அமெரிக்காவிடம் இந்தியா வாங்கும் ராணுவ ட்ரோன்கள் என்ன செய்யும்? சிறப்புகள் என்ன?

அமெரிக்காவிடம் இந்தியா வாங்கும் ராணுவ ட்ரோன்கள் என்ன செய்யும்? சிறப்புகள் என்ன?

MQ-9B ட்ரோன்கள்

பட மூலாதாரம், GA-ASI.COM

படக்குறிப்பு,

இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ராணுவ பயன்பாட்டிற்காக இத்தகைய ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி இந்தியா 2018இல் பேச்சுகளைத் தொடங்கியது. ஆனால் ஆயுதங்கள் இல்லாத ஆளில்லா விமானங்கள் மீது அதற்குப் பல காலம் முன்பே இந்தியா ஆர்வம் காட்டியது.

இருப்பினும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதால் இந்த ஒப்பந்தம் இப்போது முடிவாகிவிட்டதாகச் சொல்ல முடியாது.

MQ-9B ட்ரோன்கள்

பட மூலாதாரம், GA-ASI.COM

படக்குறிப்பு,

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல், ஒரு பெரிய தடை விலகியதற்கு சமம்.

ரஷ்யாவுக்கு நெருக்கமாகச் செல்லும் இந்தியாவைக் கவரும் முயற்சியாக இந்த ஆயுத விற்பனை பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல், ஒரு பெரிய தடை விலகியதற்குச் சமம் என்று சொல்லலாம்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்வதற்கான சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து இந்தியா முழு மனதுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகின.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி பென் கார்டின், செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராக உள்ளார்.

அமெரிக்க மண்ணில் நடந்த கொலைச் சதியை விசாரிப்பது தொடர்பாக அதிபர் ஜோ பைடனிடம் இருந்து உத்தரவாதம் பெற்ற பின்னரே இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக அவர் கூறினார்.

“இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியாவிலும் இதுபோன்ற செயல்களுக்குப் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்றும் பைடன் நிர்வாகம் கூறியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஆண்டு அதிகாரபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றபோது ​​​​இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துமாறு பைடன் நிர்வாகத்தை இந்தியா கேட்டுக் கொண்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

ஒப்பந்தத்தில் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது?

MQ-9B ட்ரோன்கள்

பட மூலாதாரம், GA-ASI.COM

படக்குறிப்பு,

170 ஏஜிஎம் 114R ஹெல்ஃபயர் ஏவுகணைகள் மற்றும் 310 லேசர் ஸ்மால் டயமீட்டர் குண்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

தற்போது இந்தியா ​​உளவுத் தகவல்கள் சேகரிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக MQ-9B விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.

வியாழனன்று பென்டகனின் டிஃபென்ஸ் செக்யூரிட்டி ஒத்துழைப்பு நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

இந்த விமானங்களுக்கான ஒப்பந்தம் ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்களும் அடக்கம்.

இவை தவிர, 170 ஏஜிஎம் 114R ஹெல்ஃபயர் ஏவுகணைகள் மற்றும் 310 லேசர் ஸ்மால் டயமீட்டர் குண்டுகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. அவை மிகவும் துல்லியமானவை.

இந்த ட்ரோனில் என்ன சிறப்பு?

MQ-9B ட்ரோன்கள்

பட மூலாதாரம், GA-ASI.COM

படக்குறிப்பு,

இத்தகைய விமானங்கள் ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம் (ஆர்பிஎஸ்) என்று அழைக்கப்படுகின்றன.

இது தொலைவில் இருந்து பறக்கச் செய்யவும், கட்டுப்படுத்தவும் முடியக்கூடிய ஆளில்லா விமானம் என்று ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிக்கல் MQ-9B பற்றிக் கூறியது.

இத்தகைய விமானங்கள் ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம் (ஆர்பிஎஸ்) என்று அழைக்கப்படுகின்றன. சாதாரண விமானத்தைப் பறக்கச் செய்யும்போது பார்க்கும் அனைத்தையுமே தொலைவில் இருந்துகொண்டு அதை இயக்கும் பைலட் பார்க்க முடியும்.

இதில் நவீன ரேடார் அமைப்புகள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தானாகவே டேக் ஆஃப் செய்யும், தரையிறங்கும்.

இதை செயற்கைக்கோள் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். 40 மணி நேரத்திற்கும் அதிகமாக இரவும் பகலும், எல்லா வகையான வானிலையிலும் இதைப் பறக்கச் செய்ய முடியும்.

இது 2155 கிலோ எடையை தாங்கியபடி பறக்கக் கூடியது. போர் முதல் சுற்றுச்சூழல், மனிதாபிமான பணிகள் வரை உலகம் முழுவதும் ஸ்கை கார்டியன் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்கை கார்டியனால் சாதாரண விமானம் போலப் பறக்க முடியும். ராணுவங்கள் அல்லது அரசுகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப இதைப் பயன்படுத்த முடியும். இந்த விமானம் உளவுத் தகவல் சேகரிப்பு, தேடுதல் மற்றும் கண்காணிப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம்.

MQ-9B ட்ரோனை எங்கு பயன்படுத்தமுடியும்

  • மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்த்தல்
  • உளவு தகவல்களைச் சேகரித்தல்
  • எல்லைக் கண்காணிப்பு
  • விமான தாக்குதல்கள்
  • தேடுதல் மற்றும் மீப்புப் பணிகள்
  • ஆபத்தான பணிகளில் உதவி செய்தல்
  • சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல்

உள்ளிட்ட சேவைகளுக்காக இந்த ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த முடியும்.

இந்த ட்ரோன்களை இந்தியா என்ன செய்யும்?

MQ-9B ட்ரோன்கள்

பட மூலாதாரம், GA-ASI.COM

படக்குறிப்பு,

இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்டவை

இத்தகைய ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள், போர் விமானிகள் மூலம் இயக்கப்படும் போர் விமானங்கள் போலவே எதிரி இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசும் திறன் கொண்டவை.

இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்டவை. அவற்றில் ஹெல்ஃபயர் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

நீண்ட தூரம் பறந்து உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்ட இந்த விமானங்களை மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு, வான்வழி முன்னறிவிப்பு, மின்னணு போர், மேற்பரப்பு எதிர்ப்பு போர் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.

அதுதவிர போதைப் பொருள் கடத்தல், கடற்கொள்ளையர் பிரச்னை போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கவும் இந்த ட்ரோன்களை பயன்படுத்தலாம்.

மொத்தமுள்ள 31 ஆளில்லா விமானங்களில் 15 இந்திய கடற்படைக்கும், தலா 8 ட்ரோன்கள் ராணுவம் மற்றும் விமானப் படைக்கும் வழங்கப்படும் என்று தற்போது கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MQ9 தொடரின் கீழ் கிடைக்கப்பெறும் MQ9B ஸ்கை கார்டியன், MQ9B ஸீ கார்டியன் ஆகிய இரண்டு வகையான ட்ரோன்களையும் வாங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸீ கார்டியன் ட்ரோன்கள் கடல் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் ஸ்கை கார்டியன் ட்ரோன்கள் எல்லைகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.

MQ-9B ட்ரோன்கள்

பட மூலாதாரம், GA-ASI.COM

படக்குறிப்பு,

“இந்தியா எம்டிசிஆர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இந்த ட்ரோன்கள் அதற்குக் கிடைத்திருக்காது”

கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா, ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) அதிகாரப்பூர்வ உறுப்பினரானபோது இந்த ட்ரோன்களை வாங்குவது குறித்த பேச்சு தொடங்கியது என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

இந்தியா எம்டிசிஆர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இந்த ட்ரோன்கள் அதற்குக் கிடைத்திருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

“எம்டிசிஆர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிறிது காலம் கழித்து இந்தியா இந்த ஆயுதமேந்திய ட்ரோன்களை வாங்குவதற்காக அமெரிக்காவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியது. இதுவரை நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா இந்த ஆளில்லா விமானங்களை வழங்கி வந்தது. எனவே இந்தியா இந்த ட்ரோன்களை வாங்க முடிந்தால், நேட்டோ அல்லாத ஒரு நாடு இதைப் பெறுவது முதல் முறையாக இருக்கும்,” என்றார் அவர்.

இந்த ட்ரோன்களை வாங்குவதற்கான இந்தியாவின் திட்டம் தனது ஆளில்லா பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கவும், சாத்தியமான அச்சுறுத்தல்களை மிகவும் திறம்படக் கண்காணிக்கவும் இந்த ட்ரோன்கள் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்காணிக்கவும் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படும் என்பது உறுதி.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *