ஜெய் ஷா: பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்களை இந்தியாவின் பிசிசிஐ நசுக்குகிறதா?

ஜெய் ஷா: பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்களை இந்தியாவின் பிசிசிஐ நசுக்குகிறதா?

கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, ஜெய் ஷா

பட மூலாதாரம், Getty Images

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. கோப்பையை வெல்லாவிடினும், இந்தியா தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது.

இந்தப் போட்டித் தொடர் ஆடுகளத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வலிமையை வெளிப்படுத்திய அதே சமயம், கிரிக்கெட் குடும்பத்திற்குள் உள்ள சில முறிவுகளையும் உரசல்களையும் வெளியே கொண்டுவந்திருக்கிறது.

குறிப்பிட்டுச் சொல்வதெனில், இந்திய கிரிக்கெட் வாரியம் பல விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.

இதனால் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் அண்டை நாடுகள் பி.சி.சி.ஐ மீது அதிருப்தியில் இருக்கின்றனவா?

ஆப்கானிஸ்தான், மற்றும் நேபாளம் தவிர, பாகிஸ்தான், இலங்கை, மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று முக்கிய தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் சமீபத்தில் பி.சி.சி.ஐ அமைப்பினால் பிரச்னைகள் சந்தித்திருக்கின்றனர், அல்லது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

என்ன நடக்கிறது இந்த விஷயத்தில்?

கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, ஜெய் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரனதுங்க

ஜெய் ஷாவின்மீது குற்றம் சாட்டிய ரணதுங்க

சமீபத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விவகாரங்களில் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா ஆதிக்கம் செலுத்துவதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டினார்.

அதன் பின்னர், இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வ மன்னிப்பு மற்றும் விளக்கத்தை வெளியிட்டது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் சிறிது காலமாகவே குழப்பத்தில் உள்ளது. ஆனால் உலகக் கோப்பையில் அவர்களது அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் குழப்பம் வலுத்து, அரசாங்கம் தலையிட்டது. இதன் விளைவாக ஐ.சி.சி அனைத்து கிரிக்கெட் விஷயங்களிலிருந்தும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்தது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ரணதுங்க, “இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக, அவர்கள் (பி.சி.சி.ஐ) இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஒடுக்கிக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஜெய் ஷா தான் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்தி வருகிறார். ஜெய் ஷா கொடுக்கும் அழுத்தத்தால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அழிக்கப்படுகிறது. ஒரு இந்தியர் இலங்கை கிரிக்கெட்டைச் சீரழிக்கிறார். அவரது தந்தை இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால் மட்டுமே அவருக்கு இந்த அதிகாரம் கிடைத்திருக்கிறது,” என்று அவர் கூறியிருந்தார்.

ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.

ரணதுங்கவின் கருத்துக்குப் பிறகு, இலங்கை அரசாங்கம் முறையான மன்னிப்பைத் தெரிவித்தது.

இது தொடர்பாக இலங்கை அமைச்சர் காஞ்சன விஜேசேகர அந்நட்டின் பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்ததுடன், தங்கள் நிறுவனத்தின் குறைபாடுகளுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரையோ, பிற நாடுகளையோ குற்றம் சாட்ட முடியாது என்றார்.

கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, ஜெய் ஷா

பட மூலாதாரம், BCCI

படக்குறிப்பு,

ஆசியக் கோப்பைத் தொடரைக் கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல பி.சி.சி.ஐ மறுத்துவிட்டது

‘ஐ.சி.சி உலகக் கோப்பை பி.சி.சி.ஐ-இன் போட்டியா?’

பொதுவாக ஐ.சி.சி நடத்தும் ஒரு நிகழ்வில், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் தங்கள் அணிகளுக்கு ஆதரவளிக்க அதிக எண்ணிக்கையில் வருவார்கள்.

ஆனால், கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நட்ந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் பல பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்தியா வர விசா கிடைக்காததால், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்திய ஜெர்சிகளாலான ‘நீலக்கடல்’ மட்டுமே இருந்தது.

இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர், “இது ஒரு ஐ.சி.சி நிகழ்வுபோலத் தெரியவில்லை. இது பி.சி.சி.ஐ நிகழ்வைப்போல, ஒரு இருதரப்புத் தொடர்போலத் தோன்றியது,” என்றார்.

மேலும், “ஸ்பீக்கர்களில் ‘தில் தில் பாகிஸ்தான்’ பாடலை நான் கேட்கவில்லை,” என்று ஆர்தர் குறிப்பிட்டார். இப்பாடல் பாகிஸ்தானின் விளையாட்டு கீதமாக மாறியிருக்கும் ஒன்று.

சில நாட்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தபோது, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ‘தில் தில் பாகிஸ்தான்’ பாடல் சென்னையிலும் ஒலிக்கப்படவில்லை போல’ என்று கேலியாகச் சொல்லியுருந்தார்.

இது தவிர, சில முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், டாஸ் மற்றும் ஆடுகளம் ஆகியவை இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கின்றன என்று குற்றம் சாட்டினர். ஆனால் அவை ஆதாரமற்ற கூற்றுகள்.

இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையொருவர் பற்றி இப்படிப் பேசிக்கொள்வது புதிதல்ல.

இருப்பினும் சமீப காலங்களில், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டு பெரிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான அதிகார உரசல்களைக் காட்டும் நிகழ்வுகள் நடந்தேறின.

முன்னதாக, ஐ.சி.சி-இல் நிதி எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியிருந்தது. பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜாம் சேத்தி, இந்தியா அணி நிதியில் பெரும் பங்கைப் பெற வேண்டும் என்று ஒப்புக்கொண்டார். அவர் முன்மொழியப்பட்ட வருவாய் மாதிரி மீது அதிருப்தி தெரிவித்தார்.

கிரிக்கெட், பிசிசிஐ, ஐசிசி, ஜெய் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிக்கல்கள்

உலகக் கோப்பைத் தொடருக்குச் சற்று முன்பு, ஆசியக் கோப்பை தொடர்பாக இரு அண்டைநாட்டுக் கிரிக்கெட் வாரியங்களுக்கும் அணிகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.

ஆசியக் கோப்பைத் தொடரை பாகிஸ்தான் நடத்திய போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல பி.சி.சி.ஐ மறுத்துவிட்டது.

இந்த ஆண்டு மே 28-ஆம் தேதி, ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் பங்கேற்குமாறு இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்களின் தலைவர்களுக்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்தது.

இதில் கான்டினென்டல் கோப்பை மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கப்படவில்லை.

இறுதியில், ஆசியக் கோப்பைக்கான பயணத்திட்டம் மாற்றப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ உடன் இணைந்திருக்க முடிவு செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்குள் எந்த ஆதரவும் இல்லாமல் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசியக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து நடத்துவதாகப் பரிந்துரைத்தது. ஆனால், அமீரகத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தைக் காரணம் காட்டி இலங்கை மற்றும் வங்கதேசம் இத்திட்டத்தை எதிர்த்தன. அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கையுடன் இணைந்து போட்டியை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜெய் ஷா

பட மூலாதாரம், Getty Images

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பி.சி.சி.ஐ செயலாளருமான ஜெய் ஷா, இலங்கைக்கு பாரபட்சம் காட்டுவதாக ஒரு எக்ஸ் சமூகவலைதளத்தில் ஒரு நீண்ட பதிவிட்டுக் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு ஜெய் ஷா ஒரு அறிக்கை வெளியிட்டு பதிலளித்தார். அதில் ‘முழு உறுப்பினர்களும், ஊடக உரிமைகள் வைத்திருப்பவர்களும், மைதான உரிமை வைத்திருப்பவர்களும் ஆரம்பத்தில் முழுப் போட்டியையும் பாகிஸ்தானில் நடத்துவதற்கு உறுதியளிக்கத் தயங்கினார்கள்,’ என்றிருந்தார். “இந்தத் தயக்கத்திற்கு காரணம் பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பான கவலைகள் ,” என்றிருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடந்த ‘பல தலைமை மாற்றங்களினால்’ பேச்சுவார்த்தைகள் முன்னும் பின்னுமாக நடந்தன என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

பின்னர், கொழும்பில் ஆட்டங்கள் கைவிடப்பட்டபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் வரியத்தின் தலைவர் ஜாகா அஷ்ரஃப் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம், மழை காரணமாக கொழும்பில் நடக்காமல் போன ஆட்டங்களுக்காக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த நிகழ்வும் இரண்டு ஆசிய ஜாம்பவான்களுக்கிடையேயான கிரிக்கெட்டின் உறவை மேலும் சேதப்படுத்தியது.

வங்கதேசம் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன?

இதே ஆசிய கோப்பையின் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் வாரியமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது.

வங்கதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் தலைவர் ஜலால் யூனுஸ், போட்டியின் போது தங்கள் வீரர்கள் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பயணிக்க வேண்டியிருந்ததால் அதிருப்தி தெரிவித்தார்.

வங்கதேசத்தின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க, கொழும்பில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் சூப்பர் ஃபோர் போட்டிக்கு ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் நாளை சேர்த்தது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இது ஒருதலைபட்சமானது என்றும் குறியிருந்தார்.

சில முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட ரிசர்வ் நாளை சேர்க்கும் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

ஆனால் வங்கதேச கிரிக்கெட் வாரியமும், இலங்கை கிரிக்கெட் வாரியமும், அந்த முடிவு நான்கு பங்கேற்கும் அணிகள் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகியோரின் ஒப்புதலுடந்தான் எடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தி, இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *