
பட மூலாதாரம், ANI
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் துருக்கி அதிபர் எர்துவான்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் துருக்கியும் மீண்டும் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு வந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 55ஆவது கூட்டத்தொடரில் துருக்கியும் பாகிஸ்தானும் காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி இந்தியாவை சுற்றி வளைத்தன.
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது மிகவும் சாதாரணமாக நடக்கும் ஒன்று.
காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி இதற்கு முன்பும் இந்தியா மீது கேள்வி எழுப்பியிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் முதன்மை செயலர் அனுபமா சிங், ’பதில் அளிக்கும் உரிமையின்’ கீழ், துருக்கிக்கும், பாகிஸ்தானுக்கும் பதிலளித்துள்ளார்.
“இந்தியாவின் உள்விவகாரம் குறித்து துருக்கி கருத்து தெரிவித்திருப்பதற்கு முதலில் வருந்துகிறோம். எதிர்காலத்தில் எங்கள் உள்விவகாரங்களில் தேவையற்ற கருத்துக்களை வெளியிடுவதை துருக்கி தவிர்க்கும் என நம்புகிறோம்,” என்று அனுபமா சிங் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து அனுபமா சிங் பாகிஸ்தானையும் சாடினார்.

பட மூலாதாரம், PAKUN_GENEVA
பாகிஸ்தானின் இரண்டாம் நிலை செயலர் தான்யால் ஹஸ்னைன்
பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்த பதில் என்ன?
“பாகிஸ்தான் பல சூழல்களில் இந்தியாவின் பெயரை எடுத்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் மேடையை மீண்டும் தவறாகப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை அது முன்வைத்துள்ளது,” என்று அனுபமா சிங் தெரிவித்தார்.
”ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக், இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் எங்களது உள்விவகாரம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்துப்பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை,” என்றார் அவர்.
“தனது சொந்த சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையை நிறுவனமயமாக்கிய, உள்நாட்டில் மனித உரிமைகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் ஒரு நாடு, இந்தியாவைப் பற்றி கருத்து தெரிவிப்பது முரண்பாடானது. அது செல்லாததும் கூட. 2023 ஆகஸ்டில் பாகிஸ்தானின் ஜரன்வாலா நகரில் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட பெரிய அளவிலான கொடுமை இதற்கு ஒரு உதாரணம். அப்போது 19 தேவாலயங்கள் எரிக்கப்பட்டன, 89 கிறிஸ்துவர்களில் வீடுகள் கொளுத்தப்பட்டன,” என்று பாகிஸ்தானை பற்றி அனுபமா சிங் கூறினார்.
ஐநா பாதுகாப்பு சபையால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப் பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு பாகிஸ்தான் என்றும் அப்படிப்பட்ட ஒரு நாடு ஜனநாயக நெறிமுறைகள் சிறப்பாக இருக்கும் இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது என்றும் அனுபமா சிங் குறிப்பிட்டார்.
“பயங்கரவாதத்தின் ரத்தக் கறை படிந்த, கடனில் மூழ்கியிருக்கும், தனது சொந்த மக்களின் நலன்களை பாதுகாக்கத் தவறிய ஒரு நாட்டின் பேச்சுக்களில் இனி நேரத்தை வீணடிக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு பதில் கொடுத்துள்ளது.
சபையின் 55ஆவது அமர்வில் பாகிஸ்தானின் இரண்டாம் நிலை செயலர் தான்யால் ஹஸ்னைன், “இந்தியாவின் கூற்றுகளில் உண்மையோ, சட்ட அடிப்படையோ இல்லை” என்று கூறினார். ”ஜம்மு காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை. அப்படி என்றுமே இருக்காது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்க்கப்படாத மிகப் பழமையான பிரச்சனை இது,” என்று அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டில் தனது நாட்டிற்குள் இரண்டு குடிமக்களை இந்தியா கொன்றதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த காலங்களிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது நடந்துள்ளது. ஆனால் துருக்கியின் விஷயம் அப்படி இல்லை.

பட மூலாதாரம், Getty Images
கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மித்சோடாகிஸ் மற்றும் அவரது துணைவியாரை வரவேற்கும் பிரதமர் மோதி
காஷ்மீர் பற்றி துருக்கி சொன்னது என்ன?
ஐநா மனித உரிமைகள் சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக துருக்கி இந்தியாவை தாக்கி பேசியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மித்சோடாகிஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்திலிருந்து துருக்கியின் இந்தக் கோபத்தை பார்க்க முடிகிறது.
துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையே நீண்ட காலமாக இடைவெளி உள்ளது. 2020 ஆகஸ்டிலும் இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி வளங்களுக்கான போட்டி காணப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோதி கிரேக்க நாட்டிற்கு சென்றார். 40 ஆண்டுகளில் அந்த நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோதி ஆவார். அப்போது கிரேக்க அதிபர் கத்ரீனா ஆன் சகெல்லாரோபவுலோ பிரதமர் மோதிக்கு ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது வழங்கி சிறப்பித்தார்.
பிரதமர் மோதியின் கிரேக்க பயணம் பாகிஸ்தான்-துருக்கி தோழமைக்கு அளிக்கப்பட்ட பதிலாக கருதப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் 2023 செப்டம்பரில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் வந்தபோது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று நம்பப்பட்டது.
துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பின்னர் உதவி வழங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இருப்பினும் காஷ்மீரில் 370ஆவது பிரிவின் சிறப்பு விதிகளை மோதி அரசு ரத்து செய்தபோது துருக்கியின் கடுமையான எதிர்வினையை ஐக்கிய நாடுகள் சபையில் பார்க்க முடிந்தது.
கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் தவறிவிட்டதாக அதிபர் எர்துவான் கூறியிருந்தார்.
“இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே நட்புறவு உள்ளது. ஆனால் ஆகஸ்ட் 6 முதல் இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து துருக்கியிடமிருந்து தொடர்ந்து அறிக்கைகள் வெளிவருவதை பார்த்து வருந்துகிறோம். இவை உண்மையில் தவறானவை, பக்கச்சார்பானவை,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்போது கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எர்துவான்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றிக் குறிப்பிட்ட எர்துவான்
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு துருக்கிக்கும் அது முக்கியமானது என்று 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எர்துவான் கூறினார்.
“எங்கள் காஷ்மீரி சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக துன்பப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் மீண்டும் பாகிஸ்தானுடன் உள்ளோம். ஐநா பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பினோம்,” என்று துருக்கி அதிபர் குறிப்பிட்டார்.
”காஷ்மீர் பிரச்னைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது. இதற்கு நீதி மற்றும் பாரபட்சமின்மை மூலமே தீர்வு காண முடியும். இந்த வகையான தீர்வுதான் அனைவருக்கும் நன்மை தரும். நீதி, அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என்றார் அவர்.
காஷ்மீர் குறித்து எர்துவான் பேச ஆரம்பித்ததும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கைதட்டலால் அதிர்ந்தது. நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்.பி.க்கள் நீண்ட நேரம் மேசைகளை தட்டிக்கொண்டிருந்தனர்.
காஷ்மீர் மக்களை எப்போதும் மறக்கவே முடியாது என்று எர்துவான் கூறினார்.
அப்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் எர்துவானின் பேச்சை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது.
நாட்டின் உள்விவகாரங்கள் குறித்து துருக்கி பேசக்கூடாது என்று இந்தியா கூறியிருந்தது.
இந்தியாவுடனான துருக்கியின் உறவுகளை ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மிகச் சிறப்பாக உள்ளன. இஸ்லாமிய உலகில் இரு நாடுகளுமே சன்னி பிரிவினரின் ஆதிக்கம் உள்ளவை.

பட மூலாதாரம், Getty Images
2023 இல் கிரேக்கம் சென்ற பிரதமர் மோதி அந்த நாட்டு பிரதமரை சந்தித்த காட்சி
கிரேக்க நாட்டுடன் மேம்பட்டு வரும் இந்தியாவின் உறவுகள்
சில வல்லுநர்கள் துருக்கியின் சமீபத்திய எதிர்வினையை கிரேக்க நாட்டுடன் மேம்பட்டு வரும் இந்தியாவின் உறவுகளுடன் தொடர்புபடுத்துகின்றனர்.
கிரேக்கம் இப்போது ஐரோப்பாவில் இந்தியாவின் புதிய நட்பு நாடாக உள்ளது என்றும் இதன் மூலம் ஐரோப்பாவில் தனது நிலையை மேம்படுத்த இந்தியா விரும்புவதாகவும் சர்வதேச விவகாரங்கள் குறித்து எழுதும் செய்தியாளர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.
“கிரேக்கம் மத்திய தரைக் கடலில் ஒரு முக்கிய சக்தியாக உள்ளது. உலக வர்த்தகத்திற்கு மத்தியதரைக் கடல் மிகவும் முக்கியமானது. இது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பொருளாதாரங்களை சீனா, இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைக்கிறது. கடல் போக்குவரத்தில் 15 சதவிகிதம் இந்த வழியாகத்தான் செல்கிறது,” என்று செய்தியாளர் சஷாங் மட்டூ சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.
“கடந்த சில ஆண்டுகளில் இங்கு கிடைக்கப்பெற்ற எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்புக்கள் அதை மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. இந்தப் பகுதியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ராணுவ இருப்பு உள்ளது. கிரேக்கம் மூலம் சீனாவும் இந்த பிராந்தியத்தில் தனது இருப்பை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவும் இந்த பிராந்தியத்தில் தனது இருப்பை மேம்படுத்த முயற்சிக்கிறது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் மத்தியதரைக் கடலில் துருக்கி, கடற்படை பாதுகாப்புடன் எரிவாயு ஆய்வை நடத்தியது. இங்கே துருக்கியும் கிரேக்கமும் ஒன்றையொன்று எதிர்த்தன. ஆனால் 2020 இல் பிரான்ஸ் கிரேக்கத்திற்கு ஆதரவளித்தது.
இந்தியாவும் கிரேக்கமும் தங்கள் இருதரப்பு வர்த்தகத்தை 2030க்குள் இரட்டிப்பாக்க விரும்புவதாக மட்டூ எழுதியுள்ளார்.
மாறாக பாகிஸ்தானுடனான எர்துவானின் நெருக்கத்தால் இந்தியா – துருக்கி இடையேயான உறவு எப்போதும் கேள்விகளால் சூழப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எர்துவான் மற்றும் முய்சு
துருக்கி மற்றும் இந்தியா இடையே உள்ள கருத்து வேறுபாடுகள்
காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு, இந்தியாவிடமிருந்து அது விலகி இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.
இது தவிர 2022 இல் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையேயான மோதலில் இந்தியாவும் துருக்கியும் எதிரெதிர் தரப்பில் நிற்பதை பார்க்க முடிந்தது.
அஜர்பைஜான் துருக்கியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது அஜர்பைஜானுக்கு துருக்கியின் ஆதரவு இருந்தது.
அந்த நேரத்தில் இந்தியா ஆர்மீனியாவுக்கு ஆதரவு அளித்தது.
முகமது முய்சு 2023 இல் மாலத்தீவு அதிபரானார். முய்சுவின் ‘இந்தியாவே வெளியேறு’ பரப்புரை பற்றி அதிகமாக பேசப்பட்டது. கடந்த சில மாதங்களாக மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இடைவெளி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
முய்சு அரசின் அமைச்சர்கள் பிரதமர் மோதியின் படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவிலும் பெரும் சர்ச்சை எழுந்தது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக துருக்கி சென்றார்.
இருப்பினும் துருக்கிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான நோக்கத்தில் பொருளாதார நலன்களும் ஒளிந்திருக்கின்றன.

பட மூலாதாரம், MEA
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்தியா அங்கு உதவிப்பொருட்களை அனுப்பியது.
டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, இந்தியா, அமெரிக்கா, செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தை’ உருவாக்க ஒப்புக்கொண்டன.
இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் இந்தப் பொருளாதார வழித்தடத்தின் பாதையில் துருக்கியும் வருகிறது. ஆனால் துருக்கி இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இந்த ஒப்புதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு எர்துவான் தனது நாட்டை இதில் சேர்க்காதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் தனது நாடு இல்லாமல் இந்த வழித்தடம் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
ஆயினும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தைப் பார்த்தால் அதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2022-23 இல் துருக்கிக்கு இந்தியா 9,600 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம் இந்தியா 4,200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை துருக்கியிடமிருந்து இறக்குமதி செய்தது.
இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 13,881 மில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட 2020-21 ஆம் ஆண்டைத் தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்