
காயமடைந்த மீனவர்களுக்கு கரை திரும்பிய பிறகு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது
தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை தாக்கி படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் திருடி சென்றதாக காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வீச்சரிவாள், இரும்புக் கம்பிகளுடன் வந்த கடற்கொள்ளையர்கள் சிங்களம் கலந்த தமிழில் பேசியதாக தமிழ்நாடு மீனவர்கள் கூறுகின்றனர். அவர்கள் யார்? இலங்கை கடற்படை என்ன சொல்கிறது? இலங்கை மீனவர்களின் எதிர்வினை என்ன?
மீனவர்கள் காயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை மதியம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த 9 பேர் வீச்சரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மீனவர்கள் படகுகளில் ஏறி மீன்பிடி உபகரணங்கள், அணிந்திருந்த, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை தரும்படி கேட்டு தாக்கியுள்ளனர்.
பின்னர் பாஸ்கர் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றையும், செந்தில் அரசன் படகிலிருந்து செல்போன் ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் 700 கிலோ மீன் பிடி வலை ஆகியவற்றையும் சிவபாலன் படகிலிருந்து ஜிபிஎஸ் கருவி, டார்ச்லைட் என மொத்தம் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடற்கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு விரட்டி அடித்தாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து படுகாயமடைந்த மீனவர்கள் பொருட்களை பறிகொடுத்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரை திரும்பினர்.
இந்நிலையில் காயமடைந்த பாஸ்கர், அருள்வேல், அருள்ராஜ் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில், செந்தில் அரசன், மருது, வினோத், வெற்றிவேல் உள்ளிட்ட மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதே போல் மறுநாள் செவ்வாய்க்கிழமை வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த வைத்தியநாதசுவாமி, ராமராஜன், செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் கோடியக்கரைக்கு தென் கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் மூன்று மீனவர்களையும் தாக்கி படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி, செல்போன், 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு விரட்டி அடித்தாக காயத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் கடல் கொள்ளையர்களா?

இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய
தமிழ்நாடு மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளான பகுதியை தெரிவித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கை கடற்பரப்பில் கடற்கொள்ளையர்கள் என யாரும் இல்லை என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘இலங்கை கடற்பரப்பில் கடற்கொள்ளையர்கள் இல்லை. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து இலங்கை மீனவர்களின் வளத்தை அழிப்பதால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கலாம். இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் வருவதில்லை.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வராமல் இருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட போவதில்லை.
மேலும் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட ஜிபிஎஸ் லொகேஷனை இலங்கை கடற்படை வசம் ஒப்படைத்தால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மீனவர்களின் கடல் கொள்ளையர்கள் அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக’ தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்கப்பட்ட போது அதிகாரிகள் வருகிறார் கேட்கிறார்கள் பேப்பரில் எழுதி விட்டு பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என சொல்லி விட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என வேதனையுடன் பாதிக்கப்பட்ட மீனவர் அருள்ராஜ் பிபிசி தமிழிடம் பேச தொடங்கினார்.
‘கடந்த திங்கட்கிழமை மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று அன்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு படகுகளில் எட்டு பேர் நான்கு கத்தி மற்றும் நான்கு இரும்புக் கம்பிகளுடன் படகில் ஏறினார்.
பின்னர் படகில் இருந்த மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீன்களை அள்ளிச் கொண்டு நாங்கள் போட்டிருந்த ஆபரணங்களையும் பிடுங்கினர்.
அப்போது அதில் ஒருவர் என்னிடம் செல்போனை கேட்டனர். செல்போன் இல்லை என்று சொன்னவுடன் கோபம் அடைந்த அந்த நபர் தலையில் இரும்பு கம்பியால் எனது தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து அவர்கள் வந்த படகில் புறப்பட்டு சென்றனர்.
எங்களிடம் டார்ச் லைட் உள்ளிட்டவைகளை பிடுங்கியதால் இருட்டில் அவர்களது முகங்களை சரியாக பார்க்க முடியவில்லை ஆனால் சிங்களம் கலந்த தமிழ் பேசினார்கள். அதேநேரம் நாங்கள் பேசியது அவர்களுக்கு நன்றாக புரிந்தது.
முகத்தில் சிலர் துணிகளை கட்டி இருந்தனர். எங்களால் அவர்கள் வந்த படகு நம்பரை பார்க்க முடியவில்லை.
மேலும், எங்களுடைய ஜிபிஎஸ் கருவிகளை அவர்கள் திருடி சென்றதால் நாங்கள் எந்த பகுதியில் தாக்கப்பட்டோம் என தெரியவில்லை. எங்களை தாக்கி எங்களிடம் இருந்த பொருட்களை திருடி சென்றது இலங்கை கடற்கொள்ளையர்கள் தான்’ என்றார்.
இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் இலங்கை பகுதியில் கடல் கொள்ளையர்கள் இல்லை என கூறுகிறாரே என கேட்டதற்கு பதில் அளித்த மீனவர் அருள்ராஜ் நடுக்கடலில் இருள் சூழ்ந்த நேரத்தில் முகங்களை கூடி கொண்டு திடீரென வந்து படகில் ஏறி படகில் இருந்தவர்களை தாக்கி விட்டு படகில் இருந்த பொருட்களை கொள்ளையடித்த செல்பவர்களை கடற்கொள்ளையர்கள் என சொல்லாமல் என்ன சொல்வது என கேட்டார்.
நடுக்கடலில் மோதல் ஏற்படும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் ஜேசுராஜா, பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிடுவது போல் கடற்கொள்ளையர்கள் என்பதை மீனவ சங்கங்கள ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை மீனவர்கள் மத்தியில் ஒரு சிலர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக இலங்கை கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து செல்லாத நேரங்களை தெரிந்து கொள்ளும் சில இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் கோபத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே புதிதாக கடற்கொள்ளையர்கள் என இலங்கை பகுதிகளில் உருவாகியுள்ளதாக மீனவ சங்களுக்கு தெரியவில்லை.
ஒரு நேரத்தில் விடுதலை புலிகள் உள்ளிட்ட சில அமைப்பை சேர்ந்தவர்கள் இலங்கை-இந்திய கடற்பரப்பில் இருந்து கொண்டு நடுக்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடம் மீன்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது இலங்கை – இந்தியா கடற்பரப்பு எந்த விதமான இயக்கங்களும் செயல்படவில்லை.
நடுக்கடலில் ஒரு சில இலங்கை மீனவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நடுக்கடலில் இரு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் இதனால் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் உடனடியாக இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இலங்கை மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இருப்பினும் இலங்கை மீனவர்கள் உதவியுடன் மட்டுமே இந்த நபர்களை கண்டுபிடிக்க முடியும் எனவே அதற்கு இலங்கை மீனவர்கள் உதவி செய்ய வேண்டும்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இரு நாட்டு அரசும் சேர்ந்து பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் உள்ளோம். எனவே இரு நாட்டு அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜேசுராஜா தெரிவித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க துணை தலைவர் வர்ணகுலசிங்கம், “தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெற்றதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன், இவ்வாறு யார் தாக்குதல் நடாத்தினாலும் அது தவறு. இதனை இலங்கை யாழ்ப்பாணம் வடக்கு மீனவ சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படும் படகு எண் வடக்கு கிழக்கு மீனவர்கள் இல்லை. இருப்பினும் தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகுகள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து செல்கின்றனர். இதை எல்லை தாண்டும் தமிழ்நாடு மீனவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்