சிப்ஸ், குளிர்பானம் போன்றவை போதும் என்ற உணர்வையே தராதது ஏன்? உடலுக்கு அவை ஏன் தீங்கானவை?

சிப்ஸ், குளிர்பானம் போன்றவை போதும் என்ற உணர்வையே தராதது ஏன்? உடலுக்கு அவை ஏன் தீங்கானவை?

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் ரயில் பயணம் அல்லது சாலை வழியாக நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால், பயணத்தின் நடுவில் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட தோன்றும். சில நேரம் பசிக்கிறது என்பதற்காக சாப்பிடலாம். சில நேரம் பொழுது போக வேண்டும் என்பதற்காகவும் சாப்பிடலாம். அப்போது, நாம் காய்கறி, சாதம் அல்லது சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட விரும்பமாட்டோம். சிப்ஸ், பிஸ்கட் மற்றும் குளிர் பானங்கள் போன்ற உணவுப் பொருட்களையே விரும்புவோம்.

பாரம்பரிய உணவு மற்றும் பானங்களுக்கு பதிலாக உண்ணப்படும் இந்த சுவையான உணவுகள் ‘மிக பதப்படுத்தப்பட்ட உணவு’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை அதிகபடியாக உட்கொண்டால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது மட்டுமல்லாமல், அவை சாப்பிட தூண்டும் வகையில், தயாரிக்கப்படுகின்றன. எனவே நாம் அவற்றுக்கு அடிமையாகி விடுகிறோம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கை , இந்தியாவில் மிக பதப்படுத்தப்பட்ட உணவுக்கான சந்தை கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது என்று கூறுகிறது.

மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்றால் என்ன?

மருத்துவர் குப்தா ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் பொது நலனுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு மற்றும் முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கும் NAPI என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவின் அர்த்தம், “எளிமையான வார்த்தைகளில், மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது உங்கள் சமையலறையில் நீங்கள் வழக்கமாக தயாரிக்க முடியாத உணவுப் பொருள். உதாரணமாக பாக்கெட்டில் வரும் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட், ரொட்டி, பன் போன்றவை.” என்று விளக்குகிறார்.

“ஒவ்வொரு சமூகமும் அதன் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உணவைத் தயாரிக்கின்றன. இதை உணவு பதப்படுத்துதல் என்றும் கூறலாம். பாலில் இருந்து தயிர் தயாரித்தால், அது பதப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு பெரிய தொழிற்சாலையில் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்பட்டு, நிறம், சுவை, சர்க்கரை அல்லது சோள சிரப் சேர்த்து சுவையாக இருந்தால், அது மிக பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கும்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்க்கப்படும் இந்த பொருட்கள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்காது. நீங்கள் அவற்றை தொடர்ந்து சாப்பிடலாம், தொடர்ந்து விற்பனை செய்யலாம் மற்றும் அதிக லாபம் ஈட்டலாம். இத்தகைய சூழ்நிலையில், பெரிய தொழிற்சாலைகள் மட்டுமே அவற்றை தயார் செய்ய முடியும்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம், மருத்துவர் அருண் குப்தா

இயற்கை பதப்படுத்திகள் தீங்கு விளைவிக்காது

மிக பதப்படுத்தப்பட்ட உணவு ‘காஸ்மெடிக்’ உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொழில்துறை நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளுடன் தயாரிக்கப்படுகின்ற

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்-

  • கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள்
  • இனிப்பு, கொழுப்பு அல்லது உப்பு தின்பண்டங்கள், மிட்டாய்
  • மொத்தமாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள், பிஸ்கட், பேஸ்ட்ரிகள், கேக்குகள்
  • இறைச்சி, சீஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர், ஹாட் டாக்
  • இன்ஸ்டன்ட் சூப், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பேபி ஃபார்முலா

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உணவு பொருட்கள் அனைத்தும் தொழில்துறை செயல்முறையின் கீழ் சர்க்கரை, உப்பு, கொழுப்புகள் திரவ ரசாயனங்கள், கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை பொதுவாக நம் சமையலறையில் பயன்படுத்துவதில்லை.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானியும், ஹைதராபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் விஞ்ஞானியுமான மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், நாகரிகம் தொடங்கிய போது பதப்படுத்தும் செயல்முறை தொடங்கியது என்கிறார்.

மேலும், “நீண்ட கால பயன்பாட்டிற்காக பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பதே இதன் முக்கிய செயல்பாடாகும். உணவில் இருந்து ஈரப்பதத்தை அகற்றினால், அதை பாதுகாக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் கற்றுக்கொண்டனர். எனவே வெயிலில் உலர்ந்த உணவுகளை நீண்ட நேரம் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.” என்று அவர் விளக்கினார்.

மருத்துவர் வி சுதர்ஷன் ராவ், “உப்பு, சர்க்கரை ஆகியவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன, அவற்றை நீங்கள் பதப்படுத்திகள் என்று அழைக்கலாம். ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், இந்த செயல்முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாநகராட்சி சுகாதாரத் துறை பேராசிரியர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன், “ஊறுகாயை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது அதிக உப்பு, சர்க்கரை, வினிகர் மற்றும் சிட்ரிக் அமிலத்தை கொண்டது. அவை இயற்கை பாதுகாப்புகளாக செயல்படுகின்றன. செயற்கை பாதுகாப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரத்தின்படி பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறுகிறார்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம், Getty Images

பல வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆக்ஸிஜனேற்றிகள், அமிலங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பதப்படுத்தும் தன்மையை ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பயன்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவுகளில் பாக்டீரியாவைத் தடுக்க ஆண்டிமைக்ரோபியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருட்களில் மட்டுமல்ல, கிரீம்கள், ஷாம்புகள், சன்ஸ்கிரீன்கள் போன்ற அழகுசாதனப் பொருட்களிலும் அவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்கான செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் அவை தீங்கு விளைவிக்குமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் மருத்துவர் ஜெயேஷ் வகானி, “எந்தவொரு உணவுப் பொருளிலும் ப்ரிசர்வேடிஸ் எனும் பதப்படுத்திகள், பாதுகாப்பு தரங்களை மனதில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை குறைந்த அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஏனெனில் அதிகப்படியான பயன்பாட்டால் எந்த நன்மையும் இல்லை.”

மருத்துவர் வி சுதர்ஷன் ராவ் கூறுகையில், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஐ) உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பதப்படுத்திகள் சோதித்து, அவற்றை 60-70 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகும், அவை உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்று கண்டறியப்பட்டுள்ளது.” என்கிறார்.

நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பான ‘நுகர்வோர் குரல்’ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிம் சன்யால் கூறுகையில், “உணவு மற்றும் பானங்கள் நீண்ட காலமாக கெட்டுப்போகாமல் தடுக்க வண்ணங்களைச் சேர்ப்பதன் மூலம் சுவையை அதிகரிக்கவும், உணவை கவர்ச்சிகரமானதாக மாற்றவும் பதப்படுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார்.

இந்த பதப்படுத்திகள் பொதுவாக குறைந்த அளவிலேயே சேர்க்கப்படுகின்றன. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கெட்டுப்போகாமல் தடுக்க பின்பற்றப்படும் முறைகள் அவற்றை மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளாக மாற்றுகின்றன.

உணவுப் பொருட்களில் பதப்படுத்திகளின் பயன்பாட்டை தனிமையில் பார்க்க முடியாது. ஆனால் இது மிக பதப்படுத்தப்பட்ட உணவுடன் தொடர்புடையதாக பார்க்க வேண்டும் என்று மருத்துவர் ஆஷிம் சன்யால் விளக்குகிறார்.

இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுத் துறையின் மதிப்பு 500 பில்லியன் டாலர். காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை தயாரிப்பதும் பதப்படுத்தப்பட்ட உணவு என்று அழைக்கப்படுகிறது, ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவு என்பது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஆய்வகத்தில் புதிய வடிவத்தில் தயாரிக்கப்படுகிறது என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். இதில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் போன்றவற்றுடன் கூடுதலாக நிறைய பதப்படுத்திகள் உள்ளன.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம், Getty Images

“மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பதப்படுத்திகள் மற்றும் ரசாயனங்கள் நிறைந்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அவற்றில் பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை நீண்ட காலம் பயன்படுத்தப்படலாம். அவற்றைப் பழக்கப்படுத்த சில சேர்க்கைகளும் சேர்க்கப்படுகின்றன.

உதாரணமாக, சிப்ஸ், குளிர் பானங்கள் அல்லது பிற உணவுப் பொருட்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பழகிவிட்டன, மேலும் இந்த பழக்கத்தை வளர்ப்பதற்காக இது போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன” என்று ஆஷிம் சன்யால் கூறுகிறார்.

மேலும், “மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் பல நோய்களுக்கு வேராக மாறியுள்ளன என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரித்தபோது, மிக பதப்படுத்தப்பட்ட உணவில் நிறைய பதப்படுத்திகள் மற்றும் பிற ரசாயனங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்” என்கிறார்.

அதிக பிராசசிங்கில் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன. இந்த உணவில் தரம் இல்லை. புகையிலை அல்லது சிகரெட்டுகளுக்கு அடிமையாவதைப் போலவே, அத்தகைய உணவுக்கு அடிமையாவதும் ஏற்படுகிறது.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சிக்கல் என்னவென்றால், அவற்றை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நமக்குத் தெரியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் போதும் என்று ஏன் தோன்றுவதில்லை?

மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், “உணவு உண்ணும் போது, நமது மூளை இப்போது வயிறு நிரம்பியுள்ளது என்ற சமிக்ஞையை நமக்கு வழங்குகிறது. ஆனால் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீங்கள் அவற்றை விரும்பி சாப்பிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் அதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பிவிட்டது என்பதற்கான எந்த சமிக்ஞையும் மூளையில் இருந்து வராது, நீங்கள் அதை சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்” என்கிறார்.

செயற்கை பதப்படுத்திகளை குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவும், நீண்ட காலமாகவும் பயன்படுத்தினால், உடலில் புற்றுநோயும் உருவாகலாம் என்று மருத்துவர் ஜெயேஷ் வகானி கூறுகிறார்.

தீங்கு விளைவிக்கும் உணவுகளின் ஆயுளை அதிகரிக்க பல முறை பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன என்றும் மருத்துவர் அருண் குப்தா குறிப்பிடுகிறார்.

“அவற்றில் பதப்படுத்திகள் மற்றும் வண்ணமேற்றிகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன, அவை உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அல்லது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இது உடனடியாக தெரியாவிட்டாலும், நீண்ட காலத்தில் இது ஆபத்தானது” என்று எச்சரிக்கிறார்.

உலகளாவிய பட்டினி குறியீட்டின் 2023 அறிக்கையின்படி, 125 நாடுகளில் பசியைப் பொறுத்தவரை இந்தியா 111 வது இடத்தில் உள்ளது மற்றும் பசியுடன் போராடும் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு.

நாடு ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை எதிர்கொண்டுள்ள அதே வேளையில், வளர்ந்து வரும் உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்கிறது

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம், Getty Images

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளும் உடல் பருமனை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன.

மருத்துவர் அருண் குப்தா , “சில நேரங்களில் அவற்றை சாப்பிடலாம், ஆனால் நம் உணவில் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உட்கொள்ளத் தொடங்கும் போது,

முதலில், எடை அதிகரிக்க தொடங்கும், பின்பு பல நோய்களுக்கு இதுவே காரணமாகும். இது நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவின் பயன்பாடு மனச்சோர்வு மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இது ஏன் என்ற , ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருப்பதாக மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார்.

பொதுவாக, எல்லா வயதினரும் வகுப்பினரும் மிக பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைக் காணலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை , குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில் குழந்தைகள் பொதுவாக இனிப்பான உணவுகளை விரும்புகிறார்கள். அவர்கள் சிப்ஸ், மிட்டாய், சாக்லேட், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் குளிர் பானங்கள் சாப்பிட விரும்புகிறார்கள்.

இது தொடர்பான பெரும்பாலான ஆராய்ச்சிகள் பெரியவர்கள் மீது செய்யப்பட்டிருந்தாலும், 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 50% குழந்தைகள் மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பாதிக்கப்படுவதாகவும், அது அவர்களை உடல் பருமனை நோக்கித் தள்ளுகிறது என்றும் கூறுகிறது.

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம், மருத்துவர் ஆஷிம் சன்யால்

உணவு லேபிளிங்கின் முக்கியத்துவம்

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுபோன்ற உணவு அல்லது உணவுகளை வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டால், படிப்படியாக அதன் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும் என்று ஆஷிம் சன்யால் விளக்குகிறார். அதேசமயம், உணவு பொருட்களின் மீது உள்ள உணவு லேபிள்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.

இது தவிர, இதுபோன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் குறித்த தகவல்களையும் வழங்க வேண்டும்.

“உணவு பொருட்களின் பாக்கெட்டில் முன் பக்கமாக இருக்கும் ஊட்டச்சத்து லேபிளிங்கை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் சர்க்கரை அதிகம், அதிக உப்பு அல்லது கொழுப்பு அதிகமாக உள்ளதா என்பதை லேபிள் காட்டுகிறது. இந்த முக்கிய விஷயங்களை கவனித்தால், 80% பிரச்னை நிறுத்தப்படும். இப்போது இந்த தகவல்கள் அனைத்தும் லேபிளின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ளன மற்றும் வாடிக்கையாளர்கள் கவனிக்காத அளவுக்கு சிறியதாக உள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் முன் பக்கம் லேபிள் ஒட்ட தொடங்கியுள்ளன, இது மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியுள்ளது” என்பதை ஆஷிம் சன்யால் உதாரணமாகக் கூறுகிறார்.

அதே நேரத்தில், லேபிளிங்கில் தகவல் கொடுத்தால், அது விற்பனையை பாதிக்கும் என்ற விவாதமும் உள்ளது. இதற்குப் பதிலளித்த ஆஷிம் சன்யால், சிகரெட் மற்றும் புகையிலை மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அத்தகைய பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதா?

மிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் என்ன தீமை

பட மூலாதாரம், Getty Images

அரசின் பங்கு என்ன?

இந்த விஷயத்தில் மிகப்பெரிய பங்கு அரசுக்கே உள்ளது என சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அருண் குப்தா கூறுகிறார்.

அவர் கூறுகையில், “அரசாங்கத்தின் பொறுப்பு மிகப்பெரியது. மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது தவிர, இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஊடகங்கள், சமூகம் மற்றும் நிறுவனங்களின் கடமையாகும். பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி தேர்வு செய்கிறார்கள்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குழந்தை உணவு விளம்பரங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதைப் போலவே, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பொருட்கள் குறித்து தவறான விளம்பரங்களும் தடை செய்யப்பட வேண்டும்” என்று மருத்துவர் அருண் குப்தா வேண்டுகோள் விடுக்கிறார்.

தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் அறிய வேண்டும். ஒருவேளை மக்கள் இன்னும் சாப்பிடலாம், ஆனால் இந்த விஷயங்களை குறைவாக சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மருத்துவர் அருண் குப்தா, “இத்தகைய கொள்கைகள் தொழில்துறைக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன, அவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவை தயாரித்து லாபம் ஈட்டினாலும், அதில் தவறில்லை. ஆனால் லாபம் சம்பாதிப்பதும், மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதும் சரியல்ல.” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *