காவிரி: மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு, சித்தார்த்தின் நிகழ்ச்சி நிறுத்தம்; பிரகாஷ் ராஜ் மன்னிப்பு – என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

காவிரி: மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு, சித்தார்த்தின் நிகழ்ச்சி நிறுத்தம்; பிரகாஷ் ராஜ் மன்னிப்பு - என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம், Instagram

படக்குறிப்பு,

நடிகர் சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் கன்னட அமைப்புகளால் நிறுத்தப்பட்டன.

தமிழகம் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி வரும் நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற நடிகர் சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பு கன்னட அமைப்பினரால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு கன்னட மக்கள் சார்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது திரைப்படம் ‘சிக்கு’ குறித்த செய்தியாளர் சந்திப்பை பெங்களூருவில் உள்ள எஸ் ஆர் வி திரையரங்கில் வியாழக்கிழமை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் அரங்கில் திடீரென சிலர் உள்ளே நுழைந்தனர்.

கன்னட அமைப்பை சேர்ந்த அவர்கள் செய்தியாளர் சந்திப்பை நிறுத்தும் படி கூச்சலிட்டனர். கழுத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற துண்டு அணிந்திருந்தவர்கள், “காவிரி விவகாரத்துக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. இவர் தன் படத்தைப் பிரபலப்படுத்த வந்துள்ளார். இது உங்களுக்கு தேவையா?” என கூச்சலிட்டனர்.

இது திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு என நடிகர் சித்தார்த் அளித்த விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் நடிகர் சித்தார்த் செய்தியாளர் சந்திப்பிலிருந்து பாதியில் எழுந்து “அனைவருக்கும் நன்றி” என கூறி விட்டு அரங்கை விட்டு வெளியேறினார்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் சர்ச்சையாகி வரும் வேளையில், நடிகரின் செய்தியாளர் சந்திப்பை தமிழர் என்பதற்காக கன்னட அமைப்பினர் பாதியில் நிறுத்தியுள்ளனர்.

சில நாள்களுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து சிலர் போராட்டடம் நடத்தினர்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்
படக்குறிப்பு,

கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அரங்கை விட்டு வெளியேறினார் நடிகர் சித்தார்த்.

மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

இதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்பதாக X எனப்படும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,“ பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்னையை தீர்க்க தோல்வியடைந்திருக்கும் அரசியல் கட்சிகளை கேள்வி கேட்பதற்கு பதிலாக.. மத்திய அரசு தலையீடு செய்ய அழுத்தம் தராத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்பதற்கு பதிலாக..சாதாரண மனிதர்களையும் கலைஞர்களையும் இப்படி துன்புறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது…ஒரு கன்னடனாக..கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்”என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே கர்நாடக பாஜகவினரும் கன்னட அமைப்புகளும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக கர்நாடக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போராட்டம் நடத்தியிருந்த வாட்டாள் நாகராஜ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் யார் பக்கம் நிற்கிறார்கள் என கூற வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது தேவையற்றது என்றார். “ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தை அண்டி வாழும் நிலை தான் உள்ளது. கர்நாடக எங்கோ இல்லை. ஒரு தெருவில் ஒரு பகுதி தமிழ்நாடு எனவும், மற்றொரு பகுதி கர்நாடகா எனவும் இருக்கிறது. என்னுடைய தொகுதியிலும் கூட அப்படி தெருக்கள் உள்ளன. இவை தேவையற்ற செயல்கள்” என்று அவர் தெரிவித்தார்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம், X/@prakashraaj

படக்குறிப்பு,

நடிகக்ர் சித்தார்த்தின் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என கூறி கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் முழு கடையடைப்பு

இந்நிலையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தரக் கூடாது என கூறி கன்னட அமைப்பினரும் பாஜகவினரும் கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு நடத்தி வருகின்றனர். பொது போக்குவரத்து சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், திரையுலகம், தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஹோட்டல்கள் என பல்வேறு தரப்பினரும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன . கர்நாடகாவிலிருந்து வரும் சரக்கு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அரசு விரைவுப் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களை காவல்துறையினர் கர்நாடகா எல்லைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

பெங்களூரூ நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது. மாண்டியா பகுதியில் விவசாயத்துக்கும் காவிரி நீர் தான் பயன்படுகிறது.

முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால், பெங்களூரு ,மைசூர், மாண்டியா பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மாண்டியா பகுதியில் சாலையில் படுத்து உருண்டு போராடிய கன்னட அமைப்பினர் தங்களுக்கே குடிப்பதற்கு நீர் இல்லாத போது தமிழகத்துக்கு எப்படி தருவது என முழக்கங்கள் எழுப்பினர். தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரூவில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக வேனில் ஏற்றினர்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்
படக்குறிப்பு,

கர்நாடக அணைகளில் தமிழகத்துக்கு கொடுக்கும் அளவு தண்ணீர் இருக்கிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கிறார்.

‘தண்ணீர் வைத்துக் கொண்டே தர மறுக்கிறது கர்நாடகா’

கர்நாடகத்தில் தமிழகத்துக்கு தரும் அளவு நீர் இருந்தும் கர்நாடகம் தர மறுக்கிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். “கர்நாடகாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி, கே ஆர் எஸ் அணையில் 97.08% நீர் இருந்தது, இந்த ஆண்டு 42.38% நீர் உள்ளது, கபிணி அணையில் கடந்த ஆண்டு 95.74% இருந்தது, இந்த ஆண்டு 68.55% உள்ளது. அதே போல, ஹேமாவதி அணையில் 99% இருந்தது, தற்போது 98% உள்ளது. ஆனால், மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 95.66% இருந்தது, இந்த ஆண்டு 11.79% நீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் தர மாட்டேன் என கூறுவது நியாயமல்ல.

பயிர்கள் காய்ந்துக் கொண்டிருக்கின்றன என தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் போதிய நீர் தரவில்லை. உச்சநீதிமன்றம் சென்றும் தண்ணீர் தரவில்லை. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்துக்காக அமைத்த காவிரி நீர் மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் உத்தரவுகளை கேட்கவில்லை. இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? படையா எடுக்க முடியும்? இல்லை நாங்கள் சென்று தண்ணீரை திறக்க முடியுமா? இரு மாநிலங்களும் நட்புடன் பாசத்துடன் இருந்தால் தான் இரு மாநிலத்திலும் இருக்கும் மக்கள் அச்சமில்லாமல் வாழ்வார்கள்” என்று அவர் கூறினார்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தமிழ்நாட்டில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் காவிரி நீரை நம்பியுள்ளன.

கருகும் குறுவை பயிர்கள்

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் காவிரி நீரை நம்பியுள்ளன. காவிரி டெல்டா பகுதி என்பது காவிரி நீர் கடலில் கலக்கும் முன் விரிந்து பல கிளைகளாகச் செல்லும் பகுதி. இப்பகுதி விவசாயத்துக்கு மிகவும் உகந்தது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகியன காவிரி டெல்டா மாவட்டங்கள். இந்த மாவட்டங்கள் மேட்டூர் அணையில் கிடைக்கும் காவிரி நீரையும் அவ்வப்போது பெய்யும் மழையையும் நம்பி உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கூறியது. ஆனால் கர்நாடக அணைகளில் 53% குறைந்துள்ளதால் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது எனவும் தண்ணீர் தர இயலாது எனவும் கர்நாடகா கூறியது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரை கர்நாடகா முறையாக திறக்கவில்லை.

இதனால், தமிழகத்தில் நெற்பயிர்கள் கருகியுள்ளன என தமிழகம் கூறியது. எனவே நிலுவையில் உள்ள 50 டி எம் சி நீரையும், அக்டோபர் மாதம் தர வேண்டிய 20.22 டி எம் சி நீரையும் தர வேண்டும் என தமிழகம் கோரியது. காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த நீர் தமிழகத்துக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *