நரேந்திர மோதி குறித்து கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தளம் சொன்ன சர்ச்சை பதில் – இந்திய அரசு கோபத்தில் இருப்பது ஏன்?

நரேந்திர மோதி குறித்து கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தளம் சொன்ன சர்ச்சை பதில் - இந்திய அரசு கோபத்தில் இருப்பது ஏன்?

கூகுள் ஜெமினி, மோதி

பட மூலாதாரம், JONATHAN RAA/NURPHOTO VIA GETTY IMAGES

பிரதமர் நரேந்திர மோதி குறித்த கேள்விக்கு கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான ‘ஜெமினி’ அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுபுறம், கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் ஜெமினி எப்போதும் நம்பகமானதல்ல என்று கூகுள் விளக்கமளித்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு ‘ஜெமினி’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை (Chatbot) அறிமுகப்படுத்தியது. பயனாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினாலோ, ஒரு செயலை மேற்கொள்ள உத்தரவிட்டாலோ, அதுதொடர்பாக இணையத்தில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு பதிலளிப்பது மட்டுமின்றி, பயனர்களால் கோரப்படும் குறிப்பிட்ட செயல்களையும் இது மேற்கொள்கிறது.

இந்நிலையில், பயனர் ஒருவர் இந்திய பிரதமர் குறித்து கேட்க கேள்விக்கு ஜெமினி அளித்த பதில்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் ஜெமினி, மோதி

பட மூலாதாரம், X/Rajeev Chandrasekar

என்ன சர்ச்சை?

பயனர் ஒருவர் ஜெமினி செயற்கை நுண்ணறிவு செயலியிடம் ‘பிரதமர் நரேந்திர மோதி சர்வாதிகாரியா?’ என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஜெமினி அளித்த பதிலில், பாஜகவின் இந்து தேசியவாத சித்தாந்தம், எதிர் கருத்துகளை ஒடுக்குதல், மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் சில நிபுணர்கள் பிரதமர் மோதியை சர்வாதிகாரியாக வகைப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்திருந்தது.

அதேநேரம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்ட் ட்ராம்ப், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஆகியோர் குறித்து இதே கேள்வியை எழுப்பியபோது, ஜெமினி தெளிவான பதில்களை அளிக்கவில்லை.

ஜெலென்ஸ்கி பற்றி கேள்விக்கு, ‘இந்த கேள்வி சிக்கலானது, இதற்கு எளிய பதில் இல்லை’ என்று ஜெமினி பதிலளித்தது.

ட்ரம்பைப் பற்றி கேட்கப்பட்ட இதேபோன்ற கேள்விக்கு, ‘தொடர்ந்து மாறிவரும் தகவல்களுக்கு மத்தியில் தேர்தல்கள் ஒரு சிக்கலான விஷயமாகும். சரியான மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெற, கூகுள் தேடலில் தேட முயற்சிக்கவும்’ என்று ஜெமினி கூறியது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை பயனர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். இதனை மறு பகிர்வு செய்த ஊடகவியலாளர் ஒருவர், இந்த விவகாரத்தில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இவை தொழில்நுட்ப சட்டத்தின் இடைநிலை விதிகளின் விதி 3(1)(b) கீழ் விதிமீறல்கள் என்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளை மீறும் செயல் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை, இந்த விவகாரம் தொடர்பாக கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசுத்தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிடாத அதிகாரிகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெமினி செயற்கை நுண்ணறிவுக்கு எப்படிப் பயிற்சி வழங்கப்படுகிறது, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அது தனது பதிலை தயாரித்தது. தனது பதிலில் ஜெமினி குறிப்பிட்டிருக்கும் ‘நிபுணர்கள்’ யார் என்பது தொடர்பாக அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் பதில் என்ன?

பி.டி.ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை, “கூகுளின் செய்தித் தொடர்பாளர் அனுப்பியுள்ள இ.மெயிலில் இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் துரிதமாக செயலாற்றியுள்ளோம். படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறன் கருவியாக ஜெமினி கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமீபத்திய நிகழ்வுகள், அரசியல் விவகாரங்கள் போன்றவை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் ஜெமினி எப்போது நம்பகமானதல்ல,” என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

இந்தச் செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘நம்பகத் தன்மையற்ற இணையதள அல்காரித மாடல்களை இந்திய பயனர்கள் மீது சோதிக்கக்கூடாது’ என்றும் ‘பாதுகாப்பு & நம்பிக்கை என்பது இணையதளங்களின் சட்டப்பூர்வ கடமை’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ‘மன்னிக்கவும் நம்பகத்தன்மையற்றது’ என்று கூறுவதன் மூலம் சட்டத்திலிருந்து விலக்கு பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *