
பட மூலாதாரம், Getty Images
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் உலக அளவில் பெரும் அபாயமாக வளர்ந்து வரும் காலநிலை மாற்றமும் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றால் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் எவ்வாறு காலநிலை மாற்றம் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளது என்ற காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் ஆய்வு விவரங்கள் குறித்து மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்?
காலநிலை மாற்றம்: அதிகரிக்கும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images
நாசா ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் 2023ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவிக்கிறது. அதன் ஆய்வுப்படி, புவியின் வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் (3394.9 MtCO2e) பிடித்திருப்பதாக உலக வள நிறுவனம் (World Resource Institute) பட்டியலிட்டுள்ளது.
டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆய்வு மையம் (Center for science and Environment), இதனால் சுற்றுசூழல் மற்றும் வளிமண்டலம் சமநிலையற்று இருப்பதாகக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
“கோடைக் காலத்தில் கடும் வெப்பம், மழைக் காலத்தில் வெள்ள அபாயம், நிலச்சரிவு போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் 86 சதவீதம், தீவிரமான (extreme) வானிலை மட்டுமே இருந்துள்ளது,” என்று அறிவியல் மற்றும் சுற்றுசூழலுக்கான மையம் கூறுகிறது.
“ஆறறிவு கொண்டு தொழில்நுட்பங்களுடன் பல விஷயங்களை சாதித்துக் கொண்டிருப்பதாக மனிதர்கள், நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அனைத்து வகையிலும் இந்த சாதனைகள் எல்லாவற்றுக்கும் இயற்கைதான் ஊந்துதலாகவும் ஆதாரமாகவும் இருந்து கொண்டிருக்கிறது,” என்று ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலில், மசானபு ஃபுகோகா எழுதியிருப்பார்.
அதுபோல, மனித மேம்பாட்டிற்கு இயற்கை முதுகெலும்பாக இருந்து வருகிறது.
வளர்ச்சிக்கு உந்துதலான இயற்கை

பட மூலாதாரம், NITHYANANDH JAYARAM / TWITTER
சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்
இந்தியா, இயற்கையின் பல வகையான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட ஒரு வளமான நாடு. வடக்கே இமயமலையின் உறைபணியும், தெற்குப் பகுதியில் கதகதப்பான வானிலையும், மறுபுறம் வடகிழக்கில் தொடர்ந்து மழையும், வடமேற்கில் வறண்ட தார் பாலைவனமும் என அனைத்து வகையான காலநிலையையும் உள்ளடக்கிய நாடு.
உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. விவசாயம், வருவாய், தொழில் துறை, அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டாலும், அனைத்திற்கும் முதுகெலும்பாக இருக்கும் சுற்றுசூழலுக்கு வீழ்ச்சியே என்று இதுவரையிலான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
“அனைவருக்கும் தெரிந்தது போலவே, நவீன முதலாளித்துவ பொருளாதாரத்தை உருவாக்கச் செய்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் புவி வெப்பமடைந்து உலகில் காலநிலை மாற்றம் அதிக அளவில் நிகழ்கிறது,” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் கூறுகிறார். அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆதரவாக ஆக்சிஜன் வாயு இருக்கிறது. ஆனால், பசுமைக்குடில் வாயுக்களான கரிம வாயு, மீதேன், நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை நச்சுத்தன்மை வாய்ந்தவை.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த வாயுக்கள் வெளியேற்றப்படும் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் இந்தியா காலநிலை மாற்றத்தால் பெருமளவில் சுற்றுச்சூழல் ஆபத்தையும், வானிலை வேறுபாடுகளையும் சந்தித்து வருகிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சூழலியல் பாதிப்பு மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்தப் பிரச்னைகள் பாதிக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் புற்றுநோயா?

பட மூலாதாரம், SURESH KUMAR
புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார்
“காலநிலை மாற்றத்தால் மக்களுக்கு இதய நோய், மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் சார்ந்த பல பிரச்னைகளோடு புற்றுநோயும் வரக் காரணமாக இருக்கிறது,” என்று புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார் கூறினார்.
புகையிலைப் பழக்கம், வாழ்க்கை முறை, மரபியல் போன்ற காரணத்தால் புற்றுநோய் ஏற்பட்டாலும், காலநிலை மாற்றம் மிகவும் குறைவாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பேசப்படாத ஒரு காரணியாக இருந்து வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
உலகளவில் ஆண்டுக்கு, 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என்றும் மக்கள் இறப்பதற்கான காரணியில் மாரடைப்பிற்கு அடுத்து இரண்டாவதாக புற்றுநோய் இருப்பதாகவும் மருத்துவர் சுரேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மோனார்ஷ் பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் காலநிலை மாற்றம் மறைமுகமாக புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த ஆய்வை மேற்கொண்ட மோனார்ஷ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆய்வாளருமான யுமிங் கோ பிபிசி தமிழிடம் பேசினார்.
“இது ஒரு முடிவில்லா சுழற்சி என்றும், அதிக அளவில் புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதால், காற்றில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து சுற்றுப்புறத்தில் காற்று மாசு அதிகரிக்கிறது.
இந்தத் தரமற்ற காற்றைத் தொடர்ந்து சுவாசித்தால் மூளை, நுரையீரல், உணவுக் குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்,” என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், YUMING GUO / LINKEDIN
பேராசிரியர் யுமிங் கோ
காலநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் கோடை மற்றும் மழைக் காலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள், வெள்ளம், புயல் போன்றவை அதிக அளவில் நிகழ்ந்ததால் மக்களின் வாழ்க்கை நடைமுறை, பயிர் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கலப்படமான தரமற்ற நீர், உணவை உண்ண, மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகள், உடல் பருமன் ஏற்பட்டு வயிறு, குடல், மண்ணீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட வழிவகுப்பதாக பேராசிரியர் யுமிங் கோவின் ஆய்வறிக்கை கூறுகிறது.
புவி வெப்பமடைதலால் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் (UV rays) இருந்து உயிர்களைக் காக்கும் ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டிருப்பதாக நாசா ஏற்கெனவே அறிவித்திருந்தது. “அந்த புற ஊதாக் கதிர்கள் அதிகம் தோலில் படும்போது மெலனோமா (melanoma), தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்,” என்று எச்சரிக்கிறார் யுமிங் கோ.
தொழில் வளர்ச்சி பெருகிவிட்டது, ஆண், பெண் வேறுபாடின்றி அதிக நேரம் கடும் வெப்பத்தில் பணிபுரியும் சூழ்நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு மார்பகத்தில், இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேராசிரியர் யும்ங் கோ குறிப்பிட்டார்.
இதுபோன்ற சூழ்நிலைகளால் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தும், மீண்டும் இதே மாசான சுற்றுச்சூழலில் இருக்கும்போது சிகிச்சைப் பலன் குறைந்து இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக யுமிங் கோவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
“புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்”
“காலநிலை மாற்றம் நிகழ்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது, தாமதப்படுத்த மட்டுமே முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், கொடிய நோய்களால் வரும் விளைவுகளைத் தவிர்க்க முடியும்,” என்று வலியுறுத்தினார் யுமிங் கோ.
மேலும் இதுகுறித்து நித்தியானந்த் ஜெயராமன் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பேசியபோது, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மேம்பாடு மட்டுமே உண்மையான வளர்ச்சி என்றும், தனி மனித கொள்கைகளுடன் சேர்ந்து அரசாங்கம் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
“பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க முடிந்தவரை புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கவல்ல ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். காடுகளின் பரப்பளவைப் பாதுகாப்பதோடு, மேலதிக மரங்களை நடவேண்டும். இதுகுறித்துப் பலவகை பிரசாரத்தின் மூலம் மக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.”
இன்னொருபுறம், உடல் ஆரோக்கிய ரீதியாகவும் வாழ்க்கை நடைமுறையிலும் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்கிறார் புற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார். “மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்து, சத்தான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“தற்போதைய காலத்தில் நாம் மேற்கத்திய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறோம். அதைத் தவிர்த்து நமது வாழ்விடத்தின் காலநிலைக்கு ஏற்ப நார்ச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு, உடற்பயிற்சி செய்தால், நோயற்ற வாழ்வை வாழலாம்,” என்று தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்