
“மாலத்தீவு அதிபர் முய்ஸு ‘இந்தியாவே வெளியேறு’ என்ற பிரச்சாரத்தை தேர்தலில் முன்னெடுத்து வெற்றி பெற்றார், ஆனால் அது ஒரு தேர்தல் யுக்தி மட்டுமே. மாலத்தீவு முழுவதும் இந்தியாவிற்கு எதிராக உள்ளது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுவது இங்கு அமைதியாக வாழும் இந்தியர்களுக்கு எதிராகவே அமையும் என்பதையும் சற்று நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் மாலத்தீவு தமிழ் சங்கத்தின் தலைவர் செந்தில்.
இந்தியா- மாலத்தீவு இடையேயான சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய பிரமுகர்களை உடனடியாக மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்து தனது நிலையை தெளிவுப்படுத்தினாலும் கூட, இந்தியாவிலிருந்து வரும் எதிர்ப்பலை தீவிரமாக இருக்கிறது. இந்தியர்கள் மட்டுமல்லாது இஸ்ரேல் தூதரகமும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல முன்னுரிமை அளிக்க வேண்டுமென கூறியது.
மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வது மட்டுமல்லாது வேலைக்காக அங்கு செல்வதிலும் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு, ‘இந்தியாவே வெளியேறு’ என்ற முழக்கத்துடன் தேர்தலில் போட்டியிட்டு, மாலத்தீவின் புதிய அதிபராக மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகமது முய்ஸு தேர்வு செய்யப்பட்டார். அப்போதே இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது எனக் கூறலாம்.
இந்தியா குறித்தும், அதன் பிரதமர் நரேந்திர மோதி குறித்தும் மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மாலத்தீவில் பணிபுரியும் தமிழர்களின் தற்போதைய நிலை மற்றும் இந்த பிரச்சனை குறித்த அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தோம்.

மாலத்தீவு தமிழ் சங்கத்தின் தலைவர் செந்தில்
மாலத்தீவில் இந்தியர்களுக்கே முன்னுரிமை
“மாலத்தீவை புறக்கணித்து, லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லுங்கள் என்ற வாதம், மாலத்தீவிற்கு சுற்றுலாவுக்காக மட்டுமே இந்தியர்கள் வருகிறார்கள் என்று நினைத்து பேசுகிறார்கள். அப்படியென்றால் இங்கே வேலைக்காக தங்கியிருக்கும் 30,000 முதல் 40,000 இந்தியர்களின் நிலை என்னவாகும் என யோசிக்க வேண்டாமா” எனக் கேள்வி எழுப்புகிறார் மாலத்தீவு தமிழ் சங்கத்தின் தலைவர் செந்தில்.
“இந்தியர்கள் குறித்தும் பிரதமர் மோதி குறித்தும் சில அமைச்சர்கள் பேசியது மிகப்பெரிய தவறு தான். அதற்காக அரசு அவர்களை இடைநீக்கம் செய்து விட்டது, பல மாலத்தீவு அதிகாரிகள் இது குறித்து கண்டனமும் தெரிவித்து விட்டார்கள். இதற்கு மேல் இதை பெரிதுப்படுத்துவது, அரசியல் விளையாட்டு தான்” என்கிறார் செந்தில்.
தொடர்ந்து பேசிய அவர், “மாலத்தீவு மக்கள் இந்தியாவுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறார்கள். காரணம் கடந்த காலத்தில் இந்தியா செய்த உதவி. அதை அவர்கள் மறக்கவில்லை. இங்குள்ள தனியார் நிறுவனங்கள் ஒரு இந்தியரை வேலைக்கு எடுக்க, மாலத்தீவு அரசுக்கு இந்திய மதிப்பில் 18,000 ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.”
“அதே நேரத்தில், வங்கதேசத்தை சேர்ந்தவரை வேலைக்கு எடுத்தால் அரசுக்கு 43,000 ரூபாய் வைப்புத் தொகையாக கிடைக்கும். ஆனாலும் லாபத்தைப் பார்க்காமல் இந்தியர்களை வேலைக்கு எடுக்கவே மாலத்தீவு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” என்கிறார் செந்தில்.

பட மூலாதாரம், Getty Images
முகமது முய்ஸு
‘இந்தியாவே வெளியேறு’ முழக்கத்தால் என்ன பாதிப்பு?
“தேர்தலின் போது முய்ஸு ‘இந்தியாவே வெளியேறு’ முழக்கத்தை முன்னெடுத்தார். மாலத்தீவில் இருக்கும் தனது இராணுவ வீரர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது கோரிக்கை. அது தேர்தலுக்காக முன்னெடுக்கப்பட்டது. அப்போது பரபரப்பாக பேசப்பட்டது, தேர்தல் முடிந்த பின் அந்த முழக்கத்தால் எந்த தாக்கமும் இல்லை”, என்று கூறிய செந்தில், தொடர்ந்து பேசினார்.
“அதனால் இங்குள்ள இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இப்போது மாலத்தீவை புறக்கணியுங்கள் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது, இப்படியே தொடர்ந்து சர்ச்சைகள் வந்துகொண்டிருந்தால், இந்தியர்களை அவர்கள் பார்க்கும் பார்வை மாறலாம்.”
“நான் இங்கு 23 வருடமாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். என்னைப் போன்ற 8,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் சுற்றுலாவிற்காக வரவில்லை, பிழைப்பிற்காக வந்துள்ளோம். நாங்கள் லட்சத்தீவு சென்று என்ன செய்யப் போகிறோம்” என்கிறார் செந்தில்.

தமிழர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன?
“மாலத்தீவின் தமிழ் சங்கம் மூலமாக தமிழ்நாட்டிலிருந்து அதிகமான முதலீடுகளை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தமிழ்நாட்டு அரசுடனும் பேசி உள்ளோம். இதற்காக தமிழ்நாடு எக்ஸ்போ என்ற நிகழ்ச்சியை அடுத்த மாதம் மாலத்தீவில் நடத்த உள்ளோம். இதன் மூலம் இன்னும் பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்” என்கிறார் மாலத்தீவு தமிழ் சங்கத்தின் நிர்வாகி ராகேஷ்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிலிருந்து மாலத்தீவிற்கு நேரடி விமானம் இல்லை. பெங்களூர் அல்லது கொச்சி மூலம் தான் வர முடியும். நேரடி விமான வசதி வந்துவிட்டால், மாலத்தீவுகளில் இருந்து அதிகளவு மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக தமிழ்நாடு வருவார்கள். தமிழர்கள் வந்து செல்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து மத்திய அரசிடமும் தமிழக அரசிடமும் பேசி வருகிறோம்.”
“இதற்கிடையே தமிழ் மொழியையும் மறந்துவிடக்கூடாது அல்லவா. இங்குள்ள இந்திய கலாச்சார மையத்தில் தமிழ் இணைய வழிக் கல்வி மூலமாக தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. 76 பிள்ளைகள் தமிழ் கற்று வருகிறார்கள். “
“இதே போல மற்ற இந்திய மொழிகளுக்கும் வகுப்புகள் உள்ளன. இதெல்லாம் தொடர்ந்து நடத்த மாலத்தீவு அரசின் ஆதரவு தேவை. இப்படி கவனம் செலுத்துவதற்கு பல வேலைகள் உள்ளன. அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடாமல், ஆக்கபூர்வமான செயல்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் ராகேஷ்.

பட மூலாதாரம், Getty Images
மாலத்தீவில் சீனாவின் முதலீடுகள்
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கான ஏற்றுமதிகளைக் கவனித்து வரும் நிர்வாகி ஒருவர் (பெயர் கூற அவர் விரும்பவில்லை) பேசுகையில், “மாலத்தீவிற்கு இந்தியாவிலிருந்து 900 முதல் 1000 டன் வரை அரிசி, சர்க்கரை, கோதுமை மாவு, காய்கறிகள் என அனுப்பப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சைகளால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போதைய மாலத்தீவு அதிபர் முய்ஸு ‘இந்தியாவே வெளியேறு’ என்ற முழக்கத்தை முன்னெடுத்த போது, ஏற்றுமதி தொழில் பாதிக்குமோ என நாங்கள் பயந்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை”
“இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலிருந்து தான் மாலத்தீவுகளின் அடிப்படை தேவைக்கான பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாம் செய்யும் அளவுக்கு ஏற்றுமதியை சீனாவோ அல்லது இலங்கையோ செய்ய முடியாது.”
“மேலும் நம்மிடமிருந்து பொருட்களை வாங்குவது தான் மாலத்தீவு அரசுக்கும் லாபகரமாக இருக்கும். சீனா முதலீட்டாளர்கள் உள்ளே நுழைந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த அரசியல் சர்ச்சைகள் எல்லாம் சில காலத்திற்கு தான், ஆனால் இது தொடர்ந்து நடந்தால், முய்ஸுவின் ஆட்சியில் சீன முதலீட்டாளர்களின் கை ஓங்க வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறினார்.
மாலத்தீவு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்த பார்வை சற்று மாறியிருப்பது உண்மை தான். மாலத்தீவு ஒரு இஸ்லாமிய நாடு, எனவே இஸ்ரேல் -பாலத்தீன பிரச்சனையில் இந்தியா, இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக இருப்பதும் மாலத்தீவிற்கு ஒரு பிரச்னையே. முய்ஸுவின் ‘இந்தியாவே வெளியேறு’ முழக்கம் வெற்றிபெற்றதற்கு அதுவும் ஒரு காரணம்.”
“ஆனால், இங்கு வாழும் இந்தியர்கள், தமிழர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. அதை மறுக்க முடியாது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல தான். இதை ஊதிப் பெரிதாக்காமல் விட்டுவிட வேண்டும். முய்ஸு இப்போது சீனா சுற்றுப்பயணத்தில் உள்ளார், எனவே இதை வளர்ப்பது சீனாவுக்கே சாதகமாக முடியும்” என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மாலத்தீவும் இந்தியாவும்
ஐந்து லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் சிறிய நாடான மாலத்தீவு இந்திய பெருங்கடல் பகுதியில் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருப்பதால் இந்தியா அதனுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது. இந்தியாவில் இருந்து வெறும் 70 கடல் மைல் தூரத்தில் இருக்கும் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்குமான உறவு 50 ஆண்டுகளுக்கும் மேலானது.
மாலத்தீவுக்கு பல்வேறு வழிகளிலும் இந்தியா உதவியிருக்கிறது, உதவி வருகிறது. 1988ஆம் ஆண்டு மாலத்தீவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உதவியோடு ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சி நடந்தபோது, இந்திய அரசு தலையிட்டு ஆப்ரேஷன் காக்டஸ் மூலம் தடுத்து நிறுத்தியது. 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது முதல் நாடாகச் சென்று மாலத்தீவுக்கு உதவியதும் இந்தியா தான்.
கடந்த 2014இல் மாலத்தீவில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு 1,50,000 பேர் தண்ணீரின்றி சிரமப்பட்டனர். அப்போது, ஆப்ரேஷன் நீர் என்ற பெயரில் இந்தியா விமானப்படை 374 டன் குடிநீரை டெல்லியில் இருந்தும் அரக்கோணத்தில் இருந்தும் மாலத்தீவுக்கு கொண்டு சென்று உதவியது. இதேபோல், கோவிட் தொற்றின்போதும் மாலத்தீவுக்கு தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து உதவியது இந்தியா.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்