
பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC
பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் அரசின் முதல்வர், பாஜக கட்சியின் சட்டசபைத் தலைவர்.
இவருடைய பெயர் யாருடைய மனதிலும் தோன்றவில்லை, எந்தவித கருத்துக் கணிப்பிலும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் அதே பெயர்தான் முன்னணியில் வந்தது.
மூத்த பாஜக தலைவர்களின் முகத்தில் விவரிக்க முடியாத ஆச்சரியம். குறிப்பாக இம்முறை நிச்சயம் முதல்வராக வருவார் என்று ஒருவரை மனதில் நினைத்தபோது, அதிகம் அறியப்படாத பஜன்லாலின் பெயர் சொல்லப்பட்டதும் அது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திங்கள்கிழமை மோகன் யாதவ் மத்திய பிரதேச முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதும், இதன்மூலம் நமது பஜன்லால் சர்மாவும் முதல்வராக அறிவிக்கப்படலாம் என்று ராஜஸ்தான் பாஜக உள்வட்டங்களில் ஒரு பேச்சு கிளம்பியது.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த முதல்வர், இதுவே முதல்முறை
வட இந்தியாவில் இதுவரை பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பாஜகவின் முதலமைச்சராக இருந்ததில்லை என்று வாதிடப்பட்டது. முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் பலருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்கூட இதைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் காலையில், பஜன்லால் சர்மாவின் பெயர் சமூக ஊடகங்களில் தோன்றத் தொடங்கியபோது, அதை உடனே யாரும் நம்பவில்லை.
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே இல்லை என்றால் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அல்லது தியாகுமரி அல்லது அர்ஜுன் மேக்வால் அல்லது ஓம் பிர்லா என்று பிரபலமான பெயர்களில் எதுவாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் பஜன்லால் சர்மாவின் பெயர் வர ஆரம்பித்ததும், அவர் ராஜஸ்தான் அரசியல் பயணத்தின் தலைவராக இருப்பார் என்பதை யாரும் ஏற்கத் தயாராக இல்லை. மேலும் ஒவ்வொரு பாஜக தலைவரும் இவர்தான் முதல்வர் என தங்கள் மனதில் குறித்து வைத்திருந்த வேட்பாளர்களின் பெயர்கள் தற்போது மறைந்துவிட்டன.
மோதி மற்றும் அமித் ஷாவால் உருவாக்கப்பட்ட பாஜகவில், பல ஆண்டுகளாக பதவித் தாகத்தில் காத்திருந்தவர்கள் இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சங்கனேர் தொகுதியில் சீட் கொடுத்து ஆச்சரியப்படுத்திய பாஜக

பட மூலாதாரம், @BHAJANLALBJP
சங்கனேர் தொகுதியில் வெற்றி பெற்ற பஜன்லால் சர்மாவை வாழ்த்தும் கட்சியினர்
இந்தத் தேர்தலில் பஜன்லாலுக்கு சங்கனேரில் சீட்டு வழங்கப்பட்டபோது அது அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கனேரின் அப்போதைய எம்.எல்.ஏ.வும், பாஜக தலைவருமான அசோக் லஹோட்டியும் அவரது ஆதரவாளர்களும் பஜன்லாலுக்கு சீட் கொடுத்ததைக் கடுமையாக எதிர்த்தனர், பாஜக தலைமையகத்தில்கூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை.
அப்போது சங்கனேர் தொகுதியின் பா.ஜ.கவின் எதிர் தரப்பு வேட்பாளர் பஜன்லால் சர்மாவை காகிதத் தலைவர் என்று அழைத்து, தேர்தலில் சர்மா போட்டியிட வேண்டுமெனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துக் கேலி செய்தார்.
அன்று தாங்கள் ஏற்றுக்கொள்ளாத அந்த நபர், எதிர்கால அரசியலில் தங்களுடன் பயணிப்பார் என்றோ அல்லது இந்த அரசியல் பயணத்தின் தலைவராக இருப்பார் என்றோ அவர்கள் உணரவில்லை.
கடந்த 2003ஆம் ஆண்டு, பரத்பூர் மாவட்டத்தின் நைபாய் தொகுதியில் ராஜஸ்தான் சமாஜிக் நியாய் மஞ்ச் சார்பில் பஜன்லால் தேர்தலில் போட்டியிட்டார். உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கையை வலியுறுத்தி, பாஜகவுக்கு எதிராக கிளர்ச்சி செய்த தேவி சிங் பதியால் இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் பஜன்லால் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். அவர் பெற்ற வாக்குகள் 5,969.
தனது அரசியல் பயணத்தில் எம்எல்ஏ ஆகவும் அரசாங்கத்தில் நல்ல பதவியைப் பெறவும் பஜன்லால் கனவு கண்டார். ‘இவ்வளவு எளிதில் அமைச்சர் பதவி கிடைக்குமென அவர் நினைத்துக்கூட பார்த்ததில்லை’ என்கிறார் அவருக்கு நெருக்கமான ஒருவர்.
“பா.ஜ.க அலுவலகத்தில் எல்லோருடனும் அமர்ந்திருக்கும் உறுப்பினர் ஒருவர் தனக்கு குடிசை வேண்டும் எனக் கேட்டு, அவருக்கு தாஜ்மஹாலை கொடுத்தால் அவர் என்ன நினைப்பார்? இதைத்தான் இன்று பஜன்லால் உணர்கிறார்,” என்கிறார் அவர்.
டிசம்பர் 3ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, முதல்வராகப் பதவி ஏற்பவர் ஒரு முக்கிய தலைவராகவும், அவர் எம்எல்ஏக்கள் மத்தியில் பிரபலமான முகமாகவும் இருப்பார் அல்லது டெல்லியில் இருந்து வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அந்த யூகங்கள் அனைத்தும் பொய் என்று நிரூபணமாகியுள்ளது.
மாநிலத்தின் முக்கிய ஆளுமையான வசுந்தரா ராஜேக்கு ஏமாற்றமே இருக்கும் என்று நம்பப்பட்டது, ஆனால் என்ன நடந்தது என்றால் முதல்வர் பதவி பறிக்கப்பட்ட மன வேதனையோடு சேர்த்து அதற்காகக் காத்திருந்தவர்களும் கையாலாகாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போது அனைவரும் ஒரே இக்கட்டான நிலைக்கும், ஒரே வகையான அரசியல் வலிக்கும் பலியாகிவிட்டனர்.
இதன்மூலம் பாஜக கூறும் செய்தி என்ன?

பட மூலாதாரம், Getty Images
எல்லாவற்றுக்கும் மேலாக, பஜன்லால் முதல்வர் ஆவதற்கு என்ன காரணம்?
இந்தக் கேள்வியை பாஜகவினரிடம் கேட்டபோது, மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அக்கட்சி ஒரு பெரிய செய்தியை மக்களுக்கு அறிவிக்க விரும்புவதாகவும், அதன் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக வசுந்தரா ராஜே மிகவும் வலுவாக இருந்தார். அவருடைய சக்தி குறையவே இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். கட்சி அமைப்பில் உள்ள மூத்தவர்கள்கூட பேசவோ அல்லது தங்கள் கருத்தை சொல்லவோ காத்திருக்கும் அளவுக்குப் பதவிகள் அவரைச் சுற்றி இருந்தன.
கட்சிக்குள் நடந்த சிறுசிறு சம்பவங்களை நினைவுகூர்ந்த இவர்கள், ராஜ்நாத் சிங் தேசியத் தலைவராக இருந்த காலத்தில், ஜெய்ப்பூர் வந்தபோது அதிகாரத்தின் உயர்மட்ட தலைவர்கள் அவரது தலைமையில் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஒருமுறை ராஷ்டிரிய ஸ்வயம் சங்குடன் தொடர்புடைய கட்சித் தலைவர் ஒருவர் முதலமைச்சரைச் சந்திக்க இருந்ததையும், அவர் எவ்வளவோ முயன்றும் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அக்கட்சியின் பழைய தலைவர் ஒருவர், “என்னால் ஒரு கணம்கூட அவருடன் உரையாட முடியவில்லை,” என்று நினைவு கூர்ந்தார். நாங்கள் அதிக நேரம் வேலையில்லாமல் இருந்தோம். ஆனால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத வசுந்தரா அதிகாரத்தின் தேரில் ஏறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜகவின் விசுவாசமான எம்எல்ஏக்களுடன் அவருக்குப் பல மோதல்கள் ஏற்பட்டன.
கடந்த 2008ஆம் ஆண்டில் பாஜக தோல்வியடைந்தபோது, இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநில பொதுச் செயலாளர் பிரகாஷ் சந்திரா உடனடியாக ராஜினாமா செய்தார். மாநிலத் தலைவர் ஓம் மாத்தூர் சில நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார். ஆனால் வசுந்தரா ராஜே நீண்ட நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகாமல் மத்திய உயரதிகாரிகளை மிரட்டி வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு கஜேந்திர சிங் ஷெகாவத்தை பாஜகவின் மாநிலத் தலைவராக்க கட்சி மேலிடம் விரும்பியபோது, அந்த நேரத்திலும் வசுந்தரா ராஜே மத்தியத் தலைவர்களுக்கு கட்டுப்படவில்லை.
சில கட்சித் தலைவர்கள் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை தாங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய சங்கத்தினர் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், சராசரி உறுப்பினர்களை எளிதில் சந்திக்கக் கூடிய, அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் தலைவரிடம் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கக் கூடிய வகையில் ஆட்சி செய்பவர்களிடம் தான் அதன் தலைமை இருக்க வேண்டும்.
மேலும் அந்த தலைவர் மீண்டும் ஒரு பெரிய ஆளுமையாக மாறி சங்கத்தையும், மத்திய தலைமையையும் மிரட்ட முயலக் கூடாது.
கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்ற தகவல் வந்தும்கூட, இம்முறையும் மக்களிடம் செல்லாமல், தங்கள் பெருமைகளை எண்ணியே காலம் கழித்துக் கொண்டிருந்த எம்எல்ஏக்களின் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன.

பட மூலாதாரம், @BHAJANLALBJP
இந்த அதிகார மிக்க அரசியல்வாதிகளின் நிலை என்னவாகும்?
கட்சியின் சீட்டு விநியோகக் குழுக்களை உன்னிப்பாகக் கவனிக்கும் தலைவர் ஒருவர், ‘‘தற்போது கட்சி மேலிடத்தில் விசித்திரமானவர்கள் இருக்கிறார்கள், தாங்கள் நினைக்கும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் வரை அவர்கள் முழுமையாக நம்புவதில்லை’’ என்கிறார்.
இம்முறை வசந்தத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், எம்.ஏ வரை படித்த பஜன்லால் முதலமைச்சரானதும், வேறு யாரேனும் மூலமாக நாம் ஆதாயம் அடையலாம் எனக் காத்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்தது. இந்த சக்தி வாய்ந்த நபர்களுக்கு இப்போது என்ன நடக்கும் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
பா.ஜ.கவின் அமைப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு சாதாரண ஊழியர், “இந்த முறை தேர்தல் நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட சிறிய குழுவின் தலைவராக பஜன் லால் இருந்தார்,” என்று கூறுகிறார்.
சங்கனேர் தேர்தலில் போட்டியிட்டபடி, இந்தப் பணியையும் கவனித்து வந்தார். பா.ஜ.கவில் சில ஆண்டுகள் சரியாகச் செயல்பட்டால், கட்சியால் ஒருவரை எதையும் சாதிக்க வைக்க முடியும் என்பதை அவர் இந்த நிலைக்கு வந்திருப்பது நிரூபித்துள்ளது.
“காங்கிரஸில் இது சாத்தியமா?” என்று கேட்கிறார்.
பஜன்லால் ஒரு காலத்தில் பரத்பூர் மாவட்டத்தின் நாட்பாய் தாலுகாவின் பஞ்சாயத்து அட்டாரியின் சர்பஞ்சாக இருந்தார். அவர் அரசியல் ரீதியாக மிகவும் லட்சியத்துடன் இருந்தார். அவர் ஒரு பழைய சங்கப் பணியாளர். ஆனால் 2002ஆம் ஆண்டு கட்சியின் மாநிலத் தலைவரான வசுந்தரா ராஜே முதலமைச்சராகப் பதவியேற்றபோது அக்கட்சியின் சக்தி வாய்ந்த தலைவர் தேவி சிங் பதி கிளர்ச்சி செய்து ராஜஸ்தான் சமூக நீதி மன்றத்தை உருவாக்கி பாஜக வேட்பாளர்களை முன் நிறுத்தினார்.
பாரத்பூர் மாவட்டத்தின் நாட்பாய் தொகுதியில் 2003 சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணேந்திர கவுர் தீபாவுக்கு பாஜக சீட் கொடுத்தது. அதே நேரத்தில் பஜன்லால் ராஜஸ்தான் சமாஜிக் நியாயா மஞ்ச் டிக்கெட்டில் போட்டியிட்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். அவர் 5969 வாக்குகள் பெற்றார். இவை அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் 2003 தேர்தல் தரவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வசுந்தரா ராஜே சில ஆண்டுகளுக்குப் பிறகு தேவிசிங் பதியை பாஜகவுக்கு கொண்டு வந்தார். ஆனால் பஜன்லால் முன்னதாகவே வந்து கட்சியில் பக்தியுடன் இணைந்தார். அவர் முதலில் மாவட்ட அமைச்சராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும், பின்னர் மாவட்டத் தலைவராகவும் ஆனார். அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவுடன் இணைந்து நிறுவனப் பணிகளைச் செய்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் அருண் சதுர்வேதி ராஜஸ்தான் பாஜக தலைவராகப் பதவியேற்றபோது, பஜன்லாலை ஜெய்ப்பூருக்கு அழைத்து வந்தார்.
இம்முறை சதுர்வேதியின் சீட்டை ரத்து செய்து, சங்கனேர் சீட் பஜன்லாலுக்கு கொடுக்கப்பட்டது. அப்போதைய எம்எல்ஏவும், இளைஞரணித் தலைவருமான அசோக் லஹோட்டியின் ஆதரவாளர்கள், பஜன்லாலுக்கு சீட் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கட்சியின் மாநில அலுவலகத்தில்கூட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதிகரித்து வரும் ஆர்எஸ்எஸ் தலையீடு காரணமா?
இதுகுறித்து சங்கத்திற்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “இந்த முறை தேர்தல் பணிகள் தொடங்கும் முன்பே, இதுபோன்ற புதுமுகங்கள் மீதுதான் சங்கத்தினர் கவனம் செலுத்தினர., அவர்களில் யாரையாவது முதல்வராக்கினால், அவர்களின் ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.”
இங்கு பஜன்லாலின் சீட்டுக்கு முக்கிய ஆதரவாக இருந்தவர் அமைப்பு பொதுச் செயலாளர் சந்திரசேகர். இதில் மாநில பொறுப்பாளர் அருண் சிங், தேர்தல் பொறுப்பாளர் பிரஹலாத் ஜோஷி உட்பட டெல்லியின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோருக்கும் பஜன்லால் மிகவும் நெருக்கமானவர். 2023இல் பாஜகவின் மிகப்பெரிய வெற்றியின் சிற்பிகளில் ஒருவராக யாதவ் கருதப்படுகிறார்.
பஜன் லாலின் தந்தை கிஷன் ஸ்வரூப் சர்மா மற்றும் அம்மா கோமதி தேவி முதலமைச்சரான பிறகு எடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான படங்கள், பாஜகவில் ஒரு சாமானியனும் முதல்வர் பதவியை அடைய முடியும் என்ற செய்தியை மக்களுக்குக் கொடுப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பஜன்லாலின் தாயார், “நாங்கள் கூலித் தொழிலாளிகள், எங்கள் மகன் இங்கு வந்துள்ளதை நம்ப முடியவில்லை,” என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறுகிறார். தற்போது பாஜகவில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலையீடு அதிகமாகிவிட்டதாகவும், அதனால் கட்சியின் பாரம்பரிய அரசியலில் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இப்போது பழைய அரசியல் பிணைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, பலரின் சுதந்திரங்கள் இப்போது வரம்புகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வரின் பெயர் அடங்கிய உறையை முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் கொடுத்தபோது, அதைத் திறந்து பஜன்லாலின் பெயரைப் படித்தபோது, அவரது கண்களும் முகமும் அதிர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தியது.
“அவரது எண்ணத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது” என்கிறார் ஒரு பழைய எம்எல்ஏ. பஜன்லாலின் அந்தப் பெயர் ஏதோ நரகத்திலிருந்து தோன்றி தன் கண்முன்னே மிதக்கத் தொடங்கியது போல அவர் உணர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அறிவுறுத்தல்களால் கட்சியில் இருந்த கட்டற்ற அதிகாரம் இப்போது அதன் வரம்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ஒரு சாதாரண உறுப்பினரின் கண்களில்கூட கனவுகள் இருக்கக்கூடும் என்பது தெளிவாகிறது.
ராஜஸ்தானில் ஒரு பிராமண முதல்வர்

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதியுடன் தேர்தல் பேரணியில் பஜன்லால் சர்மா.
ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் பஜன்லால், பாஜக மாநிலத் தலைவர் சிபி ஜோஷி, தலைமைச் செயலாளர் உஷா சர்மா, டிஜிபி உமேஷ் மிஸ்ரா ஆகியோர் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் ராஜஸ்தான் பிராமண மாநிலமாக இதுவரை மாறவில்லையா என்று சோசலிஸ்ட் தலைவர் அர்ஜுன் தேத்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் முதல்வர் பதவிப் பிரமாணத்துக்குப் பிறகு, மாநிலத்தில் சமூக நீதிக்கான பயணம் தொடங்கும் என்றும், அதுபோன்ற செய்தி எதுவும் அனுப்பப்பட மாட்டாது என்றும் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
பாஜகவில் பிராமண முகமாக ராஜ்யசபா உறுப்பினர் கன்ஷ்யாம் திவாரி, முன்னாள் அமைச்சர் அருண் சதுர்வேதி அல்லது மூத்த மாநிலத் தலைவர் சிபி ஜோஷி, மாநிலத்தின் மூத்த தலைவர் என்ற பிம்பத்தைக் கொண்டவராகவும் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
எனவே பாஜக தலைவர்கள், கட்சியின் உள் நிலைமையை விளக்கும்போது, முதலில், இவர்கள் அனைவரும் எம்எல்ஏக்கள் அல்ல, இரண்டாவதாக, சில நேரங்களில் உங்களைவிட யாராலும் கட்சியில் அன்பாக இருக்க முடியாது என்பதும் உண்மை. ஆனால் நீங்கள் எல்லோருடனும் எதிரியாகவும் இருக்க முடியாது என்று கூறுகிறார்கள்.
பஜன் லாலை முதல்வராக்குவதுடன், தியாகுமரியையும், பிரேம்சந்த் பைரவாவையும் துணை முதல்வர் ஆக்குவதாக ஒரு செய்தி. ஒருபுறம், இந்த ஊடகத்தின் மூலம் பெண்கள் பலப்படுத்தப்பட்டுள்ளனர். மறுபுறம், ஒரு அரச குடும்பத்தின் பிரதிநிதி மற்றும் க்ஷத்திரியர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரேம்சந்த் பைரவா மூலம் தலித்துகளுக்கு உதவும் முயற்சி நடக்கிறது.
செவ்வாய்க் கிழமையன்று ராஜஸ்தான் அரசியலில் எழுதப்பட்டுள்ள இந்த ஸ்கிர்ப்ட், மக்களவைத் தேர்தலின்போதும் அரசியலின் பழைய பாரம்பரியம் மறைந்துவிடும் என்று கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்