ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் போர்க்களத்தில் பாகிஸ்தான் உதவியுடன் கிரிக்கெட் வளர்ந்த கதை

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் போர்க்களத்தில் பாகிஸ்தான் உதவியுடன் கிரிக்கெட் வளர்ந்த கதை

ரஷித் கான்

பட மூலாதாரம், Getty Images

“காலணிகளைக் கழற்றி எறி. வீதிக்கு வா, ஆடிப் பாடு. ஏழைகளான நமக்கு மகிழ்ச்சிதான் அரிதானது.”

இது ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற ஒரு கவிதை வரி.

இந்த அரிதான மகிழ்ச்சியைத்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தங்கள் உலகக் கோப்பைப் போட்டி வெற்றிகளின் மூலம் தங்கள் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பையில் பெறும் ஒவ்வொரு வெற்றியையும் அந்நாட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள்.

புவி அரசியல் ரீதியான சிக்கல்கள், பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள், கட்டமைப்பு குறைபாடுகள், வேறு பலவிதமான தடைகள் ஆகியவற்றைக் கடந்து ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒளிர்ந்து வருகிறது, முதிர்ச்சியான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது.

சர்வதேச தளத்தில் இந்த இடத்தை அடைவதற்கு பல ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் அணி உழைத்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு பல ஆயிரக்கான கோடி டாலர்கள் செலவிடப்பட்டாலும் அதில் மிக வெற்றிகரமாக அமைந்தது கிரிக்கெட் அணி. கிரிக்கெட் என்ற விளையாட்டு அந்நாட்டின் முகத்தை மாற்றியிருக்கிறது என்றால் மிகையல்ல.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதன் செயல்பாடு மக்கள் மத்தியில் பெரிய புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்து, கிரிக்கெட்மீது அளப்பரிய ஆர்வத்தையும், வருகையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்து வந்த பாதை எத்தகையது?

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் எப்படி அறிமுகமானது?

ஆப்கானிஸ்தான் அணி சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்த அளவு வளர்ந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கும் முக்கியம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்களிப்பு இன்றி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஆரம்பகால வளர்ச்சியில்லை. ஆனால், உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியையே வீழ்த்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே அங்கு இருந்த பிரிட்டிஷ் மக்களால் கிரிக்கெட் விளையாடப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் அகதிகளாக அடைக்கலமாக இருந்த ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில்தான் கிரிக்கெட் பிரபலமடைந்து, அங்கு கிரிக்கெட் விளையாடிப் பழகினர்.

கடந்த 1995-ஆம் ஆண்டு அல்லாஹ் தாத் நூரி என்பவர் ஆப்கானிஸ்தானுக்காக முதல் தேசிய அணியை பரிசோதனை முயற்சியாக உருவாக்கி கேப்டனாகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானில் கிரேடு-2 போட்டியில் பங்கேற்றார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விளையாட்டுகளுக்குத் தடை விதித்த தலிபான்கள் கிரிக்கெட்டுக்கு விதிவிலக்கு அளித்தனர்

கிரிக்கெட்டைத் தடை செய்யாத தாலிபன்

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்பியபின், 1995-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முயற்சியால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி வந்தபின் அனைத்து விளையாட்டுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டதுபோல் கிரிக்கெட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தாலிபன்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, மனது மாறி, கிரிக்கெட்டுக்கு விதிவிலக்கு அளித்தனர்.

‘வளர்ப்புத்தாய்’ ஆன பாகிஸ்தான்

இதையடுத்து, 2001-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) ஆப்கானிஸ்தான் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் (ஏசிசி) ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டது. ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடியபின்புதான், ஐசிசி முழுநேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்பட்டது.

2001 முதல் 2007 வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டையும், அணியையும் அரவணைத்துச் சென்று, அவர்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதும் பாகிஸ்தான் அணிதான். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ந்ததற்கு ஒருவிதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் பங்களிப்பு இருக்கிறது என்பதையும் மறக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2010-ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடியது ஆப்கானிஸ்தான் அணி

முதல் வெற்றி

2004-ஆம் ஆண்டு பஹ்ரைன் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி பெற்ற வெற்றிதான் சர்வதேச அளவில் பெற்ற முதல் வெற்றியாகும். அதைத் தொடர்ந்து ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலில் 2007-ஆம் ஆண்டு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை நவ்ரோஸ் மங்கல் கேப்டன்ஷியில் ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இந்த கோப்பையை ஆப்கானிஸ்தான் அணி வென்றதுதான், அந்நாட்டு மக்கள் மத்தியில் கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல், ஐசிசி சார்பில் நடத்தப்படும் வேர்ல்டு கிரிக்கெட் லீக் டிவிஷன்-5, டிவிஷன்-4 மற்றும் டிவிஷன்-3 ஆகியவற்றிலும் ஆப்கானிஸ்தான் வென்றது.

ஒருநாள் போட்டி அந்தஸ்து

இந்த வெற்றிக்குப் பின்தான், 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்தது. ஆனால், அதில் ஆப்கன் அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் முதல்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு 4 ஆண்டுகள் ஒருநாள் போட்டி விளையாடும் தகுதி வழங்கப்பட்டது. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் மிக முக்கிய மைல்கல்.

அதன்பின், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தங்களைச் செதுக்கிக்கொண்டது. மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் கிரிக்கெட் உள்கட்டமைப்பு வசதிகளில் பாதியளவுகூட ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு இல்லை. இருப்பினும் தங்களுக்கு கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி மெல்ல, மெல்ல தங்களின் கிரிக்கெட் அணியை வளர்த்தெடுத்தனர்.

அது மட்டுமல்லாமல் 2010-ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இறுதி ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட்டில் வீழ்த்தி உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது.

டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பையில் சர்வதேச அளவில் ஜாம்பவான் அணிகள் பங்கேற்கும் தொடராக இருந்தாலும் இதில் பங்கேற்றதே ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய தருணமாக அமைந்தது. இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோற்று முதல்சுற்றிலேயே ஆப்கானிஸ்தான் வெளியேறியது.

ஆனால், இந்தத் தோல்வியிலிருந்து விரைந்து மீண்ட ஆப்கானிஸ்தான் அணி, துபாயில் ஐசிசி சார்பில் நடந்த இன்டர்கான்டினென்டல் டி20 கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

பாகிஸ்தானுடன் முதல் போட்டி

2012-ஆம் ஆண்டு முதல்முறையாக ஐசிசி முழுநேர உறுப்பு நாட்டு அணியான பாகிஸ்தானுடன் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நவ்ரோஸ் மங்கல் தலைமையில் போட்டியில் பங்கேற்றது. 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி ஷார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் ஆப்கானிஸ்தான் தோற்றது.

2013-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு முக்கிய அங்கீகாரம் கிடைத்தது. ஐசிசி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் என்ற இடத்திலிருந்து இணை உறுப்பினராக தரம் உயர்த்தப்பட்டது.

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனதற்காக ஆப்கானிஸ்தான் மனம் தளரவில்லை. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் தகுதிச்சுற்றில் ஆப்கானிஸ்தான் பங்கேற்றது. இதில் இறுதிப் போட்டியில் கென்ய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2015-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆப்கானிஸ்தான் அணி இன்று வலுவன பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கைக் கொண்டிருப்பதற்கு அந்த அணியில் உள்ள இளம் வீரர்களே காரணம்

இரண்டு உலகக் கோப்பைகளில் பங்கேற்பு

2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் பல்வேறு தோல்விகளை அடைந்தாலும், ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிதான் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. ஆப்கானிஸ்தான் வெற்றியை அந்நாட்டு மக்கள் வீடுகளிலும், வீதிகளிலும் வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றது. ஆனால் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் தோற்றது.

மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பான ஃபார்ம்

ஆனால், 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3வது முறையாக புதிய அடையாளத்துடன் பங்கேற்று வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் விதம், பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங், அணியின் ஒற்றுமை, ஒருங்கிணைவு ஆகியவற்றில் பெரிய அளவு முதிர்ச்சியைக் வந்துள்ளது.

இதன் காரணமாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்துள்ளது ஆப்கானிஸ்தான்.

அதிலும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக சேஸிங் செய்து வென்று தங்களின் பேட்டிங் திறமையையும் நிரூபித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளை வெல்ல முடியாமல் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியது. ஆனால், அடுத்த 8 ஆண்டுகளில், 2023 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகளை தோற்கடித்துத் தன்னை நிரூபித்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி

2017-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி ஐசிசி ஆப்கானிஸ்தானுக்கும், அயர்லாந்துக்கும் முழு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து, 2018- ஆம் ஆண்டு, ஜூன் 14-ஆம் தேதி பெங்களூருவில் இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றது. இதுதான் சர்வதேச அளவில் ஆப்கானிஸ்தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியாகும்.

2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. இதுதான் சர்வதேச அளவில் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றியாகும். அதிலும் 2-வது போட்டியிலேயே முதல் டெஸ்ட் வெற்றி ஆப்கானிஸ்தானுக்குக் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் சுழற்பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் வென்றது.

ரஷித் கான்

பட மூலாதாரம், Getty Images

தயாராகிய இளைஞர்கள்

ஆப்கானிஸ்தான் அணி இன்று வலுவன பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கைக் கொண்டிருப்பதற்கு அந்த அணியில் உள்ள இளம் வீரர்களே காரணம். பெரும்பாலான வீரர்கள் இதற்குமுன் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்தனர்.

2010-ஆம் ஆண்டு முதன் முதலில் ஐசிசி சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் பங்கேற்றாலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால், 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிவரை ஆப்கானிஸ்தான் முன்னேறி, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இருந்தாலும்கூட 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை 185 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. முஜிபுர் ரஹ்மான், ஜாகீர் கான், வபாதார் முகமது, ரஷித்கான், பேட்டர் இஷானுல்லா ஆகியோர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்.

இந்தியாவின் உதவி, ஐபிஎல் போட்டியில் பங்கேற்பு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. அந்நாட்டிற்குச் சென்று இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தல், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல், ஐபிஎல் ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்களை பங்கேற்க அனுமதித்தது போன்றவை அவர்கள் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்தை அடைய உதவியது.

அதிலும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தளத்தில் விளையாடியது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள உதவியது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்திருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றபின் தங்களின் தேவைகளை நிறைவு செய்ததுடன், தங்களால் முடிந்த உதவிகளை தாய்நாட்டு அணிக்கும் செய்தனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, உலகக்கோப்பை

அடையாளத்தை மாற்றிய முன்னாள் அதிபர்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சிக்குச் செல்வதற்கு முன் அதிபராக இருந்த ஹமீது கர்சாய், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் புதிய அடையாளத்தையும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க முன்னெடுப்பினைச் செய்தவர்.

2009-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி அப்போது அதிபராக இருந்த ஹமீத் கர்சாய் பிறப்பித்த உத்தரவின் மூலம் ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தில், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஐசிசி மற்றும் ஏசிசி சார்பில் பல்வேறு நிதியுதவிகளும், கட்டமைப்பு உதவிகளும் ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்தது.

ரஷித் கான்

பட மூலாதாரம், Getty Images

பல தடைகளைக் கடந்த வளர்ச்சி

ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு தடைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் கடந்துதான் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

அனைத்து கட்டமைப்புகளையும் வசதிகளைப் பெற்ற ஒரு அணி வெற்றிகளைப் பெறுவது சாதரணமானது. ஆனால் தீவிரமான அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற தன்மையில் இருக்கும் தேசத்திலிருந்து வந்து கிரிக்கெட்டை காதலித்து, இப்படி ஒரு வளர்ச்சியை ஆப்கானிஸ்தான் அடைந்திருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியில் இன்று இருக்கும் வீரர்களான ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான், ரஹ்மத் ஷா, ஜாத்ரன், பரூக்கி, ரஹ்மத்துல்லா குர்பாஸ் போன்றோர் சர்வேத அளவில் கவனத்தை ஈர்த்துள்ளனர். இதற்கு முன்பிருந்த குல்புதின் நயிப், முகமது ஷேசாத், முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கன், ஹமீது ஹசன் ஆகியோரும் ஆப்கானிஸ்தான் சர்வதேச தளத்தில் உயர்வதற்கு பல்வேறு பங்களிப்புகளை கிரிக்கெட் ரீதியாக வழங்கியுள்ளனர்.

ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் ஆப்கான் வீரர் ரஷித்கான் முதலிடத்தில் உள்ளார், பரூக்கி டாப் 10 வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முகமது நபி, ஒருநாள் போட்டி தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் டாப்10 வீரர்களில் ரஷித் கான், முகமது நபி, ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் இருவரும் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச அணிகளுக்கு சவாலான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால்தான் இந்த அளவு வளர்ச்சியையும், அங்கீகாரத்தையும் பெற முடிந்தது என்பது நிதர்சனம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *