முக்தா சால்வே: பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 167 ஆண்டுக்கு முன்பே குரல் கொடுத்த முதல் தலித் பெண் எழுத்தாளர்

முக்தா சால்வே: பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 167 ஆண்டுக்கு முன்பே குரல் கொடுத்த முதல் தலித் பெண் எழுத்தாளர்

முதல் பெண் தலித் எழுத்தாளர்

பட மூலாதாரம், PHULE MEMORIAL

படக்குறிப்பு,

மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த முக்தா சால்வே, முதல் தலித் பெண் எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.

முக்தா சால்வே மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, நாட்டின் முதல் தலித் பெண் எழுத்தாளராகக் கருதப்படுகிறார். முக்தா சால்வே தனது 14 வயதில் எழுதிய ஒரு கட்டுரையின் அடிப்படையில் அவரது அடையாளம் உருவாக்கப்பட்டது.

இச்சம்பவம் 167 ஆண்டுகளுக்கு முன்பு 1855ல் நடந்தது. உண்மையில், ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகிய இருவரும் புனேவில் பள்ளியைத் தொடங்கிய போது, ​​அந்தப் பள்ளியில் முக்தா ஒரு மாணவியாகச் சேர்ந்தார்

அந்தப் பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருந்த போது, ​​முக்தா தனது குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ள வேண்டிய துன்பங்களைப் பற்றி புரிந்துகொண்டு, தலித்துகளின் பிரச்னைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.

இந்த சிறு கட்டுரை ‘மாங் மஹாராச்சேயா துக்விசை’ அல்லது ‘மாங் மற்றும் மஹரின் துன்பம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில், முக்தா மஹர்களின் கோரிக்கைகள் மற்றும் துன்பங்களை முன்வைப்பது மட்டுமல்லாமல், அதன் சமூக காரணங்களையும் விவாதித்து, சமூக சமத்துவமின்மையின் மீது கூர்மையான தாக்குதலை நடத்துகிறார்.

அக்காலத்திலும் முக்தாவின் இக்கட்டுரை பெரிதும் பாராட்டப்பட்டதுடன் இன்றும் முக்தாவின் கட்டுரை தலித் பெண் இலக்கியத்தின் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.

முக்தா சால்வே 1840 இல் புனேவில் பிறந்தார். சமூகத்தில் சாதி ஏற்றத்தாழ்வு உச்சத்தில் இருந்த காலகட்டம், உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்திய காலம் அது. அக்காலத்தில் தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட ‘மாங்’ சாதியில் பிறந்தவர் முக்தா.

முதல் பெண் தலித் எழுத்தாளர்

பட மூலாதாரம், PHULE MEMORIAL

படக்குறிப்பு,

ஜோதிபா, சாவித்ரிபாய் பூலே தொடங்கிய பள்ளியின் மாணவி முக்தா

அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சமயக் கல்வி பிராமண ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தது. பெண்களோ, ‘தீண்டத்தகாதவர்களோ’ சமயக் கல்வியைப் படிக்க அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும், கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் சில பள்ளிகள் இந்துப் பெண்களுக்காக திறக்கப்பட்டன. ஆனால், இதுவரை கல்வியில் இருந்து வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமுதாய மக்களுக்கு இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், முக்தா 11 வயதில் பள்ளிக்குச் சென்றார்.

உண்மையில், ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புனேவில் பெண்களுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார்கள். பெண்களுக்கென தனிப் பள்ளியைத் திறந்த முதல் இந்தியர்கள் பூலே தம்பதிகள்.

இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் சேர்க்கப்பட்டனர். அவர் 1848 இல் புனேவின் பிடே வாடாவில் முதல் பள்ளியைத் திறந்து, அனைத்து சமூக எதிர்ப்பையும் மீறி அதைத் தொடர்ந்தார். ஆனால் ஒரு பள்ளி போதாது என்பதை பூலே தம்பதியினர் உணர்ந்தனர். கல்வியறிவு இழந்தவர்களை பள்ளிக்கு அனுப்பும் தேவை பல பள்ளிகளுக்கு இருந்தது.

பூலே தம்பதியினர் புனேவில் வெவ்வேறு இடங்களில் பள்ளிகளைத் திறக்க இதுவே காரணம். 1851-52ல் சிப்லுங்கர் வாடாவில் மற்றொரு பள்ளி தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் வேடலில் மூன்றாவது பள்ளி தொடங்கப்பட்டது.

ஜோதிபா-சாவித்ரிபாயின் கல்வியை பரப்பும் பணியை ஆதரித்தவர்கள் பல்வேறு இடங்களில் பள்ளிகளை அமைக்க அவருக்கு உதவினார்கள். அவர்களில் ஒருவர் லஹுஜி சால்வே. கிராந்திகுரு உஸ்தாத் என்று அழைக்கப்படும் லஹுஜி சால்வே, வேட்டலில் தற்காப்புக் கலைப் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார்.

லஹுஜி சால்வேயின் பேத்தி முக்தா சால்வே ஆவார். இவர் பூலே தம்பதியரின் மூன்றாவது பள்ளியின் மாணவி ஆவார். முக்தா மஹர் மற்றும் மாங் சமூகத்தில் இருந்து பள்ளிக்குச் சென்ற முதல் பெண். 11 வயதில் படிப்பைத் தொடங்கினார்.

‘மஹர் மற்றும் மாங் சமூகங்களின் துன்பங்கள்’ என்ற பிரச்சினையில் அவரது புகழ்பெற்ற கட்டுரை 1855 இல் வெளியிடப்பட்டது. அவர் மூன்று வருடங்கள் மட்டுமே பள்ளியில் படித்தார். அவருடைய பதினான்காவது வயதில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் காரணமாக அவர் பெயர் வரலாற்றில் அழியாத இடம் பிடித்தது. ஒரு தலித் பெண்ணால் எழுதப்பட்ட முதல் புத்தகம் மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் இன்றும் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.

முதல் பெண் தலித் எழுத்தாளர்

பட மூலாதாரம், PHULE MEMORIAL

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து ‘நாம் மதமற்றவர்கள்’ என்று முழக்கம்

அவரது கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் முக்தாவின் காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதிகளின் சமூக நிலையை வெளிப்படுத்துகிறது.

இந்த கட்டுரையில் அவர் கடவுளைப் பற்றிப் பேசும் போது, ‘வலிகள், கோரிக்கைகள், துன்பங்கள்’ என்பன பற்றி பேசுகிறார். உண்மையில், இந்த சமூகங்கள் மத அமைப்புக்கு வெளியே ஏன் கருதப்படுகின்றன என்று அவர் கடவுளிடம் முறையிடுகிறார்.

மத அமைப்பு ஒன்றைப் பொறுப்பேற்று நடத்தும் பிராமண சமூகத்தை நயவஞ்சகர்களாகக் கருதும் அவர், “வேதங்கள் நம்முடையது என்றும், அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் பிராமணர்கள் கூறுகிறார்கள். எனவே எங்களிடம் எந்த மதப் புத்தகமும் இல்லை என்பது தெளிவாகிறது,” என்கிறார்.

“வேதங்கள் பிராமணர்களுக்கானது என்றால், வேதத்தின்படி நடந்துகொள்வது பிராமணர்களின் தர்மம். மத புத்தகங்களைப் பார்ப்பதற்கு சுதந்திரம் இல்லை என்றால், நாம் மதமற்றவர்கள் என்பது தெளிவாகிறது, இல்லையா?”

இது தவிர, தன் மதத்தைப் பற்றி கடவுளிடம் கேள்விகள் கேட்கிறார்.

இது பற்றி அவர் அக்கட்டுரையில் எழுதும் போது, “கடவுளே, நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? எந்த மதத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்? அதை நாங்கள் அனைவரும் சமமாக அனுபவிக்கும் வகையில் எங்களுக்குச் சொல்லுங்கள். ஆனால் ஒரு சமூகம் மட்டுமே அனுபவிக்கும் ஒரு மதம், பின்னர் இதுபோன்ற மற்ற மதங்கள் பூமியில் இருந்து அழிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட மதத்தைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் மனதில் வரக்கூடாது,” என எழுதுகிறார்.

கட்டுரையின் கூர்மையான மொழி

பிறப்பின் அடிப்படையில் சிறப்பான சமூக அந்தஸ்து பெறுபவர்களை விமர்சித்து, மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் பேணுவதே மதத்தின் பணியாக இருக்க வேண்டும் என்று முக்தா தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பேஷ்வா சகாப்தத்தின் சமூக சூழ்நிலையை விவரிக்கும் போது முக்தாவின் எழுத்துகள் பெரும் குரலெடுத்து ஒலிக்கின்றன.

பேஷ்வா காலத்தின் அநீதியையும், தீண்டத்தகாதவர்கள் மீதான பிராமணர்களின் மனிதாபிமானமற்ற நடத்தையையும், விலங்குகளை விட தாழ்வாக நடத்தப்பட்டதையும் வெளிச்சம் போட்டுக் காட்டி, முக்தா எழுதியுள்ளார், “பிராமணர்கள் நம்மை பசுக்கள் மற்றும் எருமைகளை விடக் கீழான மனிதர்களாகக் கருதினர். பாஜிராவ் ஆட்சியின் போது நாங்கள் கழுதைகள் போல் நடத்தப்பட்டோம். முடக் கழுதையைக் கொல்லாதே என்று சொல்வார்கள். ஆனால் மாங்கையோ மஹர்களையோ கொல்லாதே என்று சொல்ல அப்போது யாரும் இல்லை,” என எழுதியுள்ளார்.

முதல் பெண் தலித் எழுத்தாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இன்றும் முக்தா சால்வேயின் அசல் கட்டுரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புடன் இணையத்தில் கிடைக்கிறது.

பேஷ்வா காலம் பற்றிய விமர்சனம்

அக்காலத்தில் கல்வி என்பது பிராமணர்களின் பாக்கியமாக கருதப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், கீழ் மட்டத்தில் இருப்பதாகக் கருதப்படும் சாதிகள் எப்படி கற்கும் வாய்ப்பை இழந்தார்கள் என்பது முக்தாவின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

இது குறித்து அவர் எழுதும் போது, “தீண்டத்தகாதவர்கள் அரசரின் வீட்டு வாசல் வழியாகச் செல்வது தடை செய்யப்பட்டால், அவர்கள் அறிவைக் கற்கும் சுதந்திரம் எங்கிருந்து கிடைக்கும்? தீண்டத்தகாதவர்கள் யாரேனும் படித்து அது, பாஜிராவுக்குத் தெரிந்தால், அவர் அதை ஒரு மஹர் மற்றும் மாங் சாதியைச் சேர்ந்தவன் எப்படிப் படிக்க முடியும்? அவன் படிக்கிறானா? அவனை யார் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்? இப்படி பல கேள்விகளைக் கேட்டு அவனை தண்டிப்பார்,” என எழுதுகிறார்.

தலித்துகளுக்கு கல்வி தடை செய்யப்படும் போதும், தீண்டத்தகாதவர்கள் என்ற அவமரியாதைக்கு ஆளாகும்போதும், வேலை வாய்ப்பை இழந்தாலும் அவர்களின் நிலை எப்படி மேம்படும் என்ற கேள்வியை முக்தா தனது கட்டுரையில் எழுப்புகிறார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள சமூகத்தின் இந்த யதார்த்தம் இன்றும் முற்றாக மாறவில்லை என்பது வருந்தத்தக்கது.

பிராமண சமூக சீர்திருத்தவாதிகளின் பாராட்டு

முக்தா தனது கட்டுரையில் சாதி சமத்துவமின்மை என்பது மட்டுமின்றி பாலின சமத்துவமின்மையுடன் வறுமையின் கொடுமையையும் தலித் சமூகத்தின் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று எழுதியுள்ளார்.

“நம்முடைய பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது, ​​அவர்களின் வீடுகளுக்கு கூரை கூட இல்லை. அவர்கள் வெயில், மழை மற்றும் காற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு எவ்வளவு பரிதாபமான நிலையில் தவிக்கின்றனர்? தொற்றுநோய்கள் பரவும் போது அவர்களது நிலை என்ன? ஒரு நாள் அவருக்கு உடம்பு சரியில்லை என்ற நிலை ஏற்பட்டால், மருந்துக்கும் டாக்டருக்கும் பணம் எங்கிருந்து கிடைக்கும்? இலவச மருந்து கொடுக்க உங்களில் யார் தயாராக இருக்கின்றனர்?” என எழுதியுள்ளார்.

பேஷ்வாக்கள் காலத்தில் நடந்த சாதிய ஒடுக்குமுறையையும் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் அவர். முக்தா சால்வே தனது கட்டுரையில் ஆங்கிலேயர்களால் சமூகத்தில் ஜாதி அமைப்பின் கொடுமை குறைந்துவிட்டது என்று எழுதியுள்ளார்.

முதல் பெண் தலித் எழுத்தாளர்

பட மூலாதாரம், SAVITRIBAI PHULE MEMORIAL

படக்குறிப்பு,

தலித் பெண்கள் அனைவரும் கண்டிப்பாகக் கல்வி கற்கவேண்டும் என்பதில் முக்தா மிகவும் உறுதியாக இருந்தார்.

சமூக சீர்திருத்தவாதிகளான பிராமணர்களின் பணிகளையும் அவர் தனது கட்டுரையில் பாராட்டியுள்ளார். இது குறித்து எழுதும் போது, “இப்போது ஒரு அதிசயமான விஷயம் நடந்தது, நேர்மையான மற்றும் அன்பான பிரிட்டிஷ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது என்பதை எழுதுவதில் நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். எங்களுக்கு சிரமத்தை அளித்த பிராமணர்களே, என் அன்பான நாட்டினரே, இப்போது நாங்கள் விடுவிக்கப்படுகிறோம். அவர்களை வெளியேற்றுவதற்காக நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் எல்லா பிராமணர்களும் இப்படி இருப்பதில்லை. யாருடைய எண்ணங்கள் பிசாசுகள் போல இருக்கிறதோ அவர்கள் முன்பு போல் நம்மை வெறுக்கிறார்கள்,” என எழுதியுள்ளார்.

முக்தா தனது கட்டுரையில், தலித்துகள் கல்வி கற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். “அறியாமையை அகற்றுங்கள். பழைய நம்பிக்கைகளில் ஒட்டிக் கொள்ளாதீர்கள். அநீதியைப் பொறுத்துக்கொள்ளாதீர்கள்” என்று எழுதுகிறார்.

முக்தா சால்வேயின் இந்த எழுத்துகள் மீண்டும்மீண்டும் படிக்கத் தக்கவையாக உள்ளன.

மூன்றே வருடங்கள் மட்டுமே படித்த 14 வயது சிறுமியால் எப்படி இவ்வளவு தெளிவுடனும் ஆற்றலுடனும் எழுத முடிகிறது என்று கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான். அவரது எழுத்துகளில் விறுவிறுப்பு மற்றும் விவரங்கள் அடங்கியிருக்கும். முக்தாவின் புத்திசாலித்தனம் மற்றும் திறமை போன்றவற்றின் பெருமை பூலே தம்பதியர் அளித்த கல்விக்குத்தான் அளிக்கப்பட வேண்டும். பூலே தம்பதிகள் அவருக்கு கல்வியை அளித்ததோடு மட்டுமல்லாமல், உண்மையைத் தேடும் போக்கையும் அவரிடம் வளர்த்தனர்.

பொதுக்கூட்டம் ஒன்றில் வாசிக்கப்பட்ட கட்டுரை

பூலே தம்பதியினர் முக்தாவுக்கு சுய விழிப்புணர்வு மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வைக் கற்றுக் கொடுத்தனர். மேலும் மத அமைப்பைக் கேள்வி கேட்கவும் கற்றுக் கொடுத்தனர். இதுவே உண்மையான தரமான கல்வியாக கருதப்படும்.

முக்தாவின் இந்தக் கட்டுரை 1855ல் ‘ஞானோத்யா’வில் இரண்டு பாகங்களாக வெளிவந்து பல வாசகர்களைச் சென்றடைந்தது. முதல் பகுதி பிப்ரவரி 15 மற்றும் இரண்டாம் பகுதி மார்ச் 1 அன்று வெளியிடப்பட்டது. பின்னர், இந்த கட்டுரைக்கு பதில் இரண்டு கடிதங்களும் வெளியிடப்பட்டன.

அப்போது கிறித்துவ மிஷனரிகளின் வார இதழாக ஞானோதயா இருந்தது. அதே ஆண்டில் இந்த கட்டுரை பம்பாய் மாநில கல்வி அறிக்கையில் பிரிட்டிஷ் அரசின் சார்பாக வெளியிடப்பட்டது.

முக்தாவுக்கும் இந்தக் கட்டுரையை பெரும் கூட்டத்தின் முன்னிலையில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜோதிபாவின் பாராட்டு விழா விஸ்ரம்பாக் வாடாவில், புனே கல்லூரியின் முதல்வர், அரசு சிறைத் தலைவரும், பூலேயின் கல்விப் பணியின் நலம் விரும்பியுமான மேஜர் கண்டி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு சுமார் மூவாயிரம் பேர் முன்னிலையில் முக்தா தனது கட்டுரையை வாசித்தார். இதைக் கேட்டதும் மேஜர் கண்டி மிகவும் கவரப்பட்டார். அவரைப் பாராட்டி முக்தாவுக்கு சாக்லேட் ஒன்றை அவர் பரிசாக அளித்தார்.

அப்போது முக்தா, “சார் எங்களுக்கு சாக்லேட் வேண்டாம், லைப்ரரி வேணும்” என்றார்.

அந்த நேரத்தில் ஒரு தலித் பெண் புத்தகங்களையும் நூலகத்தையும் கோருவது எவ்வளவு அசாதாரணமாகவும் புரட்சிகரமாகவும் இருந்திருக்கும் என்பதை இப்போது கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.

முதல் பெண் தலித் எழுத்தாளர்

பட மூலாதாரம், GOVERNMENT OF MAHARASHTRA

படக்குறிப்பு,

புத்தகங்களையும், நூலகங்களையும் தேடும் பெண்ணாக முக்தா சால்வே இருந்தார்.

முதல் தலித் பெண் எழுத்தாளர்

கட்டுரையில் முக்தா சால்வே எழுப்பிய பிரச்னைகள் சமூக விழிப்புணர்வின் அடிப்படையில் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டன.

பகுஜன்களின் விழிப்புணர்வுக்காக உழைத்த மகாத்மா பூலே, பாபா பத்மாஜி மற்றும் ரெவரெண்ட் முர்ரே மிட்செல் ஆகியோர் பல இடங்களில் முக்தா சால்வேவின் கட்டுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். என்.வி.ஜோஷி முக்தாவின் கட்டுரையின் ஒரு பகுதியை 1868 இல் வெளியிட்ட ‘புனே விளக்கம்’ புத்தகத்தில் வெளியிட்டார். முதலில் மராத்தியில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. மேலும், 1991 இல் வெளியிடப்பட்ட, பெண்களின் எழுத்தாற்றல் குறித்த ஒரு வரலாற்று இதழிலும் இடம்பெற்றது.

இன்றும் முக்தா சால்வேயின் அசல் கட்டுரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புடன் இணையத்தில் கிடைக்கிறது.

‘மஹர்களின் கோரிக்கைகளும் வலிகளும்’ என்ற கட்டுரையை எழுதிய பதினான்கு வயது முக்தா சால்வே முதல் தலித் பெண் எழுத்தாளர் என்று அங்கீகரிக்கப்படலாம். ஆனால் இந்த கட்டுரைக்குப் பிறகு அவர் என்ன எழுதினார்? என்ன மாதிரியான குணங்களைக் கொண்டவர் அவர் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது பிந்தைய வாழ்க்கை குறித்தும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.

அந்தக் கால வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலோர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மராத்தி வரலாற்றாசிரியர்கள் அவரைக் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. தலித் இலக்கியம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் செயல்முறை 1950 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அதாவது முக்தா சால்வேயின் கட்டுரை வெளியான சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அப்பணிகள் தொடங்கின. எஸ்.ஜி. மாலி மற்றும் ஹரி நரகே போன்ற அறிஞர்கள் முக்தா சால்வேவின் படைப்புகள் வரலாற்றில் சேர்க்கப்படாமல் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். ஏனெனில் பெண்கள் அல்லது தலித்துகளின் பணி அக்காலத்தில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் தான் முக்தா சால்வேயின் முதல் மற்றும் ஒரே எழுத்துகள் எஞ்சியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. இன்றும் இந்தக் கட்டுரையைப் படிப்பது சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. முக்தா சால்வே பற்றி அதிகம் அறியப்படாவிட்டாலும், அவர் முதல் தலித் பெண் எழுத்தாளர் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லாததற்கு இதுவே காரணம்.

(இக்கட்டுரையை எழுதிய ஆசிரியர் ஒரு புகைப்படக்கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பெண்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஆர்வலர். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள்.)

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *