IND vs AUS: சென்னை ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு கிலியை ஏற்படுத்துவது ஏன்?

IND vs AUS: சென்னை ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு கிலியை ஏற்படுத்துவது ஏன்?

சென்னை

பட மூலாதாரம், Getty Images

தனது உலகக் கோப்பைத் தொடர் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு ஆடுகளம் உதவியிருக்கிறதா? இந்தக் களத்தில் 200 ரன்கள் அடிக்க இரு அணி வீரர்களும் திணறியது ஏன்?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 08) நடந்த உலகக் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

200 ரன்கள் வெற்றி இலக்கை 52 பந்துகள் மீதமிருக்கையில்தான் இந்திய அணியால் எட்டமுடிந்தது என்பதால் நிகர ரன்ரேட்டும் பெரிதாக உயரவில்லை. அதேசமயம், இந்திய அணியை எளிதாக வெற்றி பெறவிடாமல் ஆட்டத்தை இழுத்துவந்ததால், ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட்டும் பெரிதாக மைனசில் செல்லாததும் அந்த அணிக்கு சாதகமான அம்சமாக அமைந்தது.

இமாலய ரன் குவிப்பும் சரியும் விக்கெட்டுகளும்

இந்த உலகக் கோப்பைத் தொடர் சற்றே முரண்பட்ட ஆட்டங்களுடன் நடந்து வருகிறது. ஒருபக்கம், இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து இமாலய ஸ்கோரை எட்டியது. ஆனால் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 200 ரன்களைக் கூட ஆஸ்திரேலிய அணியால் எட்டமுடியவில்லை.

சேப்பாக்கம் ஆடுகளம், பேட்ஸ்மேன்களை வலுவான ஷாட்களை அடிக்க அனுமதிக்கவோ அல்லது புதுமையான 360 ஸ்ட்ரோக் பிளேகளுக்கோ கைகொடுக்கவில்லை. ஆனால் குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்வதற்கான மல்யுத்தமாக மாறி பல நவீன ‘ஒயிட்-பால்’ போட்டிகளின் போக்கையே மாற்றிவிட்டது.

ஹைதராபாத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்த அணி அடித்த ஸ்கோரை வைத்தே ரசிகர்கள் ஊகித்துவிட்டனர்.

கிரிக்கெட் உலகக் கோப்பை, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விராட் கோலி (85), கே.எல்.ராகுல் (97) கூட்டணியின் ஆட்டம் சற்று மந்தமாக இருந்தாலும், அவர்கள் வெற்றியை நோக்கி இந்திய அணியை நகர்த்தினார்கள்

சுவாரஸ்யத்தைக் குறைக்காத சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா எடுத்த 199 ரன்கள் சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர்தான் என்றாலும், சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையால், இந்திய அணியால் சேஸிங் செய்ய முடியுமா என்பது ரசிகர்களுக்கு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேள்வி எழுந்துவிட்டது.

ஏனென்றால், 2 ரன்களுக்கு ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஆகியோரின் விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதைப் பார்த்த அரங்கில் இருந்த 33 ஆயிரம் ரசிகர்களும் இந்திய அணி வெல்லுமா என்ற பதற்றத்துக்கு ஆளாகினார். இந்திய அணி குறைந்த ஸ்கோரே அடித்த போட்டியாக இருந்தாலும், கோலி, ராகுல் ஆட்டமிழந்து, ஆட்டம் எந்த நேரத்திலும் மாறலாம் என்ற சூழ்நிலையில், போட்டி வெகு சுவரஸ்யமாகவே சென்றது.

விராட் கோலி (85), கே.எல்.ராகுல் (97) கூட்டணியின் ஆட்டம் சற்று மந்தமாக இருந்தாலும், அவர்கள் வெற்றியை நோக்கி இந்திய அணியை நகர்த்துகிறார்கள் என்ற மகிழ்ச்சி, ரசிகர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்தது.

கிரிக்கெட் உலகக் கோப்பை, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

சேப்பாக்கம் மைதானத்தின் ‘ சென்டிமென்ட்’ மாறியது

சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்ற மைதானங்களில் இருந்து வேறுபட்டது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பதால், பகலிரவு ஆட்டங்களில் லேசான பனிப்பொழிவு அல்லது காற்றில் ஈரப்பதம் இருக்கவே செய்யும். இது இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

இந்த மைதானத்தில் 1987-ஆம் ஆண்டு முதல்முறையாக ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது. இப்போதுவரை இந்த மைதானத்தில் 23 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், 14 முறை முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன. ஆதலால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட் செய்யவே விரும்புவார்கள். இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்தால் குறைந்தபட்சம் 280 ரன்கள் வரை அடிக்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப்பின் சென்னையில் நடந்த ஆட்டங்களில் இந்திய அணி ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. கடைசியாக இங்கு 2023-ஆம் ஆண்டு, மார்ச் 22-ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில்கூட இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வீழ்த்தியது என்பதால் இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ‘சென்டிமென்ட்’டாக பார்க்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல், கடந்த 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இந்திய அணியை ஒரு ரன்னில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் ஆஸ்திரேலிய அணிக்கே சாதகமாக இருந்ததால், சேப்பாக்கம் மைதானம் என்றாலே இந்திய அணிக்கு ‘சென்டிமென்ட்’டாக சரிவருமா என்று ரசிகர்கள் கவலையடைந்தனர்.

ஆனால், இந்த ‘சென்டிமென்ட்கள்’ அனைத்தையும் நேற்று ராகுல், விராட் கோலி கூட்டணி உடைத்தெறிந்துவிட்டனர். சென்னையில் 1987-ஆம் ஆண்டுக்குப்பின், அதாவது ஏறக்குறைய 36 ஆண்டுகளுப்பின், நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி முதல்முறையாக வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் உலகக் கோப்பை, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கம்மின்ஸின் ஒட்டுமொத்த கணக்கையும் சேப்பாக்கம் ஆடுகளம் மாற்றியது, ஆட்டம் ஒருதரப்பாகவே முடிந்துவிட்டது

தவறாகிப் போன கம்மின்ஸின் கணிப்பு

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், சேப்பாக்கம் மைதானத்தின் கடந்த கால வரலாறுகளின் அடிப்படையில், போட்டியில் டாஸ் வென்றவுடன் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். 2-வது இன்னிங்ஸில் பந்து நின்று பேட்ஸ்மேனுக்கு வரும் சுழற்பந்துவீச்சுக்கும், சீமர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கணக்கிட்டிருக்கலாம். ஆனால், கம்மின்ஸின் ஒட்டுமொத்த கணக்கையும் சேப்பாக்கம் ஆடுகளம் மாற்றியது, ஆட்டம் ஒருதரப்பாகவே முடிந்துவிட்டது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ‘கறுப்பு மண்ணால்’ (பிளாக் சாயில்) அமைக்கப்பட்ட ஆடுகளம். ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், தொடக்கத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகவும் செய்யும். ஆனால், பந்து மெதுவாகவும், பிட்ச் ஆனபின்பு பேட்ஸ்மேனை நோக்கி நின்று வரும்.

அதனால், முதல் 10 ஓவர்கள் வரை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். ஆனால், நேரம் செல்லச் செல்ல ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாகவும், அதேசமயம் ஓரளவு பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவும் இருக்கும் என்பது பொதுவான கணிப்பு. அதிலும் பந்தின் பாலிஷ் குறைந்தபின் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாகப் பிடித்து வீசுவதற்கும் சுழற்பந்துவீச்சுக்கும் இந்த ஆடுகளம் உதவும் என்று பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம்

பட மூலாதாரம், Getty Images

ஆடுகளத்தின் தன்மை மாறியது ஏன்?

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடக்கத்தில் இந்திய அணி பந்துவீசும்போது பும்ரா, சிராஜ் பந்துகளை ஆடுவதற்கே ஆஸ்திரேலிய பேட்டர்கள் சிரமப்பட்டனர். வார்னர் மிகவும் சிரமப்பட்டார், மார்ஷ் வந்த வேகத்திலேயே சென்றுவிட்டார்.

சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தபின் ஆட்டத்தின் போக்கே மாறியது. ஜடேஜா, குல்தீப், அஸ்வின் மூவரும் மும்முனைத்தாக்குதல் தொடுத்து ஆஸ்திரேலிய ரன் குவிப்பை பெரிதும் தடுத்தனர்.

ஆஸ்திரேலிய பேட்டர்கள் பெரும்பாலும் வேகமான ஆடுகளங்களில் விளையாடிப் பழகியவர்கள். அந்நாட்டில் உள்ள மெல்போர்ன், சிட்னி, காபா, ஓவல் உள்ளிட்ட ஆடுகளங்களும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை. ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானம் போன்ற ஸ்லோ-பிட்சுகளில் விளையாடிய அனுபவம் குறைவாகும். அதிலும் பந்து பிட்ச் ஆனபின், நின்று பேட்ஸ்மேனை நோக்கி வரும்போது, வேகமான ‘பேட்டிங் ஆக்ஷன்’ விக்கெட்டை இழக்கச் செய்யும். பந்தை கணித்து ஆடுவதிலும் பேட்டர்களுக்கு சிரமம் இருக்கும்.

இந்த நிலைதான் நேற்று ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு ஏற்பட்டது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தவறான பந்துவீச்சைக் கையாள்வார்கள், அதில் ரன் சேர்க்கலாம் என்று ஆஸ்திரேலிய பேட்டர்கள் காத்திருந்தனர்.

ஆனால், சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை. ஸ்வீப் ஷாட்கள் மூலம் ரன்களை சேர்க்கலாம் என்று திட்டமிட்டு நேற்று 13 ஸ்வீப்ஷாட்களை ஆடி, அதில் வெறும் 7 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய பேட்டர்களால் எடுக்க முடிந்தது, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இறங்கிவந்து அடிக்க முற்பட்டு, அதிலும் வெறும் 11 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய பேட்டர்கள் சேர்த்தனர்.

கிரிக்கெட் உலகக் கோப்பை, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தன்னை டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று நிதானமாக விளையாடுமாறு கோலி அறிவுறுத்தியதாக ராகுல் கூறினார்

ஏறக்குறைய 30 ஓவர்களை வீசிய சுழற்பந்துவீச்சாளர்கள் 16.5 ஓவர்களை டாட் பந்துகளாகவே வீசியுள்ளனர், 104 ரன்களை வழங்கி 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஏற்கெனவே சென்னை வெயிலுக்கு திணறிய ஆஸ்திரேலிய பேட்டர்களை, இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மேலும் திக்குமுக்காடச்செய்தனர்.

சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்த ஆடுகளதில் லைன்-லென்த்தில் பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால், பேட்டர்களால் அடித்து ஆடுவது மிகமிக கடினமாகிவிடும். அதிலும் சேப்பாக்கம் மைதானத்தில் ஸ்ட்ரெய்ட் பவுண்டரி தொலைவு அதிகம் என்பதால், ஸ்ட்ரெய்ட் பவுண்டரி அடிப்பதும் கடினமாகும். இதனால் நேற்று ஆஸ்திரேலிய பேட்டர்களால் ரன் சேர்ப்பது கடினமாகிவிட்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் கடற்கரை ஓரத்தில் இருப்பதால் நேற்று திடீரென இரவு லேசான பனிப்பொழிவு இருந்தது பந்தை இருமுறை மாற்றியபோதே தெரிந்தது. இதனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் புதிய பந்தை இறுகப் பற்றி வீசுவதில் பெரிய சிரமத்தை எதிர்கொண்டனர்.

அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களான ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் ஆகியோரால் பந்தை இறுகப்பற்றி வீச முடியாவில்லை. இதனால்தான் ஸம்பா 53 ரன்கள் வழங்கியும் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. சென்னையில் காற்றில் அதிகமாக ஈரப்பதம் இருந்தது, கடற்கரைக் காற்றின் ஈரப்பதம் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காமல் போனது.

கோலி ராகுலுக்கு கூறிய அறிவுரை

சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை குறித்து கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் “ஆடுகளத்துக்குள் நான் வந்தவுடன் என்னிடம் கோலி, அடித்து ஆடாதே, டெஸ்ட் போட்டி போன்று நிதானமாக விளையாடு என அறிவுறுத்தினார். அதுபோலவே விளையாடினேன். பந்துகள் பேட்டிற்கு வருவது சற்று தாமதமானது. ஆனால் நேரம் செல்லச் செல்ல திடீரென ஆடுகளம் மாறி பந்து நன்றாக வழுக்கிக்கொண்டு, பேட்டை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது,” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த ஆடுகளத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. இதை ‘சிறந்த பேட்டிங் விக்கெட்’ என்றும் கூற முடியாது, பேட்டிங் செய்வதற்கு கடினமானது என்றும் கூற முடியாது. சேப்பாக்கம் ஆடுகளம் சிறந்த கிரிக்கெட் ஆடுகளம் அதனால்தான் கடைசியில் என்னால் சிக்ஸர் அடிக்க முடிந்தது,” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகக் கோப்பை, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

3 ஆடுகளங்களிலும் ரோலர் இறுக்கமாக ஓட்டப்பட்டு பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றப்பட்டது என்கிறார் ஆடுகளத்தை பராமரிக்கும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி

ஆடுகள பராமரிப்பாளர் என்ன சொல்கிறார்

ஆனால், உண்மையில் சேப்பாக்கம் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டிருந்து என்கிறார் ஆடுகளத்தை பராமரிக்கும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி. ஒரு ஆங்கில இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் “சேப்பாக்கம் கறுப்பு மண் ஆடுகளம் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்குசாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் மொத்தம் 9 ஆடுகளங்கள் உள்ளன. இதில் 3 ஆடுகளங்கள் மைதானத்தின் மையத்தில் இருக்கிறது,” என்று கூறினார்.

மேலும் அவர், “இந்த 3 ஆடுகளங்களிலும் ரோலர் இறுக்கமாக ஓட்டப்பட்டு பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றப்பட்டது. உலகக் கோப்பையின் முதல்பகுதிவரை பேட்டிங்கிற்கு ஏதுவாக மைதானம் அமைக்கப்பட்டது. இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு கூட கடினமான ஆடுகளங்கள்தான் பயன்படுத்தப்போகிறோம் ” எனத் தெரிவித்தார்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்

இந்த மைதானத்தைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி அளித்த பேட்டியில், “சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதுமே இரு அணிகளுக்கும் சமமான போட்டி இருக்கும். அக்டோபர் மாதம் அருமையானது. அந்த நேரத்தில் சேப்பாக்கம் மைதான ஆடுகளம் நன்றாக செட்டாகி இருக்கும். அதிலும் சேப்பாக்கம் மைதானத்தில் பகலிரவு ஆட்டம் நடப்பதால், பேட்டர்களுக்கு ஏதுவாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் வெற்றிக்குச் சுழற்பந்துவீச்சாளர்கள் எந்த அளவு காரணமோ அதே அளவு, ஆடுகளமும் காரணமாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அனைவரது கணிப்பையும் மாற்றியது இரவு நேரத்தில் இருந்த லேசான பனிப்பொழிவும், காற்றில் இருந்த கூடுதல் ஈரப்பதம்தான்.

கிரிக்கெட் உலகக் கோப்பை, இந்தியா, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

லக்னோ மைதானத்தில் உள்ள ஆடுகளமும் பிளாக்-சாயிலால் அமைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுடன் மோதும் ஆட்டம் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்குச் சவாலாகவே இருக்கும்

ஆஸ்திரேலியா அடுத்து என்ன செய்யப் போகிறது?

ஆஸ்திரேலியா அடுத்ததாக லக்னோவில் விளையாட உள்ளது. இந்திய ஆடுகளங்களிலேயே சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் மைதானங்களில் லக்னோவும் ஒன்று. அந்த மைதானத்தில் உள்ள ஆடுகளமும் பிளாக்-சாயிலால் அமைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுடன் மோதும் ஆட்டம் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்குச் சவாலாகவே இருக்கும்.

ஏனென்றால், லக்னௌ ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதாகமாக இருந்துவிட்டால், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் தப்பித்துக்கொள்ள முடியும். ஏனென்றால், தென் ஆப்பிரிக்காவில் ஷாம்ஸி, கேசவ் மகராஜ், மார்க்ரம் ஆகிய 3 பேர் இருக்கிறார்கள், இலங்கை அணியிலும் வெல்லாலகே, தனஞ்செயா, துஷன் ஹேமந்தா என சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா தவிர யாருமில்லை. இதனால் ஆஸ்திரேலியா லக்னோவில் பெரிய சிக்கலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *