
பட மூலாதாரம், Getty Images
ஐகான் ஆஃப் தி சீஸ்
உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் சனிக்கிழமையன்று தனது முதல் பயணத்தை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த கப்பலை இயக்க திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(liquefied natural gas) பயன்படுத்தப்படுவதன் காரணமாக வெளியிடப்படும் மீத்தேன் அளவு குறித்து ஏற்கனவே சர்ச்சை எழுந்துள்ளது.
கப்பலில் உள்ள வசதிகள்
ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இதில் 20 தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 7,600 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.
இந்த கப்பலை கட்டுவதற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16,700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் 7 நீச்சல் குளங்கள், 40க்கும் மேற்பட்ட உணவகங்கள், மதுக் கூடங்கள் மற்றும் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
மீத்தேன் உமிழ்வு குறித்து எச்சரிக்கை
ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், இதில் பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவால் காற்றில் மீத்தேன் வாயு கலப்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள பசுமை போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சிலின்(ICCT) கடல்சார் திட்ட இயக்குநர் பிரையன் காமர், “இது தவறான பாதையில் செல்லும் நடவடிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “கப்பலில் எரிபொருளாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது டீசலை பயன்படுத்துவதை விட 120% அதிகமான பசுமை குடில் வாயுவை தனது வாழ்நாளில் வெளியிடும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த வார தொடக்கத்தில் தான், தற்போதைய விதிமுறைகளை விட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் கப்பல்களில் இருந்து மீத்தேன் உமிழ்வு அதிகமாக இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது ஐசிசிடி.

பட மூலாதாரம், Getty Images
கப்பலின் பெயர் சூட்டு விழாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்றார்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் கப்பல் எரிவாயுக்களான டீசல் போன்றவற்றை விட எல்என்ஜி(LNG) எரிவாயு தூய்மையானது என்ற போதிலும், அதில் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
வளிமண்டலத்தில் காணப்படும் சக்தி வாய்ந்த பசுமை குடில் வாயுவான மீத்தேன், 20 ஆண்டுகளில் கார்பன் டை ஆக்ஸைடை விட 80 மடங்கு அதிகமாக வெப்பத்தை கவர்ந்து கொள்கிறது.
எனவே மீத்தேன் உமிழ்வை கட்டுப்படுத்துவது புவி வெப்பமடைவதில் இருந்து தடுப்பதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியுள்ள ராயல் கரீபியன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “சர்வதேச கடல்சார் அமைப்பு நவீன கப்பல்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஆற்றலை விட, 24% அதிக ஆற்றலை ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல் கொண்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.
2035ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் பெயர் சூட்டும் விழாவில் மெஸ்ஸி
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கப்பலின் பெயர் சூட்டு விழாவில் அர்ஜென்டினாவின் கால்பந்து வீரரும், தற்போது இன்டர் மியாமிக்காக விளையாடி வருபவருமான லியோனல் மெஸ்ஸி பங்கேற்றார். இந்த விழாவில் பிரத்யேகமாக கட்டப்பட்டிருந்த இடத்தில் அவர் கால்பந்து ஒன்றை வைத்து சிறப்பு செய்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்