டெல்டாவில் கருகும் பயிர்கள்: காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வழியே இல்லையா?

டெல்டாவில் கருகும் பயிர்கள்: காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வழியே இல்லையா?

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளதால் தமிழ்நாடு அரசு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு அறிவித்துள்ளது.

காவிரி பிரச்னை தொடரும் நிலையில், கருகும் குறுவைப் பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டாவில் நெற்பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களாகவே அச்சம் நிலவியது. தமிழ்நாட்டின் கோரிக்கை பல்வேறு நிலைகளில் முன்வைக்கப்பட்ட போதிலும் கர்நாடகாவிடமிருந்து போதுமான தண்ணீரை பெற முடியவில்லை.

இதனால் பயந்தபடியே பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இது, கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கவே கிடைக்காதா என்ற கேள்வியை விவசாயிகள் மத்தியில் எழுப்பியுள்ளது.

காவிரி நீரை பெறுவதற்கு, தமிழகத்தின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

இந்த ஆண்டு நடந்தது என்ன?

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீரை நம்பி சுமார் ஆறு லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் பயிரிடப்பட்டன.

ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்தது. தேவையான நீர் வந்து சேரவில்லை.

“மேட்டூர் அணையில் இருந்து போதுமான தண்ணீர் விநியோகம் செய்ய முடியாமல் போனதால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 40,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாக” தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதி நீர் கூட வரவில்லை

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 93.47 டி.எம்.சி. திங்கட்கிழமை நிலவரப்படி 9.025 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,004 கன அடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 5,252 கன அடியாகவும் உள்ளது.

தமிழ்நாட்டிற்கு 2023, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கர்நாடகாவில் இருந்து 45 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவு 123 டி.எம்.சி. எனவே நிர்ணயிக்கப்பட்ட நீரில் பாதிகூட கிடைக்காததுதான் இப்போதைய நெருக்கடிக்கு அடிப்படையான காரணம்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் (CWMA) காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவும் (CWRC) இந்தப் பிரச்னையில் தலையீடு செய்தன. அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதத்தில் 13.58 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு நாளும் 3,000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது. ஆனால் அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் தண்ணீர் திறக்க வேண்டியதை உறுதி செய்தது. காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 12 ஆம் தேதி நடக்கவுள்ளது.

தமிழ்நாடும், கர்நாடகமும் இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, எவர் சார்பாகவும் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளைக் கொண்டு, இரு அண்டை மாநிலங்களுக்கும் இடையே நீர் பகிர்வைக் கையாள வேண்டுமென்றே உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. இருப்பினும் இப்போது குறுவை சாகுபடி கருகியுள்ள நிலையில் நம் முன் வேறு வாய்ப்புகள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர் குறுவை பயிர்களைக் காப்பாற்ற போதிய அளவு கிடைக்கவில்லை.

உச்சநீதிமன்றம்தான் ஒரே வழியா?

கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னை, ஏற்கெனவே பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு உட்பட்டுள்ளது. இரு மாநிலங்களும் காவிரி நதிநீரை பாசனத்திற்கும் குடிநீருக்கும் சார்ந்துள்ளன.

காவிரி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மாநிலமான கர்நாடகா, ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய அட்டவணை நடைமுறையில் உள்ளது. அந்த அட்டவணையின்படி, கர்நாடகா தமிழ்நாட்டுக்கு பிலிகுண்டுலுவில் ஒரு “சராசரி” நீர் ஆண்டில் (ஜூன் முதல் மே வரை) மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

இதில் 123.14 டிஎம்சி தண்ணீர் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் திறக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட மாதங்கள் தென் மேற்குப் பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவாக மழைப்பொழிவு இருந்தால், இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் பிரச்னை வெடிக்கிறது. எனவே இந்தப் பிரச்னையில் இயற்கை‌ சூழலுக்கும்‌ பங்கு உள்ளது.

உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர இந்த விவகாரத்துக்கு வேறு தீர்வுகள் கிடையாது என ஒய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கூறுகிறார்.

“கடந்த 1924இல் இப்போதைய கர்நாடகா மைசூர் மாகாணாமாக மகாராஜா கீழும், தமிழ்நாடு சென்னை மாகாணமாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழும் இருந்தது. காவிரியின் குறுக்கே கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்படத் தொடங்கியதால், அப்போது போடப்பட்ட 50 ஆண்டு கால ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாட்டுக்கு கர்நாடகா காவிரியிலிருந்து சுமார் 450 டி.எம்.சி நீர் தர வேண்டும்.

