உலகக்கோப்பை: நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு புதிய சிக்கல் – வில்லியம்சன் என்ன செய்வார்?

உலகக்கோப்பை: நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு புதிய சிக்கல் - வில்லியம்சன் என்ன செய்வார்?

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கேன் வில்லியம்ஸன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று, 78 ரன்கள் சேர்த்து விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

சென்னை சேப்பாக்கம் மைாதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி.

முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. 246 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நிகர ரன்ரேட் உயரவில்லை

நியூசிலாந்து அணிக்கு இது மூன்றாவது வெற்றி. தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நியூசிலாந்து இருந்தாலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் 1.604 என்று தென் ஆப்பிரிக்காவுக்கு கீழேயும், இந்திய அணிக்கு சற்று அதிகமாகவும் இருக்கிறது.

வங்கதேச அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி , இரு தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.699 ஆக இருக்கிறது.

நியூசிலாந்து அணியின் கடைசி இரு போட்டிகள் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணியுடனான போட்டி என்பதால் எளிதாக வென்றுவிட்டது, ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியிலும்கூட வெற்றி எளிதாகும். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு வெற்றி 8 ஓவர்கள் மீதம் இருக்கையில்தான் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அடித்த 280 ரன்களுக்கு மேலான ஸ்கோரை 36 ஓவர்களில் சேஸிங் செய்த நியூசிலாந்து அணி, நேற்று 245 ரன்களை சேஸ் செய்ய 42 ஓவர்களை எடுத்துக்கொண்டது.

அதனால்தான் நியூசிலாந்து அணி 3 வெற்றிகளைப் பெற்றபோதிலும் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகளிலேயே நிகர ரன்ரேட் 2.00க்கும் மேல் உயர்ந்துள்ளது.

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

எதிர்வரும் சவால்கள்

சென்னை ஆடுகளம் ஒரு காரணமாக இருந்தாலும், எதிரணியின் பந்துவீச்சு திறமை, ஃபீல்டிங், லைன் அண்ட் லென்த் பந்துவீச்சு போன்றவையும் நியூசிலாந்து அணியின் செயல்பாட்டை மதிப்பிடும்.

நியூசிலாந்து அணிக்கு அடுத்து வரக்கூடிய இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக அமையும். அப்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் மீதான முழுமையாக மதிப்பீடு வெளிப்படும்.

வில்லியம்ஸன் பேட்டிங் எப்படி?

முழங்கால் காயம் காரணமாக கடந்த 7 மாதங்களாக விளையாடாமல் இருந்த கேப்டன் வில்லியம்ஸன் நேற்று முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடி நேற்று மிகவும் நிதானமாக பேட் செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் அதேபோல் வெளிப்படுத்த முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, 9 ரன்னில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் கான்வேயுடன் சேர்ந்த வில்லியம்ஸன் மிக மந்தமாகவே பேட் செய்தார். வழக்கமான வில்லியம்ஸன் ஆட்டத்தைப் போன்று இல்லாமல் ஏதோ டெஸ்ட் போட்டியில் பேட் செய்வது போன்று அவரது ஆட்டம் அமைந்திருந்தது.

கான்வேயுடன் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப், டேரல் மிட்ஷெலுடன் சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், வில்லியம்ஸன் தரப்பில் பெரிதாக ரன்கள் சேரவில்லை. 107 பந்துகளில் 78 ரன்களுடன் ஸ்ட்ரைக் ரேட் 72 ஆகத்தான் வில்லியம்ஸன் வைத்திருந்த நிலையில் ரிட்டயர்ஹர்ட் முறையில் வெளியேறினார்.

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

மிகவும் எளிதாக அடிக்கக்கூடிய இந்த ஸ்கோரை எட்டுவதற்கு வில்லியம்ஸன் எதற்காக இத்தனை மந்தமாக ஆட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏழு மாதங்களுக்குப்பின் சர்வதேச களத்துக்கு வந்துள்ள வில்லியம்ஸன், இன்னும் பேட்டிங்கில் முழு ஃபார்முக்குள் வரவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

அதேநேரம், டேரல் மிஷெல் களத்துக்கு வந்ததில் இருந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து 43 ரன்களில் அரைசதம் அடித்தார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 67 பந்துகளில் 89 ரன்களுடன் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) டேரல் மிஷெல் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை ஆடுகளத்தில் இதுபோன்று அதிரடியாகவும் பேட் செய்ய முடியும் என்பதை மிஷெல் ஆட்டம் வெளிப்படுத்தியது.

டேரல் மிஷெல் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தை கேன் வில்லியம்சனால் வழங்க முடியவில்லை. வில்லியம்ஸன் மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்ப அவருக்கு இன்னும் போதுமான அளவு ஆட்டங்கள் தேவைப்படுகிறதா, போதுமான பயிற்சியின்றி, நேரடியாக சர்வதேச களத்துக்குள் வந்துவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

ரவீந்திராவுக்கு அழுத்தம்

ரச்சின் ரவீந்திரா குறைவான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுதான் உலகக்கோப்பைத் தொடரில் அறிமுகமானார். இளம் வீரரான ரவீந்திராவை தொடக்க வீரராக களமிறக்கி அவருக்கு அதிகமான அழுதத்தைத் திணித்து பேட்டிங் திறமையை குலைக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான், நிலைத்து விளையாடக்கூடிய ரவீந்திரா, நேற்று விரைவாக ஆட்டமிழந்தார்.

வில்லியம்ஸன் ஏன் முயலக்கூடாது

ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் வாயுந்த வில்லியம்ஸன் தொடக்க வீரராக களமிறங்கி, தனது ஒன்டவுன் இடத்தை ரவீந்திராவுக்கு வழங்கியிருக்கலாம். கடந்த 2 போட்டிகளிலும் ரவீந்திரா ஒன்டவுன் வரிசையில் சதம், அரைசதம் என சிறப்பாக ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரர் என்னும் போது கணிக்கும் திறன், அனுபவம், பொறுமை, கவனம் தேவை, இவை வில்லியம்ஸிடம் இருக்கும்போது அவர் களமிறங்கியிருக்க வேண்டும்.

சர்வதேசஅனுபவம் இல்லாத ரவீந்திராவை களமிறக்கி நியூசிலாந்து அணி அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

“பவுன்ஸர்” பெர்குஷன்

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு ஆறுதலான, சாதகமான அம்சம், பெர்குஷன் பந்துவீச்சு. கடினமான, பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் பெர்குஷன் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதை 2018ஆம் ஆண்டு, அபுதாபியில் நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் இமாம் அல் ஹக்-க்கு ஏற்பட்ட நிலைமையால் அறியலாம். 2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பெர்குஷனின் பவுன்ஸரை தாங்க முடியாமல் பின்பக்கமாக விழுந்ததும் நினைவிருக்கும்.

அதுபோன்ற துல்லியமான பவுன்ஸர், நெருக்கடி தரும் லைன், லென்த் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்திலும் பெர்குஷனிடம் இருந்தது. சராசரியாக 145 கி.மீ வேகத்தில் வீசும் பெர்குஷனின் பந்துவீச்சை கடினமான ஆடுகளத்தில் பேட்டர்கள் விளையாடுவது மிகக் கடினம். இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய பெர்குஷன் 49 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

சென்னை ஆடுகளம் கணிக்க முடியாத தன்மை கொண்டது என்பதால், கூடுதலாக சுழற்பந்துவீச்சாளருடன் வராமல் பெர்குஷனுக்கு வாய்ப்பளித்தார் வில்லியம்ஸன். அதற்கு ஏற்றாற்போல், போல்ட், பந்துவீச்சில் பந்துகள் ஸ்விங் ஆகி பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தியதைப் பார்த்த வில்லியம்ஸன், களத்தில் பெர்குஷனை பயன்படுத்தினா்.

அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. வங்கதேசத்தின் இரு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி, அந்த அணியின் பேட்டர்களை துல்லியமான பவுன்சர்களாலும், லென்த் பந்துவீச்சாலும் பெர்குஷன் திணறடித்தார்.

‘ஷார்ட் பால்’ முயற்சிக்கு நல்ல பலன்

ஆட்டநாயகன் விருது வென்ற பெர்குஷன் கூறுகையில், “நியூசிலாந்து ஆடுகளத்தைப் போல் இந்தியா இல்லை. ஆகையால், நாங்கள் நடுப்பகுதி ஓவர்களில் சிறிய மாற்றத்தை பந்துவீச்சில் செய்தோம்.

அதிகமான ஷார்ட் பந்துகளை வீசும் முயற்சிக்கு நன்கு பலன் கிடைத்திருக்கிறது. 3 ஆட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். பேட்டர்களுக்கு வரும் போட்டிகளில் வித்தியாசமான நெருக்கடிகளை வழங்க முயல்வோம்,” எனத் தெரிவித்தார்.

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பெர்குஷன் முக்கியத் துருப்புச்சீட்டு

பெர்குஷன் பந்துவீச்சு குறித்து டிரன்ட் போல்ட் கூறுகையில், “காயத்திலிருந்து குணமடைந்து, முழுவீச்சில் பெர்குஷன் பந்து வீசியதைப் பார்த்தபோதும், அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

துல்லியத்தன்மை மாறாமல் பவுன்ஸர் வீசுவது, 150 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதும், லென்த்தில் வீசுவதும் பெர்குஷனின் சிறப்பு, அபாரமான திறமை கொண்டவர். பெர்குஷன் எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர், அவரின் பந்துவீச்சு வரும் போட்டிகளில் முக்கியப் பங்காற்றும்,” எனத் தெரிவித்தார்.

காயத்திலிருந்து குணமடைந்த பெர்குஷன் மீண்டும் இயல்பான ஃபார்முக்கு வந்துவிட்டது நியூசிலாந்து அணிக்குப் பெரிய பலம். ஆனால் கேப்டன் வில்லியம்ஸன் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்பது அவரின் பேட்டிங்கிலேயே தெரிந்தது.

இதே உடல்நிலையுடன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடப் போகிறாரா அல்லது வில்லியம்ஸன் இளம் வீரர்களுக்கு வழிவிடுவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

சேப்பாக்கம் ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை

நியூசிலாந்து கேப்டடன் வில்லியம்ஸன் கூறுகையில், “எனக்கு ஏற்பட்ட காயம் விரைவில் குணமடைந்துவிடும் என நம்புகிறேன், முழங்கால் காயத்திலிருந்தும் மீண்டுவிட்டேன். எங்கள் அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடி வருகிறார்கள்.

கடினமான ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். தேவைப்படும் நேரத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பதும் சிறந்த அணிக்கு ஆரோக்கியமானது. சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து, நன்கு ஸ்விங் ஆனது.

மோசமான ஆடுகளம் அல்ல, இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் ஆடுகளம். பெர்குஷன் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. நடுப்பகுதி ஓவர்களில் ஆடுகளத்தின் தன்மை மாற்றமடைந்து, வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துழைத்தது,” எனத் தெரிவித்தார்.

கணிக்க முடியாத அணி

வங்கதேசம் அணியைப் பொறுத்தவரை தொடக்க காலத்தில் இருந்து இப்போது வரை கணிக்க முடியாத அணியாகவே இருந்து வருகிறது.

வங்கதேச அணி எந்தப் போட்டியில் வெல்லும், எந்த அணியை வீழ்த்தும் என்று கணிக்க முடியாது. அதேபோலத்தான் இந்த உலகக்கோப்பைப் போட்டியிலும் வங்கதேச அணியின் செயல்பாடு அமைந்திருக்கிறது.

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

டிஃபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோரா?

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் 250 ரன்கள் எடுத்தாலே அதை சேஸிங் செய்யவிடாமல் டிஃபெண்ட் செய்துவிடலாம். ஆனால், அதற்கு திறமையான பந்துவீச்சாளர்களும், கட்டுக்கோப்பான பந்துவீச்சும் அவசியம்.

இவையெல்லாம் வங்கதேசத்திடம் இருந்திருந்தால் நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து ஆட்டத்தை இன்னும் வெற்றிக்கு அருகே நகர்த்தியிருக்கலாம்.

வங்கதேச அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர்த்து வேறு எந்தப் பந்துவீச்சாளரும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் துல்லியத்தன்மையுடன் பந்துவீசி இருந்தால், ஆட்டத்தின் முடிவு சுவற்றின் மீதான பூனைபோல் இருந்திருக்கும்.

முதல் 15 ஓவர்கள் முக்கியம்

வங்கதேச வீரர் நஜ்முல் ஷான்டோ கூறுகையில், “இந்த ஆட்டத்தில் எதிர்பார்த்த பேட்டிங் எங்களிடம் இல்லை. முதல் 15 ஓவர்களில் அதிகமான ரன் சேர்க்கும் அளவுக்கு எங்கள் பேட்டிங் மாறுவது அவசியம்.

சென்னை ஆடுகளத்தில் புதிய பந்தில் நன்கு பவுன்ஸ் ஆனது, பேட்டர்களுக்கு நெருக்கடியாக இருந்தது. மற்ற வகையில் ஆடுகளம் சிறப்பாக இருக்கிறது. டாப் ஆர்டர் பேட்டர்கள் இன்னும் பொறுப்புடன் பேட் செய்ய வேண்டும்.

கடந்த போட்டியைவிட இந்த ஆட்டத்தில் எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து இதுபோல் பந்துவீசினால், வெற்றி பெறலாம்,” எனத் தெரிவி்த்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *