நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த சர்ச்சை – நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான நடைமுறை என்ன?

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த சர்ச்சை -
நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான நடைமுறை என்ன?

நாடாளுமன்றம் மக்களவை

பட மூலாதாரம், ANI

நாடாளுமன்றத்துக்குள் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்ததையடுத்து, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

நேற்று (புதன்கிழமை, டிசம்பர் 15) மக்களவை அரங்கினுள் கேள்வி நேரத்தின் போது இரண்டு நபர்கள் அவையில் குதித்தனர். இந்த நபர்கள் அவையில் வண்ணப் புகையைப் பரப்பினர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒருவரைச் சூழ்ந்து பிடித்தனர், பின்னர் இருவரும் பாதுகாப்புப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் மக்களவையின் நேரடி ஒளிபரப்பில், இந்த நபர்களில் ஒருவர் அவையின் இருக்கைகளின் இடையே ஓடுவதைக் காண முடிந்தது. இந்த சம்பவம் 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளில் நடந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்துக்குள் ஒருவர் அவ்வளவு எளிதாக உள்ளே நுழைந்து விட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

மக்களவை அரங்கின் உள்ளே சென்று அதன் நடவடிக்கைகளை பார்வையாளராக பார்க்க ஒருவருக்கு அனுமதி உண்டு. அதற்குச் சில நடைமுறைகள் உள்ளன.

நாடாளுமன்ற தாக்குதல்

பட மூலாதாரம், ANI

நாடாளுமன்றத்தில் நுழைய அனுமதி பெறுவது எப்படி?

மக்களவையின் முன்னாள் செயலாளர் பி.டி.ஆச்சாரி, பார்வையாளர் மாடத்திற்குள் நுழைவதற்கான அனுமதி அட்டையை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மூலமே பெற முடியும் என்று கூறுகிறார்.

அதாவது, உள்ளே செல்ல விரும்புபவர்கள், தங்கள் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து பரிந்துரை கடிதத்தை பெற்று, அதை வைத்துக் கொண்டு பார்வையாளர் மாடத்திற்குள் நுழைய அனுமதி சீட்டு பெறுவர்.

“இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதம் அவசியம்,” என்று ஆச்சாரி கூறுகிறார்.

பார்வையாளர்கள் அல்லது அவர்களது விருந்தினர்களுக்கு மாட அனுமதி பெற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அனுமதி வழங்கல் பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை நேரிலோ ஆன்லைன் மூலமோ சமர்ப்பிக்கலாம்.

விதிகளின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு நேரடியாகத் தெரிந்த ஒருவருக்கு தான் பார்வையாளர் அனுமதிச் சீட்டு பெற்றுத் தரலாம்.

எனினும், சில சந்தர்ப்பங்களில், உறுப்பினருக்கு நேரடியாகத் தெரிந்த ஒருவர் அறிமுகப்படுத்திய ஒருவருக்கும் அனுமதிச் சீட்டு பெற்று தரலாம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில், அனுமதி சீட்டுக் கோரி விண்ணப்பிக்கும் போது உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

நாடாளுமன்ற தாக்குதல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

நாடளுமன்றத்தில் நுழைந்தவர்கள் அவையில் வண்ணப் புகையைப் பரப்பினர்

பார்வையாளர்கள் எவ்வளவு நேரம் உள்ளே இருக்கலாம்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் கோரிக்கையின் பேரில் வழங்கப்பட்ட அட்டைகளை வைத்திருப்பவர்களால் பார்வையாளர் மாடத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் அல்லது விரும்பத்தகாத செயல் நிகழ்ந்தால் அதற்கு அவர்களே பொறுப்பாவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

இதுவரை வெளிவந்த தகவலின்படி, அவையில் குதித்த சாகர் ஷர்மா வைத்திருந்த நாடாளுமன்ற பார்வையாளர் அனுமதி அட்டை, மைசூர் பா.ஜ.க எம்.பி. பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையில் வழங்கப்பட்டது.

பார்வையாளர் அனுமதிச் சீட்டுகளை கொண்டு ஒரு முறை, நாடாளுமன்றத்துக்குள் நுழையலாம். அதில் பார்வையாளர் அதிகபட்சம் ஒரு மணிநேரம் மாடத்தில் அமரலாம்.

இந்த அட்டைகள் வேறு யாருக்கும் கொடுத்து மாற்றக் கொள்ளக்கூடியவை அல்ல. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்வையாளர் மாடத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

மக்களவையின் முன்னாள் செயலாளர் பி.டி.ஆச்சாரி, “யாருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறதோ, அவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்படும். அந்த நபரின் அனைத்து தகவல்களும் அனுமதி பெறும் விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட வேண்டும். அதில், நபரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், தந்தை அல்லது கணவரின் மின்னஞ்சல் முகவரி ஆகியவை கொடுக்க வேண்டும்,” என்றார் ஆச்சாரி.

நாடாளுமன்றத்திற்கு வரும் பார்வையாளர்கள் பல இடங்களில் உடல் ரீதியாக சோதனை செய்யப்படுகிறார்கள், மெட்டல் டிடெக்டர் வழியாகச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தாக்குதல்

பட மூலாதாரம், ANI

‘இதுபோன்ற ஒரு விஷயம் நடந்ததே இல்லை’

எவ்வாறாயினும், இந்த வழக்கில், இந்த இரண்டு நபர்கள் பற்றிய மேலும் தகவல்களைப் பெற, உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல் துறை குழுக்கள் குற்றவாளிகளின் வீட்டை அடைந்துள்ளன.

பார்வையாளர் மாடத்திலும் கூட, சாதாரண உடையில் பாதுகாப்புப் பணியாளர்கள் இருக்கை வரிசைகளின் இரு முனைகளிலும் அமர்ந்திருப்பதாக ஆச்சாரி கூறுகிறார்.

அவர், “மாடத்தில் அமர்ந்திருக்கும் நபர்களின் ஒவ்வொரு செயலையும் அவர்கள் கவனித்து வருகின்றனர். எந்தவொரு பார்வையாளரும் திடீரென முழக்கங்களை எழுப்ப முயன்றால், இந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக வந்து அவர்களைத் தடுத்துப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள்,” என்றார்.

புதன்கிழமை நடந்த சம்பவத்தை ‘கடுமையான பாதுகாப்புக் குறைபாடு’ என்று ஆச்சாரி கூறுகிறார்.

“இதுபோன்ற விஷயங்களை நான் கேள்விப்பட்டதே இல்லை. நான் 40 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இருக்கிறேன். ஐந்து ஆண்டுகள் செயலாளராக இருந்திருக்கிறேன். எந்தவொரு பார்வையாளரும் இப்படி பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்திற்குள் செல்ல முடியும் என்று நான் ஒருபோதும் பார்த்ததில்லை,” என்று அவர் கூறுகிறார்.

நாடாளுமன்ற மாளிகையில் பல நிலை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதால், புதன்கிழமை நடந்த சம்பவம் ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகளின் கண் முன்னாலேயே எப்படி ஒருவர் இது போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது.

உடல் சோதனையின் போது ஏதேனும் அலட்சியம் செய்யப்பட்டதா என்பதை அறிவதற்காக வெவ்வேறு பாதுகாப்பு சோதனை நிலையங்களின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *