
இசையமைப்பாளர் தேவா. 1980களின் மத்தியிலிருந்து 2012 வரை பரபரப்பாகவும் புகழ் உச்சியிலும் இருந்தவர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் புதிய படங்கள், லைவ்-இன் கான்சர்ட்கள் என பரபரப்பாகியுள்ளார்.
தனக்கு உள்ள கானா அடையாளம், தான் இசையமைத்த பாடல்களை, வேறொருவர் இசையமைத்ததாகப் பிறர் கருதுவது குறித்த வருத்தம், தன்னுடைய பழைய பாடல்கள் மீண்டும் பிரபலமாவது குறித்த மகிழ்ச்சி, அருணாச்சலம் படத்திற்குப் பிறகு ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசியுள்ளார்.
இனி அவரது பேட்டியில் இருந்து…
தேவா என்றாலே கானா பாடல்கள் தானா?

பட மூலாதாரம், Deva/@X
கேள்வி: இப்போது மீண்டும் பரபரப்பாக பல படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியுள்ளீர்கள். என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?
பதில்: நீண்ட நாட்களுக்குப் பிறகு பல படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.
‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினாரின் ‘காலனி’ படத்திற்கு இசை அமைக்கிறேன். ‘வா, வரலாம் வா’ என்றொரு படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறேன். ‘பி – 2’ என்றொரு படம். வேறு சில படங்களும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: தேவா என்றாலே கானா பாடல்கள் என்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. அந்த அடையாளம் உங்களுக்கு சரியாகப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா?
பதில்: நான் இசையமைக்க வந்து பல ஆண்டுகள் கழித்துதான் கானா பாடல்களை உருவாக்கினேன். ஆனால், என்னை உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டுபோனது கானா பாடல்கள்தான்.
அதேநேரம் என்னுடைய ‘மெலடி’ பாடல்களையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ஆகவே இரண்டும் இரண்டு கண்களைப் போலத்தான்.
கானா பாடல்கள் முன்வரிசை ரசிகர்களுக்கானது. ‘மெலடி’ பாடல்கள் பின்வரிசை ரசிகர்களுக்கானது. இந்த இரு தரப்பினரையும் திருப்திப்படுத்துவதுதான் என் வேலை.

பட மூலாதாரம், Getty Images
தேவாவுக்கு இருக்கும் வருத்தம் என்ன?
கேள்வி: ‘ஆசை’, ‘குஷி’ போன்ற படங்களில் வித்தியாசமான ‘மெலடி’ பாடல்களைக் கொடுத்தீர்கள். இருந்தபோதும் கானா பாடல்கள் உங்கள் அடையாளமாக இருக்கிறதே…!
பதில்: எங்காவது போனால், “இந்த கானா பாட்டெல்லாம் பாடுவாருல்ல, அவரு” என்பார்கள். ‘கானாவின் தந்தை’ என்பார்கள். அப்போது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
நாம் நிறைய ‘மெலடி’ பாடல்களைக் கொடுத்திருக்கிறோம். வெவ்வேறுவிதமான பாடல்களைத் தந்திருக்கிறோம். அதை யாரும் சுட்டிக்காட்ட மாட்டேன் என்கிறார்களே, கானா பாடல்களிலேயே முத்திரை குத்திவிட்டார்களே என்று ‘ஃபீல்’ பண்ணுவேன்.
இருந்தாலும் கானாக்கள் என் சிறப்பம்சமாக ஆகிவிட்டன. எத்தனையோ இசையமைப்பாளர்கள் ‘மெலடி’ பாடல்களைத் தருகிறார்கள். அவர்களில் ஒருவராகிப் போயிருப்பேன். ஆனால், கானா பாடல்களைத் தந்ததால்தான் வித்தியாசமாக நிற்கிறேன்.
உலகமெங்கும் வசிக்கும் தமிழ் மக்கள் தங்கள் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் அந்த கானா பாடல்களைப் பயன்படுத்துவதைக் கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

பட மூலாதாரம், SANTHOSH NARAYANAN / FACEBOOK
சந்தோஷ் நாராயணன்
கேள்வி: நீங்கள் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள். ஆனால், சமீபத்தில் ‘கர்ணன்’ படத்தில் நீங்கள் பாடிய ‘மஞ்சனத்தி’ பாடலும் ‘மாமன்னன்’ படத்தில் நீங்கள் பாடிய ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடலும் வித்தியாசமாக இருந்தன. அந்தப் பாடல்களுக்கான வாய்ப்பு எப்படி வந்தது?
பதில்: அதற்கு இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணனும் ஏ.ஆர். ரஹ்மானும்தான் காரணம். ‘மஞ்சனத்தி’ பாடலாவது நான் ஏற்கெனவே பாடியுள்ள பாடல்களை ஒத்ததாக இருக்கும்.
ஆனால், ‘நெஞ்சமே.. நெஞ்சமே’ பாடலைப் போன்ற பாடல்களை நான் பாடியதில்லை. “வேறு யாரிடமாவது கொடுக்க வேண்டிய பாட்டை எனக்குக் கொடுத்துவீட்டீர்களா? எனக்காக உருவாக்கிய பாடல்தானா?” என்று சந்தேகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்டேன்.
“நீங்க பாடிப் பாருங்க, உங்க குரலுக்கு இந்தப் பாட்டு வேற மாதிரி இருக்கும்” என்றார் ஏ.ஆர். ரஹ்மான். ஆனால், அந்தப் பாட்டுக்குக் கிடைத்த வரவேற்பே தனி. எங்கு போனாலும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். கானா பாட்டுக்குப் பதிலாக, ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாட்டைக் கொஞ்சம் பாடுங்க என்றுதான் இப்போது சொல்கிறார்கள்.
இப்போது வேறு சில இசைமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறேன். ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறேன். அது முற்றிலும் வேறு மாதிரியான பாட்டு. அதேபோல, ஜிப்ரான் இசையமைக்கும் படத்தில், கிளாசிக்கலான ஒரு கானா பாடலைப் பாட வைத்திருக்கிறார். இப்போது வரும் இளம் இசையமைப்பாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
டிரெண்டாகும் தேவா பாடல்கள்

பட மூலாதாரம், City Production/instagram
கேள்வி: சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ‘தூதுவளை இலை அரைச்சு’ பாடலை குழந்தை ஒன்று பாடி, அது வைரலானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இசை அமைக்கும் பாடல் ஒன்று மீண்டும் பிரபலமாவது எப்படி இருக்கிறது?
பதில்: இதைவிட வேறென்ன வேண்டும்? 1991இல் இசை அமைத்த பாடல் அது. பேருந்துகளில் மிகப் பிரபலமான பாடல் என்பார்கள். ஆனால், பல வருடங்களாக அது நான் இசையமைத்த பாடல் எனப் பெரிதாக யாருக்கும் தெரியாது. மேக்னா சுரேஷ் என்ற அந்தக் குழந்தை பாடியபோது…
அதை என்னவென்று சொல்வது?
அந்தப் பாட்டில் ஒரு லவ் கெமிஸ்ட்ரி இருக்கும். அது கொஞ்சம் கூடக் குறையாமல் அந்தக் குழந்தை பாடினார். அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டேன். எப்போதோ போடப்பட்ட பாட்டை இப்போதுள்ள குழந்தை பாவத்தோடு பாடும்போது, அதைவிட என்ன வேண்டும்? மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. யு டியூபில் சிலர் ரீல்ஸ் செய்யும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தேவா பாடல்கள் எனத் தெரியாமலே ஹிட் ஆன பாடல்கள்
கேள்வி: ‘தூதுவளை இலை அரைச்சு’ பாடல் நான் இசையமைத்தது எனப் பலருக்கும் தெரியாது என்று சொன்னீர்கள். அதுபோல உங்கள் இசையில் வந்த பல மெலடி பாடல்கள் நீங்கள் இசையமைத்தது என்றே பலருக்குத் தெரியாது…
கேள்வி: அந்த காமெடியை ஏன் கேட்கிறீர்கள்? இப்போது நிறைய ‘லைவ் கான்செர்ட்’கள் செய்கிறேன். அங்கே நான் என்ன பாடல்களைப் பாடப் போகிறேன் என்பதை முன்பே ஒரு பட்டியல் அனுப்ப வேண்டும். நானும் அனுப்புவேன்.
அதைப் பார்த்துவிட்டு, “சார் நீங்க உங்க பாடல்களை மட்டும் பாடினால் போதும். மற்றவர்கள் இசையமைத்த பாடலைப் பாட வேண்டாம்” என்பார்கள். “அதிலிருக்கும் பாட்டெல்லாம் என் பாட்டுத்தான்” என்பேன்.
“சார், புல்வெளி புல்வெளி பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள். அது நீங்க இசையமைத்த பாடலா?” என்றார்கள். ‘நேருக்கு நேர்’ படத்தில் ஆஷா போன்ஸ்லே பாடிய பாடல் நீங்க இசையமைத்ததா என்கிறார்கள். அப்போதெல்லாம் எனக்கு மனசு வலிக்கும்.
பாடல் ஹிட்டாகியிருக்கிறது. ஆனால், அதற்கு நான்தான் இசையமைத்தேன் என்பது தெரியவில்லையே.. ஏன் இப்படி என்று யோசிப்பேன். 35 ஆண்டுகளில் இதுதான் என் பாடல்கள் எனத் தெரியாமேலேயே போய்விட்டதே என்று நினைப்பேன்.
இப்போது லைவ் – இன் கான்செர்ட்கள் செய்யும்போதுதான் இதெல்லாம் தேவாவின் பாடல்கள் என்பதே பலருக்கும் தெரிகிறது.
இசையமைப்பாளர் தேவாவும் ரஜினியும்

பட மூலாதாரம், Deva/Twitter
கேள்வி: ‘லைவ் இன் கான்சர்ட்’களை நடத்துவது இப்போது பிரபலமாகி வருகிறது. அது உங்களுக்கு எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறது?
பதில்: அது என்னுடைய 32 வருடக் கனவு. பல பெரிய இசையமைப்பாளர்கள் இதுபோல நடத்துவதைப் பார்ப்பேன். ஐந்தாறு வருடங்களாகவே இதுவொரு பெரிய ஏக்கமாக மாறிவிட்டது.
“வியாலோ, செல்லோ, நிறைய வயலின்கள், 60- 70 ஆர்க்கெஸ்ட்ரா வைத்து எப்போது பாடல் செய்யப் போகிறோம்?” என்று யோசிப்பேன். நம்முடைய பாடலையும் இதுபோல இசைத்தால் எல்லோரும் ரசிப்பார்களே என்று நினைப்பேன்.
இதற்கு முன்பு நேரடியாக மேடைகளில் கச்சேரிகளை தொகுத்திருந்தாலும் அதெல்லாம் சிறிய அளவில்தான் இருக்கும். பத்து கலைஞர்கள்தான் இருப்பார்கள். அப்படியிருக்கும்போது கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனம், இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை அமைத்துத் தர முன்வந்தார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. நிறைய கலைஞர்கள் வந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக ரஜினியை சந்தித்தேன். அப்போது அவர் ‘ஜெயிலர்’ படத்தில் பரபரப்பாக இருந்தார். இருந்தாலும் அவரைச் சந்தித்து, “32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லைவ் – இன் நிகழ்ச்சி செய்கிறேன், நீங்கள் வந்தால் கௌரவமாக இருக்கும்” என்றேன். அவர் உடனே ஏதும் சொல்லவில்லை.
அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, போனில் அழைத்து கண்டிப்பாக வருகிறேன் என்றார். அதுமட்டுமல்ல, “நான் உங்கள் நிகழ்ச்சிக்கு வருவதை எல்லா விதத்திலும் விளம்பரப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார். யார் இதுபோல சொல்லுவார்கள்?
சொன்னபடி அவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். பாடல்களை ஒன்றரை மணிநேரம் கேட்டு ரசித்தார். பிறகு மேடை ஏறி அரை மணிநேரம் என்னைப் பற்றிப் பேசினார். இதை மறக்க முடியாது.
“இதுபோல லைவ் இன் கான்சர்ட்கள் உங்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நன்றாக இருக்கும், தொடர்ந்து செய்யுங்கள்” என்றார். அவருடைய ஆசிர்வாதம் இப்போது நான் மீண்டும் பரபரப்பாக இருக்கிறேன்.
சினிமா – லைவ் இன் கான்சர்ட் இரண்டில் எது பிடித்திருக்கிறது?

பட மூலாதாரம், deva/instagram
கேள்வி: எத்தனையோ ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்திருக்கிறீர்கள். அதைவிட இப்போதுள்ள ‘லைவ் – இன் கான்செர்ட்’கள் பெரிதாகத் தெரிகின்றனவா?
பதில்: சினிமா ஒரு கோபுரம். அதில் பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தாயிற்று. உச்சி எப்போதுமே சின்ன இடம். அங்கே ரொம்ப நாள் நிற்க முடியாது. கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். கீழே முழுமையாக இறங்கிவிடாமல் இருக்க இந்த ‘லைவ் இன் கான்சர்ட்’கள் உதவுகின்றன.
கேள்வி: 2012 வரை பிசியாக இருந்தீர்கள். அதற்குப் பிறகு என்ன நடந்தது?
பதில்: இசைக்கான ரசனை மாறிக்கொண்டே இருக்கும். தலைமுறை இடைவெளியும் இருக்கும். அந்தக் காலத்து பாடல்களோடு ஒப்பிட்டால் எவ்வளவு மாறிவிட்டது? தியாகராஜ பாகவதரில் துவங்கி, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பி, மனோ என்று இந்த வரிசை மாறிக்கொண்டே போகும்.
நான் ஆரம்பத்தில் ஒரு மாதிரி பாடல்களாகத் தந்துகொண்டிருந்தேன். ‘ஆசை’ படம் வரும்போது நானே என்னை மாற்றிக்கொண்டேன். ஏற்கெனவே ஏ.ஆர். ரஹ்மான் மணிரத்னம் படத்தில் இசையமைத்துவிட்டார்.

பட மூலாதாரம், deva/instagram
தமிழ் சினிமாவின் இப்போதைய பாடல்கள் எப்படி இருக்கின்றன?
அதே மணிரத்னத்தின் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு நான் வேறு மாதிரி இசையமைக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான், ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘அப்பு’, ‘குஷி’ போன்றவை வேறு மாதிரி இருக்கும்.
இப்போது ஏழு படங்களுக்கு இசையமைக்கிறேன். ‘ஆசை’ படம் வந்தபோது என்னை எப்படி மாற்றிக்கொண்டேனோ, அதுபோல இப்போதும் என்னை மாற்றிக்கொண்டிருக்கிறேன். பழைய பாணியிலேயே செய்து கொண்டிருந்தால் இப்போதிருக்கும் இளைய தலைமுறை ஏற்காது.
கேள்வி: தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் 20க்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தன. ஆனால், இப்போது ஒன்றிரண்டு பாடல்கள் இருப்பதே பெரிய விஷயமாகி விட்டது. அவையும் ஒன்றிரண்டு நிமிடங்களில் முடிந்துவிடுகின்றன…
பதில்: ஒன்றிரண்டு பாடல்களாவது இருக்கின்றனவே… பாடல்களை முழுமையாகத்தான் பதிவு செய்கிறார்கள். பிறகு சுருக்கிவிடுகிறார்கள். ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் செய்யும்போது 8 பாடல்கள் இருந்தன. அது தவிர, 4 சிறு பாடல்கள் இருந்தன. இப்போது எல்லாமே சிறு பாடல்களாக இருக்கின்றன. இப்போது கதை முக்கியமாகிவிட்டது. அதனால் பாடல்கள் சுருங்குகின்றன.
கேள்வி: நீங்கள் நிறைய பாடலாசிரியர்களோடு பணியாற்றியிருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்…
என்னுடைய ஆரம்ப காலப் படங்களில் காளிதாஸ் என்பவர்தான் எழுதினார். சுமார் 50 படங்களுக்கு அவர் எழுதினார். அதற்குப் பிறகுதான் வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதினார்கள்.
பிறகு பிறைசூடன், காமகோடியான், முத்துகுமார், தாமரை, பா. விஜய் ஆகியோர் எழுதினார்கள். தாமரை, முத்துக்குமாரை நான்தான் அறிமுகப்படுத்தினேன். ஒரு பாடலுக்கு கவிஞர்கள் மிகமிக முக்கியம்.
மீண்டும் டிரெண்டாகும் பழைய பாடல்கள்

பட மூலாதாரம், Deva/@X
கேள்வி: சமீபகாலத்தில் சில திரைப்படங்களில் உங்களுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு, மீண்டும் பரவலாக ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன…
பதில்: கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சி ஒப்பந்தமாகியிருந்தது. அப்போது நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்கள் ஒரு விஷயத்தைக் கேட்டார்கள். அதாவது, நமது நிகழ்ச்சியில் ‘பஞ்சு மிட்டாய் சேலைகட்டி’ பாட்டு இருக்கிறதா என்று கேட்டார்கள். அதை நாங்க ஒத்திகை பார்க்கவில்லை, ஆகவே அது பட்டியலில் இல்லை என்றேன். ஆனால், கண்டிப்பாக அந்தப் பாட்டு வேண்டும் என்றார்கள். ஏன் என்று கேட்டேன்.
“இங்கே சில நாட்களுக்கு முன்பாக ‘மார்க் ஆண்டனி’ என்ற படம் வெளியானது. அந்தப் படத்தில் அந்தப் பாட்டைப் பயன்படுத்தியிருந்தார்கள். அது இங்கே வைரலாகிவிட்டது. ஆகவே இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்ததும் எல்லோரும் அந்தப் பாடலைக் கேட்கிறார்கள்,” என்றார்கள்.
அந்த நிகழ்ச்சி நடக்கும்போது “அடுத்ததாக பஞ்சுமிட்டாய் சேலை கட்டி” என்று சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.
அதேபோல, சமீபத்தில் பினாங்கில் ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகியிருந்தது. 21ஆம் தேதி நிகழ்ச்சி. லியோ படத்தில் ‘கரு கரு கருப்பாயி’ பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதே எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி நடக்கும்போது எல்லோரும் ‘கரு கரு’ என்று கத்துகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குஷியில் வரும் ‘மேகம் கருக்குது’ பாடல்தான் ஏற்கெனவே பாடிவிட்டோமே என்று நினைத்தேன்.
அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்னை அழைத்து ‘லியோ’ படத்தில் ‘கரு கரு கருப்பாயி’ பாடல் இருப்பதைச் சொல்லி, கண்டிப்பாக அதைப் பாட வேண்டும் என்றார்கள்.
அனுராதா ஸ்ரீராமிடம் சொன்னேன். அவர் 5- 10 நிமிடங்களில் தயாராகி பாடினார். அவர் பாட ஆரம்பித்ததும் அரங்கமே அதிர்ந்தது. 30 வருடங்களுக்கு முன் போட்ட பாடல்கள், இப்போது மீண்டும் பிரபலமாகியிருப்பதில் மகிழ்ச்சிதான். அப்படியானால், இந்த 35 ஆண்டுகளாக நான் தொடர்ந்து ட்ரெண்டில் இருப்பதாகத்தானே அர்த்தம்!
அதனால், ‘மார்க் ஆண்டனி’, ‘லியோ’ படத்தின் இயக்குநர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

பட மூலாதாரம், deva/instagram
ரஜினிக்கு மீண்டும் இசையமைக்க விருப்பமா?
கேள்வி: ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ என ரஜினிக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்தீர்கள். அதற்குப் பிறகு ரஜினிக்கு நீங்கள் இசையமைக்கவில்லை… ஏன்?
பதில்: அது எனக்கே ஒரு கேள்விதான். ‘அருணாச்சலம்’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ போன்ற படங்களில் இசை மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு எனக்கு ரஜினி படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு வரவில்லை. “நீங்கள் மறுத்தீர்களா?” எனக் கேட்கிறார்கள். அவர் படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை நான் எப்படி மறுப்பேன்?
அந்தப் படங்களில் பாடல்கள், பின்னணி இசை போன்றவை நன்றாகவே இருந்தன. இருந்தாலும் அந்த வாய்ப்பு திரும்பவும் கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.
இப்போது நான் ஒரு ஹிட் படத்தைக் கொடுத்தால் என்னுடைய ஓய்வு காலம் சில ஆண்டுகள் தள்ளிப்போகும். அதேபோல ரஜினி பட வாய்ப்பு கிடைத்து ஹிட் கொடுத்தால், ஓய்வு பத்து ஆண்டுகள் தள்ளிப் போகும். வாய்ப்பு கிடைத்தால், பாட்ஷா படத்தைவிட சிறப்பாகச் செய்து தருவேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்