
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் தெருக்களில் இருபுறமும், சில சாலைகளின் நடுவேயும் பசுமைக்காக நடப்பட்ட மரங்களைக் கண்டு மக்கள் பயப்படுகின்றனர்.
இந்த மரங்களை அகற்றக் கோரி விசாகாப்பட்டினம் மாநகராட்சிக்கு புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றறன.
இந்த மரங்களை மக்கள் ‘பேய் மரங்கள்’ என்று அழைக்கின்றனர்.
விசாகப்பட்டினத்திற்கு இந்தப் ‘பேய் மரம்’ எங்கிருந்து வந்தது?
மாநகராட்சி ஏன் இந்த மரங்களை நகரம் முழுவதும் வளர்த்தது?
மக்கள் ஏன் இந்த உயரமான மற்றும் பசுமையான மரங்களை அகற்ற விரும்புகிறார்கள்?
நகரவாசிகளை பயமுறுத்தும் இந்த மரங்களைப் பற்றி தாவரவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த மரங்களால் மக்களுக்கு என்ன பிரச்னை?

இப்போது இந்த மரம் இரண்டு மாடிக் கட்டிடம் போல உயரமாக வளர்ந்திருக்கிறது.
நீர் ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல் இந்த மரம் ஆண்டு முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. குளிர்காலத்திலும் பூக்கள் நிறைந்திருக்கிறது.
இந்தப் பூக்கள், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை மூன்று அல்லது நான்கு நிலைகளில் பூக்கும். அப்போது அந்தப்பூக்களிலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த துர்நாற்றம் தாங்க முடியாமல் நகரவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
விசாகா துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாசுதேவ ராவ் என்பவரது வீட்டின் முன்புறம் இந்த மரம் உள்ளது. இப்போது இந்த மரம் இரண்டு மாடிக் கட்டிடம் போல உயரமாக வளர்ந்திருக்கிறது.
இந்த மரம் குறித்து பிபிசியிடம் பேசிய வாசுதேவ ராவ், அந்த மரத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தால் சுவாசிக்கவே சிரமமாக உள்ளதாகக் கூறினார்.
“குளிர்காலம் முழுவதும் இந்த மரத்தில் இருந்து வீசும் காற்றினால் நாங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். எனக்கும் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எங்கள் குழந்தைகளும் கஷ்டப்படுகிறார்கள். இந்த மரங்களை அகற்றக்கோரி மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால், அவர்கள் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை,” என்றார் அவர்.
இந்த மரங்கள் சிறியவையாக இருந்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதாக டிவி மெக்கானிக் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
“பூக்கள் வந்து, மீண்டும் அவை போகும் வரை பல சிரமங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த குளிர்காலத்தில், மூன்று அல்லது நான்கு முறை உதிர்தல் நடக்கிறது. மாநகராட்சியிடம் புகார் அளித்தும், மரங்கள் அகற்றப்படவில்லை. நாங்களே அகற்ற வேண்டும் என்றால், மரங்கள் பெரிதாக இருப்பதால், அதுவும் சாத்தியமில்லை,” என்றார் அவர்.
இந்த மரம் எப்படி ஊருக்குள் வந்தது?

மக்களின் புகார் காரணமாக இந்த மரங்களை மாநகராட்சிப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்
2014-ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் புயலால் பேரழப்பை சந்தித்தது. அதனால், நகரில் 70% முதல் 80% பசுமை மறைந்து விட்டது.
நகரின் பசுமையை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்தவும் அரசு மீண்டும் மீண்டும் பல்வேறு வகையான செடிகளை கொண்டு வந்து வளர்க்கத் தொடங்கியது. அப்படி உருவானதுதான் இந்த ‘டெவில் ட்ரீ’ (Devil Tree) எனப்படும் பேய் மரங்கள்.
வனத்துறை மற்றும் விசாகப்பட்டினம் மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் மரங்கள் நடப்பட்டன. இன்றோடு ஏழாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இந்த மரங்களின் பூக்கள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தொடர்ந்து வாசனையை சுவாசிப்பதால் குமட்டல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுனதாகக் கூறப்படுகிறது.
“டெவில் ட்ரீ (Devil Tree) என்று அழைக்கப்படும் இந்த மரங்களின் அறிவியல் பெயர் அல்ஸ்டோனியா ஸ்கோலாரிஸ். அவை வேகமாக வளர்ந்து பசுமையானவை. இவை நிலத்தில் இருந்து குறைந்த அளவு தண்ணீரை எடுக்கின்றன. பசுமையை விரைவாக நிரப்ப நகரம் முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டுள்ளன.
அவை சப்தவர்ணி அல்லது ஏடாகுல மரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மரங்கள் எடக்குலா மரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, ஏனெனில் ஒரே இடத்தில் எடகுலாவின் கொத்துகள் உள்ளன, ”என ஆந்திரா பல்கலைக்கழக தாவரவியல் துறை தெரிவித்துள்ளது.
“குளிர்காலத்தில், இந்த மரங்கள் மிகவும் கடுமையான வாசனையை வெளியிடுகின்றன. இம்மரங்களின் பூக்களில் இருந்து வெளியாகும் மகரந்தத் துகள்கள் காற்றில் கலந்து சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த மரங்கள் பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதனால், இந்த மரங்களை அகற்றுவது நல்லதல்ல,” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்த மரம் நல்லதா கெட்டதா?

டாக்டர் கே வெங்கடரமணன்
நகரின் பல பகுதிகளில் உள்ள இந்த எடக்குலா மரங்களை அகற்ற மக்கள் கேட்டுக் கொள்வதாக தாவரவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மரங்களை வைக்க வேண்டுமா அல்லது அகற்ற வேண்டுமா அல்லது வேறு வழி உள்ளதா? தெலுங்கானாவில் உள்ள சாதவாகனா பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக தாவரவியலாளர்களிடம் பிபிசி பேசியது.
ஆந்திரா பல்கலைக்கழக தாவரவியல் துறையின் போஸ்ட் டாக்டோரல் ஃபெலோக்களாக பணிபுரிபவர்களால் இந்த மரங்கள் பற்றிய ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் டாக்டர் கே.வெங்கடரமணனும் ஒருவர்.
“இந்த மரம் நம் நாட்டில் வேகமாகவும் இயற்கையாகவும் வளரும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. இந்த மரத்திற்கு கண்காணிப்பு அல்லது பராமரிப்பு நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை. எனவே பசுமை மற்றும் அழகுபடுத்துவதற்காக இந்த செடியை நகரங்களுக்குள் கொண்டு வந்தனர்.
புயலுக்குப் பிறகுதான் இந்த எடக்குலா மரம், விசாகப்பட்டினத்திற்கு வந்தது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளோ, அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களிலோ இதுபோன்ற மரங்களை நடுவது நல்லது. ஏனெனில் சிலர் அதிலிருந்து வரும் கடுமையான துர்நாற்றத்தால் குறிப்பாக ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்று ஆந்திரா பல்கலைக்கழக டாக்டர் கே.வெங்கடரமண பிபிசியிடம் கூறினார்.
துர்நாற்றம் வீசும் மரத்தை நம் வீடுகளின் முன்புறம் அல்லது சாலையின் இருபுறமும் வைத்திருப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை எப்படி சமாளிப்பது என்ற கேள்விக்கு டாக்டர் கே.வெங்கட ரமணா பதிலளித்தார்.
“நூற்றுக்கணக்கான மரங்கள் ஒரே இடத்தில் நடப்பட்டுள்ளன. கொத்துக் கொத்தாக வரும் பூக்கள் ஒரேயடியாக திறக்கும். இது பாரிய பூக்கும் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு பூவிலிருந்தும் ஆஸ்மோஃபார்ம் எனப்படும் இரசாயனங்கள் வெளியாகின்றன. இவைதான் அந்த வாசனைக்குக் காரணம். பூக்களை மொட்டு நிலையில் வெட்டினால் இந்தப் பிரச்னை வராது. அப்போது இந்த மரத்திலிருந்து வாசனை வராது. குளிர்காலத்தில் அதனை செய்தால் போதும்” என்றார் டாக்டர் கே.வெங்கடரமணன்.
இந்த மரத்தின் பயன்கள் என்ன?

விசாகா துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாசுதேவ ராவ்
எடக்குலா மரத்தின் பயன்கள் என்ன என்று தெலுங்கானா சாதவாகனா பல்கலைக்கழக தாவரவியல் துறை டாக்டர் இ. நரசிம்மமூர்த்தி தெரிவித்தார்.
துர்நாற்றம் வீசுவதால் எடகுலா மரம் பேய் மரம் என்றும் அழைக்கப்படுகிறது, ஆனால் உண்மையில் இந்த மரத்தால் பல பயன்கள் உள்ளன என்றார்.
“இந்த மரத்தின் இலை அடர்த்தியானது. வாகனங்களில் இருந்து வரும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இந்த மரம் ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும். அதிக ஆக்ஸிஜனையும் கொடுக்கிறது. மற்ற மரங்களுடனான ஒரு கொப்பி வெப்பமான பருவத்தில் அதிக நிழலைத் தருகிறது. பறவைகள் அவற்றின் மீது கூடு கட்டுகின்றன. இந்த மரத்தில் இருந்து டைல்ஸ் மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன,” என்றார்.
“இவை ஒரே நேரத்தில் பூக்கும்போது, சில வாசனை இருக்கலாம். அதன் காரணமாக, சைனஸ் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் உள்ளவர்கள் சில பிரச்னைகளை உணரலாம். அதையும் தாண்டி இந்த மரத்தால் எந்த பிரச்சனையும் வராது,” என்றார் டாக்டர் இ. நரசிம்மமூர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுவது என்ன?

இந்த மரத்தில் இருந்து டைல்ஸ் மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன
இந்த மரங்கள் விசாகப்பட்டினத்தின் என்.வி.பி காலனி, உஷோதயா சந்திப்பு, ஜி.வி.எம்.சி சுற்றுவட்டாரப் பகுதிகள், அக்காயபாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பிரிப்பான்களில் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த மரங்களை அகற்றக்கோரி இந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து விசாகப்பட்டினம் மாநகராட்சிக்கு புகார்கள் வருகின்றன.
“இந்த மரம் நிச்சயமாக உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இந்த மரங்களால் சுவாசக் கோளாறு, இருமல், சோர்வு ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.
“ஆஸ்துமா, காசநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாநகராட்சியின் தோட்டக்கலைத் துறை அதிகாரி தாமோதர் பிபிசியிடம் கூறுகையில், இந்த மரங்களால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக புகார் எதுவும் இல்லை,” என்றார்.
“ஆனால், மக்களின் புகார்கள் காரணமாக இந்த மரங்களை அகற்றி வருகிறோம். அவற்றுக்கு பதிலாக வேப்ப மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளோம். ஆனால், சமீப காலமாக இந்த மரங்கள் குறித்த புகார்கள் குறைந்துள்ளன. இந்த மரங்களை மக்கள் தாமாக முன்வந்து அகற்றினாலும், அந்த இடத்தில் வேறு மரங்களை நட்டாலும் ஏற்றுக்கொள்வோம். விசாகப்பட்டினம் மாநகராட்சி அவர்களுக்கு புதிய செடிகளை வழங்கும்,” என்றார் தாமோதர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்