இந்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு காலாவதியானது. அதன் பின்னரே பிரச்னை தொடங்கியது. பிரிட்டிஷ் அரசும் மன்னரும் அமர்ந்து பேசி முடிவெடுக்க முடிந்த விவகாரத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு இரு மாநிலங்களால் தீர்வு காண முடியவில்லை.

ஏனென்றால், பிரச்னை இரு மாநிலங்களிலும் அரசியல் பிரச்னையாக உருவெடுத்துவிட்டது. தண்ணீரை குறைத்துக் கேட்டால் தமிழ்நாட்டிலும், அதிகமாகக் கொடுத்தால் கர்நாடகாவிலும் எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. எனவே உச்சநீதிமன்றத்தை நாடுவதே இதற்கு தீர்வாகும்,” என்கிறார்.

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே நிலவும் பிரச்னையை உச்சநீதிமன்றமே தீர்த்து வைக்க முடியும் என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார்.

கடந்த 1983ஆம் ஆண்டு, காவிரி நீர் தாவாவை தீர்ப்பதற்காக தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் 1990ஆம் ஆண்டு காவிரி நீர் தாவா தீர்ப்பாயத்தை அமைத்தது. 2007ஆம் ஆண்டு தீர்ப்பாயம் இறுதி உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவு காவிரி நதி நீரில் 41.92% தமிழ்நாட்டிற்கும், 33.24% கர்நாடகத்திற்கும், 7.12% கேரளாவிற்கும், 4.72% புதுச்சேரிக்கும் ஒதுக்கியது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்தன. 2018ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பாயத்தின் உத்தரவை சற்று மாற்றியமைத்தது, ஆனால் நான்கு மாநிலங்களுக்கும் இடையே நீர் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது.

1924இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டுக்கு 450 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும், 2007இல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி192 டி.எம்.சி வழங்க வேண்டும் என்றே உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் 2018இல் உச்சநீதிமன்றம் சென்றபோது இந்த நீரின் அளவு 177.25 டி.எம்.சி ஆக மேலும் குறைந்தது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவை இருந்தாலும் தற்போது காவிரி விவகாரத்தில் புதிய கோணத்தில் பிரச்னை தலை தூக்குவதாகக் கூறுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.

“நடைமுறையில் காவிரியில் ஓடும் உபரிநீரை வழங்கும் வடிகாலாகவே தமிழ்நாட்டை கர்நாடகா பார்க்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் கூட தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறக்க மறுப்பதுடன், காவிரி நீர் பற்றாக்குறையாக உள்ளது என்ற வாதத்தை கர்நாடகம் வைத்து வருகிறது.

எனவே, காவிரி விவகாரத்தில் அடுத்ததாக தற்போது எவ்வளவு நீர் இருந்தால் பற்றாக்குறை எனப்படும் என்ற வரையறை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் நீதிமன்றத்தை நாடினாலும் தீர்வு கிடைக்குமா என்பதற்குப் பதில் இல்லை.

வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நதி நீரை சுமூகமாக பங்கீடு செய்துகொள்ள இந்தியாவால் முடிகிறது. அதில் விதிகள் மீறப்பட்டால் அது சர்வதேச பிரச்னையாகும், ஐக்கிய நாடுகள் வரை செல்ல முடியும். ஆனால், இந்தியாவின் அங்கங்களாக அமைந்த இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை வரும்போது. அதற்கு நீதிமன்றம் செல்வதுதான் ஒரே வழி,” என்கிறார் அரி பரந்தாமன்.

இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம், PR PANDIAN

படக்குறிப்பு,

குறுவை பயிர்களைக் காப்பீடு செய்யாமல் தமிழக அரசு தவறி விட்டது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி ஆர் பாண்டியன் கூறுகிறார்.

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழப்பீட்டை உயர்த்தி வழங்குவது அவசியம் என வலியுறுத்துகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி ஆர் பாண்டியன்.

“இப்போது தமிழ்நாடு அரசு தருவதாகச் சொல்வது மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை வழங்கும் இடுபொருள் இழப்பீடு தொகை. மத்திய அரசு கொடுக்கக்கூடிய 13,500 ரூபாயுடன் சேர்த்து மாநில அரசு 6500 ரூபாயென மொத்தம் 20 ஆயிரம் ரூபாயை முந்தைய அதிமுக அரசு வழங்கியது. அதையே திமுக அரசும் செய்ய வேண்டும்,” என்கிறார்.

மேலும் இந்த பிரச்னையில் காப்பீட்டுக்கும் முக்கியமான பங்கு உள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் காப்பீடு செய்ய மறுத்ததன் காரணமாக விவசாயிகளுக்கு இழப்பீடு குறைந்துள்ளது என்கிறார் பி ஆர் பாண்டியன்.

“குறுவை பயிர்களைக் காப்பீடு செய்ய மத்திய அரசு கேட்டபோது, அதைக் கைவிட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு கூறிவிட்டது. காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை இழப்பீடு பெற முடியும்.

பாதிக்கப்பட்ட பயிர்களும் குறைவாகக் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் பாதிப்புக்குள்ளானதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு 1.75 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன,” என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் காவிரியிலிருந்து நீர் கிடைப்பது சவாலான காரியமாகவே உள்ள நிலையில், இழப்பீட்டை உயர்த்துவது மிக முக்கியமான பிரச்னையே. கடந்த 2017ஆம் ஆண்டு மேட்டூர் அணையிலும் நீர் இல்லை, பருவமழையும் பொய்த்து விட்டது என்ற நெருக்கடி உருவானபோது 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். காலநிலை மாற்றத்தால் பருவமழை கொட்டித் தீர்ப்பதும், பொய்த்துப் போவதும் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன.

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சாகுபடி செய்தவற்றில் டெல்டா மாவட்டங்களில் 40% பயிர்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளன.

மாற்றுப் பயிர்களுக்கு மாறுவதா?

விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் அது எளிதானதல்ல எனவும் சொல்கிறார் திருவாரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் விவசாயியுமான தங்க ஜெயராமன்.

“தானிய வகைகளைவிட நெற்பயிர்களுக்கு அதிக நீர் தேவை. எனினும் மாற்றுப் பயிர்களை விளைவிக்க தண்ணீர் மட்டுமே போதுமானது இல்லை. டெல்டா மாவட்டங்களில் உள்ள மண் நெல் பயிர்கள் வளர்க்கவே உகந்ததாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சாவூரில் களிமண் போன்ற மண் மற்றும் சில இடங்களில் வண்டல் மண் இருக்கும். இவற்றில் நெற்பயிர்களையே விளைவிக்க முடியும்.

உளுந்து, பாசி பயிறு போன்ற தானியங்களும், பருத்தியும் 60-70 நாட்களில் விளையும் மாற்றுப் பயிர்களாக கோடைக் காலத்தில் மட்டும் பயிரிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் மேற்கு தஞ்சாவூர் பகுதிகளிலேயே பயிரிடப்படுகின்றன. ஜனவரி மாத பனிக்காலத்தின் போது பயிரிடப்படும் இந்தப் பயிர்களுக்கு தண்ணீர் எதிரி.

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம், JAYARAMAN

படக்குறிப்பு,

மாற்றுப் பயிர்களுக்கு மாறுவது விவசாயிகளுக்கு எளிதல்ல என்கிறார் பேராசிரியர் தங்க ஜெயராமன்.

ஆனால் இப்போது இவை குறைந்து வருகிறது. நெற்பயிர்கள் அறுவடை செய்வதற்கு, சில நாட்கள் முன்பாக மார்கழி மாதத்தில், இந்த பயிர்கள் தெளிக்கப்படும்.

அதோடு, நெற்பயிர்களை அறுவடை செய்ய, தற்போது பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அதில் மாற்றுப் பயிர்கள் நாசமாகிவிடுகின்றன. மேலும் இவை இரண்டு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தால்கூட தாங்காது, அழுகி விடும்.

திருவாரூர், தஞ்சாவூரில் நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகளில் கோடைக் காலத்தில் பருத்தி பயிரிடப்படுகிறது. புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் வேர்கடலை பயிர் செய்யப்படுகிறது,” என்கிறார்.

காவிரி பிரச்னை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில் மேற்சொன்ன அனைத்து தீர்வுகளையுமே சரியான விகிதத்தில் பரிசீலிக்க வேண்டும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *