
பட மூலாதாரம், RMJ BANDARA
மனிதக் குழந்தைகளைப் போலவே, குட்டி யானைகளும் ஆர்வத்தால் வாயில் பொருட்களை வைத்து கடிக்க முயல்கின்றன.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு ருசியான மிகவும் இனிப்பான ஒரு பொருளை கடிப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், அதைக் கடித்த பின், உங்களின் கீழ் தாடை வெடித்து, அதிக வலி ஏற்படுகிறது.
நீங்கள் வேதனையுடன் விலகிச் செல்லலாம். ஆனால், காயங்கள் ஆறாமல், அவை தொற்றுநோயாகும். பின், சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ முடியாமல், நீங்கள் பட்டினியால் வாடலாம்.
துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் குட்டி யானைகளின் மரணத்திற்கு இந்த அவுட்டுக்காயே அதிக காரணம்.
‘ஹக்கா பட்டாஸ்’ அல்லது தாடை பட்டாசுகள் என்றும் அழைக்கப்படும் இந்த வகை அவுட்டுக்காய், காட்டுப்பன்றிகளை உடனடியாக வேட்டையாடுவதற்காக வேட்டையாடுபவர்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.
சில விவசாயிகள் பயிர்களை அழிக்கும் பன்றிகள் உள்ளிட்டவற்றை கொல்லவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், யானைகள் பொதுவாக இந்த கொடிய காயால் பலியாகின்றன. இவை கடித்தால், வெடிக்கும். இந்தக் காய் மிகவும் வேதனையான மரணத்திற்கு வழிவகுக்கிறது.
யானைகள் காட்டுப்பன்றிகளை விட பெரியதாக இருப்பதால், அவை வெடித்தபின் வாயில் காயங்களுடன் வலியுடன், பட்டினியால் இறக்கும் வரை பல நாட்கள் நடக்கின்றன,
நிபுணர்களின் கூற்றுப்படி, இளம் யானைகள் இந்த வகை அவுட்டுக்காயால் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
2023 ஆம் ஆண்டில், வீட்டில் தயாரிக்கப்பட்ட கருவியால் கொல்லப்பட்ட யானையின் வயது 10 மாதம்.

பட மூலாதாரம், RMJ BANDARA
அவுட்டுக்காயால் காயமடையும் யானைகள் விரைவில் உயிரிழக்கின்றன.
“மனிதக் குழந்தைகளைப் போலவே, ஆர்வத்தின் காரணமாக, குட்டி யானைகள் எதைக் கண்டாலும் கடிக்கின்றன. வாயில் பொருட்களை வைக்கும்போது அவை தொடுதல் மற்றும் சுவை உணர்வுகளை ஆராய்கின்றன,” என்றார் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் அகலங்கா பினிடியா. இவர் இலங்கை வனவிலங்கு கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர்.
“மருத்துவ அறிக்கைகள் மற்றும் தரவுகளைப் பார்க்கும்போது, குட்டி யானை முதல் பெரிய யானை வரை தாடை குண்டுகளால் கொல்லப்பட்டதைக் காணலாம். இருப்பினும், பாதிக்கப்பட்ட யானைகளில் பெரும்பாலானவை இரண்டு முதல் பத்து வயதுடைய இளம் யானைகள்,” என அவர் பிபிசியிடம் கூறினார்.
இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இதுவரை இல்லாத அளவில் யானைகளின் இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், 470க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருந்தன.
அவுட்டுக்காயை எப்படித் தயாரிக்கிறார்கள்?
சமன் குமார (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வட இலங்கையில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் தாடை வெடிகுண்டுகளை தயாரிக்கும் பலரில் ஒருவர்.
எளிதாகத் தயாரிக்கக் கூடியவை என்பதால், தன்னைப் போன்ற வேட்டைக்காரர்கள் அந்த பொருளை நாடுவதாக அவர் பிபிசியிடம் கூறினார்.
“நாங்கள் உள்ளூர் கடைகளில் இருந்து பட்டாசுகளை வாங்குகிறோம். பின்னர் நாங்கள் அவற்றில் இருந்து வெடி மருந்தை எடுத்து, அவற்றை சரளை மற்றும் உலோக குப்பைகளுடன் கலக்கிறோம்,” என்றார் அவர்.
“நாங்கள் அவற்றை உருண்டைகளாக வடிவமைத்து பிளாஸ்டிக் பைகளில் கட்டி, பின்னர் காட்டுப்பன்றிகளை ஈர்ப்பதற்காக சர்க்கரை பனை பழங்கள், பூசணிக்காய்கள் அல்லது அழுகிய மீன்களைக் கொண்டு மூடுகிறோம்,”என்றார்.

பட மூலாதாரம், MADAWA KULASOORIYA
தாடை வெடிகுண்டுகள், காட்டுப்பன்றிகளை புஷ்மீட்டிற்காக உடனடியாக கொல்ல வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் வீட்டில் வெடிக்கும் சாதனங்கள்.
யானைகள் மீன்களை உண்ணாவிட்டாலும், சில பழங்கள் போன்ற தூண்டிலில் அவை சிக்கிக்கொள்வதாக குமார கூறினார்.
ஆனால், குட்டி யானைகளுக்கு தீங்கு விளைவிப்பது தனது நோக்கமல்ல என்றும் குமார விளக்கினார்.
“குழந்தைகள் எல்லாம் ஒன்றுதான். குட்டி காட்டுப்பன்றிகளாக இருந்தாலும் சரி, யானைக் குட்டிகளாக இருந்தாலும் சரி, அவை வாயில் பொருட்களை வைக்கும். அது அவர்களின் இயல்பு. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார் அவர்.
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், வேட்டையாடுபவர்கள் வேட்டையாடுவதை நிறுத்துவதில்லை என்றார் குமார.
“அவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க எளிதான வழிகளை மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள். தாடை வெடிகுண்டுகளைத் தயாரிக்கத் தெரிந்தால், நீங்கள் துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஒரு சில பட்டாசுகள் மற்றும் ஜல்லிகள் போதும்,” என்றார் அவர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் அதிக விலை காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வனவிலங்கு மாமிசம் சாப்பிட வருகிறார்கள். இது தாடை குண்டுகளின் பயன்பாடு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் குமார நம்புகிறார்.
அவுட்டுக்காயால் பலியாகும் யானைக்குட்டிகள்
இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த தசாப்தத்தில் தாடை குண்டுகளால் யானைகள் இறந்தது தான் அதிகம்.
2013 முதல் அக்டோபர் 2023 வரை, இந்த அவுட்டுக்காய் அல்லது தாடை குண்டுகளால், 587 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இது துப்பாக்கிச்சூட்டில் இறந்த யானைகளின் இறப்பை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், 575 யானைகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளன.
தாடை குண்டுகளால் காயமடைந்த யானைகளில் 99% யானைகளுக்கு சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது என்று வனவிலங்கு கால்நடை மருத்துவர் பினிடியா கூறுகிறார்.
“யானை வாயில் வைத்து கடித்தால், சில நேரங்களில் ஒரு துண்டு அல்லது முழு நாக்கும் உடைந்து விடும். அது தவிர, தாடை, பற்கள் மற்றும் மென்மையான பகுதிகளும் சிதைந்துவிடும்,” என்றார் அவர்.
“தாடை உடைந்தால், யானைகளால் சாப்பிட முடியாது. மேலும், வாயின் தசைகள் சேதமடைந்தால், தாடை வேலை செய்யாது. நீங்கள் மெல்ல முடியாது. வாய் எப்போதும் திறந்திருக்கும். நாக்கு உடைந்தால், உணவு அல்லது தண்ணீரை உள்ளே தள்ள முடியாது.”
“துன்பத்தின் காலம் என்பது காயத்தின் அளவு, விலங்கின் வயது மற்றும் அதன் சகிப்புத்தன்மையைப் பொறுத்தது. சில விலங்குகள் இரண்டு வாரங்கள் வரை அவதிப்படுகின்றன,” என்றார் அவர்.
மனிதன் – யானை மோதல்
இலங்கையில் உள்ள யானை, இந்தத் தீவை பூர்வீகமாகக் கொண்டது. ஆசிய யானைகளில் இந்த துணை இனம் மிகப்பெரியது.
இலங்கையில் கடைசியாக, 2011 ஆம் ஆண்டு காட்டு யானைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, இலங்கையில், 5,879 யானைகள் உள்ளதாக தெரியவந்தது.

பட மூலாதாரம், AKALANKA PINIDIYA
இலங்கையில், 2023 ஆம் ஆண்டில் மட்டும், 470 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
இந்த யானைகள், இலங்கை மக்களின் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர். இந்த யானைகள், அந்த நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர்.
ஆனால், காடுகளை அழிப்பதாலும், நாட்டில் நடந்த வரும் வளர்ச்சித் திட்டங்களாலும், மனிதன்-யானை மோதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
“இலங்கையில் ஒரு யானை பேரழிவு நடக்கிறது,” என்று இலங்கையில் விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பான ரேர்(RARE) நிறுவனர் பாஞ்சாலி பனாபிட்டிய கூறினார்.
“இலங்கையில் யானைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒரு மனிதர் இறந்து கொண்டே இருக்கிறான். இரவில் யானைகளால் வீடுகள் உடைக்கப்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் எப்போதும் தூங்குவதில்லை,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“வன விலங்கு சுற்றுலா மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டுவதில் யானை முதன்மையான பங்களிப்பாகும். இருப்பினும், மனிதன்-யானை மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் இதை புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இந்த சமூகங்களுக்கு சரியான வருமானம் இல்லை,” என்றார் அவர்.
இலங்கையில் தாடை குண்டுகள் சட்டவிரோதமானது என்றாலும், அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்தவோ அல்லது உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன் வருவதில்லை என்றார் பனாபிட்டிய.
ஆனால், இதனை வனவிலங்கு அதிகாரிகள் மறுக்கின்றனர்.
தாடை வெடிகுண்டுகளின் பயன்பாட்டைக் குறைக்க கிராமப்புறங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
“யானையைக் கொல்வது இலங்கைச் சட்டத்தின்படி குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்” என்று இலங்கை வனத்துறை அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்தார்.
“தற்போது, தாடை வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பல வழக்குகள் விசாரணையில் உள்ளன, மேலும் நீதிமன்றம் ஏற்கனவே பலரை தண்டித்துள்ளது,” என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், RMJ BANDARA
தாடை வெடிகுண்டுகளால் காமடைந்த யானைகளில் 99% யானைகளுக்கு சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது.
தாடை வெடிகுண்டுகளை தயாரிப்பதில் அல்லது அவற்றைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடுவதில் ஈடுபடும் நபர்கள் குறித்து புகார் அளிக்க ஹாட்லைன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சரத்சந்திர கூறினார்.
“யானைகள் நம் நாட்டின் சொத்து. இவை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கின்றன. அதேபோல், விவசாயிகளும் முக்கியமான சொத்து. அவர்கள் எங்களுக்கு உணவு கொடுக்கிறார்கள். எனவே, விவசாயி மற்றும் யானை, இரண்டையும் பாதுகாப்பது அவசியம்,” என்றார் அவர்.
காட்டுப்பன்றிகளை தாக்கும் தாடைக்குண்டுகளால் பல யானைகள் கொல்லப்பட்டாலும், தற்போது யானைகளை குறிவைத்து குறிப்பாக விவசாய நிலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளை தாக்கும் சம்பவங்கள் நடப்பதாக கால்நடை மருத்துவர் பினிடியா தெரிவித்தார்.
ஆனால் யானைகள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இந்த கொடிய சாதனங்களால் ஏற்படும் மரணம் இயற்கை அல்லது மனிதனால் ஏற்படும் பிற மரணங்களை விட மிகவும் வேதனையானது, என்று அவர் கூறினார்.
“நோக்கம் என்னவாக இருந்தாலும், இந்த அவுட்டுக்காயால், யானை பசி, தாகம் மற்றும் தாங்க முடியாத துன்பம் உள்ளிட்ட பெரும் வலியை அனுபவிக்கிறது.” என்றார் அவர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்