
பட மூலாதாரம், RANJIT DESAI
சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் அரையிறுதியாக பல வட்டாரங்களில் கருதப்படுகிறது.
இந்த ஐந்து மாநிலங்களில் மூன்றில், பாஜக காங்கிரஸுடன் நேரடிப் போட்டியில் உள்ளது. மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ளூர் கட்சிகள் போட்டியில் உள்ளன.
119 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 17 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பி ஆர் எஸ்)க்கு எதிராக தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சிறப்பாக செயல்படுவது சவாலாக உள்ளது. தெலங்கானா 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
தனது அரசு திட்டங்கள் விவசாயிகளுக்கும், சமூகத்தின் பல பிரிவினருக்கும் சாதகமாக செயல்படுவதால், தனக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று பி.ஆர்.எஸ். நம்பிக்கை கொண்டுள்ளது.
பல நிபுணர்களின் கூற்றுப்படி, வட இந்தியாவில் பாஜக தனது உச்சத்தை எட்டியுள்ளது, மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடங்களை இழக்கும் சாத்தியத்தை ஈடுசெய்ய, தனது கோட்டைக்கு வெளியே தனது பிடியை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

சத்ரபதி சிவாஜியின் வரலாற்றை தேர்தல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
2019ல் தெலங்கானாவில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட 20% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதால், பாஜகவிற்கும் தெலங்கானாவில் இருந்து அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
2020ல் நடந்த ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து, பாஜகவின் எதிர்பார்ப்புகள் மிகவும் உயர்ந்துள்ளன.
ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத்தில் டி. ராஜா சிங் என்ற ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே கொண்டிருந்தது பாஜக. அப்போது பாஜகவின் வாக்கு வங்கி வெறும் 7.1% ஆகும்.
காங்கிரஸ் மற்றும் ஒவைசி
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்கள், விவசாயிகள், முதியோருக்கு பயனளிக்கும் திட்டங்கள் என ஆறு உத்தரவாதங்களின் வாக்குறுதியுடன் வெற்றி பெற நம்பிக்கையுடன் இருக்கிறது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, பாஜக தலைவர்கள் தங்கள் பேச்சுகளால் இந்து வாக்குகளை ஒன்று சேர்க்க முயல்கின்றனர். ஆளும் பிஆர்எஸ் மற்றும் அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஆல் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் ஆகியவை கூட்டாக இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தெலங்கானாவின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு முக்கியம்
பிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் இடையே எந்தவிதமான அதிகாரப்பூர்வ தேர்தல் ஒப்பந்தமும் இல்லை, ஆனால் அசாதுதீன் ஒவைசி பிஆர்எஸ்ஸின் கொள்கைகளைப் புகழ்ந்துள்ளார் மற்றும் முஸ்லிம்கள் பிஆர்எஸ்ஸுக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கான காரணத்தை புரிந்து கொள்வது கடினம் அல்ல. பல இந்துத்வா ஆதரவாளர்கள் ஒவைசியின் கடுமையான விமர்சகர்களாக இருந்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக ராசாகர் திரைப்படத்தின் டீசர் வெளியீடும் மற்றும் கடந்த ஆண்டு முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் இடைநீக்கம் திரும்பப்பெறப்பட்டதும், தெலங்கானாவில் இந்துத்வாவை மேலும் முன்னெடுப்பதற்கான பாஜகவின் முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன.
தெலங்கானாவில் ராஜா சிங் இந்துத்வாவின் ’போஸ்டர் பாயாக’ கருதப்படுகிறார்.
தெலங்கானாவின் முன்னாள் பாஜக தலைவரும், இந்துத்வாவின் முகமாகக் கருதப்படும் பண்டி சஞ்சய் குமார், மே மாதம் ஒரு ட்வீட்டில், “இந்துத்வா இல்லாமல் இந்த நாடு சிதறியிருக்கும். அது பாகிஸ்தானாகவோ, வங்கதேசமாகவோ, ஆப்கானிஸ்தானாகவோ மாறியிருக்கும். இந்துத்வா இல்லாமல் இந்தியா இருக்காது. நோக்கம் தெலங்கானாவில் ராம ராஜ்யத்தை கொண்டுவருவது” என்று தெரிவித்திருந்தார்.

தெலங்கானாவில் ராஜா சிங் இந்துத்வாவின் போஸ்டர் பாயாக கருதப்படுகிறார்.
சிவாஜி சிலைகள் மற்றும் இந்துத்வா
பாஜகவின் விமர்சகர்கள், இந்துக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் சிவாஜி மகாராஜ் தொடர்பான வரலாற்றை தேர்தல் நன்மைகளுக்கு பயன்படுத்த முயற்சிப்பதாக பாஜகவை குற்றம்சாட்டி வருகின்றனர்.
தெலங்கானாவிலேயே பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தெலங்கானாவில் சத்ரபதி சிவாஜியின் சிலைகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களிலும் ஆண்டுகளிலும் வேகமாக அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதுகுறித்து எந்த தரவும் இல்லை. பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பிப்ரவரியில் வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானாவின் அனைத்து கிராமங்களிலும் சிவாஜியின் சிலைகள் நிறுவப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். “இந்து மதத்தை காப்பாற்றவே சிவாஜியின் சிலையை நிறுவியுள்ளோம். ஒவ்வொரு கிராமத்திலும் இந்து மதத்துக்கு பாடுபடும் தலைவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், X/BANDISANJAY_BJP
சிவாஜியின் பாரம்பரியம்
ஹைதராபாத்தில் உள்ள பூலே-அம்பேத்கர் தத்துவ மற்றும் ஆங்கில பயிற்சி மையத்தில் அரசியல் அறிவியலை கற்பிக்கும் பூலே-அம்பேத்கர் ஆராய்ச்சி அறிஞரான பேராசிரியர் பி. மணிகண்ட பண்டி, சிவாஜி குறித்த சஞ்சய் குமாரின் கருத்தை முக்கியமானதாக கருதுகிறார். “அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைக்க சிவாஜியில் என்ற அடையாளத்தைக் கண்டறிந்துள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.
பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் கூற்றுப்படி, தெலங்கானாவில் தான் 300க்கும் மேற்பட்ட சிவாஜி சிலைகளை திறந்துள்ளதாக கூறுகிறார். ஹைதராபாத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சிவாஜியின் சிலைகள் உள்ளன. ராஜா சிங் கூறுகையில், “இந்துக்களுக்கு சிவாஜி மகராஜ் கடவுள். அவர் கடவுளாகவே இருப்பார்” என்று கூறுகிறார்.
“2010-ல் நாங்கள் இதைத் தொடங்கினோம், எங்கள் நோக்கம் ஒவ்வொரு இளைஞரும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் போல ஆக வேண்டும் என்பதே. அவர் இந்துக்களின் மட்டுமல்ல, முஸ்லிம்களின் மன்னராகவும் இருந்தார்” என்று அவர் கூறுகிறார்.
சிவாஜியின் பிறப்பிடம் நவீன மகாராஷ்டிராவும் மற்றும் கர்நாடகாவும் ஆகும். ஆனால் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், கோல்கொண்டா கோட்டையுடன் சிவாஜியின் உறவை நினைவுபடுத்துகிறார்.
1677-ல், ஔரங்கசீப்புக்கு எதிராக ராணுவ கூட்டுக்காக குதுப் ஷாஹி மன்னர் அபுல் ஹசனை சந்திக்க சிவாஜி கோல்கொண்டா கோட்டைக்கு சென்றார்.

பட மூலாதாரம், Getty Images
சிலை நிறுவுதலில் சர்ச்சை
சிவாஜி மகாராஜின் மத நடத்தை மற்றும் சிந்தனைகள் குறித்து, கோவிந்த் பன்சாரே தனது ‘சிவாஜி யார்’ என்ற புத்தகத்தில், “சிவாஜி மதத்தை நம்பவில்லை. அவர்கள் மதச்சார்பற்றவர்கள் அல்லது அவர்கள் தங்கள் மாநிலத்தை ஒரு மதச்சார்பற்ற மாநிலமாக அறிவித்திருந்தனர்” என்று எழுதுகிறார்.
“ஆனால் அவர் இஸ்லாத்திற்கு எதிராக இருந்தாரா? அவர் இந்து மதத்தை நம்பினாரா, அதாவது முஸ்லிம் மதத்தை வெறுத்தாரா? அவர் முஸ்லிம்களை இந்துமயமாக்க விரும்பினாரா அல்லது அவர்களை மகாராஷ்டிரியமாக்க முயன்றாரா?” இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் ‘இல்லை’
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்படுவது தொடர்பாக வன்முறை வெடித்த தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தின் போதன் நகரத்தை நாங்கள் அடைந்தோம்.
போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினரைத் தவிர, சிவசேனா ஷிண்டே பிரிவைச் சேர்ந்த கோபிகிஷன் பாஸ்புலெட்டியும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் காணப்படுகிறார்.
நகரில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தில் சிவாஜி சிலை நிறுவ தனது முயற்சிகள் நிர்வாக குழப்பங்களில் பல காலமாக சிக்கியிருந்ததால், ஒரு நாள் அதிகாலை வேளையில் தானும் தனது குழுவினரும் சிலையை நிறுவியதாக கோபி கிஷன் தெரிவித்தார்.
விரைவில் வழக்கு அரசியல் வண்ணம் பெற்றது.
“இன்று சிவாஜி காரணமாகத்தான் இந்த நாட்டில் இந்துக்கள் எஞ்சியுள்ளனர். அதனால்தான் சிவாஜியை மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் நம்புகிறோம்” என்று கோபிகிஷன் கூறுகிறார்.

சிவசேனாவின் கோபி கிஷனுக்கு சத்ரபதி சி்வாஜி அரசியல் அல்ல, நம்பிக்கை ஆகும்.
அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஏஐஎம்ஐஎம்-இன் முஹம்மது அப்துல் இஜாஸ் கானும் அடங்குவார்.
அஜாஸ் கான் கூறுகையில், “சிவாஜி ஒரு மதச்சார்பற்றவர். நாங்கள் எப்போதும் அவரை மதச்சார்பற்றவர் என்று கருதுவோம். இந்து அமைப்பு அவரை என்ன கருதுகிறது என்பதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினார்.
“சிவாஜியின் சிலையை நிறுவுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அனுமதி இல்லாமல் சிலையை நிறுவியதால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம், போராட்டம் நடத்தினோம்” என்று அவர் கூறுகிறார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போதன் நகரின் கல்தூர்கி கிராமத்தில் சிவாஜியின் சிலை நிறுவப்பட்டது.
அங்கு வசிக்கும் அசோக் கூறுகையில், முன்பு மக்களுக்கு சத்ரபதி சிவாஜி பற்றி தெரியாது, ஆனால் இப்போது இளைஞர்கள் அவரைப் பற்றி படித்து வருகிறார்கள்.
“எதிர்காலத்தில் கல்தூர்கி மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவுவோம். இது சத்ரபதியின் சிலை அல்ல, இந்துக்களின் சக்தி” என்று அவர் கூறுகிறார்.
அருகிலுள்ள மற்றொரு கிராமமான ராணம்பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு சிவாஜியின் சிலை நிறுவப்பட்டது.
கோபி கிஷன் கூறுகையில், இந்து அமைப்புகளுக்கு சிவாஜி ஒரு நம்பிக்கைப் பொருள், அரசியல் பொருள் அல்ல, ஆனால் விமர்சகர்கள் இதற்கு உடன்படுவதில்லை என்றார்.
