பட மூலாதாரம், X/@LOKESH KANAGARAJ
லோகேஷ் கனகராஜ் இயக்கி, நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று (வியாழன், அக்டோபர் 19) வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இப்படம் இன்று (வியாழன், அக்டோபர் 19) அதிகாலை 4 மணிக்கு வெளியானது.

பாலக்காட்டில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானதையடுத்து, தமிழகத்திலிருந்தும் ரசிகர்கள் பாலக்காட்டிற்குச் சென்று படம் பார்த்தனர்.

பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக் குழுமியிருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்
பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக் குழுமியிருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்.
படம் திரையிடப்பட்டபோது திரைக்கு முன்னும் சென்று நடனமாடித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நடிகர் விஜய் ரசிகர்மன்றத்தினரின் கூற்றுப்படி, கேரளாவில் 620 திரைகளில் இப்படம் வெளியிடப்படுகிறது.

படம் திரையிடப்பட்டபோது திரைக்கு முன்னும் சென்று நடனமாடித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்
தமிழகத்தில் 4 மணிக் காட்சிக்கு அனுமதி மறுப்பு
முன்னர் இந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சிகளை வெளியிட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி அரசிடம் தயாரிப்புத் தரப்பு விண்ணப்பித்தது. அதன்படி, அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை சிறப்புக் காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால், இதற்குப் பிறகு, வேறு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் காட்சிகள் காலை 9 மணிக்குத் துவங்கி இரவு 1.30 மணிக்குள் நிறைவுபெற வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தயாரிப்புத் தரப்பு அதிர்ச்சியடைந்தது.
மேலும், படத்தின் நீளம் இரண்டே முக்கால்மணி நேரமாக இருக்கும் நிலையில், அரசு குறிப்பிட்டிருக்கும் காலத்திற்குள் ஐந்து காட்சிகளை திரையிடுவது இயலாத காரியம் என்றும் தயாரிப்புத் தரப்புக் கூறியது.
இதையடுத்து, அதிகாலை நான்கு மணி காட்சிக்கு அனுமதி கோரி படத்தைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கூடுதல் காட்சியைத் திரையிட அனுமதித்துவிட்டு, அதற்கான நேரம் வழங்காவிட்டால் எப்படித் திரையிட முடியும் எனக் கேள்வியெழுப்பிய நீதிபதி, 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்தது.
பட மூலாதாரம், X/@LOKESH KANAGARAJ
லியோ படம் தொடர்பாக இதுவரை பல சர்ச்சைகள் வெடித்துள்ளன
லியோ படம் தொடர்பாக இதுவரை வெடித்த சர்ச்சைகள்
பொதுவாக நடிகர் விஜய் நடித்த படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமாக நடக்கும் நிலையில், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட விரும்புவதால் ஆளும் கட்சி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பது உள்பட பல காரணங்கள் இதற்குக் கூறப்பட்டன. ஆனால், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்திருந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தயாரிப்புத் தரப்பு கூறியது.
இதற்குப் பிறகு, லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியான போது அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ட்ரெய்லரில் அந்த வார்த்தை நீக்கப்பட்டது.
இதற்கு நடுவில் லியோ படத்தில் ‘நான் ரெடிதான்’ பாடலில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் 1,300 பேருக்கு பேசியபடி சம்பளம் அளிக்கப்படவில்லையென அவர்கள் புகார் கூறினர். ஆனால், அடுத்த சில நாட்களில் முழுமையாக அளிக்கப்பட்டு இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
