுலபமான பிரசவத்திற்கு பின் சில நேரம் நஞ்சு பிரியாமல் கர்ப்பப்பையில் மாட்டிக்கொள்வது, அதீத ரத்தப்போக்கு, சில நேரம் இந்த நஞ்சை எடுக்க முயலுகையில் கர்ப்பப்பை கீழே இழுக்கப்படும் அபாயம் போன்றவை ஏற்படும். இது போன்ற காரணங்களால் அதீத வலியாலோ அதீத ரத்தப்போக்காலோ neurogenic shock, haemorrhagic shock போன்றவை ஏற்பட்டு தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்கிறார் டாக்டர் சாரதா சக்திராஜன்.
இதுபோல, இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பவர்களில் சிலர் குழந்தையின் தொப்புள்கொடியை அப்படியே விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். தேனியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கண்ணன் – மகாலட்சுமி தம்பதியினர் அதைத்தான் செய்தனர். “இது மிக அபாயகரமானது. சுகாதாரமான முறையில் தொப்புள் கொடியை பிரிக்காவிட்டால் குழந்தைக்கு ரண ஜன்னி ஏற்பட்டு குழந்தை பாதிக்கப்படும். யூடியூபில் சமையல் செய்வதையோ வீடு பராமரிப்பதையும் பார்த்து நாமும் செய்துவிடலாம். ஆனால், அதையே பிரசவத்தில் முயற்சிக்கக்கூடாது” என்கிறார் டாக்டர் சாரதா சக்திராஜன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்