பாஜகவின் ஹிந்துத்வாவுக்கு பதிலளித்து, கேசிஆர் தனது ஹிந்துத்வாவை “உண்மையான” ஹிந்துத்வா என்று விவரிக்கிறார்.
பிபிசியிடம் பேசிய பிஆர்எஸ் தலைவர் கே. கவிதா, “நானும் மிகவும் மத நம்பிக்கை கொண்டவள், ஆனால் என் வழிபாடு என் வீட்டில்” என்றார்.
“சிவாஜி மகாராஜாவை நாங்களும் நம்புகிறோம், ஏனென்றால் அவர் மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார். வரலாற்றில் முக்கியமான நபர்களைப் பற்றி தவறான விஷயங்களைச் சொல்வதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
நானும் மிகவும் மத நம்பிக்கை கொண்டவள், ஆனால் என் வழிபாடு என் வீட்டில் என்கிறார் பி ஆர் எஸ் தலைவர் கவிதா.
ராசாக்கர் திரைப்பட சர்ச்சை
ஒருமுறை பேசும் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மட்டுமே தெலங்கானாவை நவீன “ராசாக்கர்களிடமிருந்து” காப்பாற்ற முடியும் என்று கூறினார்.
ராசாக்கர் என்றால் தன்னார்வலர் அல்லது சுயேச்சையானவர் என்று பொருள். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஹைதராபாத்தின் முஸ்லீம் ஆட்சியாளரான நிஜாம் மிர் உஸ்மான் அலி பாஷா, இந்தியாவுடன் இணைவதற்குப் பதிலாக சுதந்திரமாக இருக்க விரும்பினார்.
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அந்த நேரத்தில், நிஜாமுக்கு நெருக்கமான காசிம் ரிஸ்வியின் தலைமையில் ராசாக்கார் எனப்படும் ஆயுதக்குழுக்கள் பல இந்துக்களை சித்திரவதை செய்துள்ளன.
புள்ளிவிவரங்களின்படி, தெலங்கானாவின் மக்கள்தொகையில் 13-14 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.
தேர்தலுக்கு சற்று முன்னர் வெளியான ‘ராசாக்கர்’ படத்தின் டீசர், தெலங்கானாவில் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் விமர்சகர்கள் இதை பாஜகவின் இந்து வாக்குகளை பிளவுபடுத்தும் முயற்சிகளுடன் இணைத்து வருகின்றனர்.
திரைப்பட தயாரிப்பாளரும், பாஜக தலைவருமான குடூர் நாராயண ரெட்டியின் தான் சிறுவயதிலிருந்தே ராசாக்கர்கள் பற்றிய கதைகளை கேட்டு வந்ததாகவும் இந்த படத்திற்கு அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுகிறார்.
குடூர் நாராயண ரெட்டி, “இன்றைய முஸ்லிம்களைப் பற்றியது அல்ல. வேறு யாரையும் பற்றியது அல்ல.” என்றார்.
படத்தின் டீசரில், ராசாக்கர் இந்து மக்களை ஒடுக்குவது போல காட்டப்படுகிறது. 45 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
தெலங்கானாவில் வாக்களிப்பதற்கு சற்று முன்னர் படத்தின் டீசர் வெளியானதால் ஆத்திரமடைந்த ஆளும் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கேடிஆர், பாஜக மத வன்முறையை தூண்டிவிட்டு, அரசியல் பிரச்சார நோக்கத்துடன் அதை பிளவுபடுத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவை சேர்ந்த குடூர் நாராயண ரெட்டி ராசாக்கர் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
ராசாக்கர் யார்?
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு நாங்கள் சென்றபோது, படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருந்தது.
படப்பிடிப்புத் தளத்தில், ராசாக்கர் மற்றும் கிராம மக்களின் உடையை அணிந்த கலைஞர்களைக் கொண்டு ஒரு காட்சி படமாக்கப்பட்டு வந்தது.
