
பட மூலாதாரம், Getty Images
பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அருமையாகப் பயன்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆர்ப்பரிப்பான ஆட்டம் பாகிஸ்தானை 8வது முறையாக உலகக் கோப்பைத் தொடரில் வீழ்த்தி இந்தியா தனது வரலாற்றைத் தக்க வைக்க உதவியது.
ஐம்பது ஓவர்கள் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறு இன்னும் 4 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கப் போகிறது.
ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் இன்று பகலிரவாக நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 192 ரன்கள் இலக்குடன் பயணித்த இந்திய அணி 117 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்த திருப்புமுனையை முகமது சிராஜ் எப்படி ஏற்படுத்தினார்? பும்ரா, சிராஜ், குல்தீப் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை ரோஹித் சர்மா எப்படிப் பயன்படுத்தினா?
விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்.
முதலிடத்தில் இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து 3 வெற்றிகளைப் பெற்று இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்திய அணியின் ரன்ரேட்டும் 1.821 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கியது ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் என்று ரசிகர்கள் நினைத்தாலும் ரோஹித்தின் பணியை எளிதாக்கியது பும்ரா, குல்தீப், சிராஜ் ஆகியோர் என்பதுதான் நிதர்சனம்.
பும்ராவின் பந்துவீச்சு பேசப்படும்…
அதிலும் பாகிஸ்தான் பேட்டர் ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்த பும்ராவின் லெக் கட்டர் பந்துவீச்சு இனி பல ஆண்டுகள் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படும். அந்தப் பந்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்பதால்தான், பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பும்ரா பந்துவீச்சில் போல்டான ரிஸ்வான், பெவிலியன் செல்லும்போது, பும்ராவின் பந்துவீச்சு சைகையைச் செய்துகொண்டே சென்றதுதான் இதில் “ஹைலைட்ஸ்”.
பும்ராவின் பந்துவீச்சு எந்த அளவுக்கு ரிஸ்வானிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை இதன்மூலம் ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்.
சிராஜ் ஏற்படுத்திய திருப்புமுனை

பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தில் இரு கட்டங்களிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது சிராஜ் பந்துவீச்சு என்றாலும் அதைச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டத்தை கடிவாளமிட்டு இந்தியாவின் பக்கம் திருப்பியது குல்தீப், பும்ராவின் பந்துவீச்சுதான்.
குல்தீப், ஜடேஜாவின் துல்லியம்
குல்தீப் யாதவின் பந்துவீச்சு ஒவ்வொரு போட்டிக்கும் மெருகேறுகிறது. ஐபிஎல் அணியிலிருந்தும், இந்திய அணியிலிருந்து நிராகரிக்கப்பட்ட குல்தீப் யாதவ், இன்று நிராகரிக்கப்பட முடியாத இடத்தில் இருக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்குப் பின், ஒருநாள் தொடர்களில் நடுப்பகுதி ஓவர்களில் 36 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகபட்ச விக்கெட்டுகள் சாதனையை குல்தீப் வைத்துள்ளார்.
குல்தீப்புக்கு ஆதரவாக ஜடேஜாவும் லைன் லென்த்தில் துல்லியமாகப் பந்து வீசியதால் பாகிஸ்தான் பேட்டர்கள் ரன் சேர்க்க முடியாமல் திணறினர்.
இருவர் வீசிய பந்துகளும் 60 சதவீதம் துல்லியமான லென்த்தில் வீசப்பட்டுள்ளது புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பைத் தொடரில் எந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்களும் எட்டாத துல்லியத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் வைத்துள்ளனர்.
அசுரத்தனமான “ஸ்ட்ரைக் ரேட்”

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது அடுத்து வரும் போட்டிகளை துணிச்சலாக இந்திய அணி எதிர்கொள்ள உதவும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் கண்ட ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் சதத்தை நழுவவிட்டார்.
ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட், முதல் 10 ஓவர்களில் ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் மாறி வருகிறது. 2015 உலகக்கோப்பைத் தொடரில் 77.2 ஆகவும், 2019இல் 83.7ஆகவும் இருந்தது. தற்போது 2023 உலகக் கோப்பைத் தொடரில் 153.2 ஆக அதிரித்துள்ளது.
அதிலும் “ஃபுல் லென்த்துக்கு” எதிராக ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 211 ஆகவும், “லென்த்” பந்துவீச்சுக்கு எதிராக 136 ஆகவும், “ஷார்ட்” பந்துக்கு எதிராக 360ஆகவும் வைத்துள்ளார்.
ரோஹித் ஷார்ட்டாக வீசும் பந்துகளை எவ்வாறு எதிர்கொள்வார் எனத் தெரியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீசி பாடம் கற்றுக்கொண்டனர். அதிலும் லெக் திசையில் ஷார்ட்டாக ஹிட்மேனுக்கு வீசினால், பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் சந்தேகமில்லால் தேடலாம். ஹாரிஸ் ராஃப், அஃப்ரிடி இருவரும் ரோஹித்துக்கு லெக் திசையில் ஷார்ட்டாக வீசி பாடம் கற்றனர்.
பந்துவீச்சாளர்கள் அருமையான பங்களிப்பு

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா கூறுகையில், “பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு 190 ரன்களில் சுருட்டியது சிறப்பானது. இது 190 ரன்களில் சுருட்டக்கூடிய ஆடுகளம் அல்ல. 290 ரன்கள் வரை பாகிஸ்தான் சேர்க்கும் என நினைத்தோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்துள்ளனர்.
கேப்டனுக்குரிய பணியை நான் சரியாகச் செய்கிறேன் என்று நம்புறேன். ஒவ்வொருக்கும் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். நாங்கள் வெற்றிக்காக அதிகமாகக் கொண்டாடவும் இல்லை, தோல்வி அடைந்தால் சோர்வடையப் போவதும் இல்லை.
எங்களுக்கு இன்னும் லீக் ஆட்டங்களும், அரையிறுதியும், இறுதி ஆட்டமும் இருக்கிறது. அதுவரை நாங்கள் சமநிலையுடன் செல்லவே விரும்புகிறோம். கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிக் கவலையில்லை,” எனத் தெரிவித்தார்.
அதிரடியாகத் தொடங்கிய பாகிஸ்தான்
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது, இந்த ஆட்டமும் நேரம் செல்லச் செல்ல ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
பாகிஸ்தான அணிக்கு, அப்துல் ஷஃபீக், இமாம் உல்ஹக் நல்ல தொடக்கம் அளித்தனர். அதிலும் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை அடித்து இமாம் உல் ஹக் அதிரடியாக ரன்களைச் சேர்த்தார். ஆனால், பும்ரா தனது ஓவரில் பாகிஸ்தான் பேட்டர்களை மிரட்டியதால் அவர் ஓவரில் ரன் அடிக்கத் திணறினர். ஆனால், சிராஜ் ஓவரை வெளுத்து வாங்கினர்.
ஆனால் மனம் தளராத சிராஜ் 8வது ஓவரில் அப்துல்லா ஷஃபீக்கை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். சிராஜ் வீசிய பந்து தாழ்வாக வந்ததால், அதை கால்காப்பில் வாங்கி ஷஃபீக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆசம், இமாம் உல் ஹக்குடன் சேர்ந்தார். இந்தியாவுக்கு எதிராக சில ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பாபர் ஆசம் ஆடியதால், இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கவனத்துடன் ஆடினார். தவறான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு அனுப்பினார். பாகிஸ்தான் ரன்ரேட்டும் சீராக உயர்ந்து வந்தது.
ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரின் 2வது பந்து ஸ்டெம்பை விட்டு விலகிச் சென்றது. அதை இமாம் உல் ஹக் அடிக்க முயன்றபோது பேட்டின் பக்கவாட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கேஎல்ராகுலிடம் கேட்சானது. இமாம் உல் ஹக் 36 ரன்னில் வெளியேறினார்.
ரிஸ்வான்-பாபர் கூட்டணி

பட மூலாதாரம், Getty Images
மூன்றாவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் களமிறங்கி, பாபர் ஆசமுடன் சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் பேட் செய்து, ரன்களை சேர்த்தனர்,
இருவரும் நங்கூரமிட்டது இந்திய அணிக்கு நெருக்கடியை மெல்ல மெல்ல அதிகரித்தது. ரிஸ்வான், பாபர் ஆசம் ஆடிய வேகம், களத்தில் நங்கூரமிட்டதைக் கணித்தபோது, பாகிஸ்தான் ஸ்கோர் 285 ரன்களை தொடலாம் என்று கணிக்கப்பட்டது.
பாபர் ஆசம் 57 பந்துகளில் இந்திய அணிக்கு எதிராக முதல் அரை சதத்தை எட்டினார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். சிராஜ் வீசிய 30வது ஓவரில் தாழ்வாக வந்த பந்தை பாபர் ஆசம் கணிக்கத் தவறியதால், க்ளீன் போல்டாகி 50 ரன்களில் வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்களைச் சேர்த்தனர்.
பாபர் விக்கெட் திருப்புமுனை

பட மூலாதாரம், Getty Images
பாபர் ஆட்டமிழந்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. அதன்பிறகு ஆட்டத்தை இந்திய அணி கையில் எடுத்துக்கொண்டது.
பாபர் ஆசம், ரிஸ்வான் கூட்டணியை உடைத்து திருப்புமுனையை சிராஜ் அளித்தார். அந்தப் பாதையைப் இறுகப் பிடித்த பும்ரா, குல்தீப் யாதவ் சேர்ந்து பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையை ஆட்டிப் படைத்தனர்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் என வலுவாக இருந்தது. ஆனால், 30 முதல் 43 ஓவர்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் நிகழ்த்திய மாயஜால பந்துவீச்சுதான் பாகிஸ்தான் அணியை திக்குமுக்காடச் செய்தது.
36 ரன்களுக்கு 8 விக்கெட்
பாகிஸ்தான் அணியின் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டு போலச் சரிந்தனர். 13 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சவுத் ஷகீல்(6), இப்திகார் அகமது(4) விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் தான் வீசிய 33வது ஓவரில் எடுத்தார்.
அதிலும் இப்திகார் அகமது ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு, குல்தீப் பந்தை அடிக்க அது அவரின் காலில் பட்டு போல்டாகியது. சவுத் ஷகீல் கால்காப்பில் வாங்கியபோது கள நடுவர் அவுட் வழங்கவில்லை, ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா அப்பீல் செய்யவே, 3வது நடுவர் அவுட் வழங்கினார்.
விக்கெட்டுகள் சரிந்தாலும் ரிஸ்வான் அரை சதத்தை நோக்கி நகர்ந்தார். பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். பும்ரா வீசிய சிறிய லெக் கட்டர் பந்தை கணித்து ஆட ரிஸ்வான் தவறியதால் க்ளீன் போல்டாகி 49 ரன்னில் வெளியேறினார். ரிஸ்வான் வெளியேறியபோது, பும்ரா பந்துவீச்சில் செய்த ஆக்சனை அவரே செய்துக்காட்டிக்கொண்டு வெளியேறினார்.
சதாப் கானையைும் 2 ரன்னில் பும்ரா தனது “லெக் கட்டர்” பந்துவீச்சில் க்ளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார். பும்ராவின் துல்லியமான லெக் கட்டருக்கு இது மற்றொரு மாஸ்டர் பீஸ்.
முகமது நவாஸ்(4) ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், ஹாரிஸ் ராஃப்(2), ஹசன் அலி(12) ஆகியோர் ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். 42.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி கடைசி 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மோசமாக ஆட்டமிழந்தது.
சாதித்த இந்திய பந்துவீச்சாளர்கள்
உலகக்கோப்பைத் தொடரில் ஒரு அணியில் 5 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை 3வது முறையாக வீழ்த்தியுள்ளனர். இதற்கு முன், 2011, மொஹாலியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் உள்ள 5 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடந்த 2015ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 5 பேர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் அதிரடி சரவெடி
இந்திய அணி 192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஆட்டத்தைத் தொடங்கினர். அஃப்ரிதி வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே ஸ்குயர் லெக் திசையில் பவுண்டரி அடித்தார். ஹசன் அலி வீசிய 2வது ஓவரில் கில் 3 பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அஃப்ரிடி வீசிய 3வது ஓவரில் கில் 16 ரன்னில் சதாப் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பிறகு விராட் கோலி களமிறங்கி ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். கோலி நிதானமாக ஆட, ரோஹித் சர்மா பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இந்திய அணி 6.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது.
அஃப்ரிடி வீசிய 7வது ஓவரில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி உள்ளிட்ட 15 ரன்களை விளாசினார். ஹாரிஸ் ராஃப் வீசிய 9வது ஓவரிலும் ஒரு சிக்ஸர், பவுண்டரி உள்ளிட்ட 14 ரன்களை ரோஹித் வெளுத்து வாங்கினார்.
ஹசன் அலி ஓவரில் ஸ்லோ பாலை தவறாகக் கணித்து கோலி அடிக்கவே நவாஸ் கைகளில் பந்து தஞ்சமடைந்தது. கோலி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ரோஹித்-கோலி கூட்டணி 56 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது.
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. 13.5 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் மைல்கல்
பாகிஸ்தானுக்கு எதிராக 1999ஆம் ஆண்டுக்குப் பின், ஒரு அணி மட்டுமே முதல் 10 ஓவர்களில் அதிகமான ரன்களை குவித்தது.
அந்த அணியும் இந்தியாதான். 2003ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 ஓவர்களில் 88 ரன்களை இந்திய அணி குவித்தது.
ரோஹித்தின் அரைசதம்
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித்துடன் இணைந்தார். ஸ்ரேயாஸ் நிதானம் காட்ட, ரோஹித் அதிரடியாக ரன்களை குவித்து 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் அடித்த “ஹிட்மேன்”, இந்த ஆட்டத்தில் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஸ்ரேயாஸும், ரோஹித்துடன் அதிரடியில் இணையவே ரன்ரேட் வேகமெடுத்தது. சதாப்கான் வீசிய 20வது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களை குவித்தார். நவாஸ் வீசிய 21வது ஓவரில் ஸ்ரேயாஸ் சிக்ஸரும், ரோஹித் ஒரு பவுண்டரியும் விளாசினர். 20.4 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது.
முதல் ஸ்பெல்லில் அஃப்ரிடி ஓவரை ரோஹித் வெளுத்து வாங்கியதால், பந்துவீச்சு நிறுத்தப்பட்டு, 22 ஓவரில் 2வது ஸ்பெல்லுக்கு அழைக்கப்பட்டார்.
அஃப்ரிடி வீசிய ஸ்லோ பந்தைக் கணிக்காமல் ரோஹித் அடிக்க இப்திகார் அகமதுவிடம் கேட்சானது. ரோஹித் சர்மா 63 பந்துகளில் 86 ரன்களில்(6சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ், ரோஹித் கூட்டணி 77 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
300 சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் போட்டிகளில் அதிகமான சிக்ஸர் அடித்த வரிசையில் 3வது இடத்தையும், 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற பெருமையுயம் ரோஹித் சர்மா பெற்றார்.
முதலிடத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடனும், 2வது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கெயில் 331 சிக்ஸர்களுடனும் உள்ளனர். ரோஹித் சர்மா 301 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யரின் ஆமை வேகம்

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது இந்திய அணி 156 ரன்களை எட்டியிருந்தது, வெற்றிக்கு, 36 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், இருவரும் சேர்ந்து 36 ரன்களை சேர்க்க 10 ஓவர்கள் எடுத்துக் கொண்டனர்.
ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது 38 பந்துகளில் 36 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
ஸ்ரேயாஸ் 12 ரன்களை அடிப்பதற்கு, 24 பந்துகளை எடுத்துக்கொண்டு ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தார். பவுண்டரி அடித்து அரைசதம் அடித்த, ஸ்ரேயாஸ் 53 ரன்களிலும், ராகுல் 19 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தனர். 30.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இன்னுமா இந்த பாணி தொடர்கிறது!

பட மூலாதாரம், Getty Images
தனிப்பட்ட வீரர்களின் அரைசதம், சதம் சாதனையை வரலாற்றில் பதிய வைப்பதற்காக அணியின் வெற்றியைத் தள்ளிப்போடும் பழக்கம் இன்னும் கிரிக்கெட்டில் ஒழியவில்லை.
ஒரு காலத்தில் 90 ரன்களை விரைவாக எட்டிய பேட்டர், கடைசி 10 ரன்களை அடிக்க 30 பந்துகளை எடுத்துக்கொள்ளும் முறை இருந்தது. அது டி20 போட்டி வந்தபிறகு வழக்கிலிருந்து ஒழிந்துவிட்டது என்று நம்பப்பட்டாலும், ஸ்ரேயாஸ் போன்றோர் இதுபோன்று தனிப்பட்ட சாதனைக்காக அணியின் வெற்றியை தள்ளிப்போடுகிறார்கள்.
பாகிஸ்தான் ஃபீல்டிங்கில் என்ன பிரச்னை?
கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் ஃபீல்டிங் என்றாலே “கேலியாகச் சிரிப்பார்கள்” என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் பந்தை தரையில் விழுந்து தடுக்கத் தயங்குவார்கள். இது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.
கேட்சை கோட்டைவிட்டது, பவுண்டரிகளை தாரை வார்த்தது என தவறுகள் ஏராளம். அதிலும் தடுக்க வேண்டிய பந்தைக்கூட பவுண்டரிக்கு தட்டிவிட்ட கொடுமையும் அரங்கிறேயது.
பாகிஸ்தான் அணி இம்ரான்கான் தலைமையில் உலகக்கோப்பை வாங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை ஃபீல்டிங் விஷயத்தில் இன்னும் மந்தமாகவே இருப்பது ஏனோ என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்