
மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை இப்பொது நின்றிருக்கிறது.
ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
தி நகர், அண்ணா சாலை போன்ற நகரின் பிரதான பகுதிகளில் நீர் வடிந்து தற்போது நிலைமை சற்று சரியாகி விட்டிருந்தாலும், மற்ற குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் தேங்கியிருக்கிறது.
இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். பால், உணவு போன்ற அடிப்படை தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை என்கின்றனர் சிலர்.
களத்திலிருந்து பிபிசி செய்தியாளர்கள் சேகரித்து வழங்கிய மக்களின் குரல்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகின்றன.

சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள பகுதி
‘மிண்டும் 2015 நிலையா?’
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படு நீர் வரவிருக்கிறது என்ற தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகிலுள்ள மக்கள்.
அந்தப் பகுதியில் உள்ள பல குடிசைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்பு கட்டிடத்தில் முதல்மாடி வரை தண்ணீர் வந்ததாகக் கூறுகிறார்கள்
இதனால் அவர்களது வீடுகளில் நீர் புகுந்து இப்பொது அவர்கள் தெருக்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் நிற்பதாகக் கூறுகிறார்கள்.

தாட்சாயணி
சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் தாட்சாயணி, 2015-ஆம் ஆண்டின் சென்னை பெருவெள்ளத்தின் போது சந்தித்த அதே சூழ்நிலையை மீண்டும் எதிர்நோக்க வேண்டுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகச் சொல்கிறார்.
”எங்கள் வீட்டில் நீர் ஏறியிருக்கிறது. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறோம். பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லை,” என்றார்.

விஜயலக்ஷ்மி
‘இடமும் இல்லை, உணவும் இல்லை’
அதே பகுதியைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி, தனது வீடு முழுவதும் மூழ்கியிருக்கிறது என்றும், விட்டில் கல்விச் சான்றிதழ்கள் முதல் சமையல் பொருட்கள் வரை அனைத்தையும் விட்டுவிட்டு வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.
“மக்களுக்கு இருக்க இடமில்லை. சாலை, பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் தங்கியிருக்கிறோம். உணவு, நீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதுவரை உதவிக்கு யாரும் வந்ததை தான் பார்க்கவில்லை. உணவு தான் இப்போதைக்கு முக்கியத் தேவை,” என்கிறார் அவர்.

திலீப்
‘சென்ற முறையை விட பாதிப்பு அதிகம்’
பிபிசி தமிழிடம் பேசிய நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப், ஞாயிறு நள்ளிரவு தங்கள் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்.

நந்தம்பாக்கம்
“இப்போது வரை 2 நாட்களாக அதே நிலை தான். இன்று மாலைக்குள் (செவ்வாய்க்கிழமை) மின் பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தெருக்களில் தண்ணீர் ஓரளவு வடிந்துவிட்டது, வெளியே சென்று வர முடிகிறது. ஆனால் நந்தம்பாக்கம் ஏரி அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இன்னும் மழை நீர் வடியவில்லை, மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலையும் உள்ளது. இந்த்ப் பகுதி மக்களுக்கு 2015-ஆம் ஆண்டை விட பாதிப்புகள் மிகவும் அதிகம்,” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