நடிகர் பாபி சிம்ஹா கூறுகையில், “இந்த படத்திற்கு பின்னால் அரசியல் இல்லை. தெலங்கானாவின் வரலாறு எப்படி இருக்கிறது என்பதைச் சொல்வதே இதன் நோக்கம்”என்றார்.
இயக்குனர் யதா சத்யநாராயணன் இந்த படத்தின் ஆராய்ச்சிக்காக பல புத்தகங்களைப் படித்ததாகவும், இந்த படத்தை உருவாக்கியதன் நோக்கம் இந்த தலைமுறைக்கு வரலாற்றை அறியப்படுத்துவது தான் என்றும் தெரிவித்தார்.
பி.ஆர். அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் கண்டா சக்கரபாணி கூறுகையில், “படத்தின் டீசர் தேர்தல் நோக்கத்தைக் கொண்டது. ராசாக்கர்களில் சில இந்துக்கள் இருந்தனர், அவர்களின் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் இருந்தனர்” என்றார்
மேலும், “இந்த தன்னார்வலர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்ல. சிலர் இந்துக்களாக இருந்தனர். இந்துக்களில், சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர், சில ரெட்டிகள், உயர் சாதியினர் இருந்தனர். அனைவரும் இருந்தனர். அது ஒரு சிறிய குழு. இந்த ராசாக்கர்கள் கிராமங்களுக்குச் சென்றனர், பெரிய நிலப்பிரபுக்களைப் பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்த நிலப்பிரபுக்கள் யார்? அவர்கள் உள்ளூர் இந்து நில உரிமையாளர்கள். இந்த இந்து நில உரிமையாளர்கள் கம்யூனிஸ்டுகளை அடக்க ராசாக்கர்களைப் பயன்படுத்தினர்” என்றார்
கம்யூனிஸ்டுகள் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது என்றும் இந்த படத்தில் காட்டப்படுவது போல, இந்து-முஸ்லிம் பிரச்னையாக இருந்ததில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், “நிஜாம் ராசாக்கர்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்றும் கூறினார்.
ராசாக்கர் திரைப்பட சர்ச்சை குறித்து பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் கவிதா, “ஒவ்வொரு தேசத்திற்கும், ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் வரலாற்றில் கருப்பு பக்கங்கள் உள்ளன. ஆனால் அந்த கருப்பு பக்கங்களில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள், இன்றைய சமூகத்திற்கு நீங்கள் என்ன வகையான திசையைக் கொடுக்கிறீர்கள் என்பது ஒரு கட்சியாக, ஒரு தலைவராக உங்கள் ஆளுமையைக் காட்டுகிறது” என்றார்.
அவர் கூறுகிறார், “பாஜகவை சேர்ந்த ஒருவர், படத்தைத் தயாரிக்கிறார், அதுவும் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படுகிறது. எனவே, அது நிச்சயமாக, அவரது நம்பிக்கைகள், கருத்துகளின் பிரதிபலிப்பதாகவே இருக்கும். ஆனால் அது நமது தெலங்கானா மக்களின் நம்பிக்கைகள் அல்ல” என்கிறார்.

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ராசாக்கர் படத்தின் இறுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.
பாஜக தலைவரின் இடைநீக்கம் ரத்து
கடந்த ஆண்டு, பாஜக எம்எல்ஏ ராஜா சிங், முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தெலங்கானாவில் இவர் இந்துத்துவத்தின் ‘போஸ்டர் பாய்’ என அழைக்கப்படுகிறார்.
பாஜகவில் இருந்து இவரது இடைநீக்கம் , தேர்தல் ஆதாயங்களுக்காக செய்யப்பட்டதே என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டி.ராஜா சிங் தனக்கு எதிராக 80க்கும் மேற்பட்ட வெறுப்பு பேச்சு வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்று கூறினார். ஆனால் அவை அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே போடப்பட்டன என்று கூறுகிறார்.
தன்னுடைய சர்ச்சைக்குரிய கருத்தை பற்றி , “எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை, வாழ்க்கையில் நான் எப்போதும் தவறு செய்யவில்லை. நான் ஒரு இந்துவாக இந்துத்துவத்தைப் பற்றி பேசுவதே என் நோக்கம்” என்று அவர் கூறினார்.
ராஜா சிங் , “இந்தியாவில் தேசபக்திமிக்க கட்சி ஒன்று இருந்தால் அது பாரதிய ஜனதா கட்சிதான். இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களைப் பற்றி நல்ல அக்கறை கொண்ட கட்சி என்றால் அது பாரதிய ஜனதா கட்சிதான். கடுமையான ஊழல் நிறைந்த அரசான கேசிஆர் அரசை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் 2023 தேர்தலில் எங்கள் ஒரே பிரச்சினை. அவர் தெலங்கானாவை கடனில் மூழ்கடித்துள்ளார். கேசிஆர்-இல்லா தெலங்கானா மற்றும் இரட்டை என்ஜின் அரசு இங்கு உருவாக்கப்பட வேண்டும், மேலும் தெலங்கானாவில் இந்த தேர்தலில் எங்கள் மிகப்பெரிய பிரச்னை வளார்ச்சி தான்” என்றார்.
பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், பண்டி சஞ்சய் குமார் மாநிலத்தில் கட்சித் தலைவராக இருந்தவரை, அவரது இந்துத்துவ அம்சம் மாநிலத்தில் விரைவான முன்னேற்றத்தை கண்டு வந்தது, ஆனால் அவரது பதவி நீக்கம் மாநிலத்தில் கட்சிக்கு சறுக்கல்.
என்ன காரணத்தினால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது கட்சியின் உட்கட்சி அரசியலுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.
நாங்கள் பல முறை முயற்சி செய்தும், பண்டி சஞ்சய் குமாருடன் பேச முடியவில்லை. மாநிலத்தில் கட்சித் தலைவராக ஜி கிஷன் ரெட்டி அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.

ராசாக்கர் படத்தின் டீசர் தேர்தல் நோக்கத்திலேயே வெளியிடப்பட்டது என்கிறார் பேராசிரியர் கண்ட சக்ரபாணி.
பாஜக மற்றும் தெலங்கானா
தெலங்கானா உருவான பிறகு, பாஜக 2014 ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. இந்த சட்டப்பேரவை தேர்தலில், கட்சிக்கு ஐந்து இடங்கள் கிடைத்தன.
அந்த சட்டப்பேரவை தேர்தலில், தெலங்கானா ராஷ்டிர சமிதியின் (TRS) கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது, கே.சி.ஆர். தெலங்கானாவின் முதலமைச்சர் ஆனார்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக செகந்தராபாத் மக்களவைத் தொகுதியை வென்றது.
2018 ஆம் ஆண்டில், மாநில சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது மற்றும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெறும் ஒரு இடத்தை மட்டுமே வென்றது.
இந்த முறையும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது, கே.சி.ஆர். மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
எனினும், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 17 இடங்களில் நான்கு இடங்களை வென்றது.
இந்த வெற்றியின் பிறகு, மாநில பாஜக முகாமில் ஒரு நம்பிக்கையின் ஒளி உதித்தது. மாநிலத் தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறும் என்று கூறத் தொடங்கினர்.
மக்களவை தேர்தலில் கட்சிக்கு 19.45 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
பத்து ஆண்டு கால எதிர்ப்பு ஆட்சி மற்றும் இரட்டை என்ஜின் அரசு என்ற முழக்கம் ஆளும் பி ஆர் எஸ் கட்சிக்கு எதிரானதாக பாஜக நம்புகிறது.
ஆனால், இந்த போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்