ஆபரேஷன் தாமரை: காங்கிரஸ், சிவசேனாவை உடைத்து ஆட்சியை பிடிக்க உதவிய உத்தியால் பாஜகவுக்கு என்ன நஷ்டம்?

ஆபரேஷன் தாமரை: காங்கிரஸ், சிவசேனாவை உடைத்து ஆட்சியை பிடிக்க உதவிய உத்தியால் பாஜகவுக்கு என்ன நஷ்டம்?

ஆபரேஷன் தாமரையால் பா.ஜ.க.வுக்கு நஷ்டம்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இரண்டு முறை ‘ஆபரேஷன் தாமரை’ நடத்தியதாக கூறப்படுகிறது.

இது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு முக்கிய பிராந்திய கட்சிகளில் பிளவுக்கு வழிவகுத்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு வெளியேறி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைந்தது.

பின், 2017ல் குஜராத்தில் இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலின் போது, பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சி வாக்களித்தனர்.

மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் வெற்றி பெற்றார். ஆனால் கட்சி மாறி வாக்களித்ததன் காரணமாக, அகமது படேல் போன்ற ஒரு சக்தி வாய்ந்த தலைவர் வெற்றி பெறுவதற்கு பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதாக பெற வேண்டிய வெற்றியாகக் கருதப்பட்டது.

கடந்த செவ்வாய்க் கிழமை (பிப்ரவரி 27) வரலாறு திரும்பியது போல் தோன்றியது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

கடந்த 2022 இல் 68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 40 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்ததால், இது ஒரு ஆச்சரியமான முடிவாகவே பார்க்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி பெறுவது வெறும் சம்பிரதாயமாக கருதப்பட்ட நிலையில், பா.ஜ.க. வெற்றி பெற்றது.

காங்கிரஸ் அதீத நம்பிக்கையில் மூழ்கியதா?

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுடன் அபிஷேக் மனு சிங்வி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுடன் அபிஷேக் மனு சிங்வி

காங்கிரஸின் இந்த தோல்விக்குப் பிறகு, கடந்த கால அனுபவங்களில் இருந்து அக்கட்சி எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2017ல் அகமது படேலைப் போலவே, இம்முறையும் தனது வேட்பாளரான உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி எளிதாக வெற்றி பெறுவார் என்று அக்கட்சி நம்பியது. அகமது படேல் எப்படியோ வெற்றி பெற்றார். ஆனால் சிங்வி தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பங்கஜ் வோஹ்ராவின் கூற்றுப்படி, காங்கிரஸ் கட்சி மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக தனது உத்தியை சரிசெய்ய வேண்டும்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பட்ஜெட்டை நிறைவேற்ற மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆறு எம்எல்ஏக்களும் சபாநாயகரால் கொறடா உத்தரவை மீறியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது சபாநாயகரின் முடிவை எதிர்த்து ஹிமாச்சல் உயர்நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சிகளின் மாநில அரசுகள் கடந்த சில வருடங்களாக கட்சி விலகல் மற்றும் கட்சி மாறி வாக்களிப்பதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளன. இந்த மாநிலங்களில் ‘ஆபரேஷன் தாமரை’யை பாஜக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், பிகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் அரசாங்கங்கள் மற்றும் பிற கட்சிகளின் அரசாங்கங்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்ததால், அக்கட்சியின் உத்திகள் மற்றும் நெறிமுறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

“காதல், போர் மற்றும் அரசியலில் எல்லாம் நியாயம்தான்” என்று பாஜக தலைவர்கள் வாதிடுகின்றனர்.

மக்களின் தீர்ப்பு திருடப்பட்டதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பாஜக அல்லாத பல கட்சிகள் கோஷ்டிப் பூசலில் பலியாகி இருப்பதும் உண்மை. அதிகாரத்திற்கு வெளியே, அவர்களின் சில எம்.எல்.ஏ.க்கள் பதவிகள் மற்றும் அமைச்சகங்களுக்கான பேராசையும் மாநில அரசாங்கங்களை சீர்குலைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

போட்டிக் கட்சிகளில் நிலவும் பிரச்னைகளை பாஜக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை விரிவுபடுத்துகிறது என்கிறார் பங்கஜ் வோஹ்ரா.

“ஆபரேஷன் தாமரை அமல்படுத்த முடியும் என்று பா.ஜ.க பார்க்கும் போதெல்லாம் உடனே தனது வேலையை ஆரம்பிக்கிறது. ஹிமாச்சலத்தில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் 2022 வரை காங்கிரஸில் இருந்தவர். சரியான வாய்ப்பைப் பார்த்து, அதை பாஜக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது,” என்றார் பங்கஜ்.

ஆபரேஷன் தாமரை என்றால் என்ன?

ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெயா பச்சன்

பட மூலாதாரம், @SAMAJWADIPARTY/X

தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பாடுபடும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் நிறுவன உறுப்பினர் பேராசிரியர் ஜக்தீப் சோகர் கூறுகையில், “எனது கருத்துப்படி, காங்கிரஸுக்கு எதுவும் சொல்வதில் எந்த பயனும் இல்லை. எங்கெல்லாம் எதிர்க்கட்சி அல்லது பாஜக அல்லாத அரசுகள் இருந்தாலும், இதுபோன்ற முயற்சிகள் நடக்கும். அவர்கள் (பாஜக) இரட்டை என்ஜின் அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைய இதை தொடர்ந்து செய்கிறார்கள்.” என்றார்.

கடந்த வாரம் உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வெற்றியைப் பெற்றதற்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தவறுகளே காரணம் என்று பங்கஜ் வோஹ்ரா கூறுகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10 மாநிலங்களவைத் தொகுதிகளில் பாஜக 8 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி (SP) இரண்டையும் வென்றது. சமாஜ்வாதி கட்சி மூன்று இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

பங்கஜ் வோஹ்ரா கூறும்போது, ​​”சிங்வி ராஜஸ்தானைச் சேர்ந்தவர், ஆனால் அவரை ஹிமாச்சலத்தில் போட்டியிட வைத்தனர். முதன்முறையாக ஹிமாச்சலில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இது காங்கிரஸின் முட்டாள்தனம். அது வெளி மாநிலத்தவரைப் போட்டியிட வைத்திருக்கக் கூடாது. அகிலேஷ் யாதவின் தவறு, 19 வாக்குகள் மட்டுமே பெற்ற ஒரு அதிகார வர்க்கத்தை அவர் நிறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்,“ஐந்தாவது அல்லது ஆறாவது முறையாக ஜெயா பச்சனுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு அரசியல் நபரை அழைத்து வந்திருக்க வேண்டும். சீட் கொடுக்கப்பட்டது சரியாக இல்லை. இந்த வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் வேட்பாளர்கள் பலர் கட்சிக்குள் உள்ளனர். எனவே காங்கிரஸும் சமாஜவாதியும் தங்களுக்குள்ளேயே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.” என்றார்.

இமாச்சலில் பாஜகவின் அரசியல் வியூகம் குறித்து பேசிய பங்கஜ் வோஹ்ரா, “மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிப்பது அல்ல, ஆட்சிக்குள் நிச்சயமற்ற சூழலை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம். மகிழ்ச்சியற்ற எம்.எல்.ஏ.க்கள் ஐந்தாண்டுகளாக தனித்து இருந்திருந்தால், பாஜகவில் இணைந்திருப்பார்கள்.” என்றார்.

‘ஆபரேஷன் தாமரை’யை எதிர்ப்பவர்கள், இது பா.ஜ.,வின் செல்வாக்கை அதிகரிக்க நினைக்கும் ‘சட்டவிரோத அரசியல் உத்தி’ என்று கூறுகின்றனர்.

அவரைப் பொருத்தவரை, இது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துகிறது மற்றும் ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் பாரபட்சமற்ற தன்மையையும் பாதிக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

துணை முதல்வர் பிரஜேஷ் பதக்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த எஸ்பி எம்எல்ஏக்களுடன் துணை முதல்வர் பிரஜேஷ் பதக்.

இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு முதல் கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ‘எம்.எல்.ஏ., எம்.பி., ஒரு கட்சியை விட்டு வெளியேறி, வேறு கட்சியில் இணைந்தால் தண்டிக்கப்படலாம்.’

இந்த சட்டம் அரசாங்கத்திற்கு நிலைத்தன்மை வழங்குகிறது. ஆனால், நாட்டில் கடந்த பல ஆண்டுகால வரலாற்றைப் பார்த்தால், கட்சித் தாவல் நிறுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. உண்மையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் சவால்களை இது எடுத்துக்காட்டுகிறது.

பேராசிரியர் ஜக்தீப் சோக்கரின் கூற்றுப்படி, கட்சித் தாவல் தடைச் சட்டம் பயனற்றதாகிவிட்டதால், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

சமீபத்திய ஆண்டுகளில், காங்கிரஸ் மற்றும் பிற அரசாங்கங்களின் வீழ்ச்சியில் கட்சி மாறி அளிக்கப்பட்ட வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமீப வருடங்களில் கட்சித் தாவல் மற்றும் கட்சி மாறி வாக்களிப்பின் சில முக்கிய நிகழ்வுகளைப் பாருங்கள்:

  • கடந்த 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பங்கள் நிறைந்த ஆண்டாகக் கருதப்படும். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிளவுக்குப் பிறகு, பாஜகவுக்கு சிவசேனா (ஷிண்டே பிரிவு) என்ற புதிய கூட்டணி கிடைத்தது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
  • சிறிது காலத்திற்கு பின், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியில் இணைந்தது.
  • பின், 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகளைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அரசு பெரும்பான்மையை இழந்தது.
  • பின், 2020ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அப்போது பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்தது.

ஆபரேஷன் தாமரையால் பாஜகவுக்கு என்ன நஷ்டம்?

பாஜக

பட மூலாதாரம், ANI

‘ஆபரேஷன் தாமரை’ ஒரு வெற்றிகரமான உத்தியாக அமைந்தது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். ஆனால், சில நேரங்களில் இது பாஜகவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதற்கு கர்நாடகாவில் ஒரு உதாரணம் கிடைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பத்திரிகையாளர் ரவிபிரகாஷ் கூறுகையில், பா.ஜ.க.வின் தொகுதிகளை குறைப்பதில் ‘ஆபரேஷன் தாமரை’ நேரடி பங்கு வகித்துள்ளதாகக் கூறினார்.

கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 103 இடங்களைப் பெற்றிருந்தது, ஆனால் 2023 இல் இந்த எண்ணிக்கை 66 ஆகக் குறைந்தது.

2023 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பாஜக தலைவர் ஒருவர் இந்த நிருபரிடம், ‘ஆபரேஷன் தாமரை’ முடிவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறினார்.

“கட்சி அதன் சித்தாந்தம் மற்றும் கேடரை சமரசம் செய்தது” என்று அவர் கூறினார். கட்சி எம்.எல்.ஏ.க்களை பணத்தால் கவர்ந்து அல்லது மந்திரி ஆக்குவதில் பெரும் முதலீடு செய்தது. இது ஊழலை ஊக்குவித்தது மற்றும் கட்சியை மக்கள் மத்தியில் மிகவும் விரும்பாததாக மாற்றியது, இதன் விளைவாக மாநிலத்தில் ஆட்சியை இழந்தது,”என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *