சென்னை வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் ஒரே வீட்டில் தஞ்சமடைந்த 15 பேரின் நிலை என்ன?

சென்னை வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் ஒரே வீட்டில் தஞ்சமடைந்த 15 பேரின் நிலை என்ன?

சென்னை வெள்ளம் முடிச்சூர்
படக்குறிப்பு,

மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீர் 4 நாட்களைக் கடந்தும் இன்னும் முழுமையாக வடியவில்லை.

இரண்டு மாத கைக்குழந்தையுடன் மூன்று நாட்களாக மின்சாரம், குடிநீர் இல்லாமல், வெள்ள நீரும் முழுமையாக வடியாமல் முதல் மாடியில் தவித்து வருகின்றனர் முடிச்சூர் சாலை அருகே ஒரு குடும்பத்தினர்.

பதினைந்து பேர் கொண்ட அந்தக் குடும்பம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் பேரூராட்சிப் பகுதியில் குட்வில் நகரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

அடையாற்றின் தொடக்கப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பெருங்களத்தூர் பேரூராட்சிப் பகுதிகள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ள நீரால் சூழ்ந்து வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகள் காரணமாகக் கடந்த எட்டு ஆண்டுகளாக வெள்ளம் ஏற்படவில்லை.

ஆனால், மிக்ஜம் புயலின்போது, அதிகனமழையால், வெள்ள நீர் குடியிருப்புகள் முழுவதும் ஏழு அடி உயரத்துக்குச் சூழ்ந்து நின்றது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள மக்கள் பலர் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர்.

பொதுமக்களுக்கு நேர்ந்த அவலநிலை

சென்னை வெள்ளம் முடிச்சூர்

அந்த வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்களில் ஒன்றுதான் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் வினோத்தின் குடும்பம்.

ஒரு கர்ப்பிணிப் பெண், இரண்டு மாத கைக் குழந்தை, ஒன்றரை வயது குழந்தை, ஆறு வயது குழந்தைகள் இரண்டு பேர், 86 வயது பாட்டி, 72 வயது முதியவர், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து முடித்திருக்கும் 60 வயது பெண் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இவர்கள் தங்கியிருக்கும் இரண்டு வீடுகளில் சுற்றுச்சுவர் மூழ்கும் அளவுக்கு திங்கள்கிழமை மாலை, தரைத் தளம் முழுவதும் தண்ணீர் புகுந்துவிட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் காரணமாக மாடியில் அவசர தேவைக்கு சில அறைகள் கட்டி வைத்துள்ளனர். அந்த அறைகளில்தான் தற்போது அனைவருமே தஞ்சம் புகுந்துள்ளனர்.

தற்காலிகமாக அமைத்துக் கொண்ட அடுப்பில் சிறிதளவு சமைத்துக் கொள்கின்றனர். வெள்ள நீரில் இருந்து முடிந்த வரை எடுத்துக்கொண்ட தக்காளி, வெங்காயம், மளிகைப் பொருட்களை வைத்து பதினைந்து பேரும் சாப்பிட்டு வருகின்றனர்.

சென்னை வெள்ளம் முடிச்சூர்
படக்குறிப்பு,

கீழ்தளத்தில் மழைநீர் புகுந்த நிலையில், மாடியில் தற்காலிகமாக சமையல் செய்யப்படுகிறது.

வெள்ள நீர் உள்ளே புகுந்து மூன்று நாட்களாக, தங்களை வெளியேற்ற படகுகளோ, உணவு, குடிநீர் போன்ற நிவாரணப் பொருட்களோ கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

“திங்கள்கிழமை மாலை உள்ளே வரத் தொடங்கிய நீர் திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. முக்கியமான ஆவணங்கள், தேவைப்படும் மளிகைப் பொருட்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு மாடியில் உள்ள அறைக்குச் சென்று விட்டோம். குடிநீர் மற்றும் பால் கிடைக்கவே இல்லை. மிகவும் சிரமப்பட்டோம்,” என்றார்.

மின்சாரம் இல்லாததால் தூங்காத இரண்டு மாத கைக் குழந்தைக்கு இரவெல்லாம் அட்டை வைத்து விசிறிக்கொண்டே இருந்ததாக குழந்தையின் தாய் பப்யா கூறுகிறார்.

“இரண்டு மாத குழந்தை என்பதால், எந்தத் தொற்றும் ஏற்படாமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. குழந்தைக்கு உடல் சுகம் இல்லை என்றால், இங்கிருந்து மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல முடியாதே.

குழந்தையை இரவில் தூங்க வைப்பதற்காக நானும் என் சகோதரியும் விழித்திருப்பதால், நாங்கள் தூங்கியே இரண்டு நாட்கள் ஆகிறது,” என்றார் அவர்.

மருத்துவ தேவைகளை மக்கள் எப்படிச் சமாளித்தனர்?

சென்னை வெள்ளம் முடிச்சூர்
படக்குறிப்பு,

மின்சார வசதியில்லாத நிலையில், குடிநீருக்காக சில கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை, சென்னை புறநகர் பகுதியில் பரவலாக உள்ளது.

குடியிருப்புகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் மருத்துவத் தேவைக்கு வெளியே செல்ல முடியவில்லை என்றும், சானிட்டரி நாப்கின்கள் வாங்கிக் கொள்ளக்கூட முடியாத அவல நிலை இருப்பதாகவும் அந்தக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அங்கு வசிக்கும் வித்யா, “எனது ஒன்றரை வயது குழந்தைக்கு காதில் கட்டி இருக்கிறது என்பதை காலையில்தான் பார்க்க முடிந்தது. இரவில் அவன் ஏன் அழுகிறான் எனத் தெரியவில்லை. இப்போதும் அவனை மருத்துவரிடம் கொண்டு செல்ல முடியாது,” என்றார்.

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் தனது மாமியாரை மருத்துவ ஆலோசனைக்கு கூட்டிச் செல்ல வேண்டிய மருத்துவமனை மிக அருகில் இருந்தால்கூட கூட்டிச் செல்ல முடியவில்லை என்று கவலைப்படுகிறார் அவர்.

இந்த சிரமமான நிலையில், இவர்களுடன் 86 வயது பாட்டியும் இருந்து வருகிறார். மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல், எந்த நிவாரணமும் கிடைக்காமல் தாங்கள் இருப்பதாக மீனா தெரிவித்தார்.

சென்னை வெள்ளம் முடிச்சூர்

கடந்த 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்கள் இவை. வெள்ளத்தால் அப்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து மீள இந்தக் குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த வெள்ளத்திலும் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், வாகனங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

“இரண்டு இரு சக்கர வாகனம், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட பொருட்களை சீர் செய்ய குறைந்தது ஒரு லட்சம் தேவைப்படும். 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது தரைகள் சேதமடைந்தன. ஆனால் அப்போது அதை மாற்றவில்லை. தற்போது அதையும் மாற்ற வேண்டியிருக்கலாம்,” என்கிறார் வித்யா.

பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீளவே, இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகின என்றும், தற்போது ஏற்படும் பாதிப்பிலிருந்து மீள குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்கிறார் சிவகுமார்.

“நான் ரயில்வேயில் 2015இல் பணிபுரிந்து வந்தேன். ஆனால் இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன். எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை,” என்றார் அவர்.

அந்தப் பகுதியில் தேங்கியுள்ள நீரில் பாம்பு, ஆமை, பூராண், பூச்சிகள் இருப்பதால், மிகவும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருவதாக அந்தக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

“வீட்டில் சோஃபாவுக்குள் பாம்புகள் நுழைந்துவிட்டன, சுற்றுச்சுவர்களில் பாம்புகள் ஊர்ந்து சென்றன. இன்னும் எத்தனை பாம்புகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை,” என்கிறார் அந்த குடும்பத்தைச் சேர்ந்த தினகரன்.

சென்னை வெள்ளம் முடிச்சூர்

இதுபோன்று வெள்ளத்தில் உதவி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருப்பது இந்த ஒரு குடும்பம் மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளே சிக்கியிருக்கின்றன.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி மேயர் க. வசந்தகுமாரி பிபிசி தமிழிடம் பேசியபோது, தாம்பரம் மாநகராட்சியில் 20 முகாம்களில் 1800 பேர் தங்கியிருக்கின்றனர்.

இருபது ஆயிரம் முதல் 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் 60,500 உணவு பொட்டல்கள், 45 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், “தாம்பரம் மாநகராட்சியில் அணுகுவதற்குக் கடினமாக உள்ள 12 இடங்களில் குட்வில் நகரும் ஒன்று என்றார். அந்தப் பகுதியில் முடிந்த வரை நிவாரணப் பணிகள் மேற்கொண்டிருப்பதாகவும், ஹெலிகாப்டர் மூலம் பால் புவுடர், பிரெட், டீ தூள், எண்ணெய், கோதுமை மாவு, குடிநீர் பாட்டில், உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்,” என்றும் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *