
பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனைகளை உடைத்த மிரட்டலான சதத்தால், டெல்லியில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள ரோஹித் சர்மா உலகக் கோப்பையில் பல சாதனைகளை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். இன்று நடந்தது ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா என ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு ரோஹித் சர்மாவின் மிரட்டலான பேட்டிங் இருந்தது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. 273 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்தியஅணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
2019ம் ஆண்டு உலகக்கோப்பை நினைவிருக்கிறதா?
2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான்- இ்ந்தியா போட்டி போன்று இன்றைய ஆட்டம் அமைந்துவிடக் கூடாது என்ற முடிவோடுதான் ரோஹித் சர்மா களத்தில் இறங்கினார் போலத் தெரிகிறது.
2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி 224 ரன்கள் சேர்க்கவே, அதை சேஸிங் செய்யத் துரத்திய ஆப்கானிஸ்தான் 213 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல இன்றைய ஆட்டமும் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வெளுத்து வாங்கினார்.
“பழைய” ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடித்து விளாசிய ரோஹித், உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்தில் டக்அவுட்டில் வெளியேறினார். ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இழந்த ஃபார்மை மீட்கவும் பழையமாதிரி அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தார்.
பவர்ப்ளே ஓவர்களை நன்கு பயன்படுத்திய ரோஹித் சர்மா, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்கள் என நாலாபுறமும் விரட்டி துவம்சம் செய்தார். இந்திய அணி 6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது, ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
கவனத்துடன் ஆடிய ரோஹித்
ரோஹித் சர்மா பவர் ப்ளே ஓவர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் கூடுதல் கவனத்துடன் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து ஆடி, அதிகமான ரிஸ்க் எடுத்தார். ரோஹித் சர்மாவை “மிட் விக்கெட்”, “ஸ்கொயர் லெக்” பகுதியில் எந்த பந்துவீச்சாளரும் அசைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வலிமையானவர், இந்த திசையில் மட்டுமே ரோஹித் சர்மா ஷாட்களை தேர்ந்தெடுத்து பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி கவனத்துடன் செயல்பட்டார்.
இந்திய அணியின் சேஸிங்கில் முழுக்க ரோஹித் சர்மாவின் ஆதிக்கமே இருந்தது. 30 பந்துகளில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா அதன் பின்பும் தனது அதிரடியைக் குறைக்கவில்லை, அடுத்த 33 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.
ரஷித் கான் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்களை அடிக்க ரோஹித் சர்மா திணறினார். ரஷித் கான் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் எனப் பந்துவீசியதால், ரோஹித் மிகுந்த சிரமப்பட்டார். இருப்பினும் ஸ்வீப் ஷாட் ஆட முயன்றபோது க்ளீன் போல்டாகி ஹிட்மேன் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
விராட் 2வது அரைசதம்
ரோஹித் சர்மாவுக்கு பக்கபலமாக ஆடிய இஷான் கிஷன் 47 ரன்கள் சேர்த்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து மிகுந்த இயல்பாக பேட்செய்தார்.
டெல்லி தனது சொந்த மைதானம் என்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் விராட் கோலி ஷாட்கள் பறந்தன. 55 பந்துகளில் விராட் கோலி அரைசதம் அடித்து 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி அடிக்கும் 2வது அரைசதம் இதுவாகும்.
2வது இடத்தில் இந்திய அணி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. 35 ஓவர்ளில், அதிகமான விக்கெட் வித்தியாசத்தில் சேஸிங் செய்ததால், நிகர ரன்ரேட் 1.500 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கம் முதலே பழைய ரோஹித்தாக களத்தில் வலம் வந்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி துவம்சம் செய்தார். 63 பந்துகளில் சதம் அடித்த ரோஹித் சர்மா 83 பந்துகளில் 131ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலி 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
“ஹிட்மேன்” சாதனைகள்
- உலகக் கோப்பையில் அதிகமான சதம் எடுத்த பேட்டர்களில் சச்சின் டெண்டுல்கரின் 6 சதங்கள் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து 7வது சதத்தை பதிவு செய்தார்.
- அது மட்டுமல்லாமல் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சார்பில் தனி ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராக 83 பந்துகளில் 131 ரன்கள் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.
- அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வரிசையில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயிலின் 556 சிக்ஸர்களை ரோஹித் சர்மா தனது 3வது சிக்ஸர் அடித்தபோது முறியடித்தார்.
- இதுவரை ரோஹித் சர்மா உலகக் கோப்பைத் தொடரில் 19 இன்னிங்ஸ்களில் விளையாடி 1,109 ரன்களைச் சேர்த்து வியத்தகு சாதனை புரிந்துள்ளார்.இதில் 7 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 140 ரன்களைச் சேர்த்து, 65.23 ரன்களை சராசரியாக வைத்துள்ளார்.
- டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் கடந்த முதல் ஆட்டத்தில் 750 ரன்களுக்குமேல் சேர்க்கப்பட்டு 4 நாட்களுக்குள் இன்றைய ஆட்டத்தில் 550 ரன்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு, பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கனுக்கு ஆறுதல்
ஆப்கானிஸ்தான் அணியும் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை இன்று பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா(80), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய்(62) ரன்களும் அதிகபட்சமாகச் சேர்த்தனர். இருவரின் பங்களிப்புதான் ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாகும், மற்ற வகையில் வேறு எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களுடன் வலுவாக இருந்தது. ஆனால், திடீரென 45 ஓவர்களில் 235 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அதிக அனுபவம் வாய்ந்த அணிகளால் செய்யாத தவறுகளை ஆப்கானிஸ்தான் செய்ததால் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது.
டிரெண்டாகிய நவீன் உல்ஹக்- விராட் கோலி
கடந்த ஐபிஎல் டி20 தொடரில் விராட் கோலி, நவீன் உல் ஹக் மோதல் ஹாட் பீட்டாக இருந்தது. ஆர்சிபி அணியில் இருந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இருந்த நவீன் உல் ஹக், மென்டர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பெரிதாகப் பேசப்பட்டது. இதனால் இன்றைய ஆப்கானிஸ்தான் ஆட்டத்திலும் விராட் கோலி, நவீன் உல் ஹக் பெயர் சமூக வலைத்தளங்களில் டிரண்டனது.
மைதானத்தில் நவீன் உல் ஹக் பந்துவீச வந்தபோதுகூட ரசிகர்கள் கோலி, கோலி எனக் கோஷமிட்டனர். ஆனால், ரசிகர்கள் நினைத்ததுபோல் களத்தில் நடக்கவில்லை. போட்டியின் போது, நவீன் உல் ஹக்கும், விராட் கோலியும் முகத்துக்கு முகம் நேரே சந்தித்தனர்.
அப்போது, நவீன் உல் ஹக்கின் கையைப் பற்றிப் பிடித்து, அவரை கட்டி அணைத்து விராட் கோலி அன்பைத் தெரிவித்தார். விராட் கோலியின் நட்பைப் பார்த்தது நவீன் உல் ஹக்கும் புன்னகையுடன் நடந்து சென்றார். விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் கட்டியணைத்து புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அஸ்வின் ஏன் வாய்ப்பு மறுப்பு?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ரவிச்சந்திர அஸ்வினுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் தேவை எனக் கருதி ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு தரப்பட்டது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
ஷர்துல் தாக்கூர், 6 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார். டெல்லி போன்ற சிறிய மைதானங்களில் எதிரணி பேட்டர்கள் எளிதாக பவுண்டரி, சிக்ஸர்களை தூக்கி அடிப்பார்கள்.
அதுபோல் அடிக்கவிடாமல் செய்ய கட்டுக்கோப்பான பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து பந்துவீச வைப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வினுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ஷர்துல் தாகூரை தேர்ந்தெடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளது.
குல்தீப், ஜடேஜா இருவரும் 18 ஓவர்கள் பந்துவீசி 78 ரன்கள்தான் விட்டுக்கொடுத்தனர், குல்தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தால், ஆப்கானிஸ்தான் ஸ்கோர் இன்னும் 50 ரன்கள் குறைவாக எடுத்திருக்கும், சேஸிங்கும் எளிதாக இருந்திருக்கும்.
ஆனால், முகமது சிராஜ் 9 ஓவர்களை வீசி 76 ரன்களை வாரி வழங்கினார். சிறப்பாகப் பந்துவீசும், ஸ்விங் செய்யும் திறமையுள்ள முகமது ஷமி ஓய்வு அளித்து அமர வைக்கப்பட்டுள்ளது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்