இந்தியா- சீனா உறவை மீண்டும் இயல்பாக்க முடியுமா?

இந்தியா- சீனா உறவை மீண்டும் இயல்பாக்க முடியுமா?

மோதி

பட மூலாதாரம், Getty Images

நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்தது. பரஸ்பர நம்பிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியதோடு எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவியது. இரு நாடுகளுமே ஒருவரையொருவர் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தின. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. மாறாக இருநாடுகளுக்கும் இடையே பிளவு ஆழமானது.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் இதுமட்டுமே பிரச்னை இல்லை.

மெய்யான கட்டுப்பாட்டு கோடு

டெல்லியில் உள்ள கார்னிகி இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வுகள் திட்டத்தின் மூத்த ஆய்வாளரான ஷிபானி மேத்தா பிபிசியிடம் பேசும்போது, “மெய்யான கட்டுப்பாட்டு கோடு (LAC) இரு நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஒருவருக்கொருவர் பிரிக்கிறது. ஆனால் மெய்யான கட்டுப்பாட்டு கோடு தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்பட்டதில்லை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கோடு, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பார்க்கப்படுகிறது ”என்று கூறினார்.

இந்த கோடு வடகிழக்கு இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளுக்கு பரவியுள்ளது. இந்த பகுதியில் பனிப்பாறைகள், வறண்ட சமதளம் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இருபுறமும் பல வகையான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது மற்றொரு சர்ச்சைக்குரிய பிரச்னையாகும்.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக ஷிபானி மேத்தா கூறுகையில், “இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் ராணுவ கட்டுமானம் அல்ல. இந்தியப் பக்கத்தில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. அறுபது ஆண்டுகளாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்னையில் மெய்யான கட்டுப்பாடு கோடு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.”

“1960-ல் டில்லிக்கு வந்தபோது , அப்போதைய சீனப் பிரதமர் சூ என்லாய் செய்தியாளர் சந்திப்பில் இதைப் பயன்படுத்தினார். 1959-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் நடந்த உரையாடலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன.” என்று தெரிவிக்கிறார்.

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1947-ல் விடுதலை பெற்றது. சீனா1949-ல் கம்யூனிச நாடாக மாறியது. 1950களில் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு இருந்தது. ஆனால் அது நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை.

1962-ம் ஆண்டு எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போரில் இந்திய வீரர்கள் அதிகளவில் காயமடைந்தனர், கொல்லப்பட்டனர். சீனாவின் போர் நிறுத்த அறிவிப்போடு அந்தப் போர் முடிவுக்கு வந்தது.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

1962ஆம் ஆண்டு முதலேயே சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் நன்றாக இல்லை என்று பல ஆய்வாளர்களுக்கு கருதுகின்றனர். இந்த காலகட்டத்தில், நேரடி போர் வெடிக்கவில்லை என்றாலும் சச்சரவு தொடர்ந்தது.

2020ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இமயமலையின் லடாக் பகுதியில் இரு நாடுகளின் நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது, இதில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனா தனது நான்கு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர்.

“2020 மோதல் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்தது மற்றும் கடுமையான கருத்துகளை தெரிவித்தது. இந்த மோதலுக்குப் பிறகு, இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன, மேலும் எல்லையை கண்காணிப்பதற்கான சில வழிகாட்டுதல்களும் ஒப்புக் கொள்ளப்பட்டன” என்று ஷிபானி மேத்தா கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் கூட்டறிக்கையில், எல்லைப் பிரச்சனை குறித்து விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ராணுவம் மற்றும் தூதரக வழிகளில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், @SPOKESPERSONMOD

இது குறித்து ஷிபானி மேத்தா பேசும்போது, “2020ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு ராணுவ தளபதிகளுக்கு இடையே 19 சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து எல்லைக் கோடுகளை இன்னும் தீர்மானிக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது அவர்களின் நோக்கம் பதற்றத்தை குறைப்பது மட்டுமே. ஆனால் மெய்யான காட்டுப்பாடு கோட்டின் இருபுறமும் துருப்புக்களின் குவிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, பதற்றம் குறையும் என்று தெரியவில்லை. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை கடுமையாக்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், இதுபோன்று ராணுவத்தை குவிப்பது தொடர்ந்து அதிகரித்தால், இரு நாட்டு வீரர்களும் மீண்டும் மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்.

மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் மட்டும்தான் இத்தகைய மோதல்கள் நடைபெறுகின்றன என்று கூறிவிட முடியாது. மற்ற பகுதிகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான வேறுபாடுகள் உள்ளன.

இவான் லிடரேவ் இந்தியா-சீனா உறவுகள் தொடர்பாக புகழ்பெற்ற நிபுணராகவும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் குறுகிய கால ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். தெற்காசியாவில் இந்தியாவும் சீனாவும் சக்தி வாய்ந்த நாடுகள் என்று இவர் நம்புகிறார். இரு நாடுகளும் இந்த பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முயற்சிப்பது மோதலுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக அவர் கருகிறது.

இது தொடர்பாக பிபிசியிடம் அவர் பேசும்போது, “பாரம்பரியமாக தெற்காசியாவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் இதை ஓரளவு பெற்றுள்ளது. இரண்டாவதாக, இந்தியா தெற்காசியாவின் நடுவில் அமைந்துள்ளது. முன்னதாக, இந்த பிராந்தியத்தில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இல்லை. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் சீனா இந்தப் பகுதியில் தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. “குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் தனது இருப்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை அது தீவிரப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் பிரசந்தா உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

சீனாவிற்கு தெற்காசியா ஏன் மிகவும் முக்கியமானது?

இந்த கேள்விக்கு, பதிலளிக்கும்போது, “மலாக்கா தடுமாற்றம் பற்றி சீனா எப்போதும் அதிகமாக கவலைபடுகிறது. ஒரு மோதல் அல்லது போர் ஏற்பட்டால், மலாக்கா ஜலசந்தி வழியாக சீனப் படகுகள் செல்வதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா தனது பொருளாதாரத்தின் மீதான கயிற்றை இறுக்கிவிடக்கூடும் என்று சீனா கவலைப்படுவதைதான் மலாக்கா தடுமாற்றம் என்று குறிப்பிடுகின்றனர்” என இவான் லிடரேவ் கூறுகிறார்,

தொடர்ந்து பேசிய அவர், “மலாக்கா ஜலசந்தி வழியாக கப்பல்கள் மூலமாக ஏராளமான பொருட்கள் மற்றும் எரிசக்தி வளங்கள் சீனாவுக்கு செல்கின்றன. எனவே, இந்தியப் பெருங்கடல் வழியாக புதிய பாதைகளை உருவாக்குவதன் மூலம் மலாக்கா ஜலசந்தி பாதையை சார்ந்திருப்பதை குறைக்க சீனா விரும்புகிறது. எனவே, பாகிஸ்தான் ஒரு கடல் பாதையாகவும் மியான்மர் மற்றொரு கடல் பாதையாகவும் இருக்கிறது ” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தப் பகுதிகள் சீனாவின் பெரிய சந்தைகளாகவும் மாறலாம். அதனால்தான் அதிபர் ஷி ஜின்பிங் கடந்த பத்தாண்டுகளில் தனது கனவு திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை தொடங்கினார். இதன் நோக்கம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவை விமானம், கடல் மற்றும் தரை வழிகள் மூலம் இணைப்பதாகும். இந்தத் திட்டத்தில் 150 நாடுகளை இணைக்க சீனா நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் இந்தியாவை விட சீனா மிகவும் தீவிரமாக உள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கக்கூடிய ரயில், சாலை மற்றும் துறைமுகங்களின் வலையமைப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

தன்னாட்சி பெற்ற திபெத்தில் இருந்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு வரை ஒரு ரயில் பாதையை அமைக்கவும் ஷி ஜின்பிங் விரும்புகிறார். நேபாளம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் சூழப்பட்டுள்ளது, மேலும் அது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலின் மையமாகவும் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் நரேந்திர மோதி

இது தொடர்பாக இவான் லிடரேவ் கூறுகையில், “நேபாளத்துடன் இந்தியா சிறப்பான உறவைக் கொண்டுள்ளது, எனவே சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. நேபாளம் அதன் விநியோகத்திற்காக இந்தியாவை நம்பியிருக்கிறது. நேபாளத்தின் மீது அழுத்தம் கொடுக்க விரும்பும்போதெல்லாம் இந்தியா தனது விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது அல்லது நிறுத்துகிறது. நேபாளத்திற்கு பொருட்கள் ரயில் மற்றும் சாலை வழியாக செல்ல தொடங்கினால், அதன் மீதான இந்தியாவின் செல்வாக்கு குறையும்” என தெரிவித்தார்.

பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த, இந்தியாவும் இலங்கை மற்றும் வங்கதேசத்துடனான தனது உறவுகளை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.

சீனாவின் பொருளாதார செல்வாக்கை எதிர்கொள்ள இந்தியாவும் தெற்காசிய நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு, இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இந்தியா நான்கு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதி உதவியை வழங்கியது என இவான் லிடரேவ் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையும் சீனாவிடமிருந்து பல பில்லியன் டாலர்களை கடனாகப் பெற்றுள்ளது. கிழக்கு ஆசியாவில் தனது செல்வாக்கை அதிகரிக்க இந்தியாவும் முயற்சித்து வருகிறது. தெற்காசியாவில் இந்தியாவை குறிவைத்து சீனா என்ன செய்கிறதோ அதையே இந்தியா ஜப்பான் மற்றும் வியட்நாமுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி சீனாவை சுற்றி வளைக்க செய்கிறது என்கிறார் இவான் லிடரேவ்.

இவ்விருவருக்கும் இடையேயான இழுபறியை தவிர்க்க தெற்காசிய நாடுகள் தங்கள் உறவுகளில் சமநிலையை பேண முயல்கின்றன. ஆசியாவில் மட்டுமின்றி ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் செல்வாக்கை அதிகரிக்க இந்தியாவும் சீனாவும் போட்டி போடுகின்றன.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், AFP

பொருளாதார போட்டி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியை டாக்டர் கீதா கோச்சார், பிபிசியிடம் பேசும்போது, “தற்போது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் சர்ச்சையைத் தீர்க்க இந்தியா முயற்சிக்கிறது, ஏனெனில் எல்லையில் அமைதியை ஏற்படுத்தாமல், வர்த்தக விவகாரங்கள் குறித்து விவாதிக்க முடியாது என்பதை இந்தியா நம்புகிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சமநிலை இல்லாததும் பிரச்னையாக உள்ளது” என்றார்.

டாக்டர் கீதா மேலும் கூறுகையில், “சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, ஆனால் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி மிகவும் குறைவாக உள்ளது. உற்பத்தித் துறைக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. ஆனால், 2020க்குப் பிறகு, சீனாவைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கவும், உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

இது தவிர, இந்தியாவில் சீன நிறுவனங்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி வசூல் மற்றும் சீனாவின் தொழில்நுட்ப வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முடிவுகளும் இதில் அடங்கும்.

டாக்டர் கீதா கோச்சார் இது தொடர்பாக கூறும்போது, “சீன நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் செய்து வருகின்றன, ஆனால் அவற்றின் பணம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வங்கி முறையின் கீழ் மேற்கொள்ளப்படாமல் சீன செயலிகள் மூலம் செய்யப்படுகின்றன. அந்த நிதி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுவதில்லை என்பதால் அதன் மூலம் கிடைக்கவேண்டிய கட்டணங்கள், வரிகள் போன்றவை செலுத்தப்படாமல் இருந்தது. தற்போது அத்தகைய செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

2020 முதல், தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, டிக்டாக், வீ சாட் உள்ளிட்ட முந்நூறு சீன செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் நிச்சயமாக பிரச்சினைகள் உள்ளன, ஆனால் அவை தீர்க்கப்படாமல் உள்ளன.

மருந்து உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறைகளில் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவும் சீனாவும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாக்டர் கீதா கோச்சார் கூறுகிறார். இது தவிர, பல சீன நிறுவனங்கள், குறிப்பாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இன்னும் வர்த்தகம் செய்து வருகின்றன. அதேபோல் இந்திய நிறுவனங்களும் சீன நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. ஆனால் தற்போது பதற்றம் காரணமாக கூடுதல் வர்த்தகம் செய்ய இந்தியா நடத்தி வரும் பேச்சுவார்த்தை தாமதமாகி வருகிறது.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் நரேந்திர மோதி

இருநாட்டு உறவுகளில் எதிரொலிக்கும் பதற்றம்

லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS) இல் உள்ள சீனா இன்ஸ்டிடியூட் இயக்குனர் ஸ்டீவ் சாங், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போட்டி மற்றும் உறவு முக்கியமானது என்றும் இது மற்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய ஸ்டீவ் , “சீனாவும் இந்தியாவும் தங்கள் எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க முடியாவிட்டாலோ ஒரு போர் சூழ்நிலை ஏற்பட்டாலோ, உலகின் இரண்டு பெரிய அணுசக்தி சக்திகளுக்கு இடையே மோதல் ஏற்படலாம். சீனாவைப் பொறுத்த வரையில், இந்தியாவை அதன் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுவதாக நான் நினைக்கவில்லை. தற்போது சீனாவுக்கு எல்லையில் இந்தியா ஒரு பிரச்னையாக உள்ளது. அவ்வளவுதான்” என்றார்.

இந்தியா-சீனா உறவுகளை சர்வதேச சமூகம் கண்காணித்து வருகிறது. அமெரிக்கா இந்தியாவைக் கொஞ்சம் கவரவும், சீனாவைக் கொஞ்சம் தனிமைப்படுத்தவும் விரும்புகிறது என்றும் ஸ்டீவ் சாங் நம்புகிறார்.

ஜூன் 2023 இல், பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அவரது அமெரிக்க பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, இரு நாடுகளின் உறவு வரலாற்றில் மிக நெருக்கமானதாக இருப்பதாக பிரதமர் மோதி கூறியிருந்தார். ஆனால் நெருக்கடியான காலத்திலும் சோதனையிலும் அவர்கள் இப்படியே இருப்பார்களா?

இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டீவ் சாங், “சீனாவை பின்னுக்குத் தள்ள அமெரிக்காவுக்கு இந்தியா உதவும் என்று நினைப்பது வெறும் கனவுதான். பிரதமர் மோதியின் தலைமையின் கீழ், இந்தியா எப்போதும் தனது நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கும், அமெரிக்காவின் நலன்கள் மற்றும் மதிப்புகளுக்கு அல்ல” என்றார்.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

புடின், மோதி, ஷி ஜின்பிங்

இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுகிறது, ரஷ்யா சீனாவுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் பல பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தேவைகளை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முறையிட்ட போதிலும், யுக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவை இந்தியா கண்டிக்காததற்கு இதுவே காரணம்.

சீனாவும் ரஷ்யாவை பகிரங்கமாக கண்டிக்கவில்லை. டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் கூட்டறிக்கையில், யுக்ரைனில் நடந்த நடவடிக்கைகள் தொடர்பாக ரஷ்யா மீது நேரடியாக குற்றஞ்சாட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவும் சீனாவும் ஒன்றாகவே இருந்தன. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று தெரிகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அடிப்படை பிரச்சனைகள் மற்றும் பதற்றங்கள் மாறாது; மேலும் உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது ஸ்டீவ் சாங் கருத்து. ஆனால் தனிப்பட்ட அளவில் ஷி ஜின்பிங் மற்றும் நரேந்திர மோதி இடையே நல்லுறவு உள்ளது. ஆனால் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேம்படுத்த உலகின் பிற நாடுகளால் எதுவும் செய்ய முடியாது.

எனவே இந்தியாவும் சீனாவும் தாங்களாகவே உறவை சீர் செய்துகொள்ளுமா?

பிரிக்ஸ் மாநாட்டின் போது ஷி ஜின்பிங் மற்றும் நரேந்திர மோதி இடையேயான சந்திப்பு சுமூகமாக இருந்தது, ஆனால் எல்லைப் பிரச்னை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என்று தெரியவில்லை.

பேச்சுவார்த்தையின் கதவுகள் மூடப்படவில்லை என்றும், மோதலை தவிர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஷிபானி மேத்தா கூறுகிறார். இதுவும் ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம்தான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *