‘மார்பக புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்’ – லட்சியத்தோடு பயணிக்கும் சென்னைவாசி

'மார்பக புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்' - லட்சியத்தோடு பயணிக்கும் சென்னைவாசி

மார்பக புற்றுநோய்
படக்குறிப்பு,

2030ஆம் ஆண்டுக்குள் மார்பக புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே இலக்கு என்கிறார் ஆனந்தகுமார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று சுமார் 13 ஆண்டுகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆனந்தகுமார்.

இந்த விழிப்புணர்வுப் பணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பிபிசி தமிழுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

“2003ஆம் ஆண்டு முதன்முதலாக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே நான் தனியார் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். முதன்முதலில் பல இடங்களுக்குச் சென்று புற்றுநோய் தாக்கம் குறித்தும், புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாகவும் மக்களிடம் எடுத்துரைத்தேன்.

அதற்குப் பிறகு 2010ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய்க்கு என பிரத்தேயமாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தேன். அப்போது மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக இருந்தது. அதனால் மார்பக புற்றுறோய் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் பல பெண்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் இது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. பெண்கள் தொடர்பான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து ஒரு ஆண் விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபடுகிறாரே என வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் பார்க்கத் தொடங்கினார்கள்.

ஆனால் காலப்போக்கில் என்னுடைய தொடர் முயற்சிகளால் கிராமங்கள் முதல் நம்முடைய இந்திய நாடாளுமன்றம் வரை மார்பகப் புற்றுநோய் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்,” எனக் கூறுகிறார் ஆனந்தகுமார்.

மார்பக புற்றுநோய்
படக்குறிப்பு,

மார்பக புற்றுநோய் தொடர்பான எளிய சோதனையை மேற்கொள்ள பெண்கள் தயங்கக்கூடாது என ஆனந்தகுமார் வலியுறுத்துகிறார்.

இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை நடத்தி இருக்கிறார் ஆனந்தகுமார்.

முதல்கட்டமாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்கிருந்த பெண்களிடம் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதில் முதன்மையானது சுய மார்பக பரிசோதனை. வெறும் கையால் சுய மார்பக பரிசோதனை செய்வது குறித்து அங்கிருக்கும் மக்களிடம் தன் குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

“ஒரு முறை நாங்கள் கிராமங்களுக்குச் சென்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம்களை நடத்தும்போது பல விதமான சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஏனெனில் புற்றுநோய் என்றாலே அது ஒரு கொடிய நோய் என்றும் புற்றுநோய் தங்களைப் பாதித்தால் தாங்கள் விரைவாக இறந்து விடுவோம் என்று அங்கு இருக்கக்கூடிய மக்கள் நம்பினார்கள்.

மேலும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யும்போது அங்கிருந்த பெண்களுக்கு நோயின் தாக்கம் ஆரம்பக் கட்டத்தில் இருப்பது கண்டறிந்தால் அவர்களுக்கு முதலில் நாங்கள் தைரியமூட்டுவோம்.

மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் அது எளிதாக குணப்படுத்தக் கூடியது என்றும் விரைவாக அவர்கள் புற்றுநோயில் இருந்து மீண்டு விடலாம் என்றும் நம்பிக்கையளிக்கத் தொடங்கினோம்.

ஆனால் மக்கள் முதலில் பயப்படத் தொடங்கினார்கள். அதுவும் படித்தவர்கள் தங்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வராது என்று பரிசோதனை முகாமிற்கு அவர்கள் வர தயக்கம் காட்டினார்கள்.

ஆனாலும் மார்பக புற்றுநோய் என்பது அனைவருக்கும் எந்தவித பேதமும் இன்றி வரக்கூடியது என்பதால் எவராக இருப்பினும் முதல் கட்டமாகப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரிடத்திலும் நாங்கள் அறிவுறுத்தினோம்,” என்கிறார் ஆனந்தகுமார்.

மார்பக புற்றுநோய்

இந்த தொண்டு நிறுவனம் சார்பில் முதன்முதலாக சென்னை மெரினா கடற்கரையில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் 200 மாணவிகள் பங்கேற்றனர். அதற்குப் பிறகு 2015ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்டு பிங்க் ரிப்பன் வடிவிலான அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கல்லூரி மாணவிகளிடையே ஏற்படுத்தப்பட்டது.

அடுத்ததாக தூத்துக்குடி பகுதியில் 4,800 மாணவிகள் பங்கேற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதிகபட்சமாக சென்னை ஜெயின் கல்லூரியில் 7,500 மாணவிகள் பங்கேற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவிகளிடம், இளம் வயதில் வெறும் கைகளைக் கொண்டு சுயமாகத் தங்களுடைய மார்பகங்களை எப்படி பரிசோதனை மேற்கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மார்பகங்களை அவர்கள் சுயமாக பரிசோதனை செய்யும்போது வலி இல்லாத கட்டிகள் ஏதும் தென்பட்டால் அடுத்தபடியாக ஸ்கிரீனிங்கு வர அறிவுறுத்தப்பட்டது.

மார்பக புற்றுநோய்
படக்குறிப்பு,

நாடு முழுவதும் பயணித்து ஆனந்தகுமார் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதேபோல் சென்னையில் டுமீல் குப்பம் என்கின்ற இடத்தில் 33 வயது பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை மூலம் அவருக்கு நோய் கண்டறியப்பட்டது. ஆனால் இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் அவருக்கு ஒரு புறம் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு இல்லை.

அதே நேரத்தில் தன் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றும் அதை குடும்பத்திடம் சொன்னால் அவர்களுக்கு அதிகம் செலவு என்கின்ற காரணமாக தன் உடலில் ஏற்பட்ட குறைபாடுகளை அவர் குடும்பத்திடம் கடைசி வரை தெரிவிக்கவே இல்லை. இந்த நிலை பல இடங்களில் இன்றும் நடக்கிறது.

மார்பக புற்றுநோய் தனக்கு வந்தால் தாங்கள் நிச்சயம் இறந்து விடுவோம் என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் மருந்துகள் மூலமே அதை எளிதாகக் குணப்படுத்திவிட முடியும்.

அதற்காகத்தான் ஆரம்ப நிலையிலேயே பெண்கள் மார்பக பரிசோதனை முகாமிற்கு வரவேண்டும் என அழைக்கிறோம். அதேபோல கல்லூரிகளில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளும்போது 17 வயதில் இருந்த கல்லூரி மாணவிக்கு ஆரம்ப நிலையில் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே அது கண்டறியப்பட்டதால் மருந்துகள் மூலம் சரி செய்யப்பட்டு இப்போது அந்த மாணவி நலமாக இருக்கிறார்,” என்றார் ஆனந்தகுமார்.

மார்பக புற்றுநோய்
படக்குறிப்பு,

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு அவசியம் என ஆனந்தகுமார் வலியுறுத்துகிறார்.

இவருடைய தொண்டு நிறுவனம் சார்பாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல விமான நிலையங்களில் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் லேசர் கருவிகள் எதுவும் இல்லாமல் டிஜிட்டல் கருவியைக் கொண்டு மார்பக புற்றுநோய் பரிசோதனை மிக எளிதாக செய்யப்படுகிறது.

வெறும் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்தப் பரிசோதனை முடிவை ஃபோனிலேயே தெரிந்துகொள்ளலாம். எளிய முறையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுவதால் பல பெண்களுக்கு இது எளிதாக இருக்கிறது.

பல பெண்கள் தைரியமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய விமான நிலையங்களில் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

“மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நாங்கள் மட்டுமே பேசினால் போதாது என நினைத்து, பெரிய திரை – சின்னத்திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அலுவலர்கள், மருத்துவர்கள், ஊடக துறையினர் என அனைத்து துறைகளிலும் உள்ள முக்கியமான நபர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

அதேபோல் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்களையும் அழைத்து வந்து அவர்களுடைய நம்பிக்கைக் கதைகளைப் பேச வைக்கிறோம். இதனால் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. இப்போது தமிழ்நாட்டைத் தாண்டி தென் இந்தியாவில் உள்ள 14 விமான நிலையங்களில் இலவச பரிசோதனைகளை நடத்தியுள்ளோம்.

மேலும், உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் 8 லட்சம் பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளோம். ஒடிசா அரசுடன் இணைந்து அங்குள்ள பெண்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறோம்,” என்கிறார் ஆனந்தகுமார்.

வரவுள்ள 2030ஆம் ஆண்டிற்குள் மார்பக புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தன் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தகுமார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *