
பட மூலாதாரம், Getty Images
உலகளாவிய அளவில் மின்னணு கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில், வாடிக்கையாளர்களே தங்களது மொபைல் போனில் ஏற்படும் பிரச்னையை பழுது பார்க்கக் கூடிய ஸ்மார்ட்போனை ஃபேர்போன்(Fairphone) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் என்ன தொழில்நுட்பம் அதனை ஒரு நிலையான மொபைல் போனாக கருத வைக்கிறது?
மொபைல் போனின் ஒரு சிறிய சதுரமான பாகத்தை கையில் வைத்துக்கொண்டு, “இது எனது போனின் கேமரா,” எனக் கூறுகிறார் பாஸ் வான் ஏபெல். ஒரு சிறிய ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தி, அவரே தனது மொபைல் போனில் இருந்து அந்த கேமராவை அகற்றியுள்ளார்.
“மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளன. அவற்றை அகற்றி, நாமே மாற்றிக் கொள்ளலாம்,” என்கிறார் அவர். தனது மொபைல் போனின் கேமராவை, ஏற்கனவே பிரித்து வைத்துள்ள தனது மொபைல்போனின் பேட்டரி, யூஎஸ்பி போர்ட் (USB Port), ஸ்கிரீன் மற்றும் ஒலி பெருக்கியுடன் வைத்தார்.
உலகின் நிலையான ஸ்மார்ட்போனை உருவாக்கியதாகக் கூறும் நெதர்லாந்து நாட்டின் டச்சு சமூக நிறுவனமான ஃபேர்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் பாஸ் வான் ஏபெல். உலகம் முழுவதிலிருந்து பெற்ற அரிய உலோகங்களாலும், மற்ற பொருட்களாலும் தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் எப்படி இவ்வளவு நிலையானதாக இருக்க முடியும்?
ஒரே ஆண்டில் குப்பையான 530 கோடி மொபைல் போன்கள்

பட மூலாதாரம், Getty Images
2013 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் நிறுவப்பட்ட ஃபேர்போன்(Fairfone) நிறுவனம், மக்களே எளிதில் சரிசெய்து கொள்ளக் கூடிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது.
மக்களே தங்களது போனை சரிசெய்து கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் மின்னணு கழிவுகளைக் குறைக்க முடியும் என ஃபேர்போன் நிறுவனம் நம்புகிறது.
மின்னணுக் கழிவு என்பது உலகின் மிக வேகமாக அதிகரித்து வரும் கழிவுகளில் ஒன்று. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் மின்னணு கழிவுகள் உருவாகின்றன. இந்த அளவு, இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட அனைத்து வணிக விமானங்களின் எடையை விட இது அதிகம். இந்த 5 கோடி டன் மின்னணு கழிவில், வெறும் 20% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் மின் கழிவுகள் மலை போல் அதிகரித்து வருகின்றன. 2050 ஆம் ஆண்டில், ஆண்டு மின்னணு கழிவு உற்பத்தி 12 கோடி டன்களாக அதிகரிக்கும் என்று உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், 530 கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டு, ஏதாவது ஒரு காரணத்திற்காக மக்களால் தூக்கியெறியப்பட்டதாக மின்னணு கழிவுகளை பகுப்பாய்வு செய்யும் பெல்ஜிய தன்னார்வ தொண்டு நிறுவனமான தி வீ(The WEEE) மன்றம் கணக்கிட்டுள்ளது. அமெரிக்காவில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாடல் போன்கள் வெளியாவதால், சராசரியாக ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் மக்கள் தங்கள் தொலைபேசிகளை மாற்றுகிறார்கள்.
பெரும்பாலான சாதனங்கள் இப்போது சீல் செய்யப்பட்டு, பழுது பார்ப்பதற்கு மிகவும் கடினமான வகையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், அவை அனைத்துமே விலை உயர்ந்தவை.
மொத்த எடையில் எவ்வளவு நிலைத்தன்மை கொண்டது?

பட மூலாதாரம், Griesham Taan
நீண்ட காலம் பயன்படும் மொபைல் போன்களை விற்பதன் மூலம் இந்த போக்கை முறியடிக்க முடியும் என ஃபேர்போன் நிறுவனம் நம்புகிறது.
“நாங்கள் தொலைபேசிகளை பழுது பார்க்கக் கூடியதாக ஆக்குகிறோம், எனவே நீங்கள் அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்” என்று வான் ஏபெல் கூறுகிறார்.
“இது மிகவும் எளிமையான கணக்கீடு. நீங்கள் தொலைபேசியை இரண்டு மடங்கு காலம் பயன்படுத்தினால், அதனால், ஏற்படும் மின்னணுக் கழிவு பாதியாக குறையும், அவ்வளவுதான்,” என்றார் அவர்.
“நாங்கள் தயாரிக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம். தேவையான தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் வான் ஏபெல்.
ஆனால் ஃபேர்போன் மாடல்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் நிலையானவை அல்ல. ஃபேர்போன்-5 ஆனது 40 வெவ்வேறு பொருட்களைக் கொண்டுள்ளது.
அதில், 14 பொருட்கள் மட்டுமே (தொலைபேசியின் மொத்த எடையில் 42%) நிலைத்தன்மையுடன் இருக்கக் கூடியவை.
அந்த 14 மூலப்பொருட்களில் 70% நியாயமான வர்த்தகம் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட மூலங்களிலிருந்து வருகிறது. ஃபேர்போன் மற்றும் பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காற்று, நீர் மற்றும் மண்னையும் மாசுபடுத்துகிறது.
நிறுவனத்தின் ஒரு சுயாதீன மதிப்பாய்வில், நியாயமாக சான்றளிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலமும், மேம்படுத்தக்கூடிய மற்றும் பழுதுபார்க்கக்கூடிய தொலைபேசிகளை உருவாக்குவதன் மூலமும் ஃபேர்போன் நிறுவனம் அதன் நிலைத்தன்மை நற்சான்றிதழ்களை பெற முடியும் என நிபுணர்கள் கூறினர்.
ஃபேர்போன் நிலையான மற்றும் நெறிமுறை ஆதாரங்களில் இருந்து பெறும் பொருட்களின் எண்ணிக்கையை எட்டிலிருந்து 14 ஆக அதிகரித்துள்ளது. அதனை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு வருகிறோம், என்கிறார் வான் ஏபெல்.
உலக அளவில் மின்னணு கழிவுகளை குறைப்பது சாத்தியமா?

பட மூலாதாரம், Griesham Taan
“நாங்கள் தற்போது, அந்த 14 பொருட்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம், அதில் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தேவை உள்ளது. அது மக்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.
உலக அளவில் மின்னணு கழிவுகளைக் குறைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டாலும், ஃபேர்போன் நிறுவனம் இன்னும் மொபைல் சந்தையில் ஒரு சிறிய இடத்தைத்தான் பிடித்துள்ளது. இந்த மொபைல்போன் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் போன்களைத்தான் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 இல் ஆண்டில், உலகளவில் 23.2 கோடிக்கும் அதிகமான ஐபோன்கள் விற்கப்பட்டுள்ளன.
சந்தையின் நிலை இப்படி இருக்க, நிலையான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதன் மூலம், நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியும் என்பதை ஃபேர்போன் நிறுவனம் நிரூபிக்க முயற்சிப்பதாக வான் ஏபெல் கூறுகிறார்.
இப்படி நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் மொபைல்போன்களின் விலையும் அதிகமாகத்தான் உள்ளன. சமீபத்திய ஃபேர்போன் மாடலின் விலை இந்திய ரூபாய் பதிப்பில் ரூ 68,301.
வான் ஏபலின் கூற்றுப்படி, ஃபேர்போன், ஒருவர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. “நீண்ட காலம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கும் ஒரு நிறுவனம் உலகில் இல்லை என்பதால், அனைத்து மென்பொருளையும் நாமே உருவாக்குகிறோம். அதனால், அந்த மென்பொருளில் நாங்கள் விரும்புவதைச் செய்ய அதிக முதலீடு தேவைப்படுகிறது,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஃபேர்போன்களை பழுதுபார்க்கும் திட்டம் அதன் முக்கிய போட்டியாளர்களை விட மலிவானது. ஃபேர்போன் 5-க்கான புதிய பேட்டரியின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி, ரூ 4,204, அதே ஐபோன் 15-யின் பேட்டரியை மாற்ற ஆப்பிள் நிறுவனம் வசூலிக்கும் தொகை ரூ 8,418.
பொதுவாக, ஃபேர்போன் நிறுவனத்தின் கூற்றுப்படி, மறுசுழற்சியின் மூலம் வெறும் 30-50% பொருட்களை மட்டுமே மீட்டெடுக்க முடியும். அதனால், அந்நிறுவனம் மறுசுழற்சி செய்வதை கடைசி முயற்சியாகக் கருதுகிறது.
“நீங்கள் அனைத்து பாகங்களையும் மீண்டும் பயன்படுத்த விரும்புகிறீர்கள். ஆனால், அது சாத்தியம் இல்லை. அதனால், நீங்கள் செய்ய விரும்பும் கடைசி விஷயம், அவற்றை மறுசுழற்சி செய்வதாகும். அதனால்தான் நாங்கள் நீண்ட ஆயுளில் அதிக கவனம் செலுத்துகிறோம்.” என்கிறார் வான் ஏபெல்.
பல நவீன மின்னணு சாதனங்களைப் போலவே, ஸ்மார்ட்போன்களும் 70 சதவீதம் வெவ்வேறு வகையான உலோகங்களால் ஆன பொருட்களைக் கொண்டிருப்பதால் மறுசுழற்சி செய்வது கடினம்.
“தொழில்நுட்ப சாதனங்களும், மின்னணு சாதனங்களும் உடைக்கப்படுவதற்கு இல்லை. அவை விலைமதிப்பற்றவை என்பதை நாங்கள் உள்ளுணர்வுடன் புரிந்துகொண்டுள்ளோம்,” என்று இங்கிலாந்தில் உள்ள டிசைன் கவுன்சிலின் தலைமை வடிவமைப்பு அதிகாரி கேட் ட்ரூ கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அனைத்து போன்களையும் சுயமாக பழுது பார்ப்பது சாத்தியமா?
ஒரு தொழில்துறை மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 500 கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடும்.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மக்கள் அவற்றைப் பழுதுபார்ப்பதையும் முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்துவதையும் தடுக்கிறது என்கிறார் ட்ரூ. போன்கள், எளிதில் பிரிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்படவில்லை, மக்கள் மிகவும் மெல்லிய, நேர்த்தியான தொலைபேசிகளை விரும்புகிறார்கள், அவற்றைப் பிரிப்பது கடினம் என்கிறார் அவர்.
மின்னணு சாதனங்களை பழுது பார்க்கும் செலவும் “தடையாக” இருக்கலாம். “முதலில் ஒரு புதிய லேப்டாப்பைப் பெறுவதை விட லேப்டாப் திரையை சரிசெய்வது விலை உயர்ந்ததாக இருக்கும்” என்கிறார் அவர்.
பழுதுபார்க்கக் கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவது ஒரு “தொழில்நுட்ப சவால்” அல்ல என்கிறார், எலன் மேக்ஆர்தர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜோ ஐல்ஸ்.
“இது ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகும். இங்கு பொருட்கள் முடிந்தவரை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன, மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பழுதுபார்க்கக் கூடிய தொலைபேசிகளை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்பு ஏற்கனவே உள்ளது. தற்போது, முக்கியமான பிரபல மொபைல்போன் நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளன,” என்கிறார் அவர்.
இன்றுவரை, ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களுக்கான விற்பனை மாதிரி என்பது, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தங்கள் சாதனங்களைப் புதுப்பிக்கும்படி நுகர்வோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பழுதுபார்க்கும் புதிய உரிமைச் சட்டங்கள் இதை மாற்றுகின்றன.
2022 ஆம் ஆண்டில், 5.3 பில்லியன் மொபைல் போன்கள் தூக்கி எறியப்பட்டன
பிப்ரவரியில், நோக்கியா நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இது ஆன்லைன் பழுதுபார்க்கும் வழிகாட்டிகளைப் பயன்படுத்தி உடைந்த பாகங்களை மாற்றுவதன் மூலம் நுகர்வோர் தங்கள் போனை தாங்களே சரிசெய்துகொள்ள முடியும்.
ஆப்பிள் பழுது பார்க்கும் கையேடுகளை ஆன்லைனில் வெளியிடத் தொடங்கியுள்ளது. மேலும், ஒரு சுய-சேவை பழுதுபார்க்கும் கடையைத் திறந்துள்ளது. அங்கு நுகர்வோர் ஆப்பிள் பாகங்களை வாங்கலாம் மற்றும் உடைந்த சாதனங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை வாங்கலாம் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஆப்பிளின் பழுது பார்க்கும் திட்டம் விரிவான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டது. ஒரு சாதனத்தின் தனிப்பட்ட பகுதியுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட வரிசை எண்ணை நுகர்வோர் வழங்க வேண்டும்.
நீண்ட ஆயுள் கொண்ட மொபைலை தயாரிப்பதில் இருக்கும் சவால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
மின்னணுத் துறையின் வணிக மாதிரியை மாற்றுவதே உண்மையான சவால் என்கிறார் ஜோ ஐல்ஸ்..
“நாம் பொருட்களை தயாரிக்கும் விதம், சந்தைப்படுத்துதல் மற்றும் அனுப்புதல்- இந்த விநியோகச் சங்கிலிகள் பல தசாப்தங்களாக மேம்படுத்தப்பட்டவை. அதை [வணிக மாதிரியை] மாற்றுவது அல்லது அதற்கு முரணான ஒன்றைச் செய்வது என்பதை கற்பனை கூட செய்து பார்க் முடியாது. நிறுவனங்கள் உண்மையில் முதலீடு செய்வது கடினம்.” என்கிறார் ஜோ ஐல்ஸ்.
இதற்கிடையில், ” இந்த அனைத்து வணிக மாதிரியும், வளர்ச்சி மற்றும் அதிக தொலைபேசிகளை விற்பனை செய்வதை அடிப்படையாகக் கொண்டது” என்கிறார் வான் ஏபெல்.
“ஒரு புதிய தொலைபேசியை வெளியிடுவதில் நிறைய பேர் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு வருடமும் புதிய ஒன்றைப் பெறுவது மிகவும் வீணானது, ஏனெனில் கேமராவில் இன்னும் சில மெகாபிக்சல்கள் இருப்பதால், திரை சற்று வித்தியாசமாக உள்ளது, அவ்வளவுதான்,” என்கிறார் வான் ஏபெல்.
மக்கள் தங்கள் தொலைபேசிகளை பழுது பார்க்க ஊக்குவிக்கும் ஒரு வணிக மாதிரி இருக்க வேண்டும், என்கிறார் ஜோ ஐல்ஸ்.
அமெரிக்கா கொண்டு வந்த புதிய சட்டம்
ஸ்மார்ட்போனின் ஆயுட்காலத்தை 33% அதிகரிப்பதன் மூலம், அயர்லாந்தின் வருடாந்திர கார்பன் உமிழ்வை முழுமையாகத் தடுக்கலாம் என்கிறது, இங்கிலாந்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ரீஸ்டார்ட் ப்ராஜெக்ட்(Restart Project).
மின்னணு குப்பைகளின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பல ஐரோப்பிய நாடுகள் தூக்கி வீசும் கலாச்சாரத்தை எதிர்த்து ஏற்கனவே போராடி வருகின்றன. இதனால் நுகர்வோர் பழுது பார்க்கக் கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உடைந்த பொருட்களை சரிசெய்வதை எளிதாக்குகிறது.
2021 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், வாஷிங் மெஷின்கள், மடிக்கணினிகள் மற்றும் புல்வெளி அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட சில மின்னணு சாதனங்களை லேபிளிடத் தொடங்கியது.
ஸ்வீடனில், சலவை இயந்திரங்கள், பாத்திரங்களைக் கழுவுபவர்கள் மற்றும் சைக்கிள்கள் உள்ளிட்ட ஆடைகள் மற்றும் உபகரணங்களில் பழுது பார்ப்பதற்காக மக்கள் வரிச் சலுகைகளைப் பெறுகின்றனர்.
அமெரிக்காவில், நுகர்வோர் தங்கள் சாதனங்களைச் சரிசெய்ய ஊக்குவிக்கும் முயற்சியும் நடக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அது அமெரிக்க நுகர்வோர் தங்கள் சொந்த மின்னணு சாதனங்களை பழுது பார்க்கும் உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
கலிபோர்னியா, நியூயார்க், மின்னசோட்டா மற்றும் கொலராடோ ஆகிய அனைத்தும் 2023 ஆம் ஆண்டில் பழுது பார்க்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தின.
“உற்பத்தியாளர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளும் பல சட்டங்கள் இப்போது வெளிவருகின்றன. எங்கள் முதன்மை குறிக்கோள் முழு ஸ்மார்ட்போன் துறையையும் மிகவும் நிலையானதாக மாற்றுவதாகும். விநியோக சங்கிலியில் உள்ள பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான தீர்வுகளை கொண்டு வருவோம்,” என்கிறார் வான் ஏபெல்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்