
மழை நின்று பல மணிநேரங்கள் ஆன பிறகும்கூட தரமணியின் 100 அடி சாலையில் வெள்ளநீர் முழங்கால் வரை தேங்கியிருந்தது. அதனிடையே இருசக்கர வாகனத்தைச் செலுத்திய நான், ரவுண்டானாவை தாண்டியதும் வாகனம் செயலிழக்கவே அதைத் தள்ளிச் சென்று சாலையோரம் சிறு மேடாய்த் தெரிந்த மேம்பாலத்தின் அருகே நிறுத்தினேன்.
முக்கிய சாலையில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களைப் பார்க்க முடிந்தது. அந்த வாகனங்கள் மெல்லிய வேகத்தில் நகர்ந்து கொண்டே இருந்தன. அவற்றின் பின்னால் நின்றிருந்த ஒரு காவலர் அதன் அருகே வருவோருக்கு ஒவ்வொரு பொட்டலமாக விநியோகித்துக் கொண்டிருந்தார்.
தரமணி மேம்பாலத்தில் நேற்று மாலையில் ஏறிப் பார்த்தபோது, ராஜீவ் காந்தி ஐடி சாலையில் இருந்து வேளச்சேரி செல்லும் அந்த முக்கிய சாலையில் உள்ள ரவுண்டானாவை சுற்றி எங்கும் தண்ணீர்மயமாகக் காட்சியளித்தது.
ஆனால், தரமணியின் உள்ளார்ந்த வீதிகளுக்குள் சென்று பார்த்த காட்சிகள் 100 அடி சாலையில் பார்த்தது ஒன்றுமே இல்லை என்பதை உணர்த்தியது.

வெள்ள நீரோடு வீட்டுக்குள் புகுந்த பாம்பு, மீன், நண்டுகள்
சோழமன்னன் தெரு தொடங்கும் இடத்தில் நான் ஜான்சியை சந்தித்தேன். அப்போது தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அவர் ஒரு கடை வாசற்படியில் அமர்ந்திருந்தார். அவரது மாமியார் அவருக்கு அருகே உடல் நடுங்க அதே வாசற்படியில் படுத்திருந்தார்.
அவர்கள் இருவரும் அதிகாலையில் வீட்டிற்குள் தண்ணீர் வரத் தொடங்கியது முதல் அங்கேயேதான் அமர்ந்திருக்கிறார்கள். “எவ்வளவோ முயற்சி செய்தும் உதவிக்கு வாகனங்களை வர வைக்க முடியவில்லை. நாங்கள் தினசரி சம்பாத்தியத்திற்குச் செல்பவர்கள். இரண்டு நாட்களாக வேலைக்குச் செல்லாததால் கையில் பணமும் இல்லை,” என்று கூறுகிறார் ஜான்சி.
ஜான்சியின் கணவர் தனது தாயை அந்த இடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்ற பணம் புரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். “வீட்டுக்குள் தண்ணீர் புகத் தொடங்கியபோது பிளாஸ்டிக் சேர் போட்டு அமர்ந்திருந்தோம். ஆனால், அதுவே மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் மேலேறத் தொடங்கியதும் வெளியேறி விட்டோம்.
இருந்தாலும், மிகவும் வயதான மாமியாரை அழைத்துச் செல்ல முடியாமல் உதவிக்காகக் காத்திருக்கிறோம். நேற்றிரவு சாப்பிட்டது. அதற்குப் பிறகு எதுவுமே சாப்பிட முடியவில்லை. மின்சாரம் இல்லை, வீட்டுக்குள் தண்ணீர். இது போதாதென்று வீட்டுக்குள் புகுந்த மீன், நண்டு, பாம்பு ஆகியவற்றாலும் அச்சுறுத்தல். இப்போது இப்படி சாலையோர வாசற்படியில் அமர்ந்திருக்கிறோம்,” என்று தனது நிலை குறித்து விளக்கினார் ஜான்சி.

2015ஐ விட மோசமான நிலையா?
ஜான்சி மட்டுமின்றி அதே வீதியில் பல மக்கள் இடுப்பளவு தண்ணீர் நிரம்பியிருந்த வீதிக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாகவே இருந்தனர். அவர்களது உடைமைகளில் முக்கியமானவற்றைச் சிறிது சிறிதாகப் பாதுகாத்து வைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
சிலர், தங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருட்களை எடுத்துவரச் சென்றனர். அவர்களில் ஒருவரான லதா அரசு மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
புயல் எச்சரிக்கையைக் கொடுத்து, வீட்டுக்கு உள்ளேயே இருக்கச் சொன்னார்கள். ஆனால், இப்படி வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டால் என்ன செய்வது எனச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார் லதா. “குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.
தரைத்தளம் முழுக்க சிலிண்டர் உட்பட அனைத்துப் பொருட்களும் மிதந்து கொண்டிருக்கின்றன. காலையில் உதவிப்பொருளாக உப்பில்லாத பொங்கல் கொஞ்சம் கிடைத்தது. அதுதவிர வேறு எந்த உதவியும் எங்களை வந்தடையவில்லை,” என்றும் அவர் வருந்தினார்.
மேலும், தரமணி பகுதியில் பல்லாண்டுக் காலமாக வசித்து வரும் லதா, 1985ஆம் ஆண்டு இதேபோல் ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்கிறார்.

லதாவை பொறுத்தவரை, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது கூட தரமணி பகுதியில் இவ்வளவு பிரச்னை இருக்கவில்லை. “இப்போது புகுந்துள்ள வெள்ள நீர் 2015ஆம் ஆண்டைவிட மோசமான அளவுக்கு இருக்கிறது. கடைசியாக 1985ஆம் ஆண்டில்தான் இந்தளவுக்குத் தண்ணீர் வந்தது.”
“இது நிச்சயமாக மழையால் மட்டுமே வந்த தண்ணீர் கிடையாது. மழைநீர் கால்வாய்கள் அமைத்திருந்தாலும் அது பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணைக்கப்பட்டு, ஏரி நிரம்பி வெளியேறும் நீர் முதல் மழைநீர் வரை அனைத்துமே கடலுக்குச் செல்லும்படி அரசு செய்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை,” என்றும் குற்றம் சாட்டுகிறார் லதா.
‘பாமர மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறோம்’
நாள் முழுக்க நீரிலேயே இருந்திருந்து லதாவின் கால்கள் ஊறி, வெளுத்துப் போயிருந்தன. அவரது கால்களில் ஏற்பட்ட வலியைப் பொறுக்க முடியாமல் இரு பாதங்களையும் லேசாகப் பிடித்துவிட்டவாறு நம்மிடம் பேசினார்.
“உதவிப் பொருட்களைக் கொடுப்பதாகக் கூறும் அரசு மெயின் ரோட்டிலேயே கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறது. உள்ளே சிக்கியிருக்கும் எங்களைப் போன்றோரைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. நாங்கள் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடாமல், சாப்பிட முடியாமல் தவிக்கிறோம்,” என்றார் லதா.

அவரது கண்களில் ஆதங்கம், பசி, வருத்தம், பிரச்னை எப்போது தீரும் என்ற எதிர்பார்ப்பு என அனைத்தையும் பார்க்க முடிந்தது.
“ஒவ்வொரு மழையின்போதும் அதிகமாக பாதிக்கப்படுவது பாமர மக்கள்தான். எங்களைப் போன்றோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அவ்வப்போது தற்காலிக தீர்வுகளை மட்டுமே கொடுத்துவிட்டு மறந்துவிடுகிறார்கள்.”
ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தின்போது எப்போது மழைநீர் வீட்டுக்குள் வரும், யாருக்கு என்ன ஆகுமா, உணவின்றித் தவிப்போமோ, உயிரே போய்விடுமோ என்று “நாங்கள் அஞ்சியவாறே வாழ்க்கையை ஓட்டுகிறோம்” எனக் கூறும் லதா, “தற்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலினாவது இதற்கொரு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக அதற்கு மழைநீர் கால்வாய்களை முழுமையாக அமைத்து, அதில் செல்லும் நீர் கடலுடன் சென்று கலக்க வழி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு வராத இடத்தில் களமிறங்கிய இளைஞர்கள்
தரமணி பகுதியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து குடியிருப்புவாசிகளிடம் அரிசி, காய்கறி எனப் பல்வேறு பொருட்களைப் பெற்று ஓரிடத்தில் அனைவருக்கும் சமைத்து விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.
தரமணியில் இருந்து கானகம் செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை கிலோமீட்டருக்கு இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றால், ஒரு சிறிய கேட்டரிங் கடை இருந்தது. அந்தக் கடையில் வைத்து தங்கள் சமையல் பணியை மேற்கொண்டிருந்த இளைஞர்களைச் சந்தித்தேன்.
அரசின் நிவாரண உதவிகள் இவ்வளவு தொலைவுக்கு உள்ளே வரவில்லை என்றும் 100 அடி சாலையிலேயே வாகனங்கள் நின்று பொட்டலங்களை விநியோகித்துவிட்டுச் சென்றுவிடுவதாகவும் கூறினார்.
மூன்று சக்கர தள்ளுவண்டியில் பெரிய பாத்திரத்தை வைத்து வீடு வீடாகச் சென்று உணவு விநியோகித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரான திவாகரிடம் பேசுகையில், “அரசின் உதவிகள் கிடைக்கும் வரை மக்களால் பசியுடன் காத்திருக்க முடியாது. அதனால்தான், இளைஞர்களே களத்தில் இறங்கி வேலையைத் தொடங்கிவிட்டோம்,” என்று கூறினார்.
திவாகர் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் சென்னை தெற்கு மாவட்டப் பொருளாளராக இருக்கிறார். அவரும் வேளச்சேரி பகுதி செயலாளராக இருக்கும் சி. சூர்யாவும் இந்த முயற்சியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

மழைநீர் கால்வாயை பங்கிங்ஹாம் உடன் இணைப்பதுதான் தீர்வா?
அரசு உதவிப் பொருட்களை வழங்கி வந்தாலும்கூட, விளையாட்டு விநாயகர் கோவில் தெருவுக்குள் எதுவும் வரவில்லை என்று கூறும் சி.சூர்யா மக்கள் வழங்கிய சமையல் பொருட்களை வைத்து இந்தப் பணியைச் செய்து வருவதாகக் கூறினார்.
மேலும், நம்மிடம் பேசிய லதா போன்ற குடியிருப்புவாசிகளின் கவலையை அவரும் ஆமோதித்தார். வேளச்சேரியில் இருந்து தொடங்கி ராஜீவ் காந்தி ஐடி சாலை வரை செல்லும் மழைநீர் கால்வாய், அதைக் கடந்து பக்கிங்ஹாம் கால்வாயில் இணைக்கப்படவில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த வெள்ளநீரால் வெளியேற முடியாமல் இங்கேயே சுழன்று கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று அதிகாலை வேளையில் நான் அங்கு சென்று பார்த்தபோது, நேற்று மாலையில் பார்த்த அதே நிலையில்தான் தரமணி இன்னமும் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
தண்ணீர் சிறிதும் வடியவில்லை. சொல்லப்போனால், வெள்ளநீர் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. ஒரு ஏரியில் நீர் சுழமாடுவதைப் போல் தரமணி சாலை, அதன் உள்ளே இருக்கும் வீதிகள் என அனைத்திலும் வெள்ள நீர் அலை அலையாகச் சுழன்று ஓடிக் கொண்டிருந்தது.
அந்த நீரில் சில இளைஞர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு நீர்பிடிப்புப் பகுதிகளாக சதுப்பு நிலங்களாக இருந்த பள்ளிக்கரணை, வேளச்சேரி, தரமணி ஆகியவை குடியிருப்புகளாக மாற்றப்பட்டு தவறு நடந்துவிட்டன. ஆனால், அதற்காக நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் இப்படித் தவித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?
இதற்கொரு நிரந்தரத் தீர்வு வேண்டும்? மழைநீர் கால்வாய்களில் நீர் வடிந்து, மக்களுக்குப் பாதகமின்றி வெளியேறும் வகையில் அவை முழுமையாகக் கட்டமைக்கப்பட வேண்டும்,” என்று கூறினார் தரமணி விளையாட்டு விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் இளைஞரான விஜயகுமார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்