
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன், நவம்பர் 15) நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது இந்திய அணி.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்த ஆட்டம் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் எந்தவிதமான பெரிய குறைபாடுகளும் இல்லாமல் அனைத்து அணிகளுக்கும் சவாலான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால்தான் 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.
நியூசிலாந்து அணியும் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொண்டு தொடக்கத்தில் அதிரடியாக பல வெற்றிகளைப் பெற்றது. ஆனால், சமவலிமை கொண்ட அணிகளுடன் மோதும்போது பல சறுக்கல்களைச் சந்தித்து, தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்த அரையிறுதி ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால் நியூசிலாந்து அணி இதுவரை பலமுறை அரையிறுதிச் சுற்றுக்குள் சென்றும் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இந்தியாவைப் பொறுத்தவரை கோப்பையை வெல்லக்கூடிய அனைத்து தகுதிகளும் இருந்தும், கடந்த 2 உலகக்கோப்பைத் தொடர்களாக அரையிறுதியுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 18 ரன்களில் தோல்வி அடைந்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
இதுவரை நடந்த இந்தியாவின் அரையிறுதி ஆட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த 1983 முதல் 2019 வரை 7 முறை உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதில் 1983, 2003, 2011 ஆகிய ஆண்டுகளில் மட்டும் அரையிறுதியில் இந்திய அணி வென்றது. 1983, 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் கோப்பையைப் பறிகொடுத்தது. 1987, 1996, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதி வரை சென்று இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்திய அணி தொடர்ந்து 4வது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதில் கடந்த 3 அரையிறுதிகளில் 2 முறை தோற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடமும், 2019இல் நியூசிலாந்திடமும் இந்திய அணி தோல்வி அடைந்தது, 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானை வென்று, இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணி இதுவரை 3 அரையிறுதியில் வென்றுள்ளது. இந்த 3 அரையிறுதியில் 2 வெற்றிகள் முதலில் பேட்டிங் செய்து கிடைத்தவை. இதில் 1983ஆம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி சேஸிங் செய்து வென்றது.
அதேபோல உள்நாட்டில் நடந்த 3 அரையிறுதியில் [கொல்கத்தா (1996), மும்பை (1987), மொஹாலி (2011)] இந்திய அணி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. 2011இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இந்திய அணி வென்றது.
அதிலும் மும்பை வான்கடே மைதானத்தில் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் இதுவரை ஒருமுறை மட்டுமே நடந்தது. 1987ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 35 ரன்களில் தோல்வி அடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து கடந்த 4 முறையிலும் இருமுறை இறுதிப்போட்டி வரை சென்றும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதால், இந்த முறை கடுமையான போராட்டத்தில் இறங்கும்.
எட்டு அரையிறுதிகளாகப் போராடும் நியூசிலாந்து
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை 8 முறை உலகக்கோப்பை அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. ஆனால் ஒருமுறைகூட கோப்பையை வெல்லவில்லை. 2019, 2015 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே இறுதிப்போட்டியில் நியூசிலாந்து விளையாடியது.
மற்ற வகையில் 1975, 1979, 1992, 1999, 2007, 2011, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது.
நியூசிலாந்து அணி தொடர்ந்து 5வது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 4 முறையிலும் இருமுறை இறுதிப்போட்டி வரை சென்றும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதால், இந்த முறை கோப்பைக்காக கடுமையான போராட்டத்தில் நியூசிலாந்து இறங்கும்.

பட மூலாதாரம், Getty Images
முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு காயம் ஏற்படாமல் தேவையான நேரத்தில் ஓய்வு அளித்து, பாதுகாத்து அழைத்து வந்தது இந்திய அணி.
இந்திய அணி எப்படித் தயாரானது?
இந்திய அணி கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதியில் தோல்வி அடைந்ததில் இருந்தே அடுத்த உலகக் கோப்பைக்கு மனரீதியாகத் தயாராகத் தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அணி 50 வீரர்களின் பல்வேறு வகையான கூட்டணிகளைப் பரிசோதனை செய்து, அணியைக் கட்டமைக்க முயன்றது.
உலகக்கோப்பைத் தொடருக்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்து வீரர்கள் தேர்விலும், அவர்களை பட்டியலிடுவதிலும் கவனம் செலுத்தியது. அந்த வகையில் 24 வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அதில் 15 பேரை பிளேயிங் லெவனுக்கு தேர்ந்தெடுத்தது இந்திய அணி.
இந்த 15 வீரர்களைத் தேர்ந்தெடுக்க மட்டும் கடந்த மார்ச் முதல் அக்டோபர் வரை 15 ஒருநாள் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. இவ்வாறு ப்ளேயிங் லெவன் அணியை உறுதி செய்ய கடந்த 4 ஆண்டுகளாகப் பல பரிசோதனைகளை இந்திய அணி முயன்றது.
இதில் சூர்யகுமார் யாதவை ஒருநாள் போட்டிக்குத் தயார் செய்தது. ஜஸ்பிரித் பும்ரா, கே.எல்.ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு முறையான பயிற்சிகள், உடற்தகுதிச் சோதனைகள் ஆகியவற்றை வைத்து, அவர்களை உலகக் கோப்பைத் தொடருக்கு உடல்தகுதி உள்ளவர்களாக மாற்றுவது ஆகியவற்றில் இந்திய அணி அதிக அக்கறை செலுத்தியது.
முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு காயம் ஏற்படாமல் தேவையான நேரத்தில் ஓய்வு அளித்து, பாதுகாத்து அழைத்து வந்தது இந்திய அணி. இதுபோன்று அக்கறையுடன் செயல்பட்டதால்தான் இன்று எந்த அணிக்கும் சவால் விடுக்கும் வகையிலான பிளேயிங் லெவன் அணியை உருவாக்க முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
இதுவரை ரவீந்திரா 565 ரன்கள் சேர்த்து முன்னணி ரன் குவிப்பாளராக இருந்து வருகிறார்.
நியூசிலாந்துக்கு ‘போனஸாக’ கிடைத்த ரவீந்திரா
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டரில் களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா உருவானது அந்த அணிக்கு போனஸ் போன்றதுதான். ஏனென்றால், ரவீந்திரா இதற்கு முன் பெரிதாக எந்த சர்வதேசப் போட்டியிலும் ஆடியது இல்லை, பெரிதாக ஸ்கோர் செய்ததும் இல்லை.
வில்லியம்ஸன் காயத்தில் இருந்தபோது அவருக்குப் பதிலாக ரவீந்திராவை களமிறக்கி நியூசிலாந்து பரிசோதித்து. ரவீந்திராவின் அற்புதமான ஆட்டம், சதம் அடித்த நேர்த்தி ஆகியவை அவருக்கு நியூசிலாந்து அணியில் நிரந்தரமான இடத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இதுவரை ரவீந்திரா 565 ரன்கள் சேர்த்து முன்னணி ரன் குவிப்பாளராக இருந்து வருகிறார். ரவீந்திரா இவ்வளவு சிறப்பாக ஆடுவது நியூசிலாந்துக்கு கிடைத்த போனஸ்தான்.
கிளென் பிலிப்ஸ் இதுவரை நடுப்பகுதியில் நியூசிலாந்து அணிக்குப் பெரிய தூணாக இருந்து வருகிறார். சில நேரங்களில் பந்துவீச்சிலும் கலக்கி, ஆல்ரவுண்டராக பிலிப்ஸ் ஒளிர்கிறார். பிலிப்ஸ் உலகக் கோப்பையில் இதுவரை 418 ரன்களை நடுவரிசையில் இறங்கி குவித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதேபோல டேவான் கான்வே 359 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த 3 பேரும் நியூசிலாந்து அணிக்கு மிகப் பெரிய தூண்களாக இருந்து வருகிறார்கள்.
கேப்டன் வில்லியம்ஸன், டேரல் மிட்ஷெல், சாப்மேன், டாம் லாதம், சான்ட்னர் வரை பேட்டர்கள் இருப்பது நியூசிலாந்து அணிக்குப் பெரிய பலமாகும். ஏறக்குறைய 8 முதல் 9 வீரர்கள் வரை ஓரளவுக்கு பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர்களாக நியூசிலாந்து அணியில் இருப்பது அந்த அணிக்கு வலுசேர்க்கிறது.
பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர் இந்திய ஆடுகளங்களில் கலக்கி வருகிறார். ஐ.பி.எல் அனுபவம் அனைத்தையும் இறக்கி பந்துவீசி வரும் சான்ட்னர் இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் ஐ.பி.எல் போட்டிகளில் ஏராளமாகப் பங்கேற்றுள்ளார். அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது, மும்பை வான்கடே மைதானத்தில் பலமுறை பந்துவீசியுள்ளது அவருக்கு மிகப்பெரிய அனுபமாக இருக்கும்.
இதுவரை உலகக்கோப்பையில் போல்ட் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டிம் சவுதி முழு உடல்தகுதியுடன் திரும்பியிருப்பது நியூசிலாந்து பந்துவீச்சுக்கு வலு சேர்க்கிறது. காயத்திலிருந்து ஹென்றி மீளாதது அந்த அணிக்கு சற்று கவலையளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணங்களில் நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றியதுதான்.
நியூசிலாந்தின் பலவீனங்கள் என்ன?
நியூசிலாந்து அணியின் பலவீனம் என்பது அதன் சமநிலையற்ற தன்மை. ஹென்றியின் காயத்தால் 5வது பந்துவீச்சாளர் இல்லாமல் சிரமப்படுகிறது. கேன் வில்லியம்ஸன் காயத்திலிருந்து திரும்பி வந்து மீண்டும் காயத்தால் பாதிக்கப்பட்டு உடற்தகுதியின்றி சிரமப்பட்டு வருகிறார். டிம் சவுதியின் உடற்தகுதியும் முழுதும் சரியாக இல்லை.
பேட்டிங்கை பொறுத்தவரை ரச்சின் ரவீந்திரா, கான்வே இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தால் நியூசிலாந்து ரன் குவிப்பு சரிந்துவிடும். இருவரின் பேட்டிங்கும், ரன் சேர்ப்பும்தான் நியூசிலாந்துக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. மற்ற வீரர்களின் பங்களிப்பு சீராக இல்லை என்பது பெரிய குறை.
குறிப்பாக வான்கடே மைதானம் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்து அதன்பிறகுதான் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும். நடுவரிசையில் களமிறங்கும் டேரல் மிட்ஷெல், பிலிப்ஸ் மட்டுமே முழு சுமையையும் சுமப்பது கடினம். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றியதுதான்.
நியூசிலாந்தின் வாய்ப்புகள் என்ன?
தொடர்ந்து 5வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறுவது, 2வது முறை இறுதிப்போட்டி வரை சென்ற அனுபவம் நியூசிலாந்துக்கு கைகொடுக்கும்.
அதனால், உலகக்கோப்பையை வெல்ல இது நல்ல தருணமாக நியூசிலாந்துக்கு அமையும். இந்தியாவுக்கு எதிரான ஐசிசி நாக்-அவுட் போட்டிகள் அனைத்திலும் நியூசிலாந்தின் ஆதிக்கம் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலம். அந்த மனபலத்துடன் இன்று களமிறங்கி வெற்றி பெற முயலும்.
இந்திய அணியின் பலம்
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி சமநிலை கொண்ட அணியாக உருவெடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா டாப் ஃபார்மில் இருக்கிறார். தொடர்ந்து 9 ஆட்டங்களில் இந்திய அணி வென்று சவாலாக இருந்து வருகிறது. விராட் கோலி (594), ரோஹித் சர்மா (503), ஸ்ரேயாஸ் (421), கேஎல் ராகுல் (347) என ரன்களை குவித்து வலுவாக இருக்கிறார்கள்.
ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மட்டுமே இதுவரை பெரிதாக பங்களிப்பு ஏதும் செய்யவில்லை. மும்பை வான்கடே மைதானம் அவருக்குச் சொந்த மைதானம் என்பதால் அவரிடம் இருந்து பெரிய பங்களிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பந்துவீச்சில் பும்ரா, ஷமி, சிராஜ் கூட்டணி எதிரணிகளை ஓடவிடுகிறார்கள். பும்ரா (17), ரவிந்திர ஜடேஜா (16), குல்தீப் யாதவ் (14), சிராஜ் (12) என அனைவரும் விக்கெட்டுகளை கைப்பற்றி ஃபார்மில் இருக்கிறார்கள். அதிலும் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாகும்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து 9 போட்டிகளில் வென்று இந்திய அணி சிறப்பான ஃபார்மில் இருக்கிறது
இந்தியா எங்கு சறுக்குகிறது?
ரோஹித் சர்மாவின் அதிரடித் தொடக்கம், கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ், ராகுலின் ஆட்டம் ஆகியவை பக்கபலமாக இருந்தாலும், கீழ்வரிசையில் பேட்டிங் பலவீனமாகவே இருக்கிறது.
இதுவரை சூர்யகுமார், ஜடேஜா பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. சூர்யகுமார் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஜடேஜா கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் அளித்த பங்களிப்பை மறக்க முடியாது. அதுபோன்ற பங்களிப்பை இந்த ஆட்டத்திலும் தருவது அவசியம்.
பந்துவீச்சில் 5 பேர் மட்டுமே உள்ளனர், 6வது பந்துவீச்சாளரைத் தேடும் முயற்சியில் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பல புதிய முயற்சிகளைச் செய்தார். ஆனால், அது பெரிதாக எடுபடவில்லை.
இந்த சென்டிமென்ட் இந்தியாவுக்கு கைகொடுக்குமா?
தொடர்ந்து 9 போட்டிகளில் வென்று இந்திய அணி சிறப்பான ஃபார்மில் இருக்கிறது. உலகக்கோப்பையை வெல்ல இது சரியான வாய்ப்பு.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கடந்த 3 உலகக் கோப்பையை நடத்திய நாடுகள்தான் உலகக்கோப்பையை வென்றுள்ளன. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா இலங்கையுடன் சேர்ந்து நடத்தியது. அதில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
அதேபோல், 2015 உலக்கோப்பையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நடத்தியபோது, ஆஸ்திரேலியா பட்டம் வென்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து நடத்தி கோப்பையைக் கைப்பற்றியது. ஆதலால் இந்த முறை இந்தியா மட்டுமே உலகக்கோப்பையை நடத்துவதால் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என ‘சென்டிமென்ட்’டாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள்

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி நாக்-அவுட் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி சொதப்பியுள்ளது ஒரு பெரிய பலவீனம். இதுவே ஒரு அச்சுறுத்தல்.
உலகக்கோப்பைத் தொடரில் 2003ஆம் ஆண்டுக்குப் பின் இந்த முறைதான் நியூசிலாந்து அணியை இந்திய அணி தோற்கடித்தது.
நியூசிலாந்துக்கு எதிராக முக்கிய ஆட்டங்களில் கடந்த காலங்களில் இந்திய அணி கோட்டைவிட்டுள்ளது. இது அணிக்கு மனரீதியான அழுத்தமாக அமையும்.
ரோஹித், கோலியின் கடந்த கால ஆட்டம்
உலகக்கோப்பை அரையிறுதியைப் பொறுத்தவரை இப்போது அணியில் உள்ள எந்த வீரர்களும் பெரிதாக கடந்த காலங்களில் பங்களிப்பு செய்யவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா 2015 முதல் 2019 வரை உலகக் கோப்பையில் ஆடினாலும், 2 அரையிறுதியில் விளையாடி 35 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
விராட் கோலி 2011 முதல் 2019 வரை உலகக்கோப்பையில் விளையாடி 3 அரையிறுதியில் பங்கேற்றும் 11 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா 2015, 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் சேர்த்து 93 ரன்கள் சேர்த்துள்ளனர். மற்ற வீரர்கள் பெரிதாக எந்த ரன்களும் ஸ்கோர் செய்யவில்லை. அரையிறுதியில் முக்கிய வீரர்கள் கோலி, ரோஹித் இருவரும் கடந்த காலங்களில் சொதப்பியிருப்பது பெரிய அச்சத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வான்கடே ஆடுகளத்தில் 2வது இன்னிங்ஸில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களின் பந்துகள் அதிகம் ஸ்விங் ஆவதையும், சீமிங் ஆவதையும் பார்க்கலாம்.
வான்கடே மைதானம் யாருக்கு சாதகம்?
மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை நடந்த ஆட்டங்களில் எல்லாம் அதிகமான ஸ்கோர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையாடி, தென் ஆப்பிரிக்க அணி , இந்திய அணி ஆகியவை 350 ரன்களுக்கு மேல் குவித்துள்ளன. ஆஸ்திரேலியா 292 ரன்களை குவித்தது.
வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே கடந்த காலங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு இதுவரை 27 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் 14 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. 13 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகள் வென்றுள்ளன. கடந்த 10 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 5 வெற்றிகளும், சேஸிங் செய்த அணிகள் 5 வெற்றிகளும் பெற்றுள்ளன.
டாஸ் முக்கிய பங்கு வகிக்குமா?
இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரியாக 261 ரன்களை சேர்க்க முடியும். வெற்றிக்குரிய முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 308 ரன்கள்.
இங்கு அதிகபட்சமாக 438 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன, 292 ரன்கள் அதிகபட்சமாக சேஸிங் செய்யப்பட்டுள்ளன.
இந்த மைதானத்தில் டாஸ் தோல்வி அடைந்த அணிகள்தான் 15 போட்டிகளில் வென்றுள்ளன. டாஸ் வென்ற அணிகள் 12 முறை வென்றுள்ளன.
இதே நிலை கடந்த 10 போட்டிகளில் தொடர்ந்துள்ளது. அதாவது கடந்த 10 போட்டிகளில் டாஸ் தோற்ற அணிகள்தான் 6 வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆதலால் டாஸ் வென்ற அணியின் கேப்டன் 17 முறை பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளார், 10 முறை மட்டுமே பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
யாருக்கு வாய்ப்புகள் அதிகம்?

பட மூலாதாரம், Getty Images
வான்கடே ஆடுகளம் இந்த உலகக்கோப்பையைப் பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக இருந்து வருகிறது. இதுவரை வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், சுழற்பந்துவீச்சாளர்கள் 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும் பந்துவீச்சாளர்களின் பந்துகள் அதிகம் ஸ்விங் ஆவதையும், சீமிங் ஆவதையும் பார்க்கலாம். கடந்த 4 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகள் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 17 விக்கெட்டுகளை இழந்துள்ளன.
ஆனால், முதலில் பேட் செய்த அணிகள் 5 விக்கெட்டுகளை மட்டுமே பவர்ப்ளேயில் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்காது என்று கேப்டன் ரோஹித் சர்மா நேற்று பேட்டியில் கூறியிருந்தாலும், கடந்த கால புள்ளிவிவரங்கள் அதற்கு எதிராக உள்ளன.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்