திருச்சி என்கவுன்டர்: கொம்பன் ஜெகன் என்கவுன்டர் ஏன்? சனமங்கலம் காட்டுக்குள் என்ன நடந்தது?

திருச்சி என்கவுன்டர்: கொம்பன் ஜெகன் என்கவுன்டர் ஏன்? சனமங்கலம் காட்டுக்குள் என்ன நடந்தது?

திருச்சி என்கவுன்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
படக்குறிப்பு,

குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற போது அரிவாளால் தாக்கியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் காட்டுப்பகுதியில் A+ குற்றவாளியான கொம்பன் ஜெகன் என்பவரை போலீசார் பிடிக்கச் சென்ற போது அரிவாளால் போலீசாரை தாக்கியதாகக் கூறி ஜெகனை என்கவுன்டர் செய்தனர்.

இந்த என்கவுன்டர் சம்பவம் திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் திட்டமிட்டு நன்னடத்தை பத்திரம் கொடுத்து திருந்தி வாழ்ந்து வந்த கொம்பன் ஜெகனை என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக் கொலை செய்திருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர்.

சனமங்கலம் காட்டுப்பகுதியில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி நடந்தது என்ன? என்கவுன்டரின் பின்னணியாகக் காவல்துறை கூறுவது என்ன? குறுகிய காலத்தில் 53 வழக்குகளை பெற்று ஜெகன் A+ குற்றவாளியாக மாறியது எப்படி?

திருச்சி என்கவுன்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
படக்குறிப்பு,

இனிமேல் குற்றம் செய்யமாட்டேன் என ஜெகன் உறுதி எடுத்திருந்ததாகத் தெரியவருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துகுமார் கொம்பன் ஜெகன் என்ற ஜெகதீஸ் (30) பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பி.இ. படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

முதன் முதலில் நண்பர்களுக்கு இடையேயான பிரச்னையில் முதல் ஆளாக நின்று அடிதடியில் இறங்கி இருக்கிறார். அதுவே பின்னாளில் அவர் குற்றப் பின்னணி உடையவராக மாறுவதற்கான ஆரம்பப் புள்ளியாக மாறி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கொள்ளை அடித்த வழக்குத் தொடர்பாக 2012 ஆம் ஆண்டு முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டல் வழக்கு என 2012 ஆம் ஆண்டு துவங்கி 2023 ஆம் ஆண்டுக்குள் திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி வரையில் மொத்தமாக 53 வழக்குகள் பதியப்பட்டு ஏ பிளஸ் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பிடித்தார்.

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2014 ஆம் ஆண்டு திருச்சி புத்தூர் சீனிவாச நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார்.

பின்னர், 2015 ஆம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட சக்திவேல் என்பவரின் கொலை வழக்கு, கீழச் சிந்தாமணியைச் சேர்ந்த சசி என்பவரை கொலை செய்த வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட கொம்பன் ஜெகன் கைதிகளை தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டார். இதனால் சென்னை பூந்தமல்லி கிளை சிறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

அங்கே பல குற்றப்பின்னணி கொண்ட நபர்களுடையக் கூடா நட்பு ஜெகனுக்கு கிடைக்க பின்னாளில் பெரிய குற்றவாளிகள் கூட்டத்தின் தலைவனாக மாறியதாக கூறப்படுகிறது.

தனக்குக் கீழே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற சட்ட விரோதச் செயல்களை செய்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் பல ஆண்டுகளை கழித்து இருக்கிறார்.

திருச்சி என்கவுன்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
படக்குறிப்பு,

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஜெகனை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

புது வாழ்வு துவங்க உறுதிமொழி

சிறையில் இருந்து வெளியே வந்த ஜெகன், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின் இனி எந்தக் குற்ற செயல்களிலும் ஈடுபடப் போவதில்லை எனவும் மனைவியுடன் சேர்ந்து வாழப் போகிறேன் எனவும் ஜெகன் நன்னடத்தை பத்திரத்தை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு எழுதி காவல்துறையினரிடம் வழங்கி இருக்கிறார்.

ஆனால், நேரடியாக எந்தச் சம்பவத்திலும் ஈடுபடாமல் தனது கூட்டாளிகளை வைத்தே கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் ஜெகனை கண்காணித்து வந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஜெகன் சுடப்பட்டது எப்படி?

சனமங்கலம் காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள், ஆடுகளை சிலர் துப்பாக்கி, அரிவாள் முனையில் வழிப்பறி செய்வதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்துக் குற்றவாளிகளை கண்காணித்து குற்றச் சம்வங்களை தடுக்க ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள் அடங்கியத் தனிப்படை காவல்துறையினர் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி பிற்பகலில் அந்த கொள்ளைக் கும்பல் அங்கே பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கே விரைந்தனர்.

அங்குக் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தது கொம்பன் ஜெகன் என்பது தெரிய வந்ததுடன் போலீசார் அவரை சரணடையும் படி கூறி இருக்கின்றனர்.

ஆனால், காவல்துறையினரின் கூறியதைக் கேட்காமல் தான் கையில் வைத்து இருந்த அரிவாளால் தனிப்படை உதவி ஆய்வாளர் வினோத்தின் இடது கையில் வெட்டி உள்ளார்.

இதனைக் கண்ட ஆய்வாளர் கருணாகரன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இரண்டு ரவுண்ட் ஜெகனை நோக்கித் துப்பாகியால் சுட்டுள்ளார்.

இதில் சுருண்டு விழுந்த ஜெகன், உதவி ஆய்வாளர் வினோத் ஆகிய இருவரும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே ஜெகன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ஜெகனின் உடல் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திருச்சி என்கவுன்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
படக்குறிப்பு,

காயமடைந்தே வினோத்தை மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

நாட்டு வெடி, பெட்ரோல் குண்டு தயாரிப்பா?

சனமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்த போது அங்கே நாட்டுத் துப்பாகி, நாட்டு வெடி குண்டு, பெட்ரோல் குண்டுகள் இருந்தது தெரிய வந்தது.

துப்பாகிச் சூடு நடந்த இடத்தை திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார், திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன் நேரில் ஆய்வு செய்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய டி.ஐ.ஜி. பகலவன், “ரவுடி ஜெகன் வெட்டியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் வினோத்-ஐ மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

போலீசார் தற்காப்புக்காக மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குற்றப்பட்டியலில் உள்ள ஜெகன் என்பவர் உயிரிழந்து இருக்கிறார்.

அவர் மீது 4 கொலை, 6 கொலை முயற்சி உள்ளிட்ட 53 வழக்குகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ளன. தற்போது 26 வழக்குகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

திருச்சி மண்டலத்தில் ரவுடியிசத்திற்கு இடமில்லை, குற்றச் சம்பவங்களில் ஈடுபட எண்ணம் இருந்தால் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் ” சிறுகானூர் காவல்நிலையத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜெகனை துன்புறுத்தல் செய்து காவல்துறை துப்பாகியால் சுட்டதாக உறவினர்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பானத் தகவல்.

இந்த வழக்கு தற்போது நீதிபதியின் விசாரணையில் உள்ளது. அதில் உண்மைகள் தெரியவரும்,” என்றார்.

திருச்சி என்கவுன்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
படக்குறிப்பு,

ரவுடியிசத்துக்கு எங்கும் இடமில்லை என டி.ஐ.ஜி. பகலவன் கூறுகிறார்.

10 நாட்களுக்கு முன்பே துப்பாக்கிச் சூடு நடக்க இருப்பது தெரியும் என்கிறார் ஜெகன் மனைவி ஆர்த்தி.

இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, “எனது கணவர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்தான் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், திருமணத்திற்கு பின் எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவர் மீது இருந்த அனைத்து வழக்குகளையும் ஒவ்வொன்றாக நீதிமன்றம் சென்று முடித்துக் கொண்டே இருந்தார்”, என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “காவல்துறை தொடர்ந்து அவருக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது. தீபாவளிக்கு முன்பே ஜெகன் மீது என்கவுன்டர் நடத்த இருப்பதாக எங்களுக்கு வழக்கறிஞர், காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்து. இருப்பினும் கணவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என நம்பினேன்.

காவல்துறை எனது கணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது என கேள்விப்பட்டதும் காலுக்குக் கீழே சுட்டுப் பிடித்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் இப்படி கொலை செய்வார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. காவல்துறை திட்டமிட்டு ஜெகன் தப்பிவிடக் கூடாது என நெஞ்சுக்கு மிக அருகில் வைத்து சுட்டுக் கொலை செய்து இருக்கிறது,” என்றார்.

மேலும், ஜெகனின் குடும்பத்தினரிடம் பேசி மனித உரிமைகள் அமைப்பை அணுகி காவல்துறை அத்துமீறலுக்கு நீதி கேட்கப் போவதாகவும் அவர் கூறினார்.

திருச்சி என்கவுன்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?
படக்குறிப்பு,

“நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய வழக்கு அரசியலுக்காக என்கவுன்டராக முடிந்து இருக்கிறது என்கிறார்,” மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹென்றி திஃபேன்.

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா?

“நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய வழக்கு அரசியலுக்காக என்கவுன்டராக முடிந்து இருக்கிறது என்கிறார்,” மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹென்றி திஃபேன்.

“திமுக ஆட்சியில் காவல்துறை செய்த 11வது என்கவுன்டர் சம்பவம் இது. இது போன்ற நடவடிக்கைகள் திமுக ஆட்சிக்கு நல்லது கிடையாது.

ஒவ்வொரு என்கவுன்டர் சம்பவமும் காவல்துறை தமிழ்நாடு முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படவில்லை என்பதையே கண்கூடாகக் காட்டுகிறது”, என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமூக நீதி பற்றித் தொடர்ந்து பேசி வரும் இந்த ஆட்சியாளர்கள் காவல்துறையை வைத்துக் கொண்டுச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்த என்கவுன்டர் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் சமூக விரோதி என்றால் என்கவுன்டர் செய்து கொலை செய்தவர்களும் சமூக விரோதிகளே.

குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்றம் வழியாக தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் போலீசாரின் பணி. இது மாதிரியான என்கவுன்டர் சம்பவத்தைக் காவல்துறை தொடர்ந்து செய்து வருவதை மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒற்றைக் குரலில் எதிர்க்கிறோம்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்,” என கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *