
பட மூலாதாரம், Getty Images
ரோகித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் ரோகித் அடித்த ஏழாவது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் 6 சதங்கள் அடித்ததிருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக மிக விரைவான சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவின் 31வது சதமாகும்.
ரோகித் சர்மா இந்தப் போட்டியில் மேலும் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பையில் மிகக் குறைவான இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.
இந்த சாதனையை உலகக் கோப்பையில் தனது 19வது இன்னிங்சில் நிகழ்த்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 19 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியாவிற்கு 273 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ரோகித் சர்மாவின் சதத்தால், இந்திய அணி 18.4 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இந்தியாவின் முதல் விக்கெட்டாக இஷான் கிஷன் (47 ரன்) வீழ்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அசத்தலாக ஆடி சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிவெற்றி இலக்கை நெருங்குகையில் ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளில் 16 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்தார். அடுத்தாக களமிறங்கிய ஸ்ரேயாஸ், நட்சத்திர வீரர் கோலியுடன் நிலைத்து ஆடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கோலி 56 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயாஸ் 25 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 35-வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும். முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா அபாரமாக வென்றிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ்
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ராவும் குல்தீப் யாதவும் சிறப்பாக பந்துவீசினர். பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் அணித்தலைவர் ஹஷ்மதுல்லாவையும் வீழ்த்தினார். இருவரும் மிகவும் சிக்கனமாக பந்துவீசினர்.
ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி 80 ரன்கள் அடித்தார். அஸ்மதுல்லா உமர்ஜாய் 62 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.
டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான விக்கெட் கீப்பர் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் நிதானமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்தனர்.
ஏழாவது ஓவரில், ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில், ஜாட்ரனை (22 ரன்கள்) விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் அற்புதமான கேட்ச் பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு முதல் அடியை கொடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
13வது ஓவரில், ஹர்திக் பாண்டியா இரண்டாவது தொடக்க வீரரான குர்பாஸை (21 ரன்கள்) வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே, ஷர்துல் தாக்கூர் ஆப்கானிஸ்தானுக்கு மூன்றாவது அடியைக் கொடுத்தார்.
இதன் பிறகு, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடியும் அஸ்மதுல்லா உமர்ஜாயும் இணைந்து சிறப்பாக ஆடி நான்காவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தனர்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டனுக்கும் முகமது நபிக்கும் இடையே 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது, அதன் பிறகு ஆப்கானிஸ்தானின் விக்கெட்டுகள் தவறான நேரத்தில் விழத் தொடங்கின.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு
ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவிற்காக சிறப்பாக பந்துவீசினார், அவர் போட்டியின் 7வது, 45வது, 46வது மற்றும் 49வது ஓவர்களில் நான்கு பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார்.
அவரது 10 ஓவர்களில், பும்ரா 40 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் பும்ராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்காக மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக இருந்தவர் குல்தீப் யாதவ். குல்தீப் யாதவ் ஆரம்பத்திலேயே மிகவும் சிறப்பாக பந்துவீசினார். முதல் நான்கு ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் ஐந்தாவது ஓவரில் அஸ்மதுல்லா உமார்ஜாய் இரண்டு சிக்சர்களை விளாசினார். இதைடுத்து, அவருக்கு ஓய்வு கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, 34வது ஓவரை வீச அவரை மீண்டும் அழைத்தார். அப்போது, அஸ்மதுல்லா மீண்டும் ஒரு சிக்சர் அடித்தார்.
அடுத்தடுத்த ஓவர்களில், குல்தீப் யாதவ் கவனமாக பந்துகளை வீசி கடைசி மூன்று ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
குல்தீப் தனது 10வது ஓவரில் ஆப்கானிஸ்தான் கேப்டனின் விக்கெட்டை வீழ்த்தி, கடைசி ஓவர்களில் தனது சிறப்பான பந்துவீச்சுக்கான பலனைப் பெற்றார். அவர் போட்டியின் 43வது ஓவரில் குல்தீப் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரன்களை வாரியிறைத்த சிராஜ்
ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியின் போது பந்துவீச்சால் அசத்திய முகமது சிராஜ், இந்தப் போட்டியில் அதிக ரன்களை வாரிக் கொடுத்தார்.
சிராஜ் ஏழு ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளிலும் மொத்தம் 11 பவுண்டரிகள் அடிக்கப்பட்ட நிலையில், சிராஜின் பந்துகளில் மட்டும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 10 பவுண்டரிகள் அடித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்