
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் காரணமாக மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் நிலவி வரும் வேளையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலர் வினய் க்வாத்ரா ஞாயிற்றுகிழமை இரான் சென்றடைந்தார்.
இரானின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சரை ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனை சந்தித்து பேசினார்.
இந்தியா-இரான் வெளிநாட்டு அலுவலக 18-ஆவது கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இது வழக்கமான சந்திப்பு என்றாலும், பல முக்கியமான விவகாரங்கள் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தான் மற்றும் காஸாவில் உள்ள நிலைமைகள் குறித்து ஆலோசித்தது மட்டுமில்லாமல் , இந்தியா- இரானுக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் சப்பார் துறைமுகம் உட்பட போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இரான் மற்றும் ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் என்பதால் சப்பார் துறைமுக ஒப்பந்தம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஐ என் எஸ் டி சி எனப்படும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வர்த்தக பாதையில் முக்கியமான முனையம் இந்த சப்பார் துறைமுகம். இத்திட்டத்தின் கீழ் இந்த துறைமுகம், ரயில் மூலம் மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்படுகிறது.
ஆனால் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்த திட்டத்தின் எதிர்காலம் குறித்து சந்தேகத்துடன் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதே மாநாட்டில், ஒரு புதிய வர்த்தக பாதைக்கு ஒப்புதல் கிடைத்தது. இது இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு பாதை என்று பெயரிடப்பட்டது. இந்த பாதையில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், கிரீஸ் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பாதை உருவாக்கப்படுவதற்கு அமெரிக்கா முக்கிய பங்காற்றியுள்ளது.
அமெரிக்க உந்துததால் உருவாகும் இந்த புதிய வர்த்தக பாதை அமைக்கப்பட்ட பிறகு, இரானின் சப்பார் துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழந்து விடும் என பேசப்பட்டது. இது இரானை புறக்கணிப்பதற்கான வழியாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பின் நிலைமைகள் மாறியுள்ளன.

பட மூலாதாரம், Govt of India
இரானுக்கு ஏன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது?
இந்தியாவின் தலைநகரான் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், மத்திய ஆசியா வழியாக இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் புதிய வர்த்தக பாதை அமைப்பதற்கு பல நாட்டு தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஐ எம் இ சி எனப்படும் இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு பாதை’ என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த பாதையை சீனாவின் பட்டு சாலை திட்டத்துக்கு மாற்றாகவும் இரானை ஓரங்கட்டும் முயற்சியாகவும் பல சர்வதேச உறவுகள் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இரானின் சப்பார் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு தெற்கு பாதை திட்டத்தை விட, இந்த புதிய பாதை அமைப்பதிலேயே இந்தியா அதிக கவனம் செலுத்தும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த புதிய வர்த்தக பாதையினால், ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான போக்குவரத்து நேரம் 40% குறையும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் கூறுகிறார்.
மேலும், இந்தியாவால் ஒரே நேரத்தில் சப்பார் துறைமுகத் திட்டம், இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு வர்த்தக பாதை என எல்லா திட்டங்களிலும் முதலீடு செய்ய முடியாது என்பதும் இரானின் கவலையாக இருந்தது.
மேற்கு நாடுகள் இரான் மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாகவும் இரானுடன் உறவில் இருப்பது இந்தியாவுக்கு சிக்கலானது.

பட மூலாதாரம், Getty Images
எந்த பாதையை தேர்ந்தெடுக்கும் இந்தியா ?
இந்த நிலையில் தான் தற்போது இரானுடனான பாதையை தேர்ந்தெடுக்குமா அல்லது இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு பாதையை தேர்ந்தெடுக்குமா என்று இந்தியாவின் முடிவு பற்றிய கேள்வி எழுகிறது.
இந்தியாவின் நிலைமையை உணர்ந்த இரான், சீனாவுடன் 25 ஆண்டு கால ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் போட சம்மதம் தெரிவித்துள்ளது என இரான் ஊடகங்கள் கூறுகின்றன.
சப்பார் துறைமுகத்தின் மீதமுள்ள பகுதிகளை கட்ட, சீனா ஒப்புக் கொண்டதாகவும், அதன் பின் சீனா அந்த துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகின.

பட மூலாதாரம், Getty Images
சப்பார் திட்டம் குறித்து மெத்தனப்போக்கு
இரானின் கடற்கரை நகரமான சப்பாரின் மேம்பாட்டுக்காக இந்தியா மற்றும் இரான் இடையில் 2003ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2016ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு, தற்போது இந்தியா அங்கு சரக்கு முனையத்தை கட்டி வருகிறது.
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பாதையில் இந்த முனையம் மிக முக்கியமானதாகும். கப்பல், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவை பின்னி பிணைந்துள்ள 7200 கி.மீ நீளமான வர்த்தக பாதையாகும் இது. இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், அர்மேனியா, அசர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்துக்கு இந்த வர்த்தக பாதை பயன்படுத்தப்படும்.
இந்த பாதை ஐரோப்பாவுக்கான இந்தியாவின் அணுகு பாதையை எளிமையாக்கியிருக்கும். இது இரானுக்கும் ரஷ்யாவுக்கும் கூட பலனளித்திருக்கும்.
உக்ரைனை தாக்கியதிலிருந்து, ஐரோப்பாவுடனான ரஷ்யாவின் உறவுகள் மோசமடைந்து உள்ளன.
ரஷ்யாவுக்கு மட்டுமல்லாமல், மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகளிலிருந்து மீளவும் இரானுக்கு உதவியிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இரானின் சப்பார் துறைமுக திட்டத்திலோ, சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து பாதை திட்டத்திலோ எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாமதத்துக்கு குற்றம் சாட்டுவதாகவே இருந்தது.
இந்திய இந்த திட்டத்தை வேகப்படுத்த பல முறை இரானிடம் கூறியதாகவும், ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகே இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து இரான் உணர்ந்தது என இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாக இரான் ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், இந்தியா தான் இந்த திட்டத்தை தாமதப்படுத்துவதாக இரான் குற்றம் சாட்டியிருந்தது. 2020ம் ஆண்டு, நிதி கிடைப்பதில் தாமதம் காரணமாக சப்பார் துறைமுக திட்டத்திலிருந்து இந்தியாவை விலக்கியிருந்தது இரான்.
ஆனால், அதன்பின்,இரு நாடுகளும் தங்களை நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளன. சப்பார் துறைமுக பணிகள் குறித்து இரான் சமீபத்தில் இந்தியாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் போடுவது குறித்து ஆலோசித்திருந்தது.
இந்த ஆண்டு சப்பார் துறைமுக திட்டத்தில் 80 மில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா இந்த திட்டம் வெற்றியடைய விரும்புகிறது என இதிலிருந்து தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா ஐரோப்பா மத்திய கிழக்கு வர்த்தக பாதை திட்டம் சாத்தியமா?
இந்தியா-ஐரோப்பா-மத்திய கிழக்கு பாதை திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து பல சந்தேகங்கள் எழுவதால் இந்தியாவுக்கு இரானுடனான திட்டத்தில் கூடுதல் ஆர்வம் இருந்துக் கொண்டே இருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் காரணமாக மத்திய கிழக்கில் மேலும் நிலைமைகள் ஸ்திரமற்று இருக்கின்றன.
ஜி20 மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா பாதை, இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் சற்று தொய்வு அடையலாம் என்றும் ஆனால் கண்டிப்பாக திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கிராஸெட்டி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் வெற்றி, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அமைதியை பொருத்தது. இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா இடையே உறவுகளை ஏற்படுத்துவதும் இத்திட்டத்துக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும், ஆனால் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பின் இந்த முயற்சியில் முன்னேற்றம் நின்றுவிட்டது.
சர்வதேச வடக்கு தெற்கு வர்த்தக பாதை திட்டத்தில் இந்தியாவின் புதிய ஆர்வத்திற்கான ஒரு காரணம், நடப்பு நிதி ஆண்டில் ரஷியாவுடனான அதன் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இது மலிவான எண்ணெய் விலை காரணமாக நடந்துள்ளது.
மேலும், இரான் ஜனவரி முதல் பிரிக்ஸ் பிளஸ் குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவுள்ளதால், சர்வதேச வடக்கு தெற்கு வர்த்தக பாதை மற்றும் சப்பார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும்.
பிரிக்ஸ் நாடுகளின் குழுவுக்கு சொந்த வங்கி இருப்பதால் இந்தியா மற்றும் இரான் இடையே நிதி பரிவர்த்தனைகள் எளிதாகும்.
இதனுடன், பிரிக்ஸ்-ல் SWIFT பணம் செலுத்தும் முறையை ஏற்றுக்கொள்வதற்கான பரிசீலனையும் நடந்து வருகிறது, இதன் மூலம் உறுப்பினர் நாடுகள் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் மற்றும் இரானின் துணை வெளியுறவு அமைச்சர் இடையே என்ன நடந்தது என்பதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் தற்போது இரண்டு நாடுகளும் சப்பார் திட்டத்தை தொடர்ந்து நடத்த உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்