தீபாவளி லேகியம்: தமிழ்நாடு அரசே இதனை செய்யலாமா? அதில் என்ன இருக்கிறது?

தீபாவளி லேகியம்: தமிழ்நாடு அரசே இதனை செய்யலாமா? அதில் என்ன இருக்கிறது?

தீபாவளி லேகியம்

பட மூலாதாரம், Nattu Marundhu/ Facebook

தீபாவளி பண்டிகை என்றால் முக்கியமான இரண்டு – பட்டாசு மற்றும் இனிப்புகள். வீட்டிலேயே பலகாரங்கள், இனிப்புகள் செய்து வந்த காலத்தில், தீபாவளி பண்டிகையின் போதே அதிகமான இனிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகியவை அதிகமாக உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே வயிற்று கோளாறுகள் எதுவும் ஏற்படாத வகையில், மருத்துவ குணங்கள் கொண்ட எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் லேகியத்தை ‘தீபாவளி லேகியம்’ என்று அழைப்பது வழக்கம். இது பல குடும்பங்களில் கை வைத்தியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அரசு அறிமுகப்படுத்தும் தீபாவளி லேகியம்

இப்போது முதல் முறையாக தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவ துறையின் சார்பில் தீபாவளி லேகியம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா மருத்துவமனையில் நடைபெற்ற எட்டாவது தேசிய ஆயுர்வேத தின விழாவில், இதன் விற்பனையை தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி, இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை அணையர் மைதிலி ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர்.

தீபாவளி லேகியம் என்ற மருந்து சில குடும்பங்களில் பல ஆண்டுகளாகவே புழக்கத்தில் இருந்தாலும் இந்த முறை அரசாங்கமே அதை கையிலெடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. மருந்து அல்லாத ஒன்றை, நம்பிக்கையின் அடிப்படையில் ஊக்குவிக்கலாமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

தீபாவளி லேகியம்

பட மூலாதாரம், TN GOVT

தீபாவளி லேகியத்தில் என்ன உள்ளது?

தேன் மற்றும் நெய் ஆகியவற்றோடு சுக்கு, மிளகு, திப்பிலி, சிறுநாகப்பூ, கருஞ்சீரகம், ஓமம், கோரைக் கிழங்கு, சாத்தக்குப்பை, மல்லி, வைவிடாங்கம், சீரகம், ஏலக்காய், லவங்கப்பட்டை, வெல்லம் ஆகிய மூலப் பொருட்களை கலந்து அறைத்து இந்த லேகியம் தயார் செய்யப்படுகிறது. மூலப்பொருட்களை நன்றாக பொடி செய்துவிட்டு வெல்லப்பாகில் லேகிய பதத்திற்கு கிண்டிய பின்னர் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் நெய் விட்டு கிளறி, ஆறிய பின்னர் தேன் கடைசியாக கலக்க வேண்டும். மருந்து கெட்டுப்போகாமல் இருக்க சுத்தமான தேன் பயன்படுத்த வேண்டும்.

இந்த லேகியத்தை அப்படியே சாப்பிடலாம். உணவிற்கு பின் 5 கிராம் மட்டும் எடுத்துக் கொள்ளும்படியும், தண்ணீரோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது சித்த மருத்துவ தயாரிப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது.

தீபாவளி லேகியம்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் தமிழ்நாடு ஆணையர் மைதிலி ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் கூறும்போது, “தீபாவளி லேகியம் தயாரிப்பிற்கான உரிமத்தை முதல் முறையாக பெற்றுள்ளோம். இந்திய மருத்துவ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த லேகியம் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. 100 கிராம் ரூ.80 ரூபாய் மதிப்பில் வாங்கலாம். வெயில் காலத்தில் இந்த லேகியத்தை சாப்பிடுவது உகந்ததாக இருக்காது என்பதால் தீபாவளி முதல் பொங்கல் வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என தெரிவித்தார்.

இந்த லேகியத்தை அண்ணா நகரில் உள்ள இந்திய மருத்துவமனை வளாகத்திலும் ஆன்லைன் வழியாகவும் அரசு விற்பனை செய்கிறது. www.tampcol.com என்ற இணைய தளத்தில் இதனை வாங்க முடியும்.

தீபாவளி லேகியம்

பட மூலாதாரம், Getty Images

லேகியம் மருந்தாகுமா?

தீபாவளி லேகியம் இந்திய மருத்துவத்தில் இருக்கும் பிற மருந்துகளை போல ஆவணப்படுத்தப்பட்டது கிடையாது என்கிறார் ஆயுர்வேத அரசு மருத்துவர் ஆர்.பாலமுருகன். “இந்த லேகியம் சித்தர்களாலோ, நூல்களிலோ ஆவணப்படுத்தப்பட்டது கிடையாது. ஆனால் மக்களிடம் வெகு நாட்களாக பழக்கத்தில் இருந்தது. தற்போது அதை தயாரிப்பதற்கான உரிமம் முறையாக பெறப்பட்டு சித்த மருத்துவ முறையில் சரியான அளவுகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது” என்கிறார்.

தீபாவளி லேகியம் என அழைக்கப்பட்டாலும் இதனை அஜீரணக் கோளாறுக்காக எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்கிறார் அவர்.

“அஜீரணத்தை தவிர்ப்பதே இந்த லேகியத்தின் பயன்பாடு என்பதால் இதன் மூலப்பொருட்கள் எல்லாமே நாம் வீட்டில் பொதுவாக ஆஜீரணத்துக்காக பயன்படுத்தக்கூடிய கைவைத்திய பொருட்களாகவே இருக்கின்றன. நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், பொறுமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் இந்த லேகியத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பிரசவத்துக்கு பிறகு ஜீரணத்துக்காகவும், பால் பெருக்கத்துக்காகவும் வழங்கப்படும் சௌபாக்யா சுண்டி எனப்படும் ஆயுர்வேத லேகியத்தை போலவே மூலப்பொருட்கள் கொண்டது இந்த லேகியம். இது தீபாவளி காலத்தில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதுமே சந்தைகளில் இதே பெயரில் கிடைக்கிறது” என்றார்.

வீட்டில் மட்டுமே இனிப்புகள் பலகாரங்கள் தயார் செய்வது என்ற காலம் எப்படி மாறியதோ அதேபோன்று தீபாவளி லேகியத்தை வீட்டில் மட்டுமே செய்வது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே மாறியுள்ளது. பிரபல இனிப்புக்கடைகளில் தீபாவளி இனிப்புகளுடன் சேர்த்து தீபாவளி லேகியமும் விற்கப்படுகிறது. தனியார் மருந்து நிறுவனங்கள் மற்றும் உணவகங்களும் இதை ஏற்கனெவே விற்று வருகின்றன.

தீபாவளி லேகியம்

லேகியம் உண்மையிலேயே பலன் தருமா?

சென்னையில் உள்ள அரசு சிறுநீரக மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, “இந்த மருந்தை தயாரிப்பதில் என்ன வரைமுறை இருக்கிறது? எவ்வளவு மூலப்பொருட்கள் எந்த விகிதத்தில் சேர்க்கப்படும்? இதனை மருந்தாக உட்கொள்ள வேண்டுமா? ஒரு நாளுக்கு எத்தனை முறை, எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்? என்று பல கேள்விகள் இருக்கின்றன. இவை எதையும் தெரிந்து கொள்ளாமல் எப்படி உட்கொள்வது சரியாகும்? ஆங்கில மருந்து ஒவ்வொன்றுக்கும் பக்க விளைவுகள் என்னவென்று தேடி தெரிந்து கொள்கிறோம், இவற்றுக்கான பக்க விளைவுகளையும் கூற வேண்டுமே.

உதாரணத்துக்கு அளவுக்கு மீறி சுக்கு எடுத்துக் கொண்டால் அதுவே வாயு பிரச்னைக்கு காரணமாகி விடும். இதில் எவ்வளவு சுக்கு சேர்க்கப்படுகிறது, ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று எப்படி தெரிந்து கொள்வது? ” என கேள்விகளை அடுக்குகிறார் அவர்.

தீபாவளி லேகியம்

பட மூலாதாரம், Getty Images

சோதனைக்கு உட்படுத்த வேண்டுகோள்

பொதுவான மக்கள் பயன்பாட்டுக்கு வரும் இந்த லேகியத்தை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்துகிறார்.

“மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல்,பொதுவாக சந்தையில் விற்கப்படும் மருந்தை கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.

பொதுவாகவே இந்திய மருத்துவ மருந்துகள் , விஷத்தன்மை வாய்ந்த கன உலோகங்களை கொண்டவை என்ற விமர்சனம் உண்டு. எனவே பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்ய இந்த மருந்துகளை சோதனை முறையில் பயன்படுத்தி பின்னர் பொது பயன்பாட்டுக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்கிறார் அவர்.

‘ஹாலிடே ஈட்டிங்’

தீபாவளி லேகியம்

பட மூலாதாரம், Dr Mohan’s Diabetes Centre

தீபாவளி, பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகளின் போது மட்டுமே அதிகமான உணவை எடுத்துக்கொள்ளும் வழக்கம் என்பது மலையேறி போய்விட்டது. இப்போது விடுமுறை நாள், நண்பர்களுடனான சந்திப்பு, வார இறுதி நாட்கள் என எப்போது வேண்டுமானாலும், நொடி பொழுதில் கேட்ட உணவுகள் வீட்டுக்கு வந்துவிடும். ஆங்கிலத்தில் ‘ஹாலிடே ஈட்டிங்’ என்று பிரத்யேகமாக கூறும் அளவு, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை விடுமுறை காலங்களில் எடுத்துக் கொள்கிறோம்.

உணவு சார்ந்த உடல் உபாதைகளும் இந்த காலத்தில் அதிகரித்துள்ளன. மோகன் நீரிழிவு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன் கூறுகையில், “தீபாவளி பண்டிகை நேரத்தில் அதிகமான இனிப்பு மற்றும் பலகாரங்களை எடுத்துக்கொள்வது வழக்கம்தான். நீரிழிவு நோயாளிகளும் கூட இனிப்பு எடுத்துக்கொள்ள தூண்டப்படுவார்கள். உணவினை தவிர்க்க கடுமையாக முயற்சித்தால் அது உளவியலாக பாதிப்பை தரலாம். எனவே, சிறிதளவு உட்கொண்டு அதற்கேற்ப உடற்பயிற்சியும் வைத்துக்கொள்வது நல்லது” என்று தெரிவித்தார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *