
பட மூலாதாரம், Getty Images
ஆமதாபாத்தில் இன்று நடக்கும் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. இரு அணிளிலும் எந்தவிதமான மாற்றமும் இன்றி களமிறங்குகிறது. இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அஸ்வினுக்கு இடமில்லை. வழக்கம் போல், ஜடேஜா, குல்தீப் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா, டிராவிஸ் ஹெட் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது பெரிய பலம். இதில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டாலும் இருவரும் ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடியவர்கள்.
ஆமதாபாத்தில் எண்-5இல் உள்ள ஆடுகளம் இன்று இறுதிப்போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்த ஆடுகளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஆஸி. பவுலர்களிடம் திணறும் இந்திய பேட்டர்கள்
இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தபின் பேட்டிங்கில் சற்று நிதானம் காட்டத் தொடங்கியது. கோலி, ராகுல் இருவரும் ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் பந்துவீச்சை எச்சரிக்கையுடனே கையாண்டனர். 16.4 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.
ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 6.3 ஓவர்களில் 39 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு, 55 பந்துகளை எடுத்துக்கொண்டது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், ரன் ரேட் வேகமும் குறைந்தது.
ரோஹித் சாதனை

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசி ய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் மிட்விக்கெட்டிலும், கவர்ஸ் திசையிலும் 2 பவுண்டரிகளை விளாசினார்.
ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் ஷார்ட் பாலை, ரோஹித் சர்மா கிராஸ்பேட் ஷாட் மூலம் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த பந்தை மிட்-ஆன் திசையில் பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 5வது ஓவரை ஸ்டார்க் வீசினார். 2வது பந்தை மிட்-ஆன் திசையில் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து கில் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்தத் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 581 ரன்கள் விளாசி, வில்லியம்ஸன் 2019ஆம் ஆண்டு 578 ரன்கள் சேர்த்திருந்ததை முறியடித்தார். இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடரில் கேப்டனாக இருந்து அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
ஜெயிலர் இசையில் கோலி
அடுத்தாக கிங் கோலி களமிறங்கினார். கோலி களமிறங்கும்போது, அரங்கில் ஜெயிலர் படத்தின் பின்னணி இசை முழக்கத்துடன் வந்தார், அந்த ஓவரின் கடைசிப்பந்தில் ரோஹித் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்தது.
மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் இதுவரை கோலி 150 பந்துகளைச் சந்தித்துள்ளார். இதில் கோலி மொத்தம் 148 ரன்கள் சேர்த்துள்ளார். 4 சிக்ஸர், 10பவுண்டர் விளாசிய கோலி, ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
“இந்தியா வெல்லும்”
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “Come on Team India” என்று பாஜக X தளத்தில் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதை ரீட்வீட் செய்த காங்கிரஸ் கட்சி, “JEETEGA INDIA” இந்தியா வெல்லும் என இந்திய கிரிக்கெட் அணியையும் இந்தியா கூட்டணியையும் மறைமுகமாக குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளது.
கோலி ஹாட்ரிக் பவுண்டரி, ரோகித் அவுட்
ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டினார். 2வது பந்திலும் அவுட்சைட் ஆஃப்சைடில் வீசப்பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். ஸ்டார்க் வீசிய 3பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு கோலி ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். இந்திய அணி 7-வது ஓவரில் 50 ரன்களை எட்டியது.
மேக்ஸ்வெல் 8வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். மேக்ஸ்வெல் பந்துவீச்சை ரோஹித், கோலி நிதானமாகவே அணுகினர். 5வது பந்தில் கோலி பவுண்டரிக்கு அனுப்பினார்.
மேக்ஸ்வெல் 10வது ஓவரை வீசினார். 2வது பந்தில் ரோகித் சர்மா இறங்கிவந்து லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், மூன்றாவது பந்தில் கவர்ஸ் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால், 4வது பந்தை ரோகித் கவர் திசையில் அடித்த பந்தை ஓடிச் சென்று டிராவிஸ் ஹெட் அருமையான கேட்ச் பிடித்தார்.
ரோகித் சர்மா 31 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது.
பேட் கம்மின்ஸ் 11வது ஓவரை வீசினார். முதல் பந்தை கம்மின்ஸ் லென்த்தில் வீச கோலி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஸ்ரேயாஸ் சந்தித்தார். துல்லியமாக வீசப்ப்பட்ட பந்துக்கு ஸ்ரேயாஸ் தாமதமாக ரெஸ்பான்ஸ் செய்யவே அவுட்சைட் எட்ஜ் எடுத்து கேட்சானது. 4 ரன்னில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

மந்தமாக ஆடும் இந்திய அணி
இந்திய அணியின் ரன் வேகம் 10 ஓவர்களாகக் குறைந்துவிட்டது. 11வது ஓவர்கள் முதல் 20வது ஓவர்கள் வரை இந்திய அணி ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
விராட் கோலி – லோகேஷ் ராகுல் ஜோடி களத்தில் நிலைத்து ஆடி வருகிறது. இந்த உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டே ரன்களில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது இந்த ஜோடி தான் நிலைத்து நின்று இந்தியாவை கரை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸின் வியூகம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸை சுண்டி விட்டார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, அனைவரும் எதிர்பாராத வகையில் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
மைதானத்தில் மழையின் காரணமாக பனி இருப்பதால் முதலில் பவுலிங் செய்ய விரும்பியதாக பேட் கம்மின்ஸ் தெரிவித்தார். டாஸை இழந்தாலும், இந்தியா முதலில் பேட் செய்ய தான் விரும்பியதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இந்திய அணியிலும் ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் மாற்றம் இல்லை.
டாஸ் யாருக்கு சாதகம்?

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. மைதானத்தில் உள்ள 5ஆம் எண் ஆடுகளம் போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆடுகளம், “இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்த மைதானத்தைவிட சற்று வித்தியாசமானது. இந்த ஆடுகளம் நன்கு காய்ந்துள்ளது, அதிகமாக ரோலிங் செய்யப்படவில்லை.
ஆடுகளம் நன்கு காய்ந்து, ஆங்காங்கே திட்டுத் திட்டாக சமனற்று இருக்கிறது. இந்த இடங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால் நன்கு ட்ர்ன் ஆகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து நன்கு டர்ன் ஆகியிருக்காது.
இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்தால், ரன் ஸ்கோர் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்ப்பது அவசியம். இந்தியா போன்ற வலிமையான அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரன்களைச் சேர்த்துவிடும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு ஆடம் ஸம்பா பந்துவீச்சு முக்கியத்துருப்புச்சீட்டாக இருக்கும்.
நரேந்திர மோதி மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மூன்று போட்டிகளில், இரண்டாவது பேட் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது.ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அது ஆஸ்திரேலியாவாகும்.
இந்தியா இந்த உலகக் கோப்பை போட்டியில் நரேந்திர மோதி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி,வெற்றி பெற்றது.
இந்த மைதானத்தில் இது வரை ஆடிய எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை.

ஆதலால், முதலில் இந்திய அணி பேட் செய்தால் ரன் சேர்ப்பது சிரமமாக இருக்கும், ரன் சேர்ப்பதும் எளிதாக இருக்காது. நேரம் செல்லச் செல்ல சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாகி, பந்து நன்றாக டர்ன் ஆகி, பவுன்ஸ் ஆகும்.
அப்போது இந்திய பேட்டர்கள் கனித்து ஆடுவது அவசியம். இல்லாவிட்டால், விக்கெட்டுகளை இழக்கவும் நேரிடலாம். 15 ஓவர்களுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி ஸ்லிப் வைத்து ஆடம் ஸம்பாவை பந்துவீச வைத்தாலும் வியப்பேதும் இல்லை.
அந்த அளவுக்கு ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். அதிலும் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் பந்துவீச்சும் இந்திய பேட்டர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும்.
சமனற்ற இடத்தில் பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால், பேட்டர்கள் எதிர்பாராத அளவுக்கு பந்து டர்ன் ஆகலாம். இந்திய பேட்டர்கள் விக்கெட்டை நிலைப்படுத்தி சற்று பொறுமையாக ஆடி 250 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டால் இந்த ரன்களை சேஸிங் செய்வது கடினமாக இருக்கும்.
மாலை 5 மணிக்கு மேல் விழும் பனிப்பொழிவு சேஸிங்கில் முக்கியப் பங்கு வகிக்கும். காலநிலை குளிர்ச்சியாக மாறி, காற்றில் ஈரப்பதம் அதிகமாகிவிட்டால், பந்து பேட்டர்களை நோக்கி வரத் தொடங்கும்.
சேஸிங் எளிதாக மாறிவிடலாம். ஆதலால் முதலில் பேட் செய்யும் அணி ஸ்கோர் செய்வதைப் பொறுத்து போட்டியின் முடிவு அமையும்